Friday, June 30, 2017

92. தேசிய அருங்காட்சியகம் டப்லின், அயர்லாந்து

http://www.vallamai.com/?p=77873

முனைவர் சுபாஷிணி
​கெல்ஸ் நூல் (The book of Kells) எனப்படும் கிறிஸ்துவ கோஸ்பல் பாடல்கள் கொண்ட நூல் பற்றி ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இது 9ஆம் நூற்றாண்டில் முழுதாக வடிவமைக்கப்பட்ட ஒரு நூல். எழுதிய நூல் என்று சொல்வதை விட வடிவமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட நூல் என்று சொல்வது இதற்கு மிகப் பொருந்தும். இந்நூலில் இலத்தீன் மொழியில் புதிய டெஸ்டமனில் உள்ள நான்கு கோஸ்பல்கள் அடங்கியுள்ளன. இவற்றுடன் பல வாசகங்களும் ஓவியங்களும் நிறைந்துள்ள ஒரு கலைநயம் மிக்க நூல் இது.
இந்த நூல் கெல்ட்டிக் பாரம்பரியத்தில் தோன்றி பின்னர் கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்ட பாதிரிமார்களால் உருவாக்கப்பட்டது. இந்த நூலின் காலம் ஏறக்குறை கி.பி 800 அல்லது அதற்கும் முந்தைய ஆண்டுகளாக இருக்கலாம் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர். இந்த நூலின் சிறப்பு என்னவென்றால், கோஸ்பல் பாடல்களையும் விளக்கங்களையும் வாசகங்களையும் சுற்றி தீட்டப்பட்டுள்ள கவின்மிகு ஓவியங்கள் தாம் எனலாம். இவை செல்ட்டிக் பாரம்பரியத்தின் தாக்கத்தை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுவனவாக உள்ளமையே இதன் சிறப்பு.
புக் ஆஃப் கெல்ஸில் அடங்கியுள்ள ஓவியங்கள் கிறித்துவ பாரம்பரிய சின்னங்களை உள்ளடக்கியதாகவும் அதே வேளை கெல்ட்டிக் பாரம்பரியத்தின் மிக முக்கிய சின்னங்களான மனித உருவங்கள், மிருகங்கள், சுற்றி வளைத்து சூழும் பாம்பு, மாய உருவங்கள் ஆகியனவற்றையும் கொண்டிருக்கின்றது. அதோடு கெல்ட் பாரம்பரியத்தின் அடிப்படை சின்னமான கெல்ட்டிக் முடிச்சு மிகத் தெளிவான கவர்ச்சியான வர்ணங்களில் நூல் முழுவதும் இடம் பெறுகின்றது. அயர்லாந்துக்கு ஆறாம் நூற்றாண்டில் புதிதாக நுழைந்த கிறிஸ்துவ சமயம் அயர்லாந்தின் பாரம்பரிய செல்ட்டிக் வழக்கங்களை ஏற்றுக்கொண்டு எவ்வாறு புதிய வகையில் வளம் பெற்று வளர்ந்தது என்பதற்குச் சான்றாகவும் அமைகின்றது.
2
நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு இந்த நூல் தற்சமயம் டப்ளினில் உள்ள ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் (Trinity College Library) பாதுகாக்கப்படு வருகின்றது. இந்த நூலகம் இருக்கும் அருங்காட்சியகம் தான் அயர்லாந்து தேசிய அருங்காட்சியகம்.
அயர்லாந்தின் மிகப் பெரிய பொக்கிஷமாக இந்த நூல் இன்று கருதப்படுகின்றது. புக் ஆஃப் கெல்ஸ் நூல் மிகப் பிரபலமானதாகவும், மிக நுணுக்கமாகவும் தயாரிக்கப்பட்ட ஒரு நூல் என்பதும் முக்கிய குறிப்பாகும். ஐயோனா தீவு, மற்றும் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் மடம் அமைத்து இங்கு கிறுத்துவ மதத்தைப் பரவச் செய்த பாதிரிமார்களின் அரிய ஒரு கலைப்படைப்பு இந்த நூல்.
இந்தாருங்காட்சியகத்திலேயே உள்ள ட்ரினிட்டி கோலேஜ் நூலகத்தில் இந்த நூலின் அசல் இருந்தாலும் இந்த நூலின் அச்சுப் பிரதிகளும் வெளியிடப்பட்டன என்பதும் ஒரு செய்திதான். மிகக் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மட்டுமே இவை பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. 1990ஆம் ஆண்டில் எழுதி வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் உள்ள செய்தியின் அடிப்படையில் 1990 ஆம்ஆண்டில் இந்த அச்சு நூல் ஒன்றின் விலை $18,000 என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது இன்னூலின் விலை மேலும் அதிகரித்திருக்கலாம் என நம்பலாம்.
இந்த நூல் எப்படி ட்ரினிட்டி கோலேஜ்க்கு வந்தது என பார்ப்போம்.
அடிப்படையில் இது கையால் வர்ணம் தீட்டி எழுத்துக்களைக் கோர்த்து வடிக்கப்பட்ட ஒரு நூல். இதன் பக்கங்கள் அனைத்திலும் இருக்கும் வர்ண ஓவிய வேலைப்பாடுகளை மூன்று பாதிரிமார்கள் செய்திருக்கின்றனர். எழுத்துக்களை நான்கு பாதிரிமார்கள் வடித்திருக்கின்றனர். கி.பி 800ம் ஆண்டு வாக்கில் முடிக்கப்பட்ட இந்த நூல் அயர்லாந்தின் கெல்ஸ் நகரில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் நிறைவு செய்யப்பட்டதால் அந்த நகரின் பெயரிலே வழங்கப்படுகிறது. அயர்லாந்துக்கும் ஸ்கோட்லண்டுக்கும் இடையில் உள்ள ஐயோனா (Iona) என்ற தீவில் உள்ள கிறிஸ்துவ மடத்தில் இதன் ஆரம்ப கட்ட உருவாக்கப்பணிகள் தொடங்கியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
4
ஐயோனா (Iona) வில் கொள்ளையர்கள் மடத்தில் நுழைந்து தாக்கி அங்கிருந்த பொருட்களைச் சூறையாடிச் சென்று மடத்தையும் தீவைத்து கொளுத்தி நாசப்படுத்திய போது பாதிரிமார்கள் அங்கிருந்து சில முக்கிய பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு கடல் வழி பயணித்து அயர்லாந்தின் கெல்ஸ் நகருக்கு வந்திருக்கின்றனர்.
அங்கு கெல்ஸ் மடத்தில் இப்பணியைத் தொடர்ந்து செய்து நிறைவேற்றி முழு நூலையும் முடித்திருக்கின்றனர். இந்த நூலில் ஆக மொத்தம் 680 பக்கங்கள் உள்ளன. அதில் இரண்டு பக்கங்களில் மட்டும் தான் வர்ணம் இல்லை. ஏனையவை முழுக்க முழுக்க செல்ட்டிக் கலாச்சார ஓவியங்களைப் பிரதிபலிக்கும் சின்னங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.
1661ம் ஆண்டு தொடங்கி இந்த நூல் ட்ரினிடி கோலேஜில் (Library of Trinity College – Dublin) ல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
இடைப்பட்ட காலத்தில் இந்த நூல் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டாலும் பாதுகாப்பு முறைகள் சரியாக அமைந்திருக்கவில்லை. ஆக 1953ம் ஆண்டில் இந்த நூல் முறையாக தூய்மை செய்யப்பட்டு அசல் நூல் நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு சிறிதாக்கப்பட்டு வைக்கப்பட்டது. இந்த நூலின் அசலின் 2 பாகங்கள் ட்ரினிடி கோலேஜின் நூலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதன் மேலும் இரண்டு பாகங்கள் காட்சிக்கு வைக்கப்படுவதில்லையென்றாலும் அவை முக்கிய ஆய்வாளர்களின் பார்வைக்கு மட்டும் என்ர வகையில் அனுமதி வழங்கப்படுகின்றது. ட்ரினிடி கோலேஜில் உள்ள 2 பாகங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பக்கம் திருப்பப்பட்டு காட்சிக்கு வைக்கப்படுகின்றது. இதனால் தினம் நூலகத்துக்கு வந்து இந்த நூலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கத்தை வாசித்துச் செல்லலாம்.
இந்த நூலை மறுபதிப்பு செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட சுவிஸர்லாந்தின் Faksimile Verlag (Fine Art Facsimile Publishers) நிறுவனத்தினர் இந்த நூலை கையில் தொடாமல் ட்ரினிடி காலேஜிலிருந்து வெளியே எடுக்காமல் ஒரு சிறப்பு கருவியை பயன்படுத்தி இதன் பக்கங்களைத் தொடாமலேயே காமெராவில் பதிவு செய்து இந்த நூலினை மின்னாக்கம் செய்து எண்மப் பதிவாக்கி முழுமைபடுத்தினர். ட்ரினிடி காலேஜ் சிறு எண்ணிக்கையில் இந்த நூலை சிறப்பு வெளியீடு செய்தனர். இந்தப் பதிப்பு நிறுவனத்துக்கு இந்தக் கருவியை உருவாக்க கால் 1/4 மில்லியன் சுவிஸ் ப்ராங்க் தேவைப்பட்டதாம். இந்தக் கருவி கொண்டு 1986ம் ஆண்டில் சில நாட்கள் தொடர்ந்து இப்பணி செய்து முடிக்கப்பட்டிருக்கின்றது.
5
இவ்வளவு சிறப்புக்கள் வாய்ந்த நூலை இந்த அருங்காட்சியகத்தில் நேரில் பார்க்க முடிந்த நாளில் என் மனம் அடைந்த ஆச்சரியத்தை இன்றும் உணர்கின்றேன். இந்த அருங்காட்சியகத்தில் இந்த அரிய பொக்கிஷமான கெல்ஸ் நூல் மட்டுமல்ல, ஏராளமான் ஆஅய்வுக் கருவிகள், அதிலும் குறிப்பாக உடற்கூறு சம்பந்தமான மருத்துவ சோதனைகளில் பயன்படுத்தப்பட்ட வெவ்வேறு அறுவைச் சிகிச்சை கருவிகள், அறிவியல் துரை சார்ந்த குறிப்பிடத்தக்க சாதனக்கள் என வருவோரை பிரமிக்க வைக்கும் ஒரு அருங்காட்சியகமே இது. டப்ளின் செல்பவர்கள் கட்டாயம் தவறவிடாமல் நகரின் மையப்பகுதியிலேயே அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகத்திற்கு சென்று பார்த்து வரவேண்டும்.

No comments:

Post a Comment