Wednesday, October 18, 2017

100. வீல்ஸ்கா உப்புச் சுரங்கம், க்ராக்காவ், போலந்து

http://www.vallamai.com/?p=80613

முனைவர் சுபாஷிணி
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது நம் வழக்கில் உள்ள பழமொழி. எவ்வளவு தான் சுவையாகச் சமைத்தாலும், ஒரு துளி உப்பில்லாவிட்டால் அந்த உணவே பாழ் தான். உலக மனிதர் அனைவருமே உப்பினை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். கடற்கரையோரங்களில் தான் உப்பளங்கள் பொதுவாக இருக்கும். ஒரு நாட்டின் மையப் புள்ளியிலே நிலத்துக்குக் கீழே 327 மீட்டர் ஆழத்தில் ஒரு உப்புச் சுரங்கம் இருக்கின்றது. அதனோடு இணைந்தார் போன்ற, உப்பினாலேயே வடிக்கப்பட்ட ஒரு சிற்பக் கலைக்கூடமும் இருக்கின்றது. அதனோடு இணைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமும் இருக்கின்றது. இதனைக் காண வேண்டுமா? அப்படியென்றால் நாம் போலந்து நாட்டின் கிராக்காவ் நகரத்துக்குத் தான் செல்ல வேண்டும்.
as1
க்ராக்காவ் நகருக்கு அருகே இருக்கும் ஊர் வீல்ஸ்கா. இந்த நகரின் பெயரிலேயே இந்த உப்புச் சுரங்கம் செயல்படுகின்றது. இங்கு நிலத்தின் அடியில் உப்புப் பாளங்களைச் சுரண்டி எடுத்து வந்து அவற்றை விற்பனை செய்வது இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்பதைக் கேட்கும் போது இதன் பழமையை நினைத்து ஆச்சரியம் ஏற்படுகின்றது அல்லவா?
இங்கே உள்ளே செல்வதற்குக் கட்டணம் கட்ட வேண்டும். தனியாக யாரும் செல்ல அனுமதி கிடையாது. ஆக ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து விளக்கம் சொல்லும் வழிகாட்டிகள் உதவியுடன் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். உள்ளே நுழைந்ததும் நாம் மரப்பலைகைகளால் அமைக்கப்பட்ட படிகளில் இறங்கி நடக்க வேண்டும். ஏறக்குறைய450க்கும் குறையாத படிகள் உள்ளன. கீழே இறங்கியதும் முதலில் தென்படுவது ஒரு ரகசிய அறை. அந்த அறை பொதுவாகவே பூட்டப்பட்டிருக்கும். நான் சென்ற வேளை என்னுடன் கூடுதலாக 2 அமெரிக்க பெண்களும் வந்திருந்தனர். ஆகவே கூட்டம் குறைவு என்பதால் எங்கள் வழிகாட்டி அந்த ரகசிய அறையை எங்களுக்குத் திறந்து காட்டினார். உள்ளே உப்புப்பாறைகளினாலேயே செதுக்கப்பட்ட அன்னை மேரியின் சிற்பமும் முக்கிய கத்தோலிக்க குருமார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்ட ஒரு தேவாலயமே கண் முன்னே இருந்தது. இது என்ன உலக அதிசயமா, என வியந்து நின்ற எங்களுக்குச் சிறு விளக்கம் அளித்து விட்டு, வாருங்கள் இன்னும் இருக்கின்றது .. இதை விடப் பிரமாதமாக எனச் சொல்லி அழைத்துச் சென்றார் எங்கள் வழிகாட்டி.
as2
கி.பி 13ம் நூற்றாண்டில் இங்கு உப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே இதனை வணிகமாக்கும் பொருட்டு உள்ளே சுரங்கப்பாதையைத் தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். தோண்டப்பட்ட சுரங்கப்பாதையில் கீழே குதிரைகளை எடுத்துச் சென்று வண்டிகளை உருவாக்கி, தண்டவாளங்களை உருவாக்கி, சாலைப்பகுதிகளை உருவாக்கி உப்பினை தோண்டத் தோண்ட அவற்றை வெளியே எடுத்து வரத் தேவையான கருவிகளை படிப்படியாக உருவாக்கியிருக்கின்றனர்.
as3
சுரங்கத்திற்குள் செல்லும் போது பாதையைத் தவிர்த்து உப்பு சுவர்களில் பொதிந்து காட்சியளிக்கின்றது. உள்ளே காற்று மிதமாக இருக்கின்றது. உள்ளே நடக்கும் போது நாம் சுவாசிப்பது பல தாதுப்பொருட்கள் கலந்த ஆக்ஸிஜன் காற்று என்பதால் உடலுக்கு நன்மை தரும் ஒரு பயணமாகவும் இந்த சுரங்கப்பாதை பயணம் அமைந்தது. சுரங்கப்பாதை உள்ளே வளைந்து வளைந்து செல்லும் வகையில் அமைத்திருக்கின்றனர். இதன் மொத்த நீளம் 287 கிமீட்டர் ஆகும். ஏறக்குறைய 4 மணி நேரங்களை உள்ளே அந்தச் சுரங்கப்பாதைக்குள் நாங்கள் செலவிட்டமையால் ஏறக்குறைய 5 கிமீ தூரம் நடந்திருப்பேன் என்றே கருதுகிரேன்.
இந்த உப்புச் சுரங்கத்திற்குள்ளே நீர் தேங்கிய குளங்கள் இருக்கின்றன. இங்குப் பணியாற்றிய சுரங்கத் தொழிலாளர்கள் பல நாட்கள் வெளியே செல்ல முடியாத சூழலில் சுரங்கத்திற்குள்ளேயே இருந்து பணிபுரிந்தனர். இவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக அச்சுரங்கத்திற்குள் ஏறக்குறைய 7க்கும் மேற்பட்ட தேவாலயங்களைக் கட்டியுள்ளனர். ஒவ்வொன்றிலும் மேரி மாதாவும். சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிருத்துவும் உள்ள வகையில் உப்பு பாறைப்படிவங்களால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன.
as4
இந்த உப்புச் சுரங்கத்தின் மையப்பகுதி உலகப் பிரமாண்டங்களில் ஒன்று எனத் தயங்காது கூறலாம். ஒரு மிகப்பெரிய அரண்மனையில் விருந்தினர் பகுதியின் அலங்கரிப்பு போல சுவர்களில் நிறைந்துள்ள சிற்பங்களின் அழகை வர்ணிக்க சொற்கள் கிடையாது. கனவுலகத்தில் இருக்கின்றோமா என நம்மையே நாம் கேட்டுக் கொள்ளும் வகையில் இந்த மையப்பகுதியை வடிவமைத்திருக்கின்றனர். இங்கு சுவரில் புடைப்புச் சிற்பங்களாக உள்ள அனைத்துச் சிற்பங்களுமே உப்புப் பாளங்களினால் மட்டுமே தயாரிக்கப்பட்டவைதாம் என்பதே இதன் தனிச்சிறப்பு எனலாம். இந்த கலைப்படைப்புத் தொகுதியில் புதிதாக இணைந்திருக்கும் சிற்பம் மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜோன் பவுல் அவர்களின் சிற்பமாகும். இவரது சிற்பமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
உலகப் பிரமாண்டங்களில் ஒன்றாகத் திகழும் இந்த உப்புச் சுரங்கம் 1978ம் ஆண்டு யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னமாக அங்கீகாரம் பெற்றது. 2007ம் ஆண்டு வரை இங்கு உப்பு உற்பத்தி தொழில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 2007ம் ஆண்டு முதல் இங்கு உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு சுற்றுலா தளமாக மட்டுமே இது இன்று இயங்கி வருகின்றது.
as5
இந்த உப்புச் சுரங்கத்திற்குள் உள்ள சிற்பங்களில் கிருத்துவ மத சார்புள்ள சிற்பங்களைத் தவிர்த்து முக்கியஸ்தர்களின் சிலைகளும் இங்கே உப்புப்பாளங்களினால் வடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மன்னர் கசிமியர், நிக்கோலவுஸ் கோப்பர்நிக்கஸ், யோஹான் வோல்வ்காங் ஃபோன் கோத்த, அலெக்ஸாண்டர் ஃபோன் ஹும்போல்ட், பில் கிளிண்டன் ஆகியோரது சிற்பங்களைக் குறிப்பிடலாம். பிரபலங்கள் மட்டுமன்றி உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களும் வேலையை விவரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிற்பங்களும் இங்கே உள்ளன. குதிரையில் பூட்டிய உப்புக்கட்டிகளைத் தூக்கிச் செல்லும் மனிதன், பாறைகளைத் தீ வைத்து உடைக்கும் தொழிலாளி, குளத்தைத் தூய்மை செய்யும் தொழிலாளி என இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த சுரங்கப்பாதைப் பணிகளை விவரிக்கும் வகையில் இந்தச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.
as6
போலந்து ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நாடு. ஆக ஐரோப்பாவின் பல நாடுகளுக்குப் போலந்திலிருந்து வர்த்தகம் நடைபெற்ற மிகப்பிரபலமான நகரமாக க்ராக்காவ் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதன் முக்கியத்துவம் இன்றைய பொருளாதார மாற்றத்தால் சற்றே சரிந்திருந்தாலும் கூட இப்பகுதி ஐரோப்பாவின் மிக முக்கிய வணிகப்பாதையில் அமைந்திருக்கும் ஒரு பகுதி. ஆக இங்கிருந்து தோண்டப்பட்ட உப்பு பல்வேறு இடங்களுக்கு ஆற்றின் வழியாகவும் தரை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டது என்பது வரலாறு.
அருங்காட்சியகங்களில் பல வகை உண்டு. உலக அதிசயங்களில் ஒன்று அருங்காட்சியகமாகக் காட்சி தரும் அமைப்பாகவே, வருவோரை வியப்பில் ஆழ்த்தும் வீல்ஸ்கா உப்புச் சுரங்கமும் அதன் அருங்காட்சியகமும் விளங்குகின்றன.

Wednesday, October 4, 2017

99. செக்போயிண்ட் சார்லி அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி

http://www.vallamai.com/?p=80318

முனைவர் சுபாஷிணி
ஜெர்மனியின் வரலாற்றில் பல முக்கிய தேதிகள் நீண்ட பட்டியலாகவே உள்ளன. மிகப் பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்த நாடு ஜெர்மனி என்பது உண்மையே. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏனைய உலக நாடுகளின் மத்தியில் கிடைத்த பிரபலம் போல ஜெர்மனிக்குக் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். அப்படி மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாகத் திகழ்வது ஆகஸ்டு 13, 1961ம் ஆண்டு. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் ஜெர்மனியைப் பாதுகாப்பதில், குறிப்பாக அதன் அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மோதலின் விளைவாக உருவானதுதான் 1961ம் ஆண்டு பெர்லின் பிரச்சனை. இதுவே ஜெர்மனியின் கிழக்கு ஜெர்மனிக்கும் மேற்கு ஜெர்மனிக்கும் இடையே பெர்லின் மக்களைச் சுவர் அமைத்துப் பிரித்து வைத்த அரசியல் நிகழ்வினைக் குறிப்பிடும் ஒரு நாளாக அமைகின்றது.
as1
2ம் உலகப்போருக்குப் பின்னர் கூட்டு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்சு, சோவியத் யூனியன் ஆகிய நான்கு நாடுகளும் ஜெர்மனியைத் தங்கள் ஆளுமைக்குள் அடக்கி வைக்கும் வகையில் அதன் மையமாகிய பெர்லின் நகரை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்யும் முறையை உருவாக்கின. 1948ம் ஆண்டில் சோவியத் பகுதிக்குள் அமெரிக்கா செல்வதற்குத் தடைகளை சோவியத் யூனியன் ஏற்படுத்தியது. அந்த நிலையில் கிழக்கு பெர்லின் மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தரை வழி செல்ல இயலாததால், விமானங்களின் வழி கிழக்கு பெர்லின் மக்களுக்கு உணவும் அடிப்படைத் தேவைக்கான பொருட்களையும் வழங்கத் தொடங்கின. பின் 1949ம் ஆண்டு சோவியத் யூனியன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு உதவிப் பொருட்களைத் தரை வழியே கிழக்கு பெர்லின் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் பாதையைத் திறந்தது.


1950 வாக்கில் சோவியத் யூனியன் மேற்கிலிருந்து கிழக்கு ஜெர்மனிக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொருட்டு தடைகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அரசியல் நிலைமைகளின் காரணமாக பெர்லின் மக்கள் பட்ட இன்னல்களுக்கு அளவே இல்ல எனலாம். 1949க்கும் 1961க்கும் இடையில் கிழக்கு பெர்லினிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனிக்குச் சென்றோரின் எண்ணிக்கை இரண்டரை மில்லியன் மக்கள் தொகை ஆகும்.
அகஸ்டு 13ம் நாள், 1961ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி தன்னை மேற்கு ஜெர்மனியிலிருந்து பிரித்துக் கொள்ளும் வகையில் பெர்லின் சுவரை எழுப்பியது. 155 கி.மீ. நீளம் கொண்ட சுவர் இது. கிழக்கையும் மேற்கையும் அரசியல் ரீதியாகப் பிரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுவர் இது. கருங்கல்லால் மட்டுமன்றி இரும்புக் கம்பிகளும் முள் வேலிகளும் பொருத்தப்பட்ட மிக உறுதியான சுவராக இந்த பெர்லின் சுவரை சோவியத் யூனியன் கையில் இருந்த கிழக்கு பெர்லின் அரசு உருவாக்கியது.
சுவர் கொண்டு எழுப்பினாலும் ஒரு நுழைவுப் பாதை இந்தச் சுவற்றுப் பகுதியில் உருவாக்கப்பட்டது. அந்த வகை எல்லைக்காவல் நிலயம் தான் செக்போயிண்ட் சார்லி (Checkpoint Charlie). இந்தப் பாதை வழியாக ஒருவர் கால்நடையாகவும், வாகனத்தின் வழியாகவும் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் வந்து செல்லலாம். சார்லி (Charlie) என்பது ஒரு மறைமுகக் குறியீடு (code word). நாட்டோவினால் பயன்படுத்தப்பட்ட ஒரு ரகசியக் குறியீட்டுச் சொல்லை பிரதிபலிப்பது இச்சொல்.
as3
செக்போயிண்ட் சார்லி குறிப்பிடத்தக்க சில ஆங்கில, ஜெர்மானிய திரைப்படங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஜேம்ஸ் போண்ட் படமான ஆக்டபஸி திரைப்படமும் அதில் ஒன்று. Cafe Adler (Eagle Café) என்ற திரைப்படமும் இந்தப் பகுதிக்கு எதிராக உள்ள ஒரு உணவகத்தில் அமர்ந்தவாறு நிகழும் சில செய்திகளைச் சொல்லும் படம். இந்த உணவகம் இன்றும் இருக்கின்றது. 2013ம் ஆண்டு நான் பெர்லினுக்குச் சென்றிருந்தபோது இந்த உணவகத்தில் அமர்ந்தவாறு செக்போயிண்ட் சார்லியைப் பார்த்துக் கொண்டிருந்த நிமிடங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன.
இந்த பெர்லின் சுவர் பல மரணங்களைப் பார்த்துள்ளது. மக்களின் சோக வாழ்க்கையை பெர்லின் சுவர் தன்னுள்ளே உறிஞ்சிக்கொண்டது என்று தான் குறிப்பிட வேண்டும்.
as4
1990ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் நாள் செக்போயிண்ட் சார்லியின் கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட்டன. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது தொடர்ச்சியாக இரு தரப்பிலிருந்தும் ஜெர்மானிய மக்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த மனித உரிமைக்கு எதிரான இந்த நடவைக்கைகளுக்கான எதிர்குரலே. ஜூன் மாதம் இக்கதவுகள் திறக்கப்பட்டாலும் எல்லைச் சோதனைகள் அக்டோபர் 2ம் தேதி வரை தொடர்ந்து கொண்டிருந்தன. 2ம் தேதி இரவு பெர்லின் சுவர்கள் ஜெர்மானிய மக்களால் தகர்த்து உடைக்கப்பட்டது. மக்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துச் சுவர்களைத் தகர்த்து உடைத்தனர். கிழக்கும் மேற்கும் ஜெர்மானிய மக்களின் உறுதியால் ஒன்றிணைந்தது.
​1990ம் ஆண்டில் பெர்லின் சுவற்றை உடைப்பதற்கு முன்னரே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு விட்டது. ​முதலில் Dr. Rainer Hildebrandt என்பவர் அக்டோபர் 19ம் தேதி 1962ம் ஆண்டு உடைபட்டுக் கிடந்த பெர்லின் சுவரின் கற்களின் மேல் சில வாசகங்களை எழுதி வைத்தார். இது அப்பகுதியில் மக்களின் வலியைப் பதிவாக்கும் ஒரு அருங்காட்சியகம் தேவை என்ற சிந்தனையை எழுப்பியது. தற்சமயம் இந்த செக்பாயிண்ட் சார்லி அமைந்திருக்கும் அருங்காட்சியகமானது1963ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 13 August Consortium என்ற அமைப்பு இந்த அருங்காட்சியகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது. 13ம் தேதி என்பது பெர்லின் சுவர் எழுப்பப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் அமைந்த ஒரு அமைப்பாகும். இதன் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் Alexandra Hildebrandt அதாவது முதலில் கண்காட்சியை உருவாக்கிய Dr. Rainer Hildebrandt அவர்களின் மனைவியாவார். பெர்லினின் நகரிலுள்ள 100க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களும் மிக அதிகமான வருகையாளர்களால் வந்து பார்த்துச் செல்லும் அருங்காட்சியகங்களில் ஒன்று என்ற சிறப்பு கொண்டது இந்த அருங்காட்சியகம்.
இந்த அருங்காட்சியகத்தின் கண்காட்சியில் பெர்லின் சுவர் எழுப்பப்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிடும் ஆவணங்களும், அதில் ஈடுபட்ட மனிதர்களைப் பற்றிய செய்திகளும், நாட்டோ கூட்டு நாடுகளைப் பற்றிய செய்திகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 13, 1961ம் ஆண்டு பெர்லின் சுவர் அமைக்கப்பட்ட நிகழ்வு, அதன் தொடர்ச்சியாக அமுலுக்கு வந்த சட்டங்கள், நடைபெற்ற துர்சம்பவங்கள் ஆகியன பற்றிய ஆவணங்களும் கண்காட்சியில் உள்ளன. 2007ம் ஆண்டு நிரந்தர கண்காட்சிப்பகுதியை இந்த அருங்காட்சியகம் உருவாக்கியது. அதில் நாட்டோவின் (NATO) வரலாற்றைச் சொல்லும் ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்ட்டுள்ளன. உலக அளவில் நாட்டோவின் (NATO) ஆரம்பக்கால வரலாற்றைக் குறிப்பிடும் மிக முக்கிய அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது எனலாம்.
as5
பெர்லின் நிகழ்வுகள் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளில் அரசியல் அடக்குமுறைகளை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் குறிப்புக்களும் ஆவணங்களும் இங்கு உள்ளன. இந்தியாவிலிருந்து காந்தியின் குடும்பத்தார் வழங்கிய 14 ஆவணங்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றன என்பதும் ஒரு சிறப்பே.
இந்த அருங்காட்சியகத்தின் முகவரி Friedrichstraße 43-45, 10969 Berlin.
பெர்லின் செல்பவர்கள் தவறாமல் பார்த்து வரவேண்டிய ஒரு வரலாற்று மையம் இது என்பதால் கண்டிப்பாக தங்கள் சுற்றுப்பயணப் பட்டியலில் இதனை இணைத்துக் கொள்ள வேண்டும்.
நிகழ்கால நிகழ்வுகள் வரலாறாக மாற்றம் பெறுகின்றன. வன்முறையை இல்லாதாக்கி அன்பை மேம்படுத்தி மனிதக் குலம் வாழ்வதே நல்வாழ்க்கையாக அமையும்.
சரி.. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தைக் காண அழைத்துச் செல்கிறேன். இப்போது செக்போயிண்ட் சார்லி நினைவில் மூழ்கியிருங்கள் !