Saturday, February 20, 2016

56. டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம்(3), பாயார்ன், ஜெர்மனி.

​http://www.vallamai.com/?p=66480​

முனைவர்.சுபாஷிணி

 

ஒரு சக மனிதரைத் தாக்கி வதைத்தல் என்பது வன்மம் நிறைந்த மனதிற்கு மட்டுமே கைகூடும். அப்படி அமைந்தவர்களில் சிலர் இந்த டாஹாவ் மனித சித்ரவதை முகாம்களில் அதிகாரிகளாகப் பணியாற்றியிருக்கின்றார்கள். அவர்களில் யோஹான் கான்ஸூஸ்டர் என்பவர் ஒருவர். இவர் டாஹாவ் முகாமில் 1933 முதல் 1939 வரை பணியில் இருந்தார். பங்கரில் வார்டனாகப் பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர். சிறைக்கதிகள் இவரின் மேல் மிகுந்த பயம் கொண்டிருந்தனர் எனக் குறிப்புக்கள் சொல்வதிலிருந்து கொடுமையான நடைமுறைகளை நிகழ்த்தியவராக இவர் இருந்திருப்பார் என்பதை அறியமுடிகின்றது. சிறைக்கைதிகளில் சிலரையும் இவர் கொன்றிருக்கின்றார் என்ற கூடுதல் தகவலும் இவர் பெயருடன் இணைந்திருக்கின்றது. இவர் அமெரிக்க ராணுவத்தினர் முகாம் பகுதிக்கு 1945ம் ஆண்டில் வருவதற்கு முன்னரே முகாமிலிருந்து வெளியேறிவிட்டார் என்பதோடு அவர் காணாமல் போய்விட்டார் என பெர்லின் ஆர்க்கைவின் குறிப்பு தெரிவிக்கின்றது.




இவரைப் போன்ற இன்னொருவர் ஜோசப் ஷோய்ஸ். இவரும் இந்த முகாமில் ஒரு சிறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர். 1938 முதல் 1942 வரை இங்கே முகாமில் பணியில் இருந்திருக்கின்றார். இவரும் கொடுமையான வகையில் சிறைக்கைதிகளைச் சித்ரவதைச் செய்து கொன்றவர். இவர் அமெரிக்க ராணுவத்தினரால் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதோடு 1946ம் ஆண்டு கொலைக்குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தூக்குத்தண்டனை வழங்கி கொல்லப்பட்டார்.

யோஹான் கிக் என்பவர் 1937 முதல் 1945 வரை இந்த முகாமில் அரசியல் அமைப்பின் தலைவராக (Gestapo) பணியாற்றியவர். இவர் சிறைக்கைதிகளை மிக மோசமாக நடத்தியவர் என்ற குறிப்பு உள்ளது. அது மட்டுமன்று. சிறைக்கைதிகளில் பலரைக் கொன்றவர் என்ற தகவலும் கிடைக்கின்றது. மிகக் கொடூரமான நாஸி அதிகாரியாகச் செயலாற்றியிருக்கின்றார். இவர்களைப் போல இந்த முகாமில் இருந்தவர்கள் பலரது குறிப்புக்களை இந்த பங்கர் பகுதி அருங்காட்சியகத்தில் காண முடிகின்றது.

அமெரிக்க ராணுவம் இப்பகுதியைக் கைப்பற்றி சிறைக்கைதிகளை விடுவித்த பின்னர் இந்த டாஹாவ் மனித சித்ரவதை முகாம் அமெரிக்க ராணுவ மையமாக மாற்றப்பட்டது. இங்கே தான் நாஸி குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டார்கள். இது ராணுவ சிறையாக சில ஆண்டுகள் செயல்பட்டது என்பதை இங்குள்ள குறிப்புக்கள் வழி அறிந்து கொள்ள முடிகின்றது. இங்கே அரசியல் கைதிகளைத் துன்புறுத்தி கொலை செய்த இடத்திலேயே அங்கு பணியாற்றிய சில அதிகாரிகள் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு இங்கே காவலில் வைக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டனர். ” வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்” என்பதற்கு ஏற்றார் போன்ற நிலை தான் இவர்களுக்கு ஏற்பட்டது.

ஜெர்மனியில் நாடு முழுமைக்கும் நாஸி போர்குற்றங்களில் ஈடுபட்டோர் பலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிலர் தூக்கு தண்டனை வழங்கி கொல்லப்பட்டனர். பலர் பல ஆண்டுகள் சிறைவாசம் மேர்கொண்டனர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் தப்பி ஓடி விட்டனர். எங்கே இருக்கின்றார்கள் என்ற விபரமே அறியாத வகையில் சில கேஸ்கள் இன்னமும் முடியாமலேயே இருக்கின்றன.



கைதிகள் தங்கியிருந்த அறையில்

1942ம் ஆண்டில் ஜூன் மாதத்திலிருந்து நவம்பர் மாதம் மட்டும், அதாவது 5 மாதங்களில், சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு வரப்பட்ட அரசியல் கைதிகளின் மொத்த எண்ணிக்கை 109,861. இவர்களில் 70,610 பேர் இறந்து போனவர்கள். விடுவிக்கப்பட்டவர்கள் 4711 பேர். கொல்லப்பட்டவர்கல்ள் 9267. இதில் இறந்து போனவர்கள் என்போர் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு இறந்தவர் என்றும் கொல்லப்பட்டவர்கள் தண்டனை கொடுக்கப்பட்டு உடன் உயிர் பறிக்கப்பட்டவர்கள் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். இப்படி மிக அதிகமான எண்ணிக்கையில் மனிதர்கள் கொல்லப்பட்டதால் அவர்களை எறிக்க பயன்படுத்தும் வகையில் முகாம்களின் அருகிலேயே பிண எரிப்பு ஆலைகளையும் நாஸி அரசு கட்டியது.



பிண எரிப்பு கருவிகள் பொருத்தப்பட்ட சவக்கிடங்கு

1942 முதல் நாஸி அரசு மிக அதிகமான அளவில் அரசியல் கைதிகளைப் பிடித்து சிரை வைத்து சித்ரவதைச் செய்யும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தது. நாஸி அரசு என்பது இப்போதைய ஜெர்மனி என்பதைக் கடந்து பால்டிக் நாடுகளான எஸ்தோனியா, லாத்வியா, லித்துவானியா, போலந்து, நெதர்லாந்து என்ற வகையில் விரிந்த ஒரு நிலப்பகுதியாக மாறி இருந்தத காலகட்டம் அது. ஆக டாஹாவ் சித்ரவதை முகாம் போல இந்த ஏனைய நாடுகளிலும் சித்ரவதை முகாம்கள் உருவாக்கப்பட்டு யூதர்களும் நாஸி அரசை விமர்சிக்கும் மக்களும் பிடித்து சிறைவைக்கப்பட்டு கொடுமை செய்யப்பட்டனர்.

இந்தக் கொடுமைகளோடு மேலும் ஒரு பிரச்சனையாக உருவெடுத்தது 1944ம் ஆண்டு நவம்பர் மாதம் பரவிய தொற்றுநோய். கொத்து கொத்தாக சிறைக்கைதிகளில் பலர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தனர். அவர்களின் சடலங்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போய் சுடலையில் எரித்து முடித்தனர் முகாம் பணியாளர்கள். அது போல பல சிறைக்கைதிகள் காசநோயினால் பாதிக்கப்பட்டனர். இவர்களை 20 பேர் ஒரு குழு என்ற வகையில் பாதிக்கப்பட்டோரை விஷ மருந்து ஊசி போட்டு கொன்றிருக்கின்றனர்.


இறந்த கைதிகளின் சடலங்கள்

சித்ரவதை முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்த கைதிகள் பல்வகை தொழில்களைச் செய்ய ஈடுபடுத்தப்பட்டார்கள். அவர்களில் உடல் நிலை மிக மோசமாக ஆனவர்களை மருந்து கொடுத்து பாதுகாத்து காப்பாற்ற கண்காணிப்பாளர்கள் விரும்புவதில்லை. அவர்களைக் கொடுமையான வகைகளில் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்துவது போன்ற பயங்கரவாத செயல்களிலும் நாஸி அரசு ஈடுபட்டது. எப்படி முயல், எலி, நாய், குரங்கு போன்ற விலங்குகளுக்கு பல வகை மருந்துகளைக் கொடுத்து சோதனைச் செய்தார்களோ அதே போல இந்த கால கட்டத்தில் அரசியல் கைதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் இவ்வகைச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டனர் என்பதை அறியும் போது மனம் அதிர்ச்சியில் உறைந்து போகின்றது. இந்த முகாம் இப்படி நிகழ்த்தப்பட்ட சோதனைகளைப் பற்றியும் எல்லா தகவல்களையும் வழங்கியிருப்பதை நினைக்கும் போது வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

இப்படி கொடூரங்களின் இருப்பிடமாக 12 ஆண்டுகாலம் இந்த சித்ரவதைமுகாம் செயல்பட்டிருக்கின்றது. நாஸி ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் எல்லா முகாம்களிலும் அதன் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

ஜெர்மனி படிப்படியாக பல அரசியல் மாற்றங்களை 109ம் நூற்றாண்டில் சந்தித்தது. நாஸி அரசு மறைந்தாலும் இன்றளவும் நாஸி கொள்கை முற்றிலுமாக ஜெர்மனி ஆஸ்திரியா போன்ற நாடுகளில் மறைமுகமாக செயல்பட்டு வருகின்றது. வெளிப்படையாக தெரியாவிட்டாலும் இது இயங்குகின்றது என்பதை பொது மக்கள் அறிவர். அரசு மிகக் கடுமையான சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு தீவிரவாதிகளைக் கைது செய்வதும் நடக்கின்றது.

எனது அனுபவத்தில் கடந்த 18 ஆண்டுகளில் கிழக்கு ஜெர்மனியில் இயங்கும் சில நாஸி கொள்கை சார்பு அமைப்புக்கள் மேற்கொண்ட சில வன்முறை சம்பவங்களைப் பற்றி ஊடகங்களின் வழி கேள்விப்பட்டிருக்கின்றேன். அரசின் தீவிரக் கண்காணிப்பில் இந்த அமைப்புக்கள் இருக்கின்றன.

இன்று டாஹாவ் சித்ரவதை முகாம் சுற்றுப்பயணிகளுக்கு மட்டுமல்லாது உள்ளூர் மக்களுக்கும் வரலாற்றை அவர்களுக்கு பாடமாகப் புகட்டும் அறிவுக்களஞ்சியமாகத் திகழ்கின்றது. தாம் யூதர்களுக்கு இழைத்த கொடுமையை சான்றுகளோடும் அறிக்கைகளோடும், புகைப்படங்களோடும் ஜெர்மானிய அரசு இங்கே விரிவாக வெளியிட்டுள்ளது.



நினைவகத்தின் வாசலில்

ஜெர்மனிக்கு வருபவர்கள் தவறாது பார்க்க வேண்டிய அருங்காட்சியகங்களில் இதனையே முதன்மை இடத்தில் வைக்க வேண்டும் என தயங்காது பரிந்துரைப்பேன்.

அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். அனேகமாக நாம் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்திருக்கும் நாடு ஒன்றிற்குத்தான் செல்லவிருக்கின்றோம். எதுவாக இருக்கும் என யோசித்துக் கொள்ளுங்கள்!!



Wednesday, February 17, 2016

55. டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம்(2), பாயார்ன், ஜெர்மனி.

http://www.vallamai.com/?p=66441


முனைவர்.சுபாஷிணி

இனவெறி, மதவெறி, மொழிவெறி ஆகியன மனிதரை மனிதப்பண்புகளை இழக்கச் செய்வன. தன் இனம், சமயம், மொழி ஆகியவற்றின் மீது மனிதருக்கு ஆர்வமும், ஈடுபாடும், பற்றும் இருக்கலாம். ஆனால் அது வெறியாக மாறும் தன்மையைப் பெறும் போது தன்னைப் போன்ற சக மனிதரையே, தன் கொள்கையை நிலைநாட்டுவதற்காக வதைத்து துன்புறுத்தி கொல்லும் கொடும்மனமும் மனிதருக்கு வாய்த்துவிடும் அபாயம் இருக்கின்றது. நாம் அறிந்த உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால் இனம், மதம், மொழி ஆகியவற்றிற்காக இதுகாறும் இந்த உலகம் சந்தித்திருக்கும் மனித குல கொடூரங்கள் என்பது மிக அதிகம். பசுமை நிறைந்த புல்வெளிகள் ரத்தக்காடாக இருந்த வரலாற்று நிகழ்வுகள் கற்பனைகள் அல்ல. அவை உண்மை சம்பவங்கள். இந்த இன, மத, மொழி வெறியோடு தமிழர்களை இருக்கப்பற்றிக்கொண்டிருக்கும் மேலும் ஒரு வெறித்தனமான பொருள் ஒன்று உண்டு என்றால் அது தான் சாதி என்பது. சாதிக்காக தன் சக இன மனிதரையே மனதாலும் உடலாலும் வதைத்து துன்புறுத்தும் மனிதர்கள் நம்மிடையே ஏராளமானோர் உலவத்தான் செய்கின்றனர். இந்த வெறித்தனங்களெல்லாம் எவ்வகையிலும் யாருக்கும் நன்மையைத்தராதவை. கொடுமைகளும் கொடூரங்களும் வன்முறைகளும் அழிக்கும் தன்மையுடயவை அன்றி எந்த நற்பலனும் மனித குலத்திற்கு தராதவை.

அன்று, ஐரோப்பா முழுமையையும் ஆரிய ஜெர்மானிய இனம் ஆளவேண்டும் என்னும் பேராசை அடோல்ஃப் ஹிட்லரின் மனதை ஆக்கிரமித்திருந்தது. அவரது கொள்கையைச் சித்தாந்தமாக்கி அதனைப் பரப்பினர் அவரது தளபதிகள். ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை வாசிக்கும் பொழுது அவரை விட அவரது சகாக்களும் அவர் கட்சியின் அரசியல் பொறுப்பாளர்களும், ஆரியரல்லாதோர், அதிலும் குறிப்பாக யூதர்களுக்கு மிக அதிகமாக கொடுமைகள் செய்தவர்கள் என்ற தகவலை அறிய முடியும்.

ஜெர்மனியில் நாஸி கொடுமையைப் பற்றி பேசும் பலர் அதே வேளையில் இன்னும் சற்று வட மேற்கே பால்டிக் நாடுகளான, லித்துவானியா போன்ற நாடுகளில் அதே காலகட்டத்தில் இவர்கள் யூதர்களுக்கு இழைத்த கொடுமைகளைப் பற்றி பேசுவதில்லை.

இதுமட்டுமா..? நாஸி கொடுமையில் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட மிகப் பெரிது என அறியப்படுவது துருக்கி ஆர்மேனியர்களை ஒன்றாம் உலகப்போர் காலகட்டத்தில் கொன்று குவித்த சம்பவம். ஜெர்மனியின் நாஸி கொடுமை பேசப்படும் அளவிற்கு இந்தக் கொடும் நிகழ்வு உலக அளவில் பேசப்படுவதில்லையே என்ற வியப்பு எனக்கு மட்டுமல்ல, பொதுவாக ஐரோப்பிய வரலாற்றில் ஆர்வம் உள்ளோருக்கு மனதில் எழும் கேள்வியே.

வன்முறைகள் என்று தொடர்ந்தால் இப்படி யோசித்துக் கொண்டே செல்லலாம். சரி..டாஹாவ் மனித சித்ரவதை முகாம் பற்றி மேலும் தொடர்வோம்.


சித்ரவதை செய்யப்படும் பங்கர் பகுதியின் வெளித்தோற்றம்

இந்த முகாம் இயங்கிய 12 ஆண்டுகாலத்தில் அரசியல் கைதிகள் பிடித்து வைக்கப்பட்டிருந்த பங்கர் இருக்கும் பகுதி SS என்ற குறியீட்டுப் பெயரால் அழைக்கப்பட்டது. இங்கு அடைத்து வைக்கக்கொண்டு வரப்படும் கைதிகள் இங்கிருக்கும் பங்கரின் மற்றொரு பகுதியில் பல அடுக்கு படுக்கைகள் வைத்த நீண்ட அறையில் தங்கி வருவர். ஆனால் பங்கர் பகுதியில் தான் தனித்தனியாக இவர்களைக் கொண்டு வந்து அடித்து துன்புறுத்தி தகவல்களைப் பெறும் கொடூரங்கள் நிகழும்.



பங்கர் உள்ளே

ஒவ்வொரு நாள் காலையும் வரிசையாக எல்லா கைதிகளும் வெளிப்புற பகுதிக்கு வந்து விடவேண்டும். இவர்கள் அங்கே வெயிலோ மழையோ, பனியோ எதுவாகினும் 1 மணி நேரம் காலையில் நிற்க வேண்டும். அப்போது கைதிகள் எண்ணிக்கை எடுக்கப்படும். யாரேனும் தப்பி ஓடியிருந்தால் ஏனையோர் மேலும் பல மணி நேரங்கள் தண்டனையாக அங்கேயே நிற்க வேண்டும். மின்சாரம் பொருத்தப்பட்ட கம்பிகளையும் மீறி ஒரு சிலர் தப்பித்துச் சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. இப்படி பல மணி நேரங்கள் இங்கே நிற்கும் வேளையில் சிலர் அங்கே யே மயங்கி விழுந்து இறந்தும் போயிருக்கின்றனர்.



பங்கர் அறையின் முன்

தற்சமயம் பங்கர் முழுதுமே அருங்காட்சியமாக்கப்பட்டிருப்பதால் இங்கு இறந்தோர் பட்டியல் அவர்களது விபரங்கள் ஆகியன இங்கே புகைப்படங்களோடு வழங்கப்பட்டுள்ளன. அப்படி இறந்தோரில் ஜோர்ஸ் எல்சர் என்பவரும் ஒருவர். இவர் 1939ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி அடோல்ஃப் ஹிட்லரை வெடிகுண்டு வைத்து கொல்ல முயற்சித்தார். அது தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக இவர் சிறைபிடித்து வந்து இந்த டாஹாவ் சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டார். ஏப்ரல் 9ம் தேதி 1945ம் வருடம் இவர் சித்ரவதை செய்யப்பட்டு இதே முகாமில் கொலை செய்யப்பட்டார். இவரைப்போல இறந்தோர் ஏராளம்.



விசாரனைக்கு அழைத்து வரப்படும் இக்கைதிகள் பலவகை சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இப்படி சித்ரவதை செய்யப்பட்டு ஆனால் பின்னர் உயிருடன் இங்கிருந்து வெளியேறியவர் பூசன்கைகர். இவரை சிறை அதிகாரிகள் 1934ம் ஆண்டில் பெப்ரவரி முதல் அக்டோபர் வரை ஒரு இருட்டு அறையில் காலில் இரும்பு சங்கிலி கட்டி அடைத்து வைத்து சித்ரவதைச் செய்தனர். இவர் அதனை படமாக வரைந்து கொடுக்க அந்தப் படம் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



இதே போன்ற மற்றொரு புகைப்படம். கொலைசெய்யப்பட்ட யூத சிறைக்கைதி லூயுஸ் ஸ்லோஷ் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை விளக்கும் வகையில் இங்குள்ளது. இவர் இறந்த போது கொலைசெய்யப்பட்டாலும் அறிக்கையில் இவர் தற்கொலை செய்து கொண்டார் என்றே எழுதப்பட்டதாகவும் இங்குள்ள குறிப்பு சொல்கின்றது.



இப்படி ஏராளமான நிகழ்வுகள் வன்கொடுமைகள் இங்கே நிகழ்ந்துள்ளன.

அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் இங்கு வந்து மீட்கும் பணியில் ஈடுபட்ட போது அடைபட்ட சில சாமான்கள் வைக்கும் அறைகளில் கொத்து கொத்தாக இறந்த மனிதர்களின் சடலங்களைப் பார்த்து அதிர்ச்சியுற்றனர். நாஸி அரசியல் சித்தாந்தத்திற்கு எதிர் குரல் எழுப்புவோரையெல்லாம் பிடித்து வந்து துன்புறுத்துவதோடு அவர்களைக் கொலை செய்து குவித்து வைத்த்திருந்தனர் இந்த முகாமின் அதிகாரிகள் சிலர்.



அவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம். அடுத்த பதிவில் தொடர்ந்து வாருங்கள்!

தொடரும்…

சுபா​

Monday, February 15, 2016

54. டாஹாவ் நாஸி சித்ரவதை முகாம் அருங்காட்சியகம் (1), பாயார்ன், ஜெர்மனி

http://www.vallamai.com/?p=66362


முனைவர்.சுபாஷிணி

1933ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அடோல்ப் ஹிட்லர் ஒன்றிணைக்கப்பட்ட ஜெர்மனியின் சான்சலராக நியமனம் செய்யப்பட்டார். இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக அரசியல் எதிரிகளைச் சிறைவைப்பதற்கென்றே பிரத்தியேகமாக ஒரு சித்ரவதைமுகாம் ஜெர்மனியின் தெற்குப் பகுதி மானிலமான பாயார்னில் டாஹாவ் என்ற கிராமப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இந்தச் சிறை அடுத்தடுத்து விரிவாக்கப்பட்ட ஜெர்மானிய ஆட்சிக்குட்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட ஏனைய சிறைகளுக்கு ஒரு மாடலாக வன்முறைகளின் பள்ளிக்கூடமாக அமைந்தது. 12 ஆண்டுகள் இந்தச் சித்ரவதைமுகாம் பயன்பாட்டில் இருந்தது. இந்த 12 ஆண்டுகள் ஐரோப்பா முழுமையும் நாஸி ஆட்சியை எதிர்த்த அரசியல் கைதிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்யும் கூடமாக இது திகழ்ந்தது. இந்த 12 ஆண்டு காலகட்டத்தில் இச்சித்ரவதை முகாமில் 200,000 சிறைக்கைதிகள் அடைக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 41,500 பேர் நாஸீ அதிகாரிகளால் வதைத்து துன்புறுத்தி கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படையினர் நாஸி ஜெர்மனியைத் தாக்கி ஹிட்லர் கொல்லப்படுவதற்கு ஒரு நாளைக்கு முன் அதாவது, 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் தேதி இச்சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்டோர் அமெரிக்கப் படையினரின் உதவியால் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர்.




இன்று காலம் எவ்வளவோ மாறிவிட்டது. இன்றைய ஜெர்மனியை அன்றைய ஜெர்மனியோடு ஒப்பிட முடியாது. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை காண்கின்றோம். அன்று இருந்த ஆரிய சமுதாயம் என்ற இனவெறி, ஈடுபாடு இன்று இல்லை. அன்றைய ஆவணப் படங்களையும் அக்கால நிகழ்வை ஒட்டி எடுக்கப்படுகின்ற சினிமா படங்களையும் பார்க்கும் போது ஜெர்மனியில் இப்படியும் கூட நடந்திருக்குமா என்ற அய்யத்தை உருவாக்குவதை மறைக்க முடியவில்லை.

அன்றைய நாஸி கொடுமைகளைப் பற்றி பேசி தன்னைத்தானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் தைரியசாலிகள் தான் இன்றைய ஜெர்மானியர்கள். தன் இனம் வேற்று இனத்திற்குச் செய்த தவற்றை தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் திறந்த மனத்துடன் பேச இம்மக்கள் தயங்குவதில்லை. நாஸி போதனைகளால் மயங்கிக் கிடந்த மனிதர்களில் எஞ்சியிருப்பவர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரலாற்றில் முக்கிய நாட்களில் நடைபெறும் சில விவாத நிகழ்வுகளில் பார்க்கக்கூடிய வாய்ப்பு அமைகின்றது. அவர்களது அக்காலத்தைய மன நிலை, அவர்களை எவ்வாறு அவர் தம் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர், ஏற்றுக்கொள்கின்றனர் என்பதை குடும்பத்தாரையெல்லாம் அழைத்து வந்து வைத்துக் கொண்டு அலசும் தைரியமும் மனத்திடமும் பாராட்டுதலுக்குறியது.

எந்த இனம் அல்லது எந்த மனிதர் தன் தவற்றை தானே பார்த்து அலசி ஆராய்ந்து .. “ஆம் நான் இதனைச் செய்தேன். இது தவறு. அதற்கான விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்கின்றேன்” என நினைக்கின்றாரோ அவர் தன்னைப் புடம் போட்டுக் கொண்டு மேன்மையடையமுடியும். அவ்வினம் தன்னை திருத்திக் கொண்டு பரந்த நோக்கத்தைப் பெற முடியும். ஆனால் அதற்கு எதிர்மாராக “நான் செய்ததெல்லாம், செய்வதெல்லாம், செய்யப்போவதெல்லாம் நன்மை உண்மை” என்று வாதாடும் நபர்களும் சமூகமும் தன்னிலையை மேம்படுத்திக் கொள்ள இயலாது என்பது தான் சமூகவியல் உண்மை.அந்த வகையில் இக்கால ஜெர்மானிய சமூகம் நாஸி காலகட்டத்திலிருந்து பல பாடங்களைக் கற்று புடம்போட்டு செம்மை படுத்தப்பட்ட சமூகமாகத் திகழ்கின்றது. அதன் விளைவாக இன்றைய ஜெர்மனியில் இன்றைய வெளியுறவுக் கொள்கை என்பது மனிதாபிமானம் மிக்க ஒரு கொள்கையாக உலக நாடுகள் அங்கீகரிக்கின்ற ஒரு முத்திரையைப் பெற்றிருக்கின்றது.

டாஹாவ் கிராமத்தில் இருக்கும் நினைவுச் சின்னப் பகுதி 1965 ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த சித்ரவதை முகாமை உருவாக்குவதில் வரலாற்று ஆய்வாளர்கள் மட்டும் பங்கெடுத்துக் கொள்ளவில்லை. இங்கு கைதிகளாக அடைக்கப்பட்டிருந்தோர் பலர் இணைந்து இந்த நினைவகத்தை முழுமையாக்கியிருக்கின்றனர்.


டிக்கட் பெற்றுக் கொண்டு சித்ரவதை முகாம் நோக்கி செல்லும் பாதை

டாஹாவ், பவேரியா மானிலத்தின் தலைநகரமான மூனீக் செல்வதற்கு முன்னராக இருக்கின்றது. இப்பகுதிக்குச் செல்லும் சாலையில் இச்சித்ரவதைமுகாம் பற்றிய தகவல் சாலைகளில் ஆங்காங்கே காணக்கூடியதாக இருப்பதால் இந்த இடத்தைச் சென்று சேர்வதில் எவ்வகைச் சிரமமும் இருக்காது. நான் வாகனத்தில் சென்றதால் நேரடியாக முகாமின் முன் வாசல் பகுதி வரை சென்று கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே சென்றேன்.

​வழிகாட்டிப் பலகை

இங்கே பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் 8 யூரோ கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. மாணவர்களுக்கும் வயதானவர்களுக்கும் சலுகை உண்டு. மலேசியாலிருந்து என்னைச் சந்திக்க வந்திருந்த என் தோழி சரஸ்வதியையும் என் உறவினர் திலகேஸ்வரியையும் என்னுடன் அன்று அழைத்துச் சென்றிருந்தேன்.

இச்சித்ரவதை முகாம் நினைவகத்தை அமைக்க பவேரிய மானிலம் பொருளாதார உதவியை வழங்கியுள்ளது. முகாம் இருக்கும் பகுதியில் ஓரிடத்தில் 2003ம் ஆண்டு வாக்கில் கண்காட்சி கூடம் ஒன்று நிர்மாணித்து முடிக்கப்பட்டது. இது, வதை முகாமில் இருந்த ஐரோப்பாவின் பல நாட்டு கைதிகள் பற்றிய தகவல்களைச் சொல்வதாகவும், அந்த நாடுகளில் அவர்களது அரசியல் நடவடிக்கைகளைப் பற்றி விவரிக்கும் தகவல் களஞ்சியமாகவும் இருக்கின்றது. இங்கே ஒரு தனி அறையில் தொடர்ச்சியாக குறும்படங்கள் குறிப்பிட்ட சில மொழிகளில் திரையிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டும் வருகின்றது.



​அன்று, அரசியல் கைதிகள் ரயிலில் அழைத்து வரப்படுகின்றனர்


​இன்று, அதே பகுதி

டாஹாவ் சித்ரவதைமுகாம் சாலையை ஒட்டியே அமைந்துள்ளது. வெளியிலிருந்து பார்க்கும் போது இன்னாளைய சிறையை ஒத்த ஒரு அமைப்பு. அதனைத் தொடர்ந்து உள்ளே செல்லும் போது சிறிய கண்ணாடி கூடம் ஒன்று அமைந்துள்ளது. இங்கே தான் கட்டணம் கட்டி டிக்கட்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இங்கே நினைவுச் சின்னங்கள் விற்கும் கடை, உணவு அங்காடி ஆகிய பகுதிகள் இருக்கின்றன. வெளியே வந்ததும் அங்கே அம்பு குறியிடப்பட்ட பாதை வழிகாட்டியைப் பார்த்துக் கொண்டே ஒவ்வொரு பகுதியாக பார்த்து முடிக்கலாம். நாங்கள் டிக்கட்டை பெற்றுக் கொண்டு அம்புக்குறியிட்ட பாதையில் சித்ரவதை முகாமை நோக்கி நடக்கலானோம். முகப்புப் பகுதியிலிருந்து ஏறக்குறைய 150மீ தூரம் இந்த முகாம் உள்ளது. நடந்து வரும்போது நமக்கு வலது புரத்தில் இச்சித்ரவதை முகாம் இருக்கின்றது. இடது பக்கத்தில் ரயில் பாதை தண்டவாளம் இருக்கின்றது. இப்போது இங்கே ரயில் பயணச் சேவை நடப்பில் இல்லை. ஆனால் அன்று இருந்திருக்கின்றது. இந்த ரயிலில் தான் சிறைப்பிடிக்கப்பட்ட அரசியல் கைதிகளை முகாமிற்கு அழைத்து வருவார்கள். அங்கே நின்று அவர்கள் மன நிலையை சற்றே யோசித்துப் பார்க்கும் போது அச்சம், வேதனை, கோபம், ஆகியவற்றின் பிரதிபலிப்பின் உணர்வு அலைகள் நம்மையும் சூழ்வதை நம்மால் தடுக்க முடியாது.



​சித்ரவதை முகாம், முன் வாசலில்

சரி, வலது புரம் திரும்பி சித்ரவதை முகாமிற்குள் செல்வோம். தொடர்ந்து வாருங்கள்!

Tuesday, February 9, 2016

53. எல்ஸாஸ் சமூக அருங்காட்சியகம் (2), ஸ்ட்ராஸ்போர்க் (2), பிரான்சு

முனைவர்.சுபாஷிணி


​http://www.vallamai.com/?p=66213​

ஸ்ட்ராஸ்பொர்க் படுகொலை நிகழ்வு என்பது ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்றிருக்கும் வன்முறை சமபவங்களின் பட்டியலில் நிச்சயமாக இடம்பெறும் ஒரு நிகழ்வு. காதலர் தினம் என நாம் இப்போது கொண்டாடும் பெப்ரவரி 14ம் தேதி, 1349ம் ஆண்டில் ஒரு கொடூர சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அதாவது, இதே நாளில் 1349ம் ஆண்டில், ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் வசித்து வந்த யூதமக்களை அவ்வூர் மக்கள் உயிருடன் பிடித்து கொளுத்தி கொன்ற கருப்பு நாள் இது என்றும் குறிப்பிடலாம். யூதர்களில் பலர் கொல்லப்பட்டும், இருந்த ஏனையோர் அந்த நகரத்தை விட்டே அகற்றப்பட்ட நிகழ்வும் இந்த நாளிலும் அதன் தொடர்ச்சியான நாட்களிலும் இந்த நகரில் நடந்தது.



1348ம் ஆண்டின் வசந்தகாலம் தொட்டே யூதர்களின் மீதான வெறுப்புணர்ச்சி என்பது இப்பகுதியிலும் அதன் சுற்றுப் புறத்திலும் பரவி வர ஆரம்பித்தது. இதன் அடிப்படையில் இப்போது சுவிஸர்லாந்தின் ஒரு முக்கிய நகரமான பாசலிலும், இன்றைய ஜெர்மனியின் தென்மெற்கு நகரங்களில் ஒன்றான ஃப்ரைபுர்க் நகரிலும் அதே ஆண்டின் நவம்பர் மாதத்தில் யூதர்களை உயிருடன் பிடித்துக் கொல்லும் நிகழ்வுகள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக 1349ம் ஆண்டில் பெப்ரவரி 14ம் தேதி ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்திலிருந்து ஒட்டு மொத்தமாக யூதர்கள் அகற்றப்பட்டார்கள்.

இந்த வன்கொடுமைகளுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது யூதர்களின் பொருளாத மேண்மை தான். ஐரோப்பாவின் அன்றைய நகரங்கள் பலவற்றில் பணம் வட்டிக்குக்கொடுத்துப் பெறும் வகையில் செல்வாக்குடன் யூதர்கள் இருந்தார்கள். பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது யூதர்களுக்கும் ஏனைய பிற சமூகங்களுக்குமிடையே மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டை ஒத்ததாக அமைந்த நிலை, பொருளாதார ஆதிக்க நிலை ஆகிய யூதர்கள் மீதான பரவலான வெறுப்புணர்ச்சியை ஏனைய சமூகத்தினரிடம் உருவாக்கியது. இதே நிலை தான். 20ம் நூற்றாண்டின் ஆரம்ப கால சூழலில் ஜெர்மனியில் யூதர்களின் இன அழிப்பு நிகழ்வுக்கும் நாஸி சிந்தனை எழுச்சிக்கும் காரணமாக அமைந்தது என்பது மறுக்கப்பட முடியாத ஒன்றே.

ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் 1349ம் ஆண்டு வாக்கில் ஏற்கனவே இருந்த யூதர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியோடு அப்போது மிக வேகமாகப் பரவி பலரது உயிரைக் கொன்ற ப்ளேக் நோயும் ஒரு முக்கிய காரணமாகவே அமைந்தது. யூதர்கள் தான் இந்த ப்ளேக் நோய் பரப்பும் நச்சை கிணற்று நீரில் கலந்து விட்டதாகச் சொல்லி அதனையே ஒரு காரணமாக வைத்து யூதர்களைப் பிடித்து வந்து உயிரோடு கொளுத்திக் கொன்றனர். இந்த ப்ளேக் நோய், அது ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் ஐரோப்பாவின் பல நகரங்களில் பெப்ரவரி மாதம் திருவிழாக்கள் நடைபெறும் அதில் மக்கள் கொடூரமான வகையில் முக அலங்காரம் செய்து கொண்டு அசுரன், பேய் பூதம், அங்கவீன மனிதர்கள் என்ற வகையில் ஆடையலங்காரம் செய்து கொண்டு தெருக்களில் ஊர்வலம் வருவர். இன்று கேளிக்கை நிகழ்வுகளில் ஒன்றாகிப்போன ப்ளேக் நோய் திருவிழா ஐரோப்பாவை கடந்த 1000 ஆண்டுகளில் தொடர்ச்சியாக அவ்வப்போது தாக்கி மக்கள் தொகை எண்ணிக்கையில் மிகப் பெரிய எண்ணிக்கை குறைய ஒரு காரணமாக அமைந்ததை மறந்து விட முடியாது.



இப்படி பல வரலாற்று சம்பவங்கள் ஸ்ட்ராஸ்போர்க் நகரிலே நடந்துள்ளன. அப்படியான பல தகவல்களை உள்ளடக்கிய எளிமையான ஒரு அருங்காட்சியகமாகவே இந்த எல்சாஸ் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. எல்சாஸ் மக்களின் வரலாற்றையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் 5000க்கும் மேற்பட்ட காட்சிப்பொருட்கள் இங்குள்ளன.



ஆண் பெண், குழந்தைகளுக்கான பாரம்பரிய உடை, காலணிகள் தலையலங்காரப் பொருட்கள் ஆகியன ஒரு பகுதியில் உள்ளன. வீட்டு பொருட்களான படுக்கை அறை அமைப்பு, அலமாரி, சாப்பாட்டு மேசை, சமையல் பொருட்கள், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், ஆகியன ஒரு தளத்தில் சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இப்பகுதியின் வரலாற்றுச் சம்பவங்களைச் சொல்லும் பட்டயங்கள், ஆவணங்கள், நில வரைபடங்கள் ஆகியன ஒரு பகுதியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.



​இந்த அருங்காட்சிகத்திற்கு உள்ளே சென்று பார்த்து வர கட்டணம் தேவையில்லை. இது மையச் சாலை பகுதியிலேயே அமைந்திருக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தின் முகவரி 23-25 quai Saint-Nicolas, 67000 Strasbourg. எல்சாஸ் சமூகத்தினரின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ள விரும்புவோரும், ஆய்வு செய்ய விரும்புவோரும் நிச்சயம் சென்று பார்த்து வர வேண்டிய அருங்காட்சியகங்களில் இது முக்கியமானது.



ஸ்ட்ராஸ்பொர்க் நகரத்தில் மேலும் சில முக்கிய அருங்காட்சியகங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றியும் பிரிதொரு முறை எழுதுகின்றேன்.

அடுத்த பதிவில் மேலும் ஒரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வரவும்.!

Friday, February 5, 2016

​52. எல்ஸாஸ் சமூக அருங்காட்சியகம், ஸ்ட்ராஸ்போர்க், பிரான்சு

http://www.vallamai.com/?p=66155

முனைவர்.சுபாஷிணி

ஐரோப்பாவில் அதன் அதிகாரப்பூர்வ பார்லிமண்ட் இருக்கின்ற நகரமாக விளங்குவது பிரான்சில் வடகிழக்கு நகரங்களில் ஒன்றான ஸ்ட்ராஸ்போர்க். இந்த ஐரோப்பிய பார்லிமெண்ட் ஒவ்வொரு ஆண்டும் 12 முறை கூடும் போதும் நான்கு நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஐரோப்பிய நாடாளுமன்ற செயற்பாடுகள் பற்றிய பல்வேறு விடயங்கள் இங்கு அலசி ஆராயப்படுவது வழக்கம். பெல்ஜியம் ப்ரஸ்ஸல்ஸ் நகரில் இருக்கும் மற்றொரு ஐரோப்பிய பார்லிமெண்டின் பகுதியை விட முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக இந்த பார்லிமண்ட் அமைந்துள்ளது. இங்குதான் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தலும் நடத்தப்படுகின்றது என்பது இதன் சிறப்பை மேலும் புரிந்து கொள்ள உதவும்.


ஐரோப்பிய பார்லிமென்ஸ் – ஸ்ட்ராஸ்போர்க்


ஐரோப்பாவின் அரசியலமைப்பிற்கு மையப் புள்ளியாக விளங்கும் இந்த மாநிலம் வரலாற்று பழமைக்குச் சிறிதும் குறைந்ததல்ல. ஏறக்குறை கி.மு.1500 ஆண்டு வாக்கிலேயே செல்ட்டிக் இனக்குழுவினர் இங்கு இருந்தமைக்குச் சான்றாக இப்பகுதியில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்கள் கிடைத்திருக்கின்றன. அதன் பிறகான ரோமானியப் பேரரசின் தாக்கம் இப்பகுதியில் அமைந்ததற்குச் சான்றாக இன்றளவும் காணப்படும் சுவர்களின் எச்சங்கள், அகழ்வாய்வுச் சான்றுகள், ரோமானிய தெய்வங்களின் சிலைகள், போர் கருவிகள் ஆகியனவை அமைந்திருக்கின்றன. ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் இப்பகுதி ஜெர்மானியர்களின் ஆளுகைக்கு உட்பட்ட இடமாக அமைந்திருந்தது.

இப்பகுதியில் புழக்கத்தில் இருந்த மொழி அல்சேட்டியன் என அழைக்கப்படுவது. இது இன்றைய ஜெர்மன், அதாவது டோய்ச் மொழியின் ஒரு வகை பேச்சு மொழி. இந்த மொழியை விட தற்சமயம் இங்கு பிரஞ்சு மொழியே விரிவாகப் பேசப்படுகின்றது.இதற்கு முக்கியக் காரணம், இப்பகுதி பிரான்சு நாட்டின் எல்லைக்குள் தற்சமயம் இருப்பதேயாகும். ஆயினும் எனது நேரடி அனுபவத்தில் காணும் போது இங்குள்ள மக்கள் ப்ரென்சு மொழியும் டோய்ச் மொழியும் என இரு மொழி தெரிந்தவர்களாகப், பேசக்கூடியவர்களாக இருக்கின்றனர்.



​ரைன் நதியால் சூழப்பட்ட ஸ்ட்ராஸ்பொர்க் நகரம்

பிரான்சு நாட்டின் எல்லைக்குள் இருந்தாலும் எல்சாஸ் என அழைக்கப்படும் இப்பகுதி முழுமையாக பிரென்சு பண்பாடு மற்றும் கலாச்சரத்தை உள்வாங்கிய பகுதியாக இல்லை. அதே போல, ஜெர்மனியின் பல நூற்றாண்டு தாக்கம் இப்பகுதியில் இருந்தாலும் ஜெர்மானிய கலாச்சரமோ பண்பாடோ இங்கு நிலைபெற்றது என்றும் சொல்வதற்கில்லை. இப்பகுதி எல்சாஸ் என்ற தனித்துவத்துடன், இரண்டு பெரு நாடுகளுக்கிடையில் தனித் தீவாக விளங்குவதே இதன் தனிச் சிறப்பாக அமைகின்றது.

இப்பகுதியின் மாறுபட்ட தன்மை மட்டுமே இதனைத் தனித் தீவாக அமைத்திருப்பதாக நினைத்துவிட வேண்டாம். எல்ஸாஸ் பகுதியின் முக்கிய நகரான ஸ்ட்ராஸ்பொர்க் நகரமே ரைன் நதி சூழப்பட்டு ஒரு தீவாகவே அமைந்திருக்கின்றது. இந்த நில அமைப்பு இந்த நகரத்தின் எழிலுக்கு ஒரு கூடுதல் தனிச்சிறப்பாக அமைந்திருக்கின்றது.

எல்ஸாஸ் எனப்படும் பகுதி Alsace-Champagne-Ardenne-Lorraine என்ற மாவட்டப்பகுதியில் அமைந்திருக்கின்றது. எல்ஸாஸ் மக்களின் மொழி எப்படி தனித்துவம் வாய்ந்ததோ அதே போல இம்மக்களின் உடை யலங்காரம் வித்தியாசமானது. வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் கருவிகள் விவசாயக் கருவிகள் ஆகீயனவும் இப்பகுதிக்குண்டான தனிச்சிறப்பைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இருந்திருக்கின்றன.



​காளானும், சீஸும் கலந்த ஃப்ளாம்கூகன்

எல்ஸாஸ் பகுதிக்கான பிரத்தியேக உணவாக அமைவது ஃப்ளாம்கூகன். இது பீஸா போன்ற வகையில் அமைந்த ஒரு உணவு. ஆனால் மிகத்தட்டையாக மெலிதாக இருக்கும். இப்பகுதியில் மட்டுமன்றி ஜெர்மனியின் மேற்கு மானிலங்கள் பலவற்றில் பிரபலமாகிவிட்ட உணவு இது. அதிலும் குறிப்பாக இலையுதிர் காலத்து சாலை நிகழ்வுகளில் கிடைக்கக்கூடிய உணவு வகைகளில் இது கட்டாயம் கிடைக்கும்.



எல்ஸாஸ் பற்றிய இவ்வகையான பல விசயங்களை உள்ளடக்கிய ஒரு தகவல் கூடமே இன்றைய பதிவில் இடம்பெறும் இந்த அருங்காட்சிகம். எல்ஸாஸ் அருங்காட்சியகம் என அழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம் ஸ்ட்ராஸ்புர்க் நகரின் மையப் பகுதியின் மையச் சாலையிலேயே அமைந்திருக்கின்றது. 1902ம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் உருபெற்றது. இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் கட்டிடமும் எல்சாஸ் கட்டிட அமைப்பில் அமைந்த ஒரு கட்டிடமேயாகும்.

அருங்காட்சிகத்தின் உள்ளே சென்று காண்போமே..!

தொடரும்…!​