Thursday, January 20, 2022

தென் ஜியோர்ஜியா தீவில் அருங்காட்சியகம்

 அருங்காட்சியகம் அதாவது மியூசியம் என்றால் ஏதோ பள்ளி மாணவர்கள் வந்து பார்த்து அதிசயித்து செல்லும் இடம் எனத்தான் நமது சூழலில் பலரும் நினைக்கின்றார்கள். நான் தொடர்ச்சியாக அருங்காட்சியகங்கள் பற்றி தகவல் வழங்கிக் கொண்டிருப்பதை நண்பர்கள் பலர் அறிவீர்கள். அந்த வகையில் ஒரு சுவாரசியமான செய்தி.



தென் அமெரிக்காவிற்குக் கீழே (படத்தில் காண்க) உள்ள தீவுதான் தென் ஜியோர்ஜியா. இத்தீவில் விமானநிலையம் கூட இல்லை. 4 நாள் படகுப்பயணத்திற்குப் பின் தான் அடுத்த நிலப்பகுதி விமான நிலையத்தையே அடைய முடியும்.
அங்கு நிரந்தர குடுயிறுப்புகளும் இல்லை. ஆய்வாளர்களும் பணியாளர்களும் மட்டும்தான் இருக்கின்றனர். கொரோனா தொற்றுக்கு முன்னர் இத்தீவுக்குச் சராசரியாக 100 படகுகள் வருமாம் அதில் ஏறக்குறைய ஆண்டுக்கு 10,000 வருகையாளர்கள் வரும் வகையில் இந்த அருங்காட்சியகம் செயல்பட்டுள்ளது. இப்போது மிண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நுழைவுக்கட்டணம் இல்லை. இவ்வளவு தூரம் செல்வதற்கே நமக்கு யாரும் காசு கொடுப்பார்களா என சிலர் யோசிப்பது புரிகிறது 🙂
நேரில் செல்ல முடியாவிட்டால் என்ன? இப்போதுதான் இண்டெர்நெட் நமக்கு உலகை நம் கண்முன்னே கொண்டு வந்து விட்டதே. இந்த லிங்கில் அழுத்தி சென்று பாருங்கள்.
இதன் சேகரிப்புக்களைக் காண https://sgmuseum.gs/ சென்று காணலாம்.
இயற்கை வரலாறு தொடர்பான ஆய்வுப்பணிகளைக் காட்சிப்படுத்தும் கூடமாக இது இருக்கின்றது.
நமது நாட்டில் நாம் வாழும் நகரில் நமக்குப் பக்கத்தில் இருக்கும் அருங்காட்சியத்திற்கு நாம் சென்றிருக்கின்றோமா என யோசிக்கலாம்.
சரி, அண்மையில் நீங்கள் சென்று வந்த அருங்காட்சியகம் பற்றி ஓரிரு வரிகள் சொல்லுங்கள் நண்பர்களே.

Tuesday, September 15, 2020

117. நூரம்பெர்க் ஆவணப்பாதுகாப்பகம், நீதிமன்ற அறை எண் 600 அருங்காட்சியகம், நூரம்பெர்க், ஜெர்மனி

முனைவர்.க.சுபாஷிணி

 https://minnambalam.com/public/2020/09/15/11/Racism-News-of-Nurember-%20Nazi-signs




நூரம்பெர்க் நகரம் - இன்றைய ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின்  தலைநகரமான மூனிக் நகருக்கு அடுத்து முக்கியத்துவம் பெரும் ஒரு நகரம் இது. இன்று ஜெர்மனியின் மிக முக்கிய தொழில் நிறுவனங்களான BMW, SIEMENS, PUMA, ADIDAS,  AUDI  மட்டுமன்றி Intel, Amazon, Microsoft போன்ற அனைத்துலக நிறுவனங்களும் மையம் கொண்டிருக்கும் ஒரு தொழில் நகரமாக அமைந்திருக்கின்றது நூரம்பெர்க் நகரம்.  கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செக், சுலோவாக்கியா, புல்காரியா போன்ற நாடுகள் மட்டுமன்றி பண்டைய ஜெர்மனியின் பகுதியாக சில காலங்கள் விளங்கிய ஹங்கேரி, மற்றும் ஆஸ்திரியா  ஆகிய நாடுகளுக்கும் அருகில் அமைந்த ஒரு நகரம் என்பதும் இதன் சிறப்புகளில் அடங்கும். 

அடோல்ஃப் ஹிட்லர் 1933ம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற காலகட்டம். மார்ச் 30ம் தேதி அப்போதைய ஜெர்மனியின் அதிபராக பதவி ஏற்றிருந்த பவுல் ஃபோன் ஹிண்டன்பெர்க்  ஹிட்லரை சான்சலராக நியமித்தார். ஏற்கனவே பவேரியா மாநிலத்தில்  நவம்பர் 8-9, 1923  ஹிட்லர் நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்பு (The Beer Hall Putsch)  நடவடிக்கை ஏற்படுத்திய தாக்கத்தினாலும், அவரது படைப்பான  Mein Kampf நூலும் அவரை அக்காலகட்டத்தில் மிக  உயர்ந்த அதிகாரத்தையும் அசைக்க முடியாத சக்தி என்ற அங்கீகாரத்தையும் வழங்கியிருந்தன.     1933 மார்ச்  மாதத்தில் ஹிட்லர் தலைமையிலான நாசி அரசின் ஆட்சி  வலுவாகத் தொடங்கிய காலகட்டத்தில் தங்கள் கட்சியை நிலைப்படுத்தவும், மேலும்  மாபெரும் சக்தியாக விரிவாக்கவும் பல திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தத் தொடங்கியது ஹிட்லர் தலைமையிலான நாசி அரசு.   

ஜெர்மனியில் அன்றைய காலகட்டத்தில் இந்த  நூரம்பெர்க் நகரம் நாசிகளால் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நகராகக் காணப்பட்டது. இதற்குக் காரணமும் இருந்தது. இனவாத அரசியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நாசிகளால், ஜெர்மானிய நகரங்களிலேயே பண்டைய ஜெர்மானிய இனக்குழு மக்கள் பெருமளவில் வாழ்கின்ற ஒரு நகரமாக, அதாவது ஜெர்மன் நகரங்களிலேயே மிகவும் `ஜெர்மன்` தன்மையுடன் உள்ள நகரமாக இந்த நகர் அவர்களால் அடையாளம் காணப்பட்டது. குறிப்பாக ஹிட்லருக்கு இந்தக் கருத்தாக்கம் இருந்தது. இதன் அடிப்படையில் நாசிகளின் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் பெரும் நகரமாக பெர்லின் இருந்தது போலவே இந்த நகரையும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உருவாக்க ஹிட்லர் எண்ணினார். இந்தக் கருதுகோள் நாசிகளுக்குப் பிடித்திருந்ததால் நாசிக் கட்சியின் பேரணிகளை நடத்துவதற்கு உகந்த ஒரு நகரமாக இந்த நகரையே அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். 1933 முதல் 1938 வரை ஒவ்வொரு செப்டம்பர் மாதத்திலும் NSDAP  (Nationalsozialistische Deutsche Arbeiterpartei -ஜெர்மன்;  National Socialist German Workers' Party -ஆங்கிலம்) கட்சி தனது வருடாந்திர பேரணிகளை நூரம்பெர்க் நகரத்தில் நடத்தியது. இந்த ஒவ்வொரு கூட்டங்களிலும் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். ராணுவத்தினரின் பல்வேறு வகை நிகழ்ச்சிகளும் கலை நிகழ்ச்சிகளும் வீர அணி வகுப்புகளும் இந்தப் பேரணிகளில் முக்கிய அங்கம் வகித்தன.

அடிப்படையில் ஹிட்லர் கலையார்வம் மிக்கவர். தனது இளமைக் காலத்தில் ஒரு ஓவியக் கலைஞராக அவர் பயிற்சி மேற்கொள்ள  விரும்பினார் என்பதுவும், ஏழ்மையில் வாடிய போது சாலைகளில் ஓவியங்கள் தீட்டி விற்பனை செய்தார் என்பதுவும், இன்றைய ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் அவர் ஓவியப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார் என்பதும், அவர் ஓவியப் பாதுகாப்பு  பணிகள் மேற்கொண்ட ஓவியங்கள் இன்றும் அந்த தேவாலயத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றும் வியன்னா செல்லும் சுற்றுப்பயணிகள் பார்க்கவேண்டிய ஹிட்லர் தொடர்பான சின்னங்களின் பட்டியலில் அச்சாலைகளும் ஒரு தேவாலயமும் பட்டியலில் இடம் பெறுகின்றன. ஓவியம் தீட்டுவதைப்  போலவே கட்டடக் கலையையும் விரும்புபவராக இயல்பாகவே ஹிட்லர் இருந்தார் என்பதை அவரது ஆட்சிக் காலத்தில் அவர் திட்டமிட்டு உருவாக்கிய கட்டடங்கள் உறுதி செய்கின்றன.

1933ம் ஆண்டு அடோஃல்ப் ஹிட்லர்  நூரம்பெர்க் நகரை  நாசி கட்சியின் பேரணிகளின் நகரமாகப் பிரகடனப்படுத்தினார். நூரம்பெர்க்கில்  நாசி கட்சியினர் பேரணிகள் நடத்த திட்டமிட்ட இடத்தை உருவாக்கும் பொறுப்பை ஹிட்லர் அவருக்கு மிகவும்  பிடித்த கட்டடக் கலைஞரான ஆல்பர்ட் ஸ்பியர் (Albert Speer) என்பவரிடம் ஒப்படைத்தார். நாசிக் கட்சியினர் மிகப்பெரிய ஒரு மைதானத்தில் இந்த கட்டிடத்தை அமைக்கத் திட்டமிட்டனர். ஆல்பர்ட் ஸ்பியர்  வடிவமைத்து உருவாக்கிய  கட்டிடங்களிலேயே முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம்  என்று இன்றும் இது அறியப்படுகின்றது. 450,000 பேர் அமரக்கூடிய வகையில் மிகப் பிரம்மாண்டமான ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறும் அரங்கம் போன்ற அரை வட்ட வடிவில் அமைக்கப்பட்ட அரங்க வடிவில் இது உருவாக்கப்பட்டது. நூரம்பெர்க் நகரின் தென்கிழக்குப் பகுதியில் பதினொரு சதுர கிலோமீட்டர் (4.25 சதுர மைல்) அளவில் கட்சியின் பொதுக்கூட்டங்களுக்கான தேவையை முன்வைத்து கட்சியின் நினைவுச் சின்னங்கள் என்ற சிறப்பைப் பெறும் வகையில் கட்டிடங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதன் பணிகள்  1945ல் நாசி ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்  நிறைவாக்கி முடிக்கப்படவில்லை. ஆயினும் கட்டப்பட்ட பகுதியில் பெரும்பாலானவை இன்றளவும் நாம் காணக்கூடிய வகையில் உள்ளன. இன்று இந்த அரங்கத்தின் ஒரு பெரும் பகுதியும்  வளாகத்தின் முன் பகுதியிலும் தான் நூரம்பெர்க் ஆவணப் பாதுகாப்பகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. 

ஹிட்லரும் நாசி சிந்தனையாளர்களும் எந்த நோக்கத்தை முன் வைத்து இந்த மாபெரும் கட்டிடத்தை உருவாக்கினார்களோ அதற்கு நேர் எதிர்மாறாக, இனவாத சிந்தனை எத்தகைய மனித குல அழிவை உருவாக்கும் என்பதற்குச் சாட்சியாக இந்தக் கட்டிடம் இன்று காட்சியளிக்கின்றது. 

அமெரிக்கப் படைகள் நூரம்பெர்க் நகரை 1945ம் ஆண்டு 17-20 ஏப்ரல் வாக்கில் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தன.  ஏப்ரல் 20ம் தேதி (ஹிட்லரின் பிறந்த நாள்) அமெரிக்கப் படையின் 3ம் அணி   நகரை முற்றிலும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததோடு ஹிட்லரையும் நாசி ஆட்சியையும் துதிபாடும் பெயர்களையும் பெயர்ப்பலகைகளையும் அதிரடியாக மாற்றினர்.  Adolf-Hitler-Straße என்ற சாலையின் பெயரை மற்றி  President Roosevelt பெயரைச் சூட்டினர். 

நாசி ஆட்சிகளின் போது அதிகாரிகள் நிகழ்த்திய போர்க் குற்றங்களை விசாரிக்கும் வகையில் நட்பு நாடுகளின் விசாரணை நவம்பர் மாதம் 20ஆம் தேதி 1945 ஆம் ஆண்டு தொடங்கியது. ஆட்சியிலிருந்த நாசி அரசின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் 24 பேர் இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டு, குறிப்பாகக் கொடூரமான குற்றங்கள் மற்றும் மனித உரிமை அடிப்படையிலான அமைதிக்கு எதிரான செயல்பாடுகள் என்ற அடிப்படையில் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணைகள் 1946ஆம் ஆண்டு நிறைவுக்கு வந்து  குற்றவாளிகளில் ஒவ்வொருவருக்கும் தண்டனைகள் அவர்கள் குற்றத்திற்கு ஏற்ற வகையில்  வழங்கப்பட்டன. இது மட்டுமன்றி மேலும் கூடுதலாக 12 விசாரணைகள் 1946 முதல் 1949 என்ற காலகட்டத்தில் நிகழ்ந்தன. இந்த விசாரணைகளின் முக்கியத்துவத்தைக் கருதி,   இவை இன்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திற்கு அடிப்படை வரையறையை வழங்கிய முக்கியத்துவத்தைப் பெறுகிறது. 

நூரம்பெர்க் நகரில் ஹிட்லர் அமைத்த   Reichsparteitagsgelände  என்ற இப்பகுதி இன்று நூரம்பெர்க் ஆவணப்பாதுகாப்பகமாக,  அதிலும் குறிப்பாக நாசி ஆட்சிகால குற்றவியல் சம்பவங்களின் அறிக்கைகள், ஆவணப்புகைப்படங்கள், வீடியோ காணொளிப் பதிவுகளின் தொகுப்புகள் உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் பெற்ற கட்டிடமாக விளங்குகின்றது. இதற்கு ஏறக்குறைய பதினொரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நூரம்பெர்க் நீதிமன்றக் கட்டிடத்தில் தான் நாசி அரசியல் குற்றவாளிகளுக்கு எதிரான நட்பு நாடுகள் நிகழ்த்திய விசாரனை நடைபெற்றது. 

2ம் உலகப் போருக்குப் பின்னர் நட்பு நாட்டுக் கூட்டமைப்பினால் (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சு, சோவியத் யூனியன்)  அனைத்துலக சட்டம் மற்றும் போர் சட்டங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான இராணுவ விசாரனைகள் 'நூரம்பெர்க் நீதி விசாரனைகள்' (Nuremberg trials) என அழைக்கப்படுபவை. இந்த நீதி விசாரனைகள் நாசி ஜெர்மனி அரசின் அரசியல், இராணுவ, நீதித்துறை மற்றும் பொருளாதாரத் தலைமையின் முக்கிய உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டி வழக்குத் தொடுத்தன. முக்கியமாக ஹோலோகாஸ்ட் மற்றும் பிற போர்க்குற்றங்ளைத் திட்டமிட்டு நிகழ்த்தியோருக்கு எதிராக இந்த வழக்குகள் பதியப்பட்டன.   இந்த நீதிமன்றக் கட்டிடம்  1909லிருந்து 1916 வரையிலான காலகட்டத்தில் கட்டப்பட்டது.  நாசி கால ஆட்சியில் அரசியல் முக்கியஸ்தர்களால் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு எதிரான வழக்கு இங்குள்ள மேல்தளத்தில் உள்ள அறை எண் 600ல் தான் நிகழ்ந்தது. 

நீதிமன்ற ’அறை எண் 600’ அறையில் நிகழ்ந்த அனைத்து விசாரணைகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.  இன்று இப்பகுதி அருங்காட்சியகமாக உருவாக்கப்பட்டு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியகம் 1945 முதல் 1946 வரை நிகழ்த்தப்பட்ட விசாரணைகளின் போது உருவாக்கப்பட்ட வாக்குமூலம் மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் பகுதியாக உள்ளது. இங்கு அனைத்து ஆவணங்களும் தகுந்த பாதுகாப்புடன்  பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. விசாரணை நடந்த காலகட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட வீடியோ பதிவுகளும் ஒலிப் பதிவுகளும் இங்கே பொதுமக்கள் பார்த்தும் கேட்டும் அவற்றை விரிவாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ளன.

1945 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ம் தேதி அனைத்துலக இராணுவ நீதிமன்றத்தின் 4 தலைமை வழக்குரைஞர்கள் சார்ந்த குழு 24 பேரை நாசி ஆட்சி காலத்தில் கொடூரமான குற்றமிழைத்தவர்கள் என்று அடையாளப்படுத்தி குற்றம் சுமத்தியது. இவர்கள் அனைவரும் நாசி அரசாங்கத்தின் மிகமுக்கிய உயர் பதவிகளை வகித்தவர்கள்.  இவர்களுள் Hermann Göring (ஹிட்லரின் முக்கிய அதிகாரி), Rudolf Hess (நாசி கட்சியின் துணைத் தலைவர் ), Joachim von Ribbentrop (வெளியுறவு அமைச்சர்), Wilhelm Keitel (ஆயுதப்படைத் தலைவர்), Wilhelm Frick (உள்துறை அமைச்சர்), Ernst Kaltenbrunner (பாதுகாப்புப் படைகளின் தலைவர்), Hans Frank (ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தின் கவர்னர் ஜெனரல்), Konstantin von Neurath (போஹேமியா மற்றும் மொராவியாவின் ஆளுநர்), Erich Raeder (கடற்படைத் தலைவர்), Karl Doenitz (ரீடருக்குப் பின் கடற்படைத் தலைமை பொறுப்பேற்றவர்), Alfred Jodl (ஆயுதப்படைத் தலைவர்), Alfred Rosenberg (ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்குப் பகுதிகளுக்கான அமைச்சர்), Baldur von Schirach (இளம் ஹிட்லர் அமைப்பின் தலைவர்), Julius Streicher (`radical Nazi` பதிப்பாளர்), Fritz Sauckel (தொழிலாளர் அமைப்பின் தலைவர்), Albert Speer (ஆயுதப்பகுதி அமைச்சர் - இவரே மேற்குறிப்பிட்ட Reichsparteitagsgelände  கட்டிடத்தை, அதாவது இன்றைய நூரம்பெர்க் ஆவணப்பாதுகாப்பக கட்டிட வளாகத்தை வடிவமைத்தவர் ),  Arthur Seyss-Inquart (ஆக்கிரமிக்கப்பட்ட நெதர்லாந்துக்கான ஆளுநர்). Martin Bormann (ஹிட்லரின் துணை- இவர் நேரில் இல்லாமலேயே இவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரனை நடந்தது) ஆகியோர் முக்கியக் குற்றவாளிகளாவர். 

ஏறக்குறைய ஒரு வருடம் நடந்த இந்த விசாரணையின் தீர்வாக 1946 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.  அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வழக்குரைஞர்களைக் கொண்ட இந்த அனைத்துலக ராணுவ நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட 24 பேரில் 12 பேருக்குத் தூக்கு தண்டனை விதித்தது. மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது; மேலும் 4 பேர் 10லிருந்து 20 வருடகால சிறை தண்டனை பெற்றனர்; நீதிமன்றம் 3 பேரை விடுவித்தது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட 12 பேருக்கும் அடுத்த 15 நாளில் தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. 1946 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி இவர்களுக்குத் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு முடிவானது. ஆனால் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் சிறையிலேயே குற்றப் பட்டியலில் முதலிடம் வகித்த கோரிங் தற்கொலை செய்து கொண்டார். மேலும் மார்ட்டின் போர்மான் ஹிட்லரின் மறைவுக்குப் பின்னர் தப்பித்துவிட்டார் என்பதனால் அவர் நேரில் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமலேயே அவர் மேல் வழக்கு தொடரப்பட்டது. இவரையும் தற்கொலை செய்து கொண்ட கோரிங்கையும் தவிர்த்து ஏனையோருக்குக் குறிப்பிட்ட அதே நாளில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆயுள் தண்டனையும் சிறை தண்டனையும் வழங்கப்பட்ட குற்றவாளிகள் பெர்லின் நகரில் உள்ள ஸ்பாண்டாவ் சிறைச்சாலையில் தங்கள் தண்டனை  காலத்தைக் கழித்தனர். 

தண்டனை பெறுவதற்கு முன்னரே தப்பித்துச் சென்ற மார்ட்டின் போர்மான் ஹிட்லருக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர். 1945ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ஹிட்லர் தற்கொலை செய்து கொண்ட பிறகு  உடனே அங்கிருந்து தப்பித்துச் சென்றார் என்றும், மே மாதம் 2ம் தேதி சோவியத் படைகளினால் அவர் பிடிக்கப்பட்டார் என்றும் செய்திகள் உலவுகின்றன. அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்றும் கூட சில செய்திகள் கூறுகின்றன. சோவியத் படைகளினால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டு மே மாதம் 8ம் தேதி அவர் புதைக்கப்பட்டார் என்றும் சில தகவல்கள் குறிப்பிடுகின்றன. 1973 வரை அவரது உடல் கிடைக்கவில்லை என்பதும், ஆனால் 1998 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட டிஎன்ஏ சோதனையில் அவர் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட உடல் அவருடையது தான் என்றும் சில செய்திகள் குறிப்பிடுகின்றன. 

ஹிட்லர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர்  தப்பித்து விட்டார் என்றும் இன்றுவரை எவ்வாறு செய்திகள் உலவிக் கொண்டிருக்கின்றனவோ, அதேபோல மார்ட்டின் போர்மானும் தப்பித்திருக்கலாம் என்றும் உறுதிபடாத செய்திகள் உலவத்தான் செய்கின்றன.   

நூரன்பர்க் விசாரனை (Nuremberg Trial) இந்த நகரத்தின் வரலாற்று நிகழ்வு. இது நிகழ்ந்த அறை என் 600 (Room No. 600) நாசி கால வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் ஒன்று. இந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தி நாசி ஆட்சி காலத்தைக் காட்டும் பெரும் காட்சிக்கூடமாகவும்  அதன் பின்னர் நாசி ஆட்சி வீழ்த்தப்பட்டு நட்பு நாடுகள் ஜெர்மனியைக் கூறு போட்டு ஆட்சியை எடுத்துக் கொண்டு `நாட்டாமை` செய்த காலகட்டத்தில் நிகழ்த்தப்பட்ட  விசாரனைகள் தொடர்பான ஏராளமான ஆவணங்கள், காகித ஆவணங்கள், அன்றைய வழக்கில் இருந்த ஒலி  நாடாக்கள், சிறு காணொளிகள் என ஆவணப்பாதுகாப்பகம் தகவல் களஞ்சியமாக விளங்குகின்றது. 

ஹிட்லர் கட்டமைமைத்த நாசி ஆரியச் சிந்தனை `ஆரிய இனம்  மனித குலத்தில் உயர்ந்த இனம்` என்ற இனத் தூய்மைவாத சிந்தனையின் அடிப்படையைக் கொண்டது.  நாசி சித்தாந்தங்களின் அடிப்படையில்  இனக்கலப்பற்ற தூய ஆரிய இனமாக நோர்டிக் ஜெர்மானியர்கள், இங்கிலாந்து, நெதர்லாந்து, ஸ்கேண்டிநேவியா (நோர்வே, டென்மார்க், சுவீடன்)  ஆகியோர் கருதப்பட்டனர். நாசிகள் எல்லா ஜெர்மானியர்களையும் ஆரியர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஜெர்மானியர்களில் நோர்டிக் வகையினர் (சராசரி 175 செமீ உயரம்,  நீண்ட முகம், கூர்மையான மூக்கு, மெலிந்த  வெளுத்த உடல், பருத்த கன்னங்கள் போன்ற அங்க அடையாளங்கள் கொண்டவர்கள்)  மட்டுமே இவர்களால் தூய ஆரிய இனமாக அடையாளம் காணப்பட்டனர்.  நாசிக்களின் இனத்தூய்மைவாத கருத்தாக்கங்களை விரிவு படுத்தும் வகையில் தீவிர பிரச்சாரங்களை நாசி அரசு கருவியாகப் பயன்படுத்தியது. வெறுப்பு இனவாத கருத்தாக்கங்களே இதில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டன.  தூய ஆரிய இனம் மட்டுமே வாழத் தகுதி படைத்த இனம் என்ற வகையிலான தீவிரப் பிரச்சாரங்களை நாசி அரசு முன்னெடுத்தது.  தூய ஆரிய இனத்தை மேம்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. இளம் ஹிட்லர் (Hitler Youth) என்ற அமைப்பினை நாசிக்கள் 1922ம் ஆண்டே தொடங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனது இனத்திற்காகப் போராடும் பலம் பொருந்திய இளைஞர்களை அதாவது 'ஆரிய சூப்பர்மேன்களை' (Aryan Superman) உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டு இளைஞர்களுக்குப் பயிற்சிகள் அளித்தனர்.  

இத்தகைய இனத்தூய்மைவாத சிந்தனை அளிக்கப்பட்ட லட்சக்கனக்கான இளைஞர்கள் மனிதாபிமானமற்ற இயந்திரங்களாக செயல்பட்டதினால் ஏற்பட்ட இழப்பு மிகப் பெரிது. ஹோலோகோஸ்ட் பற்றியும் கொடூரமாகக் கொல்லப்பட்ட யூதர்கள், போலந்து மக்கள், லித்துவானிய மக்களைப் பற்றி அதிகம் பேசும் ஊடகங்கள்  கூட உளவியல் ரீதியாக இனப்பிரிவினைவாத சிந்தனையை உள்வாங்கிய மக்கள் ஏனைய இனத்தின் மீது செய்த கொடுரங்களைப் போலவே தமது இனத்திற்குள்ளும் இழைத்த உளவியல் தாக்குதல்களைப் பற்றி அதிகம் பேசல்லை.  இது ஒருபுறமிருக்க,  1945க்குப் பிறகு நட்பு நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த ஜெர்மனியின் நிலை பற்றி உலக நாடுகள் அதிகம் பேசுவதில்லை. மாறாக நாசி ஆட்சி காலம் பற்றிய செய்திகளே வெளி உலகில் அதிகம் அறியபப்ட்ட செய்தியாக அமைகின்றன. 


கடந்த 40 ஆண்டு கால ஜெர்மனி என்பது ஜெர்மனி எடுத்துக் கொண்டு புதிய பரிணாமம். தொழில் காரணமாக அதிகமான அயலக மக்களின் வருகை, அகதிகளாக இலங்கை உட்பட பல நாடுகளிலிருந்து  போரினால் பாதிக்கப்பட்டோரை அனுமதிக்கும் போக்கு, மிகத்திறந்த மனதுடன் இனப்பாகுபாடின்றி மனித உரிமையைப் பேணும் போக்கு, உலக அரங்கில் மனித உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கும் போக்கு, மிக விரிவான கலப்புமணம் என இன்று உலக அரங்கில் பொருளாதார ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் உயர்ந்த நாடுகளின் வரிசையில் இடம்பிடிக்கும் சாத்தியத்தை ஜெர்மனிக்கு வழங்கியிருக்கின்றது.


இனவாதம், இனத்தூய்மைவாதம் ஆகிய கோட்பாடுகள் மனிதகுல வரலாற்றில் இடம்பெற பொறுத்தமற்றவை ;  மனிதகுல மாண்பிற்கு எதிரானவை என்பதை உணர்ந்த சமூகமாக இன்று ஜெர்மனி திகழ்கின்றது. அந்தத் திறந்த மனிதின் வெளிப்பாடுகளாகத்தான் நாசி ஆட்சி காலத்தில் தங்கள் ஜெர்மானிய இன மக்கள் வேற்று இனத்தோருக்கு இழைத்த  கொடுமைகளை வெளிப்படையாக, எந்த ஒளிவு மறைவும் இன்றி உலகுக்கு உண்மை வரலாற்றை வழங்கும் நோக்கத்துடன் டாஹாவ், அவ்ஷ்னிட்ஸ் வதைமுகாம்களையும் நூரம்பெர்க் நீதிமன்றம், நூரம்பெர்க் ஆவணப்பாதுகாப்பகம், செக் போயிண்ட் சார்லி அருங்காட்சியகம், யூத அருங்காட்சியகம் என உண்மை தகவல்களைப் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தியுள்ளது. 


பொதுவாக தங்கள் சுயபெருமைகளைத் தண்டோரா போட்டு அறிவிக்கும் சிந்தனைகளுக்கு இடையே, தங்கள் குற்றச்செயல்களை வெளிப்படையாகப் பேசி மனித உரிமைக்கும், மனித நேயத்துக்கும், இனப்பிரிவினைவாதக் கோட்பாடு ஏற்படுத்தக் கூடிய அழிவுகளை அறிந்து கொண்டு அத்தகைய குறுகிய நோக்கம் கொண்ட சித்தாந்தங்களிலிருந்து மீட்டு, ஒருங்கிணைந்த சமூகத்தை உருவாக்க எடுக்கும் முயற்சியாகவே இந்த வரலாற்றுக் கூடங்கள் திகழ்கின்றன.  இன அடையாளப்படுத்துதல், இனப்பிரிவினைவாதச் சிந்தனை,  இனத்தூய்மை வாதச்சிந்தனை ஆகியவை மனிதகுல மேன்மைக்கு எந்த நன்மையையும் இதுகாறும் செய்ததில்லை. இனி செய்யப்போவதுமில்லை. வரலாறு நமக்கு இதைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது!

Documentation Center Nazi Party rally Ground, Kongresshalle, Bayernstrasse 110, 90478 Nuernberg

Nueremberg Palace of Justice, Fuerther Str. 110, 90429 Nuermberg


 









Wednesday, February 26, 2020

116. தொல்பொருள் காட்சி சாலை​,​ யாழ்ப்பாணம்​, இலங்கை

யாழ்ப்பாணம் தொல்பொருட் காட்சிசாலை யாழ்ப்பாணத்தில் நல்​லூ​ர்  நகரில் அமைந்திருக்கின்றது. இது 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையின் ​ மேற்பார்வையில் இந்தத் தொல்லியல் அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது என்பதோடு, தற்போதைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை மற்றும் தொல்லியல் துறை​யின்​ தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்களின் ​ஆக்ககரமான​​முயற்சிகளினால் ​  தொல்லியல் அகழாய்வுப் பொருட்கள் ​இ​ங்கு சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் நடவடிக்கைகள் சீராகச் செயல்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.



2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது​,​ யாழ்ப்பாணம் நல்லூரில் இருக்கும் இந்தத் தொல்பொருள் அருங்காட்சியகத்திற்கு​ப்​ பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் அழைத்துச் சென்றிருந்தார். போருக்குப் பின்னான சூழலில்​,​ ​யாழ்ப்பாணம் மட்டுமன்றி இலங்கையின் மரபுரிமை சிறப்புக்களைக் கூறும் ​அரும்பொருள்கள் ​இ​ங்கு ​பாதுகாக்கப்பட்டிருக்கும் சூழலை நேரில் சென்று காணும் அனுபவம் கிட்டியது. வெளியிலிருந்து காணும்போது மிகச்சாதாரணமான எளிய கட்டிடத்திலேயே இந்த அருங்காட்சியகம் இருக்கின்றது​ என்பதைக் காணலாம்​. ஆயினும்​,​ இதில் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் அரும்பொருட்கள் இலங்கை வரலாற்றில் முக்கியத்துவம் பெறுவன​​.




​விதம் விதமான அலங்கார​ச் சங்குகள், பனையோலை​ கீற்றினாலும்​, எலுமிச்சை மரத்தின் வேரினா​லும் செய்யப்பட்ட அலங்கார விசிறிகள், பல்வேறு வடிவங்களிலான மண்பாண்டங்கள் போன்றவற்றை​ இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர்​. ஏழு வாய்களை​க்​ கொண்ட வகையில் அமைக்கப்பட்ட மண்பானை ஒன்று இங்கு உள்ளது​.​ இது ஒரு வகையான இசைக்கருவி​ என்ற தகவல் அங்கு வழங்கப்பட்டிருக்கின்றது. நாகர்கள் பண்பாட்டினை விளக்கும் சான்றாக​,​ நாகங்கள் பொறிக்கப்பட்ட பண்டைய சின்னங்களின் சேகரிப்பு​க்​களும்​, மரத்தினால் ஆன அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகளும்  ​காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் இலங்கையில் பயன்பாட்டிலிருந்த காசுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கி​.​பி​.​ 16லிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை வழக்கிலிருந்த கண்டி பேரரசின் வெள்ளிக்காசுகள், அரச சின்னம் அழுத்திச் செதுக்கப்பட்ட வெள்ளிக்காசுகள், பண்டைய சேரர் கால நாணயங்கள், கி​.​பி​.​ ​11ம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜராஜசோழன் காலத்தில் தயாரிக்கப்பட்டு புழக்கத்திலிருந்த சோழர்கால நாணயங்கள், பொலநறுவை​யில் ​ கி​.​பி​.​ 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டு​ காலகட்டத்தில்​ அரசு வெளியிட்ட நாணயங்கள், மாமன்னன் ஸ்ரீ பராக்கிரமபாகு வெளியிட்ட நாணயங்கள் போன்றவை இங்குக் காணக்கிடைக்கின்றன.

தமிழர் பண்பாட்டில் தனியிடம் பெறுவது மரபு விளையாட்டுக​ளாகும். நெடுங்காலமாக மக்கள் வாழ்வியலில் முக்கிய இடம்பெற்றிருக்கும் மரபு விளையாட்டுக்களான பல்லாங்கு​ளி, ​ தாயம் ​ஆகிய விளையாட்டுக்களில் பயன்படுத்தப்படும் விளையாட்டுக்கருவிகளும் ​ இங்கு​க்​ காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையை ஆண்ட இறுதி மன்னன் எனக் கருதப்படும் கண்டி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனு​டைய​ (கி.பி. 1798 - கி.பி.1815)​ மனைவி வெங்கடராஜம்மாள் தேவி​யு​டைய உருவப்படமும் இங்குக் காட்சிக்கு உள்ளது. அக்காலத்தில் மதுரையை ஆண்ட நாயக்க மன்னரின் வாரிசான இவர் கண்டி மன்னனை மணந்து மகாராணியாக 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகட்டத்தில் ஆட்சி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஓவியத்தை வரைந்தவர் வில்லியம் டேனியல்​ (William Daniel ​1769 - 1837) என்பவர்​. ​ இதன் முதல் பிரதி 1800களில் வரையப்பட்டதாகும். ​இங்கு அந்த ஓவியம் பாதுகாக்கப்படுகின்றது. நேரில் ஒருவரைக் காண்பதுபோல அச்சு அசல் மாறாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஓவியமாகத் திகழ்கின்றது.

​பரிசாக வழங்கப்பட்ட ​பிஜி நாட்​டின் பண்பாட்டுச் சடங்கில் பயன்படுத்தப்படும் சடங்கு​ப்​ பொருள்​ ஒன்றும் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றது.​ ​  இரு புறமும் ​கயிறு இணைக்கப்பட்டுள்ள கடற்பன்றியின்  தந்தத்தினால் ​ செய்யப்பட்ட ​ஒரு கலைப்படைப்பாகும் இது.  இது பிஜி நாட்​டில் ​அரசுத்தலைமைப்பொறுப்பில்  இருப்பவர்களால் அலுவலர்களுக்கு வழங்கப்படும் அன்பளிப்பு பொருளாகும். இதனை பிஜித் தீவின் திருமதி லின் புறூகன்​ என்பவர்​ 30.9.1950 அன்று பரிசாக வழங்கி இருக்கின்றார்​ என்ற தகவலும் ​இங்குள்ளது.





இங்குள்​ள ​அரும்பொருள் ​சேகரிப்புகளில்​  மனிதர்களை​த்​ தூக்கிச் செல்ல பயன்படுத்தப்பட்ட ​ பயன்பாட்டிலிருந்த மரப்பபல்லக்குகளும்  இருக்கின்றன. யாழ்ப்பாணத்தி​ன் நமச்சிவாயம் மாரிமுத்து என்பவர் பயன்படுத்திய மரப்பலகை இது​. ​ இவர் மூளாய் யாழ்ப்பாணம் பகுதியில் வாழ்ந்தவர் என்றும்​,​ யாழ்ப்பாணம் திரு.வி.தாமோதரம் பிள்ளை என்பவரிடமிருந்து 16.9.1963 ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்டது என்றும் குறிப்புகள் சொல்கின்றன. இங்குள்ள இன்னொரு பல்லக்கு பெண்களை​த்​ தூக்கி செல்ல பயன்படுத்​தப்பட்ட பல்லக்கு. இதனைப் பயன்படுத்தியவர் அச்சுவேலி மாப்பாண முதலியார்​ என்பவர் என்றும்,​ யாழ்ப்பாணத்தில் 1720 ஆம் ஆண்டு பயன்பாட்டிலிருந்த ஒரு பல்லக்​கு என்ற குறிப்பும் வழங்கப்பட்டுள்ளது. இதனை அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாப்பாண முதலியாரின் கொள்ளுப்பேரன் திக்கம் செல்லையா என்பவர் 1948ஆம் ஆண்டு அருங்காட்சியகத்திற்கு வழங்கியிருக்கின்றார். ​ இப்படி இன்னும் சில அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்திலே உள்ளன. ​




யாழ்ப்பாணத்தின் மரபுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் இந்த​த்​ தொல்பொருள் அருங்காட்சியகம் பராமரிக்கப்பட்டு வருகின்றது. ​ ​ இங்குள்ள அரும் பொருட்கள் அனைத்திற்கும் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் விளக்கக் குறிப்புகள் அமைந்திருக்கின்றன. ​ இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்கு எதிரான நீண்ட கால போரின் போது ஏற்பட்ட சேதங்களின் போதும் போருக்குப் பின்னரும்   சீர்செய்யப்பட்டு இந்தத் தொல்பொருட்காட்சி சாலையைப் பராமரித்த ஒவ்வொருவரது தன்னலமற்ற செயலும் வரலாற்றில் போற்றுதலுக்குரியது. ​இதன்​ இப்போதைய​ கட்டடம் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, தொழில்நுட்ப மேம்பாடுக​ளும் செய்யப்பட்டு இந்த அருங்காட்சியகம் மேம்படுத்தப்பட வேண்டும்​.

Friday, December 21, 2018

115.​​ இந்தியப்​ பாரம்பரிய அருங்காட்சியகம், பினாங்கு, மலேசியா


முனைவர். க.சுபாஷிணி

மலேசியாவிற்கான தமிழ்மக்கள் புலம்பெயர்வு என்பது நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டது. தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு பல்வேறு காலகட்டங்களில் குடிபெயர்ந்த தமிழ்மக்கள் மலேசிய பூர்வகுடி மக்களுடன் அச்சூழலை ஏற்றுக் கொண்டு  மலேசியத் தமிழர்கள் என்ற சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பன்னெடுங்கால தீபகற்ப மலேசியாவிற்கும் தமிழகத்திற்குமான தொடர்பு இன்று அகழ்வாய்வுகளில் கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில் நிரூபணமாகி இருக்கின்றன. இத்தகைய நீண்ட பண்பாட்டுத்தொடர்ச்சி என்பது ஒருபுறமிருக்க, கடந்த 300 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்கும் வகையில் ஒரு புதிய முயற்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பினாங்கு இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட இந்தியப் பாரம்பரிய அருங்காட்சியகம் காட்சியளிக்கின்றது.



மலேசியத் தமிழர் ஒருவரது சேகரிப்பில் இருந்த ஆவணங்களை அவர் பொதுமக்கள் நலனுக்காக வழங்கவே, அது பினாங்கு மாநில இந்து அறநிலையத்துறையின் துணையுடன் ஒரு அருங்காட்சியகமாக இன்றுஉருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆவணங்களும் சின்னங்களும் மலேசிய தமிழர் வரலாற்றில் நடந்த சில முக்கிய விஷயங்களை, அதிலும் குறிப்பாக பினாங்கு மாநிலம் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அருங்காட்சியக அறையின் சுவர்களிலும் மூலைகளிலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட வகையில் ஆவணங்கள், பொருட்கள், நூல்கள், விளம்பரங்கள் என பல்வேறு பொருட்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு ஆவணமும் தனித்துவம் வாய்ந்தவை. ஒவ்வொன்றும் மலாயாவில் தமிழர்களின் வாழ்க்கை நிலையை விளக்கும் வகையில் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.





மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன், அன்றைய சூழலில் முடி திருத்தும் தொழிலில் அதிகமாக ஈடுபட்டவர்கள் தமிழர்களே. தமிழர்களின் முக்கிய தொழில்களிலொன்றாகிய அத்தகைய ஒரு முடிதிருத்தும் நிலையம் எவ்வாறு இருக்கும் என்பதை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகிறது இங்குள்ள ஒரு பகுதி. இதில் வாடிக்கையாளர் அமரும் பகுதி, சுவர் அலங்காரங்கள், மேசை அலங்கரிப்பு என்பன அவை எப்படி அன்னாளில் இருந்தன என்பதை அறியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 



இங்குள்ள மிக முக்கியமான ஆவணமாகப் பல நமக்குத் தென்பட்டாலும் மிகவும் தனித்துவத்துடன் இருப்பது இங்கு நாம் காணும் தமிழில் உருவாக்கப்பட்ட மலாயா தீபகற்பத்தின் நிலவரைபடமாகும். முழுதும் தமிழில் அமைந்த வகையில் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடம் இது. இத்தகைய ஒரு வரைபடத்தை இன்று நாம் தேடி கண்டுபிடிப்பது எளிதன்று. மலாயா தீபகற்பம் முழுமையாக, அதன் தென்மேற்கு பகுதியான இந்தோனியாவின் சுமத்ரா தீவு, மலாக்கா ஜலசந்தி, கடல் சூழல் சயாம் குடாபகுதி ஆகியவை தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரைபடத்தில் மலேசியாவின் மாநிலங்களின் பெயர்கள், நதிகளின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள், மலைகளின் பெயர்கள் என அனைத்துமே தமிழில் எழுதப்பட்ட வகையில் மிகச் சிறந்த ஒரு ஆவணமாக இது அமைந்திருக்கின்றது. இதனைக் காணும்போது இன்றைக்கு ஏறக்குறைய அரை நூற்றாண்டிற்கு முன்பு இத்தகைய வரைபடங்கள் உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைகின்ற அதேவேளை, புவியியல் தொடர்பான கல்வி அன்றைய நிலையில் தமிழில் அமைந்திருந்தது என்பதை அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக இதுஅமைகின்றது. இன்றைக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்திய மலேசியா இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தமிழ்மொழி முக்கிய மொழியாக இருக்கின்றது என்பதற்கும் இது ஒரு சான்றாகவே அமைகின்றது எனலாம்.



இவை தவிர மேலும் பல முக்கிய ஆவணங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கப்பலில் பயணம் செய்து வரும் பயணிகள் கொண்டு வரும் பயணத்திற்கான தகரப்பெட்டிகளையும் இங்குக் காணலாம். அவற்றின் உள்ளே ஒட்டப்பட்ட செய்திகள் அடங்கிய காகிதங்கள், அன்றைய தமிழக பயணிகள் கொண்டு வந்த பொருட்கள் என்பன இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மலேயா வந்த அன்றைய தமிழர்கள் பல்வேறு வகை வணிகப் பகுதிகளில் அன்று பணிபுரிந்தார்கள். முக்கியமாக உணவுக்கடைகளைக் குறிப்பிடலாம். இன்றும் கூட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் உணவு கடைகளை தமிழர்கள் நிர்மாணிப்பதைக் காணலாம். அந்த வகையில், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேநீர் தயாரிக்கும் பாத்திரம் இன்றும் கூட ஒரு சில கடைகளில் காணக் கூடியதாக உள்ளன. அத்தகைய தேநீர் தயாரிக்கும் பாத்திரங்களும் தேயிலை கொதிக்க வைக்கும் பாத்திரங்களும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இறந்தபோது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் அவருக்கு நடத்தப்பட்ட அஞ்சலிக்கூட்டம் பற்றிய ஒரு துண்டு காகிதம் இந்த ஆவணச் சேகரிப்பில் இருக்கின்றது. ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில், அதாவது இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை விவரிக்கும் பத்திரிக்கைச் செய்தி ஒன்றும் இந்த சேகரிப்பில் இடம்பெறுகின்றது. தமிழ் மக்கள் பயன்பாட்டில் வீடுகளில் புழங்கப்படும் பொருட்கள், சமையல் உபகரணப் பொருட்கள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவையும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அன்றைய மலாயாவிற்கு வந்த தமிழ் மக்கள் தொழில் புரிவதில் மாத்திரம் தங்கள் கவனத்தைச் செலுத்த வில்லை. மாறாக சமூக செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அந்த வகையில் கலைகளில் நாட்டம் உடையவர்களாக தம்மை வளர்த்துக் கொண்டு நாடகங்கள், கூத்து, இசை என பல்வேறு துறைகளில் தங்கள் திறனை அவர்கள் வெளிப்படுத்தினர். இத்தகைய செய்திகளை விளக்கும் சில ஆவணங்களும் இங்கு காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் உள்ள சிலர் இலக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில் சில சஞ்சிகைகள் பினாங்கிலிருந்து 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் வெளிவந்திருக்கின்றன. நூல்களை எழுதி வெளியிட்ட செய்திகளையும் அறிகின்றோம்.



இப்படி பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய வகையில் பினாங்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மலேசியர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய இடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து தமது சேகரிப்புக்களை வழங்கி இந்த அருங்காட்சியகம் தொடங்க தொடக்கப்புள்ளி உருவாக்கிய திரு.பிரகாஷ், திருமதி புனிதா பிரகாஷ் இருவரையும் பாராட்டுவது நமது கடமை. பினாங்கில் தமிழர் வரலாற்றைச் சொல்லும் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கும் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் மாண்புமிகு.டாக்டர்.ராமசாமி அவர்களையும் பாராட்டுவதோடு இந்தச் சிந்தனைக்கு உறுதுணையாக இருந்து அலுவலக அறையை ஒதுக்கிக் கொடுத்து இந்த அருங்காட்சியகத்தைப் பாதுகாக்கும் பினாங்கு இந்து அறநிலையத்துறையினருக்கும் உலகத் தமிழர்களின் பாராட்டுக்கள்பொறுந்தும். 

Wednesday, November 28, 2018

114. தேயிலை தோட்ட தொழிலாளர் அருங்காட்சியகம், இலங்கை

முனைவர். க.சுபாஷிணி
http://www.vallamai.com/?p=89321

தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம்  இருப்பது ராமன்துறை தோட்டமாகும். இது  நுவரலியாவிலிருந்து நியூ பீக்கோக் எஸ்டேட் செல்லும் பகுதியில் சோகம் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த அருங்காட்சியகம்  மத்திய மாகாண கண்டி பகுதியில் அமைந்துள்ளது.




அருங்காட்சியகத்தின் வாசலில் சிறிய பூந்தோட்டம் ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது.வரவேற்பு பகுதியில் தமிழிலும், சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் அருங்காட்சியகத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, உள்ளே நுழையும் பொழுது முதலில் நமக்கு தென்படுவது ஒரு சிறிய குடில். இந்தக் குடில் இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையக பகுதிக்குத் தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் மக்களின் வாழ்விட கட்டுமாணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


ஒரு குடில்அதில் ஒரு அறை மட்டுமேறை என்ற பிரிவு இல்லாமல் முழு பகுதியும் வெவ்வேறு மூலைகளில் அதன் பொருட்கள் வைக்கப்பட்டு காட்சி அளிக்கின்றன. சிறிய சமையல் பகுதியில் விகை வைத்துக் கொள்ளும் பகுதி, பானைகளை அடுக்கி வைக்கும் பகுதி, சமையல் பாத்திரங்களை, அம்மி குழவி போன்றவற்றை வைக்கும் பகுதி, என சிறு பகுதியும்படுத்து உறங்கும் பகுதியாக ஒரு பகுதியும் காட்சியளிக்கின்றன. மற்றொரு பகுதியில் துணிகளை உலர்த்தும் மூலை தென்படுகின்றது. சுவற்றில் இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் புகைப்படங்கள் உள்ளன.   பண்டித ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்றோரின் புகைப்படங்கள் சுவற்றில் தென்படுகின்றன.இவை இம்மக்கள் இந்தியாவின் சமகால நிலையை இலங்கையிலும் பிரதிபலித்தமையைவெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த குடிசைவீட்டின் உள்ளே அருங்காட்சியக நிர்வாகம் காட்சிப்படுத்தியிருக்கும் பொருள்கள் 1820-களில் தமிழ் மக்கள் பயன்படுத்திய சமையலறைப் பொருட்கள் ஆகும்.



காப்பித் தோட்டத்தில் பணிபுரிய 1820 வாக்கில் தொடங்கி தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு வந்தவர்கள் தற்காலிகமாக தங்கி கொள்வதற்காக  கூரைவேய்ந்த இத்தகைய குடிசைகளை அமைத்து அவற்றில் தங்கியிருந்தனர். ஆறு மாதங்கள் காபித் தோட்டங்களில் அவர்கள் பணிபுரிவார்கள். பின்னர் காபி செடிகள் வளரும் பருவத்தில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூலியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு அதாவது தமிழகத்திற்கு திரும்பிவிடுவார்கள். இக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து மலையகப்பகுதிக்கு வந்தவர்களில் ஆண்களே அதிகமாக இருந்தனர்.தோட்டத்தில் 1880 வாக்கில் காப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக காப்பி விளைச்சல் நிறுத்தப்படவே தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. தேயிலைத் தோட்டப்பணி வருடம் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய ஒரு தொழில் ஆகையால் 1860 தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் இருந்து தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு ஆண்களும் பெண்களுமாக குடும்பம் குடும்பமாக பயணித்து வந்து தோட்டங்களில் தொழிலாளர்களாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

மலையகப் பகுதியில் காபி தோட்டங்களில் கொக்கோ   மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரிய வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். முறையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை இரண்டு ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றி அழைத்து வந்து ஆனால் ஒரு ரூபாய் சம்பளம் கிடைப்பது கூட சிரமமாக அமைந்த நிகழ்வுகளும் உண்டு தினக்கூலி என்பது இல்லாமல் வருடத்திற்கு மூன்று முறை மாத்திரம் சம்பளம் என்ற வகையிலும் சிலவேளைகளில் சம்பளம் கிடைக்காத சூழலும் கூட ஏற்பட்டு மலையக மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் மலையகத்தில் பணிபுரிய வந்த தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும் அதன் பின்னர் படிப்படியாக ஆங்கிலேயர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கிய பின்னர் இந்த பிரச்சினைகள் குறைந்தாலும் தமிழ் மலையக கங்காணிகள் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது பெருவாரியாகத் ஆகவே தொடர்ந்தது.

இலங்கையின் தோட்டங்களில் பணி புரிவதற்காக கி.பி.1800களின் ஆரம்பங்களில் இருந்து தமிழக மக்கள் தூத்துக்குடியிலிருந்து கடற்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து கொழும்புவிற்கும் தமிழகத்தின் வடக்கு பகுதியின் பல்வேறு நகர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து மன்னார் தலைமன்னார் போன்ற பகுதிகளுக்கு வந்து கால்நடையாகவே ஏறக்குறைய 140 மைல் தூரம் நடந்து பயணித்து இலங்கையின் மத்திய பகுதியான மலையகப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். தோட்டங்களில் பணிபுரிய வருகின்றோம் என்று ஆவலுடன் வந்த மக்கள் இங்கு முதலில் காடுகளையே காணக் கூடிய நிலை இருந்தது. மிக அடர்ந்த காடுகள் அவை. அந்தக் காடுகளில் பயணிக்கும் போது பல்வேறு விலங்குகளாலும் பூச்சிகளினாலும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளினாலும்   தாக்கப்பட்டு உயிர் இழந்தோர் மிகப் பலர். பயணிக்கும் போதே  கொசுக்கடி ஏற்பட்டு தொடர்ந்து பெய்து வரும் அடை மழையில் நனைந்து மலேரியா நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களும் அதிகம். இப்படி பல துன்பங்களைக் கடந்து வந்த மக்கள் கடுமையான உழைப்பைச் செலுத்தி காடுகளை தூய்மைப்படுத்தி காப்பி தோட்டங்களையும் கொக்கோ பயிர்களையும் தேயிலை தோட்டங்களையும் உருவாக்கினார்கள்.


மலையக மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத்தொழிற்சங்கங்கள் ஆற்றிய பணி மிக முக்கியமானது. மலையக சமூக நல ஆர்வலர்கள்உழைப்பால் சில தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. மலையகத்தில் மாத்தளை,ஹட்டன், நுவரெலியா, கண்டி, பேராதனை போன்ற பகுதிகளிலும் மற்றும் ஏனைய மலையக பகுதிகளிலும் தொழிற்சங்கங்களின் சமூக நலன் நடவடிக்கைகள் தொடங்கின.அதில் குறிப்பிடத்தக்கவர்களாக பத்திரிகையாளரும் தொழிற்சங்கவாதியுமாகிய கோ.நடேசய்யர் மற்றும் அவரது துணைவியார் மீனாட்சியம்மா போன்றோரைக் குறிப்பிடலாம். ஆங்கிலேயர்கள் அறிய விரும்பாத பல பிரச்சினைகளை மக்கள் மத்தியில் நேரில் சென்று  அப்பிரச்சினைகளைக் கேட்டு அவற்றிற்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை இத்தகையோர் செயல்படுத்தினர்.பத்திரிகைகள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் வழியாகவும் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் பெற உதவும் வகையிலான நடவடிக்கைகளை தொழிற்சங்க தலைவர்கள் அக்காலகட்டத்தில் செயல்படுத்தினர். பிரச்சாரங்கள்   மட்டுமன்றி  பாடல்கள், நாடகங்கள், கூத்துகள் வழியாகவும் எளிய மலையக தமிழ் மக்களுக்குத்தங்கள் உரிமைகளை அவர்கள் உணர்ந்துகொள்ள  தொழிற்சங்க தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் முன்னெடுத்தனர். அத்தகைய தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படங்களும் குறிப்பிடத்தக்க ஆவணங்களும் இந்த அருங்காட்சியத்தில் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள.

1948ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிட்டியது. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் தொடர் முன்னெடுப்புக்களினால் இலங்கைக்குப் பணியாற்ற வந்த தமிழக மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை  முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட  சட்ட வரையறைகளின்படி, மலையக பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடத்தக்க பெரிய எண்ணிக்கையில் நாடற்றவர்களாக ஆகும் நிலை உருவானது. அதன்பின்னர் தொடர்ச்சியான பல முயற்சிகள், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் என்பன இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நிகழ்ந்தாலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமிழ் மக்களுக்கு சரியான, முறையான குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டே வந்தது. 1964ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி ஏறக்குறைய ஐந்தரை லட்சம் தமிழ் மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும்,ஏறக்குறைய மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இலங்கை குடியுரிமை பெறுவார்கள் என்றும், ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் நாடற்றவர்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டார்கள்இப்படி வகைப்படுத்தப்பட்ட பின்னரும்கூட அனைத்து மக்களுமே பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர். 


இலங்கையில் வாழ்ந்த தமிழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2003ஆம் ஆண்டு வரை தங்கள் குடியுரிமை பிரச்சினைகளில் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டனர். இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்களும் தமிழகத்திற்குத் திரும்பியபின் தாங்கள் விட்டுச் சென்ற காணிகளை இழந்து,சொத்துக்களை இழந்து, பொருளாதார பிரச்சினைகளைப் பெருவாரியாகச் சந்தித்து தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.. இவ்வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் பல்வேறு கையெழுத்து ஆவணங்கள் இந்த மலையக தோட்டத் தொழிலாளர்  அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடந்த 200 ஆண்டுகளாக மிகுந்த பொருள் வளத்தை தரும் ஒரு துறையாக இருப்பது தேயிலைத் தோட்டங்கள். இலங்கைக்கு பெரும் வளத்தை உருவாக்கித் தந்ததோடு, உலக அளவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லா உயர்தர தங்கும் விடுதிகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிக முக்கிய பானமாக கருதி பயன்பாட்டில் இருக்கின்றதுஇலங்கையில் உற்பத்தியாகும் தேயிலை. இலங்கையின் மலையகப் பகுதிக்கு இன்று நாம் செல்லும்போது நாம் காணும் காட்சி இயற்கை அழகின்   எல்லை இல்லா பேரழகு.இது சுவர்க்கலோகம் என்று இங்கு வருகின்ற ஒவ்வொருவரும் எண்ணும் வகையில் மலையகத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் காட்சியளிக்கின்றன. இதனை உருவாக்கிய மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையோ இன்றளவும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் வகையிலேயே தொடர்கின்றது. 



முறையான சுகாதார நலன் இன்றி இம்மக்களின் அன்றாட வாழ்க்கைத் தொடர்கின்றது. கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களிலும்  இம்மக்களுக்கு மேம்பாடு தேவைப்படுகின்றது.  குடியிருக்க  சொந்த வீடுகள் இன்றியும்,தேயிலைத் தோட்டங்களிலேயே அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமற்ற ஒரு வாழ்க்கையாகவே முடிந்து விடும் அவலமும் தொடர்கிறது. இத்தகைய செய்திகள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சியின்வெளிப்பாடாக நியூ பீக்கோக் எஸ்டேட் அருகாமையிலிருக்கும் ராமன்துறை தோட்ட ”மலையக மக்கள் அருங்காட்சியகம்” ன்று நமக்குக் காட்சி அளிக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற அருங்காட்சியக அதிகாரி திரு.சந்தனம் சத்தியநாதன் மற்றும்   ஏனைய அதிகாரிகளுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழ் மக்களின் சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் பதிகின்றோம்.

Monday, September 24, 2018

113. புனித அன்னை தேவாலய அருங்காட்சியகம், ஹாலே, ஜெர்மனி

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - 
113. புனித அன்னை தேவாலய அருங்காட்சியகம், ஹாலே, ஜெர்மனி

முனைவர். க.சுபாஷிணி 
கிருத்துவ சமயத்தில் உள்ள உட்பிரிவுகளில் மிக முக்கியமானது சீர்திருத்தக் கிருத்துவம். கி.பி.1706ம் ஆண்டு தமிழகத்தின் தரங்கம்பாடி எனும் கடற்கரையோர நகரத்திற்கு ஜெர்மனியிலிருந்து வந்திறங்கிய இரண்டு லூத்தரன் பாதிரிமார்களே தமிழகத்தில் இந்தச் சமய சித்தாந்தம் காலூன்ற அடிப்படையை வகுத்தவர்கள். அவ்விருவரும் பாதிரியார் பார்த்தலோமஸ் சீகன்பால்க் மற்றும் பாதிரியார் ப்ளெட்சோ ஆவர். தமிழகத்தின் தரங்கம்பாடியில் பள்ளிக்கூடம் அமைத்தது, அச்சுக்கூடத்தை அமைத்து தமிழ், போர்த்துகீசிய, ஆங்கில மொழி நூல்களை அச்சிட்டது எனத் தொண்டாற்றியது என்பதோடு இவர்களுக்குப் பின் ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த ஏனைய பாதிரிமார்கள் கடலூர், திருநெல்வேலி, மெட்ராஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தச் சீர்திருத்த கிருத்துவ சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதோடு சமூக கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் என்பது வரலாறு. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமைவது லூத்தரேனிய ப்ரோட்டஸ்டன் கிருத்துவம் அல்லது சீர்திருத்த கிருத்துவம் என அழைக்கப்படும் ஒரு மத அமைப்பாகும். இந்த மதத்தைத் தோற்றுவித்தவர் மார்ட்டின் லூதர் ஆவார். 



மார்ட்டின் லூதர் (Martin Luther) ஜெர்மனியின் தென் கிழக்கு மாநிலமான சாக்சனி (Saxony) மாநிலத்தில் உள்ள ஐஸ்லேபன் (Eisleben) என்னும் சிற்றூரில் 1483ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். இவரது தந்தையார் கரி ஆலையில் பணிபுரிந்தவர். மார்ட்டின் லூதர் தன்னைப் போல் ஒரு தொழிலாளியாக இல்லாமல் கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் எனக் கனவு கண்டவர் இவர். தனது மகன் கல்வியில் தேர்ச்சி பெற்ற ஒரு வழக்கறிஞராகப் பணி புரிந்து வளமாக வாழ வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது . 1490ம் ஆண்டு மான்ஸ்ஃபெல்ட் (Mansfeld) நகரப் பள்ளியில் லத்தின் மொழியில் பாடங்கள் கற்று, பின்னர் 1497ல் மெக்டபர்க்கிலும் (Magdeburg) 1498ல் ஐசெனாஹ் (Eisenach) நகரிலும் உயர்கல்வியைத் தொடர்ந்தார் மார்ட்டின். 1501ம் ஆண்டு எர்ஃபூர்ட் பல்கலைக்கழகத்தில் (Erfurt University) இளங்கலை கல்வி கற்கப் பதிவு செய்துகொண்டார். 1502ம் ஆண்டில் அவருக்குக் கலைத்துறையில் இளங்கலை பட்டம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைக் கல்வியையும் முடித்து 1505ம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார் மார்ட்டின் லூதர். அதே ஆண்டு சட்டத்துறை மாணவராகவும் தன்னைப் பதிந்து கொண்டார் மார்ட்டின் லூதர். இந்தக் காலகட்டத்தில் அவரது வாழ்வில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அவருக்கு சமயத்துறையின் பால் தீவிரமான நாட்டத்தை வளர்த்தன. சமயத்துறையில் ஆர்வம் கொண்டு தன் கல்வியை ஒரு கத்தோலிக்க மடாலயத்தில் தொடர விரும்பினார். 

ஜூலை மாதம் 1505ம் ஆண்டில் மார்ட்டின் லூதர்,செயிண்ட் ஆஸ்டின் (St.Austin) மடாலயத்தில் துறவியாக இணைந்தார். மிகுந்த கடமை உணர்ச்சியுடனும் கட்டுப்பாடுகளுடனும் கல்வி கற்று கத்தோலிக்க சமய குருவாக 1507ம் ஆண்டில் இவர் தேர்ச்சி பெற்றார். 




அன்றைய கத்தோலிக்க தலைமைப்பீடத்தின் தலைவராக இருந்த போப் 10ம் லியோ அவர்கள் ரோம் நகரில் இருக்கும் செயிண்ட் பீட்டர் பாசிலிக்கா (St. Peter’s Basilica) தேவாலயத்தைக் கட்டும் பணிக்காக சில செயற்பாடுகளை முன்னெடுத்தார். இந்த நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்ட பாவமன்னிப்பு தொடர்பான நடவடிக்கைகள் மார்ட்டின் லூதருக்குப் பெருத்த கோபத்தை உருவாக்கியது. தனது சிந்தனைகளைக் கட்டளைகளாக எழுதினார். இந்த 95 கட்டளைகளைத் தான் இறையியல் பேராசிரியராகப் பணிபுரிந்த அதே விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தின் உள்ளே இருக்கும் தேவாலயத்தின் வாசல் கதவில் ஆணி அடித்து அதனைத் தொங்க வைத்தார். இந்த 95 கட்டளைகளாவன பாவமன்னிப்பு என்ற கொள்கையை ஊழல் நிறைந்த வகையில் சமய நிறுவனம் பயன்படுத்துவதைச் சாடும் வகையில் இருப்பதை எதிர்க்கும் வாசகங்களாகும். அக்கால அச்சுத்தொழில் வளர்ச்சியும் மார்ட்டின் லூதரின் எதிர்மறை கருத்துக்கான பிரச்சாரத்திற்குத் துணை கொடுக்கும் வகையில் அமையவே, இரண்டே வார இடைவெளியில் மார்ட்டின் நூதரின் இந்த 95 கட்டளைகள் அடங்கிய துண்டுப் பிரச்சாரங்கள் பரவலாக ஐரோப்பா முழுமையும் விநியோகப்படுத்தப்பட்டன. 

மக்கள் நம்பிக்கையுடன் வாசித்து இறைவனை உணரப் பயன்படுத்தும் நூல் மக்கள் பேசும் மொழியிலேயே இருக்க வேண்டும் என சிந்தித்ததோடு, லத்தீன் மொழி பைபிளின் புதிய ஏற்பாட்டை, ஜெர்மானிய மக்கள் பேசும் டோய்ச் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார் மார்ட்டின் லூதர். இதன் தொடர்ச்சியாகப் படிப்படியாக லூத்தரன் கொள்கைகள் இவரால் வளர்க்கப்பட்டன. பலர் இவரது சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இவரது பெயரில் உருவாகிக் கொண்டிருந்த லூத்தரேனிய திருச்சபையை பின்பற்றுவோராகினர். 1525ம் ஆண்டில் இவர் கத்தரினா ஃபோன் போரா (Katharina von Bora ) என்ற பெண்மணியை மணந்தார். கத்தரினா முன்னாள் கன்னிகாஸ்திரியாக இருந்து கத்தோலிக்க திருச்சபையிலிருந்து வெளிவந்து விட்டன்பெர்க் லூத்தரன் திருச்சபையில் இணைந்தவர். இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தனர். 



மார்ட்டின் லூதர் 1533 முதல் தனது மறைவு வரை, அதாவது 1546 வரை, விட்டர்ன்பெர்க் பல்கலைக்கழகத்திலேயே இறையியல் துறை தலைமைப் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். 1546ம் ஆண்டு பெப்ரவரி 18ம் தேதி விட்டன்பெர்க் நகரிலிருந்து ஐஸ்லேபன் நகர் வந்திருந்தபோது அவர் காலமானார். 

மார்ட்டின் லூதர் 1546ம் ஆண்டு ஐஸ்லேபன் நகரில் இறந்தபோது அவரது உடல் ஹாலே நகருக்குக் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தேவாலயத்தில் (market church) மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. புகைப்படக்கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் நினைவாக அவர்களது உருவங்களை ஓவியங்களாகத் தீட்டுவது ஒரு நடைமுறை. அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மெழுகு முகமூடி தயாரித்தல் என்பது மற்றுமொரு நடைமுறை. இது பண்டைய எகிப்தில் ஃபாரோக்காளுக்கு இறக்கும் போது அளிக்கப்படும் மரியாதையை ஒத்த ஒரு கலை என்றே கருத இடமுண்டு. ஏனெனில் பண்டைய எகிப்தில் இறந்த மாமன்னர்களுக்கு பிரமிட்களை எழுப்பி அங்கு பதப்படுத்தப்பட்ட (மம்மி) அவர்களது உடலை ஒரு மரத்தாலான அல்லது தங்கப் பேழைக்குள் வைத்து முகத்தில் தங்கத்தாலான முகமூடியை அணிவித்து அவர்களுக்கு மேலுலகத்தில் தேவைப்படும் எனக் கருதி விலையுயர்ந்த ஆபரணங்களையும் மற்ற பொருட்களையும் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது. 



இதுவும் கூட பழங்குடி மக்களின் பண்பாட்டு எச்சம் என்றே காணத்தோன்றுகிறது. முகமூடிகளணிந்து சடங்குகளில் பங்கெடுக்கும் கலையை இன்றும் கூட  ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே நாம் காணலாம். 

இத்தகைய முகமூடி அமைக்கும் ஒரு கலை ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது என்பதை கடந்த ஓரிரு நூற்றாண்டு வரை நாம் காணலாம். அந்த வகையில் மார்ட்டின் லூதருக்கு முகமூடி (Death Mask) அமைக்கப்பட்டது. மார்ட்டின் லூதரின் நண்பரும் அவருடைய முன்னாள் மாணவருமான, முதல் ப்ரோட்டஸ்டன் சமய போதகரும் மார்க்கெட் தேவாலயத்தின் குருவுமான ஜூஸ்டூஸ் யோனாஸ் மார்ட்டின் லூதர் காலமான போது அவருடன் இருந்தார். அவர் மறைந்த மறுநாள் அதாவது 19ம் தேதி காலையின் லூக்காஸ் ஃபூர்ட்டெனாகல் (Luckas Furtenagel) மரணப் படுக்கையில் இருந்த மார்ட்டின் லூதரின் உருவத்தை வரைந்தார். அவரே இந்த மெழுகினால் ஆன முகமூடியையும் செய்ய அமர்த்தப்பட்டார் எனக் கருதப்படுகிறது. அதற்குப் பின்னர் மார்ட்டின் லூதரின் சவப்பெட்டி மூடப்பட்டு அவரது பூத உடல் விட்டன்பெர்க் கொண்டு செல்லப்பட்டு அங்குப் புதைக்கப்பட்டது. இதனால் மார்ட்டின் லூதரின் இறுதி நிகழ்வு நடைபெற்ற சிறப்பினைப் பெறுகின்ற தேவாலயமாக இது கருதப்படுகின்றது. 

இந்தத் தேவாலயத்தில் மார்ட்டின் லூதர் 1545லும், இரு முறை 1546லும் வந்து பிரசங்கம் செய்தார். அவர் நின்று பிரசங்கம் செய்த பல்பிட் எனப்படும் பிரசங்க மேடை இதே அறையில் உள்ளது. 




இந்தத் தேவாலயம் 1529ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் 1554ம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றன என்றும் அறிகின்றோம். இக்கட்டிடத்தைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர் பிராண்டென்புர்க் மற்றும் மக்டெபுர்க் கத்தோலிக்க அமைப்பின் தலைவராக இருந்த கார்டினல் அல்ப்ரெட். இவருக்கும் மார்ட்டின் லூதருக்கும் சமய தத்துவ அடிப்படையில் இருந்த கடும் போட்டியின் இறுதியில் மார்ட்டின் லூதரின் கருத்துக்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பதோடு கார்டினல் அல்ப்ரெட் தமது பதவியைத் துறந்து மாநிலத்திலிருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் இம்மாநிலம் முழுமையாக லூதரேனிய ப்ரோட்டஸ்டன் மதத்தை ஏற்ற ஒரு மாநிலமாக படிப்படியாக மாற்றம் கண்டது. 

மார்ட்டின் லூதரின் வாழ்க்கையில் ஐஸ்லேபனும் விட்டன்பெர்க் நகரங்களும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனவோ அதே அளவிற்கு ஹாலே நகரமும் முக்கியத்துவம் வகிக்கின்றது. மார்ட்டின் லூதரை ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் கடந்தும் நாம் நேரில் காணும் அனுபவத்தை ஹாலே நகரிலுள்ள மார்க்கெட் தேவாலய அருங்காட்சியக அறை நமக்கு வழங்குகின்றது. ஒவ்வொரு நாளும் இந்தத் தேவாலயம் திறந்திருக்கின்றது. அருங்காட்சியகத்திற்குச் செல்ல சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்தத் தேவாலயத்தின் முகவரி Marktkirche Unser Lieben Frauen, An der Marienkirche 2, 06108 Halle (Saale) என்பதாகும். ஹாலே நகரின் புகழை மட்டுமல்ல, ஜெர்மனியின் புகழையும் உயர்த்தும் ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை!

துணைநூல்கள் -

Monday, September 3, 2018

112. ஃப்ராம் அருங்காட்சியகம், ஓஸ்லோ, நோர்வே

முனைவர். க.சுபாஷிணி

http://www.vallamai.com/?p=87387

மிக அண்மையில் நான் பயணம் மேற்கொண்ட நாடு நோர்வே. நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்ல்லோவில் 106 அருங்காட்சியகங்கள் பதிவு செய்யப்பட்ட அருங்காட்சியகங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. அதில் ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றிய செய்திகளை இந்தப் பதிவில் வழங்குகின்றேன்.

ஃப்ராம் அருங்காட்சியகம் (Fram Museum) பொதுவான அருங்காட்சியகங்களிலிருந்து மாறுபட்டதொரு அமைப்பைக் கொண்டது. 1936ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் உலகின் வடக்கு-தெற்கு துருவங்களுக்குப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த மூவரைச் சிறப்பிப்பதற்காகவும் உலகின் வடக்கு தெற்கு துருவங்களுக்குப் பயணம் செல்லப் பயன்படுத்திய ஃப்ராம் என்ற பெயர்கொண்ட மரக்கலத்தைச் சிறப்பிப்பதற்காகவும் அமைக்கப்பட்டது.



இந்த அருங்காட்சியகத்தின் அமைப்பை முதலில் காண்போம். அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் ஃப்ராம் மரக்கலம் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று தளங்களில் கண்காட்சி சுவர்ப்பகுதியை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஃப்ராம் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்று அதனை முழுமையாகப் பார்த்த பின்னர் படிகளில் இறங்கி கப்பலின் இரண்டாம் தளத்திற்கு வரலாம். அங்கு மாலுமிகள், ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கான அறைகள் உள்ளன. அங்கேயே சமையலறை, உணவருந்தும் பகுதி, ஓய்வெடுக்கும் பகுதி, நூலகப் பகுதி ஆகியன அமைந்திருக்கின்றன. இதற்கு அடுத்த கீழ்த்தளத்தில் கப்பலின் இயந்திரம் உள்ளது. இங்கு சமையல் பொருட்கள், பயணத்தில் தேவைப்படும் கருவிகள், போன்றவை வைக்கும் பகுதி உள்ளது.



உலகின் வடதுருவத்திற்குப் பயணம் சென்று அறிந்து வரவேண்டும் என்ற எண்ணத்துடன்1891ம் ஆண்டு நோர்வே அரசும் தனியாரும் சேர்ந்து இவ்வாய்வுப் பயணத்திற்கானப் பொருளாதாரத்தைச் சேகரித்துக் கொடுக்க, திரு.நான்சன் ( Fridtjof Nansen ), கோலின் ஆர்ச்சர் (Colin Archer) என்ற கப்பல் கட்டும் பொறியியலாளரை அமர்த்தி இக்கப்பலை உருவாக்கச் செய்தார். இந்தப் பிரத்தியேகக் கப்பலே உலகின் துருவங்களுக்குச் சென்ற ஆய்வுப்பயணங்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட கப்பல் என்ற பெருமையைப் பெறுகின்றது.



உலகின் துருவங்களுக்குப் பயணித்தோர் என்று குறிப்பிடும் போது இதில் முதன்மையாகப் பட்டியலில் இடம் பெறுவோர் நோர்வே நாட்டினர் மூவர். அவர்கள் திரு. பிரிட்ஜோவ் நான்சன் ( Fridtjof Nansen ), திரு.ஓட்டோ சுவேதுருப் (Otto Sverdrup) மற்றும் திரு. ரோல்ட் அமுண்ட்சன் ( Roald Amundsen) ஆகியோர்.

திரு. பிரிட்ஜோவ் நான்சன் (10 அக்டோபர் 1861 – 13 மே 1930) நோர்வே நாட்டைச் சேர்ந்தவர். ஒரு ஆய்வாளர், சமூக நல செயற்பாட்டாளர், அரசப்பிரதிநிதி, விஞ்ஞானி என்ற பன்முக ஆளுமையாக அறியப்படுபவர். இவரது சாதனைகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசினை 1922ம் ஆண்டு இவர் பெற்றார் என்பதை நினைவு கூர்வது தகும்.



திரு.நான்சன் இன்று உலக வரைபடத்தில் நாம் அறியும் க்ரீன்லாந்து எனும் நாட்டின் உட்பகுதியை ஸ்கீ பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யச் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கியவர். ஆயினும் 1893லிருந்து 1896 வரையிலான ஆய்வுப்பயனத்தில் வடதுருவத்தின் 86°14′ அடைந்து செய்த சாதனை இவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. இந்தப் பயணத்திற்குப் பின்னர் பயணங்களிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு தனது ஆய்வுகளிலும் தனது சமூக நலப்பணிகளிலும் நோர்வே நாட்டின் அரசியல் அமைப்புப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.


திரு. ஓட்டோ சுவேதுருப் (31 அக்டோபர்1854 – 26 நவம்பர் 1930) வடதுருவத்திற்கான திரு.நான்சனின் முதல் பயணத்தில் அவரோடு இணைந்து ஆய்வில் ஈடுபட்டவர்களுள் ஒருவர். அப்பயணத்தின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவராக அமர்த்தப்பட்டு பின் திரு.நான்சன் கப்பலை விட்டு ஸ்கீ செய்து வடதுருவத்திற்குச் சென்ற போது ஃப்ராம் கப்பலை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். 1898ம் ஆண்டு திரு. ஓட்டோ சுவேதுருப் வடதுருவத்திற்கான இரண்டாவது பயணத்தை நிகழ்த்தினார். ஃப்ராம் கப்பலிலேயே இந்த இரண்டாவது பயணமும் நிகழ்ந்தது. இப்பயணம் 1902ம் ஆண்டு வரை நீடித்தது. க்ரீண்லாந்து நாட்டைக் கடந்து மேலும் பல தீவுகளைக் கண்டுபிடித்து அவற்றை வரைபடத்தில் இணைக்கும் பணியைச் செய்தார். இவற்றுள் பல சிறு தீவுகள் கண்டறியப்பட்டன, பெயரிடப்பட்டன, வரைபடத்தில் இணைக்கப்பட்டன. இந்தத் தீவுத் தொகுதிகளுக்கு இவரது பெயரிலேயே சுவேதுரூப் தீவுகள் (Sverdrup Islands) என்ற பெயரும் வழங்கப்பட்டது. இவருக்கு அந்நாளைய ஜெர்மனியின் பெரூசியன் அரசின் விருது 1917ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் 2ம் உலகப்போரில் ஜெர்மானியப் படை நோர்வேயின் மீது தாக்குதல் நடத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமையை எதிர்த்து இந்த விருதை திரு. ஓட்டோ சுவேதுருப் ஜெர்மனிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். பல தனியார் அமைப்புக்களினாலும் பல்கலைக்கழகங்களினாலும் இவர் கவுரவிக்கப்பட்டார். இவரது பிறந்த ஊரான சாண்ட்விகா நகரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



திரு. ரோல்ட் அமுண்ட்சன் (16 ஜூலை1872 -18 ஜூன் 1928) வரலாற்றில் தனக்கெனத் தனியிடத்தைப் பெறுபவர். இவரே உலக வரைபடத்தில் தென்துருவத்தை முதலில் அடைந்து ஆராய்ந்து அதனைப் பதிவு செய்தவர் என்ற பெருமையைப் பெறுகின்றார். இவரது தென் துருவத்திற்கானப் பயணத்திலும் ஃப்ராம் மரக்கலமே பயன்படுத்தப்பட்டது. இவர் 1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் நாள் தென்துருவத்தை அடைந்து சாதனை நிகழ்த்தினார். கடல் மார்க்கமாகவும் நில மார்க்கமாகவும் வடதுருவத்தை இவருக்கு முன்னரே திரு.நான்சன் சென்றடைந்து சாதனைப் படைத்திருந்தார். இவர் விமானம் வழிப்பயணித்து வடதுருவத்தை 1926ம் ஆண்டு சென்றடைந்தவர் என்ற சிறப்பும் பெறுகின்றார். முதலில் ஆர்க்டிக் பகுதியில் அதாவது வடமேற்குப் பகுதிப் பயணத்தை (1903-1906) நிகழ்த்தியவர் என்ற சிறப்பும் இவருக்குச் சேர்கின்றது. இத்தகைய ஒரு பயணத்தில் 1928ம் ஆண்டு ஈடுபட்டிருக்கும் போது காணாமல் போன தமது குழுவின் சிலரை கண்டுபிடிக்கச் சென்றபோது இவர் சென்ற அவசரக்கால பாதுகாப்பு விமான தொலைந்து போனதில் இவரும் காணாமல் போய்விட்டதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.


வட துருவம் என்பது உலக உருண்டையின் வடக்கின் கடைக்கோடியில் உள்ள புள்ளி. அதே போல தென்துருவம் என்பது உலக உருண்டையின் தெற்கே கடைக்கோடியில் உள்ள புள்ளி. இப்பகுதிகள் பனிக்கட்டிகளாலும் பனித்துகள்களாலும் சூழப்பட்டு கடுங்குளிருடன் ஆண்டு முழுக்க இருக்கும் நிலப்பகுதிகளாக அறியப்படுபவை. இவற்றிற்குப் பயணம் மேற்கொள்வது என்பது ஒரு அசாதாரணக் காரியமே. கடலில் பயணிக்கலாம் என்றால் நீர்மட்டம் பனிக்கட்டிகளால் இறுக்கமாகச் சூழப்பட்டு கப்பல் பயணத்தைத் தடுத்துவிடும் சூழல் உண்டு. ஆக இப்பகுதிகளில் ஆய்வு செய்யச் சொல்வோர் ஓரளவிற்குக் கடலில் கப்பல் வழி பயணித்து பின்னர் பனியில் சருக்கிச் செல்லும் ஸ்கீ வகை கருவிகளைப் பயன்படுத்திச் சென்றே ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இதே போன்று பிரத்தியேக விமானங்களின் வழி பயணம் மேற்கொள்வதும் இவ்வகைப் பயணங்களைச் சாத்தியப்படுத்துகின்றன.



வடதுருவங்களிலும் தென் துருவங்களிலும் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இன்று நமக்குக் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் வடதுருவத்தில் இன்றைக்கு ஏறக்குறைய 4500 ஆண்டுகள் வாக்கிலேயே மனித இனம் இங்கு வாழ்ந்துள்ளது என்ற தகவல்கள் ஆராய்ச்சிகளின் வழி கிடைத்துள்ளன. குளிரான தட்பவெட்ப நிலையினால் இங்கு மக்கள் குடியேற்றம் என்பது மிகக் குறைவாகவே அமைந்திருக்கின்றது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது. இக்குளிரான தட்பவெட்ப சூழலிலும் இங்குள்ள சூழலுக்கேற்ற வகையில் தாவரங்களும் விலங்குகளும் இங்கு உயிர்வாழ்கின்றன. இவற்றைப்பற்றிய தொடர் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. இவ்வகை ஆய்வுகளில் குறிப்பாக ஸ்கேண்டினேவியன் நாடுகள் என நாம் குறிப்பிடும் நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகியவற்றோடு கனடா, வட அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

மனிதனின் தேடுதல் எல்லைகள் அற்றது. அத்தகைய ஒரு செயலே மனிதன் உலக உருண்டையின் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பயணம் மேற்கொண்டு நிகழ்த்திய சாதனை. உலகின் அறியப்படாத விடயங்கள் பல இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அறிவதில் அறிவியல் முயற்சிகள் ஒவ்வொரு நாளும் முன்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றது. அத்தகைய அறிவியல் சாதனைகளில் பங்கு எடுத்துக் கொண்ட ஃப்ராம் கப்பல் பாதுகாக்கப்படும் ஃப்ராம் அருங்காட்சியகம் உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது!