Monday, March 31, 2014

27. சின் யோங் திரைப்பட அருங்காட்சியகம், ஜேஜூ தீவு, தென் கொரியா.

முனைவர்.சுபாஷிணி 


சினிமா தமிழ் சமூகத்தில் மட்டுமல்ல.. உலகில் எல்லா சமூகங்களுமே விரும்பி பார்க்கும் ஒரு பொழுது போக்கு அம்சமாக மனித வாழ்க்கையில் இடம் பிடித்துக் கொண்டு விட்டதை நாம் மறுக்க முடியுமா?

பொழுது போக்கு அம்சம் என்பதையும் கடந்து சமூகத்தின் சிந்தனையில் தாக்கம் ஏற்படுத்தக் கூடிய மிக பலம் பொருந்திய ஒரு ஊடகமாக இன்று சினிமா விளங்குகின்றது. குறிப்பிட்டு சொல்வதானால் திரைப்படத் துறையின் வளர்ச்சி என்பது மிகத் துரிதமாகக் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கின்றது எனலாம். வளர்ச்சி அடைந்த நாடுகள் மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளும் தத்தம் மொழிகளில் சினிமா துறையில் விரிவான வளர்ச்சியை அடைந்திருக்கின்றன. பொதுவாகத் தமிழக சூழலின் பின்னனியில் பார்க்கும் நமக்கு நன்கு பரிச்சயமானதாக இருப்பவை ஹாலிவூட் தயாரிப்புக்களான அமெரிக்க திரைப்படங்களும், இந்திய திரைப்படங்களும் எனலாம். 

எனது வாழ்க்கை பின்னனியில் மலேசிய சினிமாவின் பரிச்சயமும் தற்சமயம் ஜெர்மானிய திரைப்படங்களின் பரிச்சயமும்  கிடைக்கும் வாய்ப்பு அமைந்திருப்பதால் இந்த மொழி படங்கள், இவற்றின் பொதுவான கதை புலன்கள், நடிக நடிகையரின் தோற்றத் தேர்வு பற்றிய பொதுவான கருத்துக்கள், எனச் சில விஷயங்களை அறிந்திருக்கின்றேன். இத்தகைய படங்களை அவ்வப்போது பார்க்க வாய்ப்பு கிடைப்பதால் ஓரளவு இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து அலசவும் முடிகின்றது. என் கணிப்பில் அமெரிக்க படங்களை விட ஜெர்மானிய தயாரிப்புக்களாக அமையும் படங்கள் மிக இயல்பான தோற்றத்தை தருவதாக அமைந்திருக்கின்றன என்பதை பல படங்கள் எனக்கு ஊர்ஜிதப்படுத்துகின்றன. இந்தியப் படங்களையும் மலாய் மொழிப் படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலாய் படங்கள் பொதுவாக 60, 70, 80களில் தமிழ் படங்களைக் காப்பியடித்து எடுக்கப்பட்டவை போலவே அமைந்திருக்கிருக்கும். பின்னர் படிப்படியாக வட இந்திய படங்கள் மலாய் மக்களின் சினிமா மோகத்திற்கு விருந்தாக அமைந்ததன் விளைவாக பல மலாய் படங்கள் இவ்வகை பின்னனியிலே அமைந்திருப்பதைக் காணமுடியும். இதில் அமெரிக்க படங்களையும் கலந்து வைத்தார்போல கலவையாக சில படங்கள் அமைவதுண்டு. இதனையும் மீறி சில படங்கள் மலாய் சமூக மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டுவது போலவும் தனித்துவத்துடன் விளங்குவதையும் ஒதுக்கி விட முடியாது.

சினிமா துறை என்பது கேளிக்கை, பொழுது போக்கு அம்சம் என்பதோடு  மட்டும் முடிந்து விடுவதல்ல. தற்கால சூழலில் பற்பல புதிய யுத்திகள், நுணுக்கமான கருவிகள், புத்தம் புதிய தொழில்நுட்பங்கள்  என இத்துறை மிக நுணுக்கமானதொரு துறையாக பெரும் வளர்ச்சி கண்டுள்ளதை காண்கிறோம். ஆரம்ப கால சினிமா துறை நிலையிலிருந்து இக்காலத்து மாற்றங்கள் வரை அறிந்து கொள்வதென்றால் அதனை சினிமா துறைக்கானப் பிரத்தியேக அருங்காட்சியகங்கள், அல்லது தொழில்நுட்ப அருங்காட்சியகங்கள், நூலகங்கள் எனச் சென்று தான் தேட வேண்டும். உலகின் பல நாடுகளில் சினிமா துறை வளர்ச்சியின் தொடர்ச்சியை பதிவாக அமைத்து பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் சில அருங்காட்சியகங்கள் இயங்குகின்றன. அத்தகைய அருங்காட்சியகங்கள் வரிசையில் அமையும் ஒன்று தான் தென் கொரியாவில் உள்ள  சின்யோங் திரைப்பட அருங்காட்சியகம் (Sinyoung Cinema Museum).


Inline image 1
ஜேஜு தீவை இந்த தென் கொரிய வரைப்படத்தில் காணலாம். தெற்குப் பகுதியில் மிக கீழே அமைந்திருக்கும் ஒரு தீவு இது.


1999ம் ஆண்டு ஜூன் மாதம் தென் கொரியாவின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜேஜூ தீவில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு திறப்பு விழா கண்டது.  மூன்று மாடிகளைக் கொண்டு அமைந்த ஒரு மாடர்ன் வடிவ கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. 

2003ம் ஆண்டில் டிசம்பர் மாதம் தென் கொரியாவிற்குச் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்த வேளையில் ஒரு நாள் இந்தத் திரைப்பட அருங்காட்சியகத்திற்கும் சென்று வந்தேன். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஒரு அருங்காட்சியகம் இது. நான் சென்றிருந்த வேளையிலும் கணிசமான வருகையாளர்களும் இந்த அருங்காட்சியகத்திற்கு வருகை தந்திருந்தனர். 


Inline image 7
தென் கொரிய திரைப்படங்கள்  (டிசம்பர் 2003)

இந்த அருங்காட்சியகத்தின் உள்ள மூன்று தளங்களில் தனித்தனியாக பிரிக்கப்பட்டு அரும் பொருட்களும் தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 
ஒரு தளத்தில் Hall of Fame என் பெயரிடப்பட்டு தென் கொரிய சினிமா துறையில் மிக முக்கியப் பங்கு வகித்தோரின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் சினிமா நடிக நடிகையர் மட்டுமன்றி தொழில் நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ஒலி, ஒளிப்பதிவாளர்கள் என தென் கொரிய சினிமா துறைக்கு முக்கியப் பங்கு வகித்தோர் படங்கள் இடம்பெருகின்றன. கீழே நின்று பார்க்கும் போது நம்மை சுற்றி இருக்கும் இந்தப் பல்வேறு கலைஞர்களும் நம்மை பார்ப்பது போன்ற பிரமையை இந்த அமைப்பு நமக்கு ஏற்படுத்தி வைக்கின்றது. 


Inline image 2
தென் கொரிய சினிமா துறையினருக்கு ஒரு அஞ்சலி (டிசம்பர் 2003)


இந்த Hall of Fame அடுத்து சினிமா தொழில் நுட்பக்கருவிகளின் கண்காட்சி ஒரு பகுதியிலும், அசையும் படங்கள் என்ற வகையில் ஒரு பகுதியும், பிரத்தியேகமான முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கருவிகள் ஒரு பக்கமும், சினிமா படங்களில் பயன்படுத்தப்பட்ட ராட்ஷஸ வடிவங்களின் வடிவங்கள் ஒரு புறமும், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்ய பயன்படுத்தப்படும் நூதன முறைகள் பற்றிய விளக்கப் படங்களுக்கு ஒரு பகுதி எனவும் தனித்தனியாக அமைந்திருக்கின்றன. 

இந்த அருங்காட்சியகத்தின் தனிச் சிறப்பு எனக் குறிப்பிடுவதென்றால் அது தென் கொரியாவின் சினிமா துறையின் படிப்படியான வளர்ச்சியை ஆவணப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஆவணக் கூடம் என தயங்காது சொல்லலாம். தென் கொரியாவில் படமாக்கப்பட்ட திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட தொழில் நுட்பக் கருவிகள்,  சினிமா செட்டிங், வடிவங்கள், கதை வசனப் பதிவுகள், சினிமா சுருள்கள் என பல சேகரிக்கப்பட்டு இங்கு பாதுகாக்கப்படுகின்றன.

Inline image 3
தொழில் நுட்பக் கருவிகள் (டிசம்பர் 2003)

தென் கொரியாவின் புகழ் மிக்க நடிகர் ஒருவரின் பெயர்தான் Sinyoung. அவர் பெயரில் தான் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் திரைப்பட பூங்கா என இருப்பது போல இங்கு ஒரு புகழ் பெற்ற ஒரு சினிமா துறை கலைஞரை சிறப்பு செய்யும் வகையில் அவர் பெயரில் இந்த அருங்காட்சியகத்தை அமைத்திருக்கின்றனர் என அறியமுடிகின்றது.

இந்த அருங்காட்சியகத்தின் இரண்டாம் தளம் முழுமையாக சினிமா துறை பணிகளில் பயன்படுத்தப்படும் வெவ்வேறு கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.  அருகிலேயே வேற்று கிரகத்து கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருளில் காட்சிகள் அமைக்கப்பட்டு அதில் சிறுவர்களின் கவனத்தைக் கவரும் வகையிலான அம்சங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 

Inline image 6
ஆரம்பகால முயற்சிகளின் பதிவு பகுதியில்  (டிசம்பர் 2003)

அருங்காட்சியகத்தை பார்த்து விட்டு வெளியே வரும் முன்னர் அங்கிருக்கும் விற்பனை பொருட்கள் நிலையத்தில் இந்த அருங்காட்சியகம் வந்து சென்றதன் நினைவாக  இருக்க ஏதாகினும் நினைவுப் பொருட்களையும் இங்கு வருகை தருவோர் வாங்கிக் கொள்ளலாம். இந்த அருங்காட்சிகம் கடற்கரையை மிக ஒட்டி அமைந்திருக்கின்றமையால் அருங்காட்சியகத்தைப் பார்க்க வருவோர் கடற்கரையிலும் சில மணி நேரங்களை ஓய்வெடுக்கச் செலவிடலாம். இயற்கை சூழலில் அமைந்திருக்கும் இந்த அருங்காட்சியகம் பெரியோர் முதல் சிறியவர்கள் வரி தென் கொரிய சினிமா துறையைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோருக்கு நிறைய விஷயங்களைக் வழங்கக்கூடிய ஒரு கருவூலம்தான்.

அருங்காட்சியக வளாகத்தின் கீள்தளத்தில் சிறிய ரெஸ்டாரண்ட் ஒன்றும் இருக்கின்றது. இங்கு நம் களைப்பு தீர காபி வாங்கி அருந்து விட்டு மீண்டும் மற்றொரு அருங்காட்சியகத்திற்கு நம் பயணத்தை நாம் தொடர்வோமா.. ? 

Monday, March 3, 2014

26. பங்கர் ஹோட்டல் அருங்காட்சியகம், ஸ்டுட்கார்ட், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி 


எனது கடந்த அருங்காட்சியகத் தொடர் பதிவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் ஒரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்வது பற்றி குறிப்பிட்டிருந்தேன். 

நீங்கள் என்னுடன் வரத் தயார்தானே?


ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் நகரில் வருடத்திற்கு ஒரு முறை மார்ச் மாத மத்தியில் அருங்காட்சியக இரவு என்னும் நிகழ்ச்சி நடைபெறும். அன்றைய நாளில் மாலை ஐந்து மணி தொடங்கி மறு நாள் காலை மூன்று மணி வரை ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் நாம் சென்று பார்த்து வரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். அருங்காட்சியகப் பிரியர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடம் செல்ல வசதியாக அன்று பேருந்துகள் இலவசமாக செலுத்தப்படும். ஒருவர் 15 யூரோ கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது. கட்டணம் செலுத்தி நுழைவு சீட்டு பெறும் போது நமக்கு ஒரு விளக்கக் கையேடு கொடுக்கப்படும். அதில் ஸ்டுட்கார்ட் நகரில் இருக்கும் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களை வகைப்படுத்தி, குழுக்களில் அமைத்து, பேருந்துகள் ஒரு அருங்காட்சியக வாசலிலிருந்து மறு அருக்காட்சியகம் செல்லும் வகையில் ஏற்பாடு அமைந்திருக்கும்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஒரு சனிக்கிழமை மாலை நான் இந்த அருங்காட்சியக பயணத்தில் பங்கு கொண்டு நான் வசிக்கும் நகரின் அருகாமையில் இருக்கும் அருங்காட்சியகங்களைப் பார்த்து வருகிறேன். மாலை ஐந்திலிருந்து பயணித்தாலும்  ஒரு அருங்காட்சியக தினத்தில் ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து அருங்காட்சியகங்களை மட்டுமே காண முடியும். அப்படி ஒரு முறை பயணித்த போது ஸ்டூட்கார்ட் மத்தியில் அமைந்திருக்கும் நிலத்திற்குக் கீழே உள்ள ஒரு அருங்காட்சியகம் செல்லும் ஆச்சரியம் மிக்க ஒரு அனுபவத்தைப் பெற்றேன். விளக்கக் கையேட்டினை வாசித்து எங்கே இருக்கின்றது என இந்த அருங்காட்சியகத்தைத் தேடிக் கொண்டு ஸ்டுட்கார்ட் மார்க்கெட்ப்ளேஸ் (Marktplatz) சென்று சேர்ந்தோம். வெறும் தரை. ஆனால் வரிசையாக மக்கள் நின்று கொண்டிருந்தனர். ஒவ்வொருவராக மனிதர்கள் கீழே நோக்கிச் செல்வதைப் பார்த்த எனக்கு நிலத்தின் அடியில் இருக்கும் அருங்காட்சியகம் செல்கின்றோம் என்று அறிந்ததும் ஒரு தனி குதூகலம் ஏற்பட்டது. அதே வேளை உள்ளே சென்றவர்களும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.


Inline image 1
நுழைவாயில் பகுதி 1940களில்

எங்களின் வாய்ப்பு வர நாங்களும் மேல் தரைப் பகுதியிலிருந்து அன்று மட்டுமே பிரத்தியேகமாக திறக்கப்பட்ட பாறை கற்களுக்குக் கீழே அமைக்கப்பட்டிருந்த படிகளில் இறங்கி உள்ளே நடந்து சென்றோம்.

1940ம் ஆண்டு வாக்கில் இப்பகுதியில் இன்றும் மிகப் பிரபலமாக விளங்கிய Breuninger வர்த்தக நிறுவனத்திற்கு விற்பனையாளர்கள், வணிகர்கள் தங்குவதற்கு ஒரு தங்கும் விடுதி தேவைப்பட்டது. இந்த வர்த்தக நிறுவனம் இன்றும் அருகாமையிலேயே இயங்கி வருகின்றது. மிகப் பெரியதொரு அங்காடி விற்பனை  நிலையம் இது. 

இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய Breuninger வர்த்தக நிறுவனம்  இப் பகுதியில் சற்றே தள்ளி தரைக்கடியில் உள்ள நிலத்தில் பாதுகாப்பை மையமாகக் கருதி ஒரு தங்கும் விடுதியை அமைக்க திட்டம் தீட்டி, வரைபடத்தையும் தயார் செய்து கட்டுமாண வேலைகளையும் தொடங்கியது. இந்த நிலத்துக்கு அடியில் அமைந்த தங்கும் விடுதியோடு இணைந்தார் போல வாகன நிறுத்துமிடம், பிறகு அதிலிருந்து மேல் நோக்கி வரும் வகையிலான ஒரு பாதை என்பதையும் இந்த கட்டுமானம் கொண்டிருந்தது. 

இந்த நிலத்துக்கு அடியிலான கட்டுமானம் என்பது அக்கால கட்டத்தில் நிகழ்ந்த முதலாம் உலக யுத்தம், பின்னர் தொடங்கிய இரண்டாம் உலக யுத்தம் ஆகியனவற்றை முக்கியமாக மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதே. இங்கு ஸ்டுட்கார்ட் மட்டுமல்லாது, ஜெர்மனியின் பல ஊர்களில் நிலத்துக்கடியில் தங்கும் வீடுகள், மறைவிடங்கள், தொழிற் சாலைகள், சந்திப்புக் கூடங்கள், கேளிக்கை விடுதிகள் என பல இருக்கின்றன. அந்த வகையில் இதுவும் ஒன்றே!

இப்படி நிலத்திற்கு அடியில் இயங்கிய வாழ்விடங்களின் உதாரணங்களாக இதுவரை ஸ்டுட்கார்ட் நகரில் ஒன்றும்,  என் இல்லத்திற்கு அருகாமையில் ஃபெல்பாஹ் நகரில் ஒரு நிலத்திற்கடியிலான இரவு கேளிக்கை விடுதியையும் நான் நேரில் சென்று பார்த்து வந்திருக்கின்றேன். இங்கு நமக்கு கிடைக்கும் அனுபவமே தனி தான்.

Inline image 2
ஸ்டுட்கார்ட் நகரின் மையப்பகுதி 1944ம் ஆண்டு  போரினால் ஏற்பட்ட சேதங்களுடன்

இந்த ஸ்டுட்கார்ட் பங்கர்  ஹோட்டல் யுத்த காலத்தில் வணிகம் தடைபடாமல் இருப்பதற்கும் உயிரை காப்பாற்றிக் கொளள ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகவே இருந்தது. எதிர்பார்த்தது போலவே 1944ம் ஆண்டு ஜூலை 25-26ம் தேதிகளில் ஸ்டுட்கார்ட் பகுதியில் வெடி குண்டுகள் தாக்கியதில் பல கட்டிடங்கள் சேதத்துக் குள்ளாயின. அந்த சமயத்தில் இந்த பங்கர் ஹோட்டலில் பலர் ஒளிந்துகொண்டு தங்கள் உயிரையும் உடமைகளையும் பாதுகாத்துக் கொண்டனர். 

ஒரே சமயத்தில் இந்த நிலத்துக்கடியில் அமைக்கப்பட்ட இந்த தங்கும் விடுதியில் பலரும் இருப்பது  என்பது எளிதான காரியமல்ல. மூச்சு விட போதிய ஆக்ஸிஜன் போதாமையினாலும் காற்று அழுத்தக் குறைவினாலும் சிரமங்களைத் தாங்கிக் கொண்டே தம் உயிரை இந்த மக்கள் தற்காத்துக் கொண்டனர் என்பதில் சந்தேகம் இல்லை. 

Inline image 3
அறைகள் - வரிசையாக


இரண்டாம் உலக யுத்ததிற்கு பின்னர் 1979ம் ஆண்டில் இந்த பங்கர் ஹோட்டல் பொது மக்களின் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக இணைக்கப்பட்டு ஸ்டுட்கார்ட் மாநகராட்சியின் பொறுப்பின் கீழ் வந்தது. அதே காலகட்டத்திலும் பின்னரும் ஜெர்மனியில் பல இடங்களில் இப்படி நிலத்துக்கடியில் இயங்கிய சில மறைவிடங்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் முயற்சிகள் நடைபெற்றன. அதன் அடிப்படையில் இந்த ஹோட்டல் மத்திய அமைச்சின் பொறுப்பில் சிலகாலங்கள் என இருந்தாலும் அதன் பின்னர் பராமரிப்பில் படிப்படியாக சில மாற்றங்கள் நிகழ,  பின்னர் மீண்டும் ஸ்டுட்கார்ட் மாநகராட்சியின் கீழ் வந்தது.

அதன் பின்னர் அருங்காட்சியக இரவு நாட்களில் பொது மக்கள் பார்வையிட வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த நிலத்தின் அடியில் இருக்கும் ஹோட்டல் மாநகராட்சியின் அனுமதி வழங்கப்பட்டு திறக்கப்படுகின்றது.

Inline image 4
அறைகள் வரிசையாக

உள்ளே நுழைந்தால் வரிசை வரிசையான அறைகள் இருப்பதை முதலில் காணலாம். ஒவ்வொரு அறையிலும் பல அடுக்குகளினாலான கட்டில்கள் போடப்பட்டிருக்கின்றன. ஒரு மூலையில் கேளிக்கை பகுதி என அமைத்து அங்கே ரேடியோ, அலங்காரப் பொருட்கள் என வைத்திருக்கின்ரனர். தொடர்ந்து நீளமான பாதையில் நடந்து சென்றால் ஓரிடத்தில் தனி சமையலறை பகுதி இருக்கின்றது. 

Inline image 6
அறைகளில் இன்னமும் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் கட்டில்கள்


ஹோட்டலின் நிலை பிரத்தியேகமாக புதுப்பிக்கப்படாமல் எந்த மாறுபாடுகளும் இன்றி அப்படியே 1940களில் இருந்த வகையிலேயே இன்றளவும் பாதுகாக்கப்படுகின்றது. 

Inline image 5
போரினால் ஏற்பட்ட சேதம் நிகழ்வதற்கு முன் இந்த ஹோட்டலின் காட்சி

இந்த பங்கர் ஹோட்டல் தற்சமயம் மக்கள் புழக்கத்தில் இல்லாமையால் இது அருங்காட்சியகமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஸ்டுட்கார்ட் நகர ஆருங்காட்சியகப் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றது. இங்கு நேரில் வந்து இந்த அருங்காட்சியகத்தைக் காண விரும்புபவர்கள் ஜெர்மனிக்கு மார்ச் மாதம் 13 - 30ம் தேதிக்குள் உங்கள் வருகை இருப்பதாக திட்டமிட வேண்டும். இந்த குறிப்பிட்ட வேளையில் அமைகின்ற ஒரு சனிக்கிழமையே ஒவ்வொரு ஆண்டும் ஸ்டுட்கார்ட் நகரின் அருங்காட்சியக நிகழ்வு நடைபெறும். 

சரி.. நிலத்திற்கடியில் இந்த புழுக்கத்தில் எவ்வளவு நேரம் நாம் நிற்பது? 

வாருங்கள்.. உங்களை மற்றொரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.

தொடரும்..


சுபா