Monday, June 27, 2016

65. அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம், லுக்ஸம்பர்க்

http://www.vallamai.com/?p=69926
முனைவர்.சுபாஷிணி

லுக்ஸம்பர்க் ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ஜெர்மனியோடு, பிரான்சு, பெல்ஜியம் ஆகிய இரண்டு நாடுகளையும் எல்லையாகக் கொண்டது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் 1940ம் ஆண்டில் மே10ம் தேதி ஹிட்லர் தலைமையிலான நாஸி படைகள் லுக்ஸம்பர்க் நாட்டிற்குள் ஊடுருவின. ஒரே நாலில் லுக்ஸம்பர்க் நாட்டைக் கைப்பற்றியது ஜெர்மனியின் அப்போதையை நாஸி அரசு. 1944ம் ஆண்டின் இறுதி வாக்கிலும் 1945ம் ஆணில் 2ம் உலகப்போரின் முடிவிலும் நாஸி அரசிடமிருந்து லுக்ஸம்பர்க் விடுதலைப் பெற்றது.

இரண்டாம் உலகப்போர் தொடங்கும் முன்னர் லுக்ஸம்பர்க் நாட்டில் ஏறக்குறைய 3500 யூதமக்கள் குடியிருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் ஜெர்மனியில் யூதர்களுக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் ஜெர்மனியிலிருந்து வெளியேறி இங்கே வந்து குடியேறியவர்கள். நாஸி அரசு லுக்ஸம்பர்க்கை கைப்பற்றிய பின்னர் அங்குக் குடியிருந்த யூத மக்களை அருகாமையில் இருக்கும் பிரான்சுக்கு சென்று விடும்படி கட்டாயப்படுத்தியது. ஏறக்குறைய 2500 மக்கள் அந்த வகையில் பிரான்சுக்கு குடிபெயர்ந்து விட்டனர். எஞ்சியவர்கள் கதி தான் பரிதாபம். எஞ்சிய ஏறக்குறைய 800 யூதர்களை நாஸி அரசு ஜெர்மனியில் ஏற்படுத்தப்பட்ட கெத்தோக்களுக்கு கொண்டு வந்து விட்டனர். கெத்தோ என்பது ஜெர்மனியின் அப்போதைய நாஸி அரசுக்கு எதிரானோரை வைத்து சித்ரவதை செய்யும் வதை முகாம்.

மறைந்தும் ஒளிந்தும் சில யூத மக்கள் இருந்தவர்கள். ஆயினும் எஞ்சிய 800 யூதர்களையும் கெத்தோக்களுக்கு கொண்டு சென்ற பின்னர் ஜெர்மனியின் நாஸி அரசு லுக்ஸம்பர்கை யூதர்கள் வெளியேற்றப்பட்ட தூய்மை செய்யப்பட்ட நாடாக பிரகடனப்படுத்தியது.

தூய்மைவாத, இனவாத சிந்தனையின் எத்தனைப் பெரிய கொடுங்கோலாட்சியின் சிந்தனை இது என்று நினைக்கும் போதே மனிதம் தொலைத்த மக்கள் சிந்தனையின் கொடூர சிந்தனைப் போக்கினை காண முடிகின்றது. சமூக நல்லிணக்கத்திற்கு மதவாதமும் இனவாதமும் தூய்மைவாதமும் என்றுமே நன்மை செய்ய முடியாது. அது எத்தகைய தன்மை உடையதாக இருப்பினும் தூய்மை வாதம் மக்கள் வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும் ஒரு சிந்தனை தான். பொதுமைப்பண்பிலிருந்து மக்கள் விலகும் நிலை ஏற்படும் தருணம் அது சமூகச் சீரழிவுக்கு நிச்சயமாக வழிவகுக்கும் என்பதில் ஐயமிலை.!



இந்த அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம் 1944ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் நாள் முதன் முதலில் ஒரு தற்காலிக இடுகாடாக அமைக்கப்பட்டது. இரண்டாம் புலகப்போரில் உயிர்நீத்த போர்ப்படை வீரர்களில் சிலரது உடல்கள் இங்கே அச்சமயம் புதைக்கப்பட்டன. இங்கே புதைக்கப்பட்டோரில் 116 யூத இனத்தைச்சார்ந்த போர்ப்படை வீரர்களும் அடங்குவர். இவர்களது கல்லறையின் மேல் நட்சத்திர வடிவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.



தற்சமயம் இந்த அமெரிக்க போர்ப்படை வீரர்கள் மயானம் 17 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இதனைச் சுற்றி 33.5 ஏக்கர் காடுகள் சூழ்ந்துள்ளன.

இந்த மயானப் பகுதிக்கு முன்னர் வாகனம் நிறுத்தும் பகுதி அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் உயர்ந்த இரும்புக் கம்பிகள் பூட்டப்பட்ட நுழைவாயிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. முதலில் நமக்குத் தென்படுவது இந்த மயானத்தை மையப்படுத்தும் வகையில் இங்கே புதைக்கப்பட்டிருக்கும் ஆண் பெண் போர்ப்படை வீரர்களை நினைவு படுத்தும் வகையில் அமைந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான நினைவுச் சின்னம். இதற்கு முன்னர் வலது புறத்தில் சிறிய அலுவலகமாக அருங்காட்சியகப் பகுதி அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தினுள்ளே, அமெரிக்க சான்றிதழ்கள், கொடிகள், புகைப்படங்கள், கடிதங்கள் என அரும்பொருட்கள் சில காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது மிகச் சிறிய ஒரு பகுதி தான்.



இந்த அறையை விட்டு வெளியே வந்தால் வலது இடது என இரு புறங்களிலும் பளிங்குக் கற்களால் எழுப்பப்பட்ட சுவரில் இரண்டாம் உலகப்போரை நினைவுறுத்தும் வகையில் அமைந்த விளக்கக் குறிப்புக்கள் விரிவாக வழங்கப்பட்டுள்ளன. இந்த விளக்கப்படங்களும் குறிப்புக்களும் போர்ப்படைகள் மேற்கு ஐரோப்பாவில் போரின் போது சென்ற வழித்தடங்களை விவரிக்கும் வகையில் உள்ளன. ஒரு பகுதியில் இந்தப் போரின் போது காணாமல் போன 371 போர்ப்படை வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன.



இந்த இடத்திலிருந்து மையப்பகுதியில் தான் உயர்ந்த கோபுரம் போன்ற நினைவாலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த நினைவாலயத்தினுல் விளக்கு எறிந்து கொண்டிருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே அமெரிக்க கொடி பிரம்மாண்டமான அளவில் நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒரு கத்தோலிக்க தேவாலயம் போன்ற அமைப்பில் தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து கீழே இறங்கு நடக்க ஆரம்பித்தால் பச்சைக் கம்பளம் விரித்தார் போல இருக்கும் புல்வெளியில் வெள்ளை நிறச் சிலுவைகள் நிறைந்த மயானக் காட்சியைக் காணலாம். இங்கே 5076 இறந்து போன போர் வீரர்கள் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு பளிங்கு சிலுவைபோன்ற அமைப்பிலான கல்லறை அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறை அமைக்கப்பட்டுள்ள பகுதி ஆர்டென் (Ardennes) என அழைக்கப்பட்ட, 2ம் உலகப்போரின் போது மிக முக்கிய போர் நடைபெற்ற இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது இறுக்கமான காடுகள் நிறைந்த ஒரு பகுதி. லுக்ஸம்பர்க் நாட்டின் தலைநகரான லுக்ஸம்பர்க் நகரம் உலகப்போரின் போது அமெரிக்க ராணுவத்தின் போர்ப்படை தலைமையகமாகத் திகழ்ந்தது. இங்கே பணியில் இருந்த ஜெர்னரல் ஜோர்ஜ். எஸ்.. பாட்டர்ன் அவர்களது உடலும் இங்கேதான் புதைக்கப்பட்டது.


கல்லறைகள் நிறைந்த இந்தப் புல்வெளியில் அங்குச் சென்றிருந்த போது உலகப்போரின் நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டே நெடுந்தூரம் நடந்தேன். மனிதர்களின் சுயநலமே பல சமூகக் கோளாறுகளுக்கு மூல காரணமாக அமைகின்றன. இது பெறுமளவில் அரசியல் ஆதரவும் பெறும் போது பெரும் சமூகப் பேரழிவை ஏற்படுத்துகின்றன. சுயநலத்தோடு இனவாதமும் தூய்மைவாதமும் பேசிய எவரும் இன்று இந்த உலகில் நிலைக்கவில்லை.

உலகமே பல இயற்கைப் பொருட்கள்ன் கலவையில் தான் புதுப்புது பரிணாம மாற்றத்தையும் வளர்ச்சியும் பெற்றுள்ளது. மாற்றங்கள் தவிர்க்கமுடியாதவை. சுயநலப்போக்கை விட்டு பொதுநலப்பண்பை வளர்த்து மானுடம் தழைக்க அனைவரும் அன்புடனும் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும் என்பதை நினைவுறுத்துவதாகவே இந்த வகை சின்னங்கள் நம் முன்னே காட்சிப்பொருளாய் நிற்கின்றன. அதனைப் புரிந்து அன்பையும் நேசத்தையும் வளர்க்கும் மனிதர்களாக நாம் இருப்போம்.

அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு அழைத்துச் செல்கின்றேன். தொடர்ந்து வாருங்கள்!

Thursday, June 9, 2016

64. அரச அருங்காட்சியகம், கெண்டபரி, இங்கிலாந்து

முனைவர்.சுபாஷிணி

அருங்காட்சியகங்களில் இருக்கின்ற அரும்பொருட்களைக் காட்சிப் படுத்துகின்ற அருங்காட்சியகங்கள் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பணிகளில் சிறப்பு கண்காட்சிகளை இணைத்துக் கொள்வர். உலகப்பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்படுவதற்காக வேறொரு அருங்காட்சியகத்திலிருந்தோ அல்லது தனியார் சேகரிப்பிலிருந்து, அல்லது மற்ற அமைப்புக்களிலிருந்தோ கூட இவ்வகைச் சிறப்பு கண்காட்சிக்குட்படுத்தப்படும் பொருட்கள் தருவிக்கப்பட்டு காட்சி படுத்தப்படுவது வழக்கம்.

எனது அருங்காட்சியகப் பயணங்களில் அவ்வப்போது இத்தகைய உலகப்பிரசித்தி பெற்ற அரும்பொருட்களையோ ஆவணங்களையோ காணக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது. அப்படி ஒரு சிறப்பான வாய்ப்பு அமையும் போது ஆகா .. என்ன நம் அதிர்ஷ்டம் என என் மனதிற்குள் நான் நினைத்துப் பார்த்து மகிழ்வதுண்டு. அத்தகைய ஒரு வாய்ப்புதான் எனக்குச் சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்தில் உள்ள கெண்டர்பரி நகரம் சென்றிருந்த போது கிட்டியது.



இங்கிலாந்தின் புகழ்மிக்க பிரித்தானிய நூலகத்தில் வைத்துப் பாதுகாக்கப்படும் மெக்னகார்ட்டா கெண்டர்பரிக்கு கண்காட்சிக்காகக் கொண்டுவரப்பட்டு அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த மெக்னகார்ட்டா தற்சமயம் உலகின் பல புகழ்மிக்க அருங்காட்சியகங்களுக்குச் சிறப்பு கண்காட்சிக்கு உலகம் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு அரும்பொருள். அப்படி என்ன இந்த மெக்ன கார்ட்டாவில் எனக் கேட்பவர்களுக்காக சில விபரங்களைத் தருகின்றேன்.




கி.பி.1215ம் ஆண்டு வாக்கில் இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்த மன்னன் ஜோன் மிக மனிதாபிமானமற்ற முறையிலான ஒரு அரசாட்சியை நடத்திக் கொண்டிருந்தார். இவர் கி.பி1199ம் ஆண்டில் அரசராக முடிசூட்டிக் கொண்டவர். ஏனைய பிரபுக்களுக்கு ஆட்சி ரீதியில் மிகுந்தபாதிப்பை கொடுக்கும் வகையிலான ஆட்சியை இவர் நடத்திக் கொண்டிருந்தார். இவரைப் பதிவிலிருந்து நீக்குவது என்பதும் முடியாத காரியமாக இருந்தது. ஏனைய பிரபுக்கள் அனைவரும் சேர்ந்து மன்னர் ஜோனுக்கு அழுத்தம் கொடுத்து நில உரிமை தொடர்பான விசயத்தில் சட்ட மாற்றம் கொண்டு வர வேண்டும் என்றும் அப்படி ஒத்துழைக்கத் தவறினால் அவர்களது ஆதரவை மீட்டுக் கொள்வர் எனவும் முடிவு செய்தனர். அந்த நேரத்தில் தான் மன்னர் ஜோன் பிரான்சு நாட்டில் நடைபெற்று முடிந்த போரில் தோல்வியைத் தழுவி தனது படைகளோடு இங்கிலாந்தின் கெண்டபரி திரும்பியிருந்தார். ஆக இந்தச் சூழலில் பிரபுக்களை எதிர்ப்பது சரியல்ல என்ற முடிவுக்கு அவரும் வந்தார். இல்லையென்றால் ஆட்சி பறிபோய்விடும் என்பதை அவரால் ஊகிக்க முடிந்தது.

மன்னர் ஜோனுக்கும் ஏனைய பிரபுக்களுக்குமான பேச்சு வார்த்தை தொடங்கியது. ஆனால் அது வெற்றிகரமான வளர்ச்சியைக் காணவில்லை. சலிப்படைந்த ஏனைய பிரபுக்கள் இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபர்ட் நகரில் படைகளைத் திரட்டினர். 1215ம் ஆண்டு மே 17ம் நாள் மிகப்பெரிய   படையுடன் அணிவகுத்துச் சென்று லண்டன் நகரை அடைந்து லண்டன் நகரைக் கைப்பற்றினர். இதனைக் கேள்வியுற்று எங்கே தம் ஆட்சி பறிபோய்விடுமோ என்று மன்னர் ஜோன் அஞ்சத்தொடங்கி பேச்சு வார்த்தைக்கு மீண்டும் சம்மதம் தெரிவித்தார்.


​ 

மன்னர் ஜோனின் குழுவும் ஏனைய பிரபுக்களும் ரன்னிமீட் நகரில் சந்தித்தனர். ஏற்கனவே உள்ள சட்டத்தை அதிகாரப்பூர்வமாக்குவது என்பதோடு வாய்மொழி உறுதிகளாக இருந்த சில சட்டங்களையும் இந்தச் சந்திப்பில் ஆவணப்படுத்தினர். இந்த ஆவணத்தின் படி சட்டம் என்பது அரசனுக்கும் மேலான அதிகாரத்தைக் கொண்டது என்ற நிலைப்பாட்டை உறுதி செய்வதாக அமைந்தது.

தான் ஒப்புதல் அறிவித்து ஏற்றுக் கொண்ட இந்த ஆவணத்தை நடைமுறைப்படுத்தும் முன் புனிதத்தந்தை போப் அவர்களிடம் இவ்விசயம் தெரிவிக்கப்பட்டது. இது அரசனுக்கு நிகழ்ந்த உச்சக் கட்ட அவமானம் என அவர் கூறி இது செல்லாது எனப் பிரகடனப்படுத்தினார். இதனை இப்பிரபுக்கள் ஏர்றுக் கொள்ளவில்லை. சலிப்படைந்த பிரபுக்கள் உள்ளூரில் போரை தொடக்கினர். 1216ம் ஆண்டில் ஏறக்குறைய இங்கிலாந்தின் பாதி அளவு மன்னர் ஜோனின் எதிரிகளான பிரபுக்களின் கைவசமானது. அதே ஆண்டு மன்னர் ஜோன் மரணமடைந்தார். இது நிலமையை மேலும் மோசமாக்கியது. மன்னரின் ஒன்பது வயது புதல்வர் புதிய மன்னரானார். மன்னர் மூன்றாம் ஹென்றி என அவருக்குப் பெயர் வழங்கி பட்டம் சூட்டப்பட்டது.

அதன் பின்னர் மெக்னா கார்ட்டாவில் மாற்றங்கள் சில செய்யப்படுவது நிகழ்ந்தது. மெக்னாகர்ட்டா இங்கிலாந்தின் முதல் சட்ட ஆவணம் என்பது இதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தும். மெக்னா கார்ட்டாவில் மேலும் புதிய சட்டங்கள் தொடர்ந்து இணைக்கப்பட்டும் சட்டத்திருத்தங்கள் உள்ளிணைக்கப்பட்டும் மாற்றங்கள் நிகழ்வது இயல்பாக நடந்தது. ஆனால் 1300க்குப் பிறகு மெக்னா கார்ட்டா பொதுவாக மறக்கப்பட்ட ஒரு விசயமாக அமைந்து போனது. அடுத்தடுத்த ஆட்சியாளர்களும் அதனை மறந்து போயினர். ஆனால் மெக்னா கார்ட்டா பற்றிய பேச்சுக்களும் அதன் தேவையும் மீண்டும் 17ம் நூற்றாண்டில் உயிர்பெற்றுக் கிளம்பியது.



சட்ட நிபுணர் சர் எட்வர்ட் கோக் மெக்னா கார்ட்டாவை மறுவாசிப்பு செய்தார். அதன் பின் மெக்னா கார்ட்டா பற்றிய பேச்சு தொடர இது இங்கிலாந்தின் மிக முக்கிய சட்ட ஆவணம் என்ற சிறப்பை பெற்றது. மெக்னா கார்ட்டாவில் இருக்கும் சட்ட குறிப்புக்களில் தனி மனித உரிமை தொடர்பானவை, அரசியலமைப்புச் சட்டம் தொடர்பானவை என்பவை குறிப்பிடத்தக்கவை.

உதாரணமாக இதில் உள்ள ஒரு சட்டத்தின் படி,  எந்தவொரு தனிமனிதரும் முறையான ஒரு விசாரணை இல்லாமல் சிறையில் அல்லது அரசின் பாதுகாப்பில் வைக்கப்படக் கூடாது என்று ஒரு சட்டம் குறிப்பிடுகின்றது.



மெக்னா கார்ட்டாவில் உள்ள எழுத்துக்கள் லத்தீன் மொழியில் அமைந்துள்ளன.

மெக்னா கார்ட்டாவின் 800ம் ஆண்டு விழா 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 15ம் தேதி, அது நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ள இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தில் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்த அரும்பொருள்,  சிறப்பு கண்காட்சிக்காக வந்திருந்த கெண்டர்பரி நகரமானது, இங்கிலாந்தைப் பொறுத்தவரை வரலாற்று ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகரம்.  ஏனெனில் இங்குதான் ரோமானியப்படை முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றியதோடு பின்னர் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தையும் இங்கிலாந்து முழுமைக்கும் பரவலாக்கியது.

அருங்காட்சியகம் பர்றிய குறிப்பு
Canterbury Royal Museum
Beaney House of Art and Knowledge
18 High St, Canterbury CT1 2BD, United Kingdom
நுழைவு இலவசம்

இங்கே நான் சென்றிருந்த அரச அருங்காட்சியகத்தில் கெண்டர்பரி நகரின் வரலாற்றைச் சொல்லும் பல அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் பார்த்து குறிப்பெடுத்து வர நிச்சயம் நான்கு மணி நேரங்களாவது ஆகும். இங்கிலாந்தின் கெண்டர்பரி நகரம் செல்பவர்கள் தவறவிடாமல் செல்ல வேண்டிய மிக முக்கிய ஒரு அருங்காட்சியகம் இந்த அரச அருங்காட்சியகம்.