Monday, September 24, 2018

113. புனித அன்னை தேவாலய அருங்காட்சியகம், ஹாலே, ஜெர்மனி

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - 
113. புனித அன்னை தேவாலய அருங்காட்சியகம், ஹாலே, ஜெர்மனி

முனைவர். க.சுபாஷிணி 
கிருத்துவ சமயத்தில் உள்ள உட்பிரிவுகளில் மிக முக்கியமானது சீர்திருத்தக் கிருத்துவம். கி.பி.1706ம் ஆண்டு தமிழகத்தின் தரங்கம்பாடி எனும் கடற்கரையோர நகரத்திற்கு ஜெர்மனியிலிருந்து வந்திறங்கிய இரண்டு லூத்தரன் பாதிரிமார்களே தமிழகத்தில் இந்தச் சமய சித்தாந்தம் காலூன்ற அடிப்படையை வகுத்தவர்கள். அவ்விருவரும் பாதிரியார் பார்த்தலோமஸ் சீகன்பால்க் மற்றும் பாதிரியார் ப்ளெட்சோ ஆவர். தமிழகத்தின் தரங்கம்பாடியில் பள்ளிக்கூடம் அமைத்தது, அச்சுக்கூடத்தை அமைத்து தமிழ், போர்த்துகீசிய, ஆங்கில மொழி நூல்களை அச்சிட்டது எனத் தொண்டாற்றியது என்பதோடு இவர்களுக்குப் பின் ஜெர்மனியிலிருந்து தமிழகம் வந்த ஏனைய பாதிரிமார்கள் கடலூர், திருநெல்வேலி, மெட்ராஸ் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்தச் சீர்திருத்த கிருத்துவ சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபட்டதோடு சமூக கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர் என்பது வரலாறு. இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கும் அடிப்படையாக அமைவது லூத்தரேனிய ப்ரோட்டஸ்டன் கிருத்துவம் அல்லது சீர்திருத்த கிருத்துவம் என அழைக்கப்படும் ஒரு மத அமைப்பாகும். இந்த மதத்தைத் தோற்றுவித்தவர் மார்ட்டின் லூதர் ஆவார். 



மார்ட்டின் லூதர் (Martin Luther) ஜெர்மனியின் தென் கிழக்கு மாநிலமான சாக்சனி (Saxony) மாநிலத்தில் உள்ள ஐஸ்லேபன் (Eisleben) என்னும் சிற்றூரில் 1483ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் தேதி பிறந்தார். சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் தான் இவர். இவரது தந்தையார் கரி ஆலையில் பணிபுரிந்தவர். மார்ட்டின் லூதர் தன்னைப் போல் ஒரு தொழிலாளியாக இல்லாமல் கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் எனக் கனவு கண்டவர் இவர். தனது மகன் கல்வியில் தேர்ச்சி பெற்ற ஒரு வழக்கறிஞராகப் பணி புரிந்து வளமாக வாழ வேண்டும் என்பது அவர் கனவாக இருந்தது . 1490ம் ஆண்டு மான்ஸ்ஃபெல்ட் (Mansfeld) நகரப் பள்ளியில் லத்தின் மொழியில் பாடங்கள் கற்று, பின்னர் 1497ல் மெக்டபர்க்கிலும் (Magdeburg) 1498ல் ஐசெனாஹ் (Eisenach) நகரிலும் உயர்கல்வியைத் தொடர்ந்தார் மார்ட்டின். 1501ம் ஆண்டு எர்ஃபூர்ட் பல்கலைக்கழகத்தில் (Erfurt University) இளங்கலை கல்வி கற்கப் பதிவு செய்துகொண்டார். 1502ம் ஆண்டில் அவருக்குக் கலைத்துறையில் இளங்கலை பட்டம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அதே பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைக் கல்வியையும் முடித்து 1505ம் ஆண்டு முதுகலைப் பட்டமும் பெற்றார் மார்ட்டின் லூதர். அதே ஆண்டு சட்டத்துறை மாணவராகவும் தன்னைப் பதிந்து கொண்டார் மார்ட்டின் லூதர். இந்தக் காலகட்டத்தில் அவரது வாழ்வில் ஏற்பட்ட சில நிகழ்வுகள் அவருக்கு சமயத்துறையின் பால் தீவிரமான நாட்டத்தை வளர்த்தன. சமயத்துறையில் ஆர்வம் கொண்டு தன் கல்வியை ஒரு கத்தோலிக்க மடாலயத்தில் தொடர விரும்பினார். 

ஜூலை மாதம் 1505ம் ஆண்டில் மார்ட்டின் லூதர்,செயிண்ட் ஆஸ்டின் (St.Austin) மடாலயத்தில் துறவியாக இணைந்தார். மிகுந்த கடமை உணர்ச்சியுடனும் கட்டுப்பாடுகளுடனும் கல்வி கற்று கத்தோலிக்க சமய குருவாக 1507ம் ஆண்டில் இவர் தேர்ச்சி பெற்றார். 




அன்றைய கத்தோலிக்க தலைமைப்பீடத்தின் தலைவராக இருந்த போப் 10ம் லியோ அவர்கள் ரோம் நகரில் இருக்கும் செயிண்ட் பீட்டர் பாசிலிக்கா (St. Peter’s Basilica) தேவாலயத்தைக் கட்டும் பணிக்காக சில செயற்பாடுகளை முன்னெடுத்தார். இந்த நடவடிக்கையில் செயல்படுத்தப்பட்ட பாவமன்னிப்பு தொடர்பான நடவடிக்கைகள் மார்ட்டின் லூதருக்குப் பெருத்த கோபத்தை உருவாக்கியது. தனது சிந்தனைகளைக் கட்டளைகளாக எழுதினார். இந்த 95 கட்டளைகளைத் தான் இறையியல் பேராசிரியராகப் பணிபுரிந்த அதே விட்டன்பெர்க் பல்கலைக்கழகத்தின் உள்ளே இருக்கும் தேவாலயத்தின் வாசல் கதவில் ஆணி அடித்து அதனைத் தொங்க வைத்தார். இந்த 95 கட்டளைகளாவன பாவமன்னிப்பு என்ற கொள்கையை ஊழல் நிறைந்த வகையில் சமய நிறுவனம் பயன்படுத்துவதைச் சாடும் வகையில் இருப்பதை எதிர்க்கும் வாசகங்களாகும். அக்கால அச்சுத்தொழில் வளர்ச்சியும் மார்ட்டின் லூதரின் எதிர்மறை கருத்துக்கான பிரச்சாரத்திற்குத் துணை கொடுக்கும் வகையில் அமையவே, இரண்டே வார இடைவெளியில் மார்ட்டின் நூதரின் இந்த 95 கட்டளைகள் அடங்கிய துண்டுப் பிரச்சாரங்கள் பரவலாக ஐரோப்பா முழுமையும் விநியோகப்படுத்தப்பட்டன. 

மக்கள் நம்பிக்கையுடன் வாசித்து இறைவனை உணரப் பயன்படுத்தும் நூல் மக்கள் பேசும் மொழியிலேயே இருக்க வேண்டும் என சிந்தித்ததோடு, லத்தீன் மொழி பைபிளின் புதிய ஏற்பாட்டை, ஜெர்மானிய மக்கள் பேசும் டோய்ச் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தார் மார்ட்டின் லூதர். இதன் தொடர்ச்சியாகப் படிப்படியாக லூத்தரன் கொள்கைகள் இவரால் வளர்க்கப்பட்டன. பலர் இவரது சீர்திருத்தக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இவரது பெயரில் உருவாகிக் கொண்டிருந்த லூத்தரேனிய திருச்சபையை பின்பற்றுவோராகினர். 1525ம் ஆண்டில் இவர் கத்தரினா ஃபோன் போரா (Katharina von Bora ) என்ற பெண்மணியை மணந்தார். கத்தரினா முன்னாள் கன்னிகாஸ்திரியாக இருந்து கத்தோலிக்க திருச்சபையிலிருந்து வெளிவந்து விட்டன்பெர்க் லூத்தரன் திருச்சபையில் இணைந்தவர். இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இருவருக்கும் ஆறு குழந்தைகள் பிறந்தனர். 



மார்ட்டின் லூதர் 1533 முதல் தனது மறைவு வரை, அதாவது 1546 வரை, விட்டர்ன்பெர்க் பல்கலைக்கழகத்திலேயே இறையியல் துறை தலைமைப் பேராசிரியராகப் பணி புரிந்து வந்தார். 1546ம் ஆண்டு பெப்ரவரி 18ம் தேதி விட்டன்பெர்க் நகரிலிருந்து ஐஸ்லேபன் நகர் வந்திருந்தபோது அவர் காலமானார். 

மார்ட்டின் லூதர் 1546ம் ஆண்டு ஐஸ்லேபன் நகரில் இறந்தபோது அவரது உடல் ஹாலே நகருக்குக் கொண்டு வரப்பட்டு இங்குள்ள தேவாலயத்தில் (market church) மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. புகைப்படக்கருவிகள் இல்லாத அக்காலகட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களின் நினைவாக அவர்களது உருவங்களை ஓவியங்களாகத் தீட்டுவது ஒரு நடைமுறை. அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மெழுகு முகமூடி தயாரித்தல் என்பது மற்றுமொரு நடைமுறை. இது பண்டைய எகிப்தில் ஃபாரோக்காளுக்கு இறக்கும் போது அளிக்கப்படும் மரியாதையை ஒத்த ஒரு கலை என்றே கருத இடமுண்டு. ஏனெனில் பண்டைய எகிப்தில் இறந்த மாமன்னர்களுக்கு பிரமிட்களை எழுப்பி அங்கு பதப்படுத்தப்பட்ட (மம்மி) அவர்களது உடலை ஒரு மரத்தாலான அல்லது தங்கப் பேழைக்குள் வைத்து முகத்தில் தங்கத்தாலான முகமூடியை அணிவித்து அவர்களுக்கு மேலுலகத்தில் தேவைப்படும் எனக் கருதி விலையுயர்ந்த ஆபரணங்களையும் மற்ற பொருட்களையும் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது. 



இதுவும் கூட பழங்குடி மக்களின் பண்பாட்டு எச்சம் என்றே காணத்தோன்றுகிறது. முகமூடிகளணிந்து சடங்குகளில் பங்கெடுக்கும் கலையை இன்றும் கூட  ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடையே நாம் காணலாம். 

இத்தகைய முகமூடி அமைக்கும் ஒரு கலை ஐரோப்பாவில் நடைமுறையில் இருந்தது என்பதை கடந்த ஓரிரு நூற்றாண்டு வரை நாம் காணலாம். அந்த வகையில் மார்ட்டின் லூதருக்கு முகமூடி (Death Mask) அமைக்கப்பட்டது. மார்ட்டின் லூதரின் நண்பரும் அவருடைய முன்னாள் மாணவருமான, முதல் ப்ரோட்டஸ்டன் சமய போதகரும் மார்க்கெட் தேவாலயத்தின் குருவுமான ஜூஸ்டூஸ் யோனாஸ் மார்ட்டின் லூதர் காலமான போது அவருடன் இருந்தார். அவர் மறைந்த மறுநாள் அதாவது 19ம் தேதி காலையின் லூக்காஸ் ஃபூர்ட்டெனாகல் (Luckas Furtenagel) மரணப் படுக்கையில் இருந்த மார்ட்டின் லூதரின் உருவத்தை வரைந்தார். அவரே இந்த மெழுகினால் ஆன முகமூடியையும் செய்ய அமர்த்தப்பட்டார் எனக் கருதப்படுகிறது. அதற்குப் பின்னர் மார்ட்டின் லூதரின் சவப்பெட்டி மூடப்பட்டு அவரது பூத உடல் விட்டன்பெர்க் கொண்டு செல்லப்பட்டு அங்குப் புதைக்கப்பட்டது. இதனால் மார்ட்டின் லூதரின் இறுதி நிகழ்வு நடைபெற்ற சிறப்பினைப் பெறுகின்ற தேவாலயமாக இது கருதப்படுகின்றது. 

இந்தத் தேவாலயத்தில் மார்ட்டின் லூதர் 1545லும், இரு முறை 1546லும் வந்து பிரசங்கம் செய்தார். அவர் நின்று பிரசங்கம் செய்த பல்பிட் எனப்படும் பிரசங்க மேடை இதே அறையில் உள்ளது. 




இந்தத் தேவாலயம் 1529ம் ஆண்டு கட்டப்பட்டது என்றும் 1554ம் ஆண்டு இதன் கட்டுமானப் பணிகள் நிறைவுற்றன என்றும் அறிகின்றோம். இக்கட்டிடத்தைக் கட்டுவதில் முக்கியப் பங்காற்றியவர் பிராண்டென்புர்க் மற்றும் மக்டெபுர்க் கத்தோலிக்க அமைப்பின் தலைவராக இருந்த கார்டினல் அல்ப்ரெட். இவருக்கும் மார்ட்டின் லூதருக்கும் சமய தத்துவ அடிப்படையில் இருந்த கடும் போட்டியின் இறுதியில் மார்ட்டின் லூதரின் கருத்துக்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டன என்பதோடு கார்டினல் அல்ப்ரெட் தமது பதவியைத் துறந்து மாநிலத்திலிருந்தே வெளியேறும் நிலை ஏற்பட்டது. பின்னர் இம்மாநிலம் முழுமையாக லூதரேனிய ப்ரோட்டஸ்டன் மதத்தை ஏற்ற ஒரு மாநிலமாக படிப்படியாக மாற்றம் கண்டது. 

மார்ட்டின் லூதரின் வாழ்க்கையில் ஐஸ்லேபனும் விட்டன்பெர்க் நகரங்களும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றனவோ அதே அளவிற்கு ஹாலே நகரமும் முக்கியத்துவம் வகிக்கின்றது. மார்ட்டின் லூதரை ஏறக்குறைய ஐந்நூறு ஆண்டுகள் கடந்தும் நாம் நேரில் காணும் அனுபவத்தை ஹாலே நகரிலுள்ள மார்க்கெட் தேவாலய அருங்காட்சியக அறை நமக்கு வழங்குகின்றது. ஒவ்வொரு நாளும் இந்தத் தேவாலயம் திறந்திருக்கின்றது. அருங்காட்சியகத்திற்குச் செல்ல சிறிய கட்டணம் வசூலிக்கப்படுகின்றது. இந்தத் தேவாலயத்தின் முகவரி Marktkirche Unser Lieben Frauen, An der Marienkirche 2, 06108 Halle (Saale) என்பதாகும். ஹாலே நகரின் புகழை மட்டுமல்ல, ஜெர்மனியின் புகழையும் உயர்த்தும் ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சிறிதும் ஐயமில்லை!

துணைநூல்கள் -

Monday, September 3, 2018

112. ஃப்ராம் அருங்காட்சியகம், ஓஸ்லோ, நோர்வே

முனைவர். க.சுபாஷிணி

http://www.vallamai.com/?p=87387

மிக அண்மையில் நான் பயணம் மேற்கொண்ட நாடு நோர்வே. நோர்வே நாட்டின் தலைநகரான ஓஸ்ல்லோவில் 106 அருங்காட்சியகங்கள் பதிவு செய்யப்பட்ட அருங்காட்சியகங்கள் பட்டியலில் இடம்பெறுகின்றன. அதில் ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றிய செய்திகளை இந்தப் பதிவில் வழங்குகின்றேன்.

ஃப்ராம் அருங்காட்சியகம் (Fram Museum) பொதுவான அருங்காட்சியகங்களிலிருந்து மாறுபட்டதொரு அமைப்பைக் கொண்டது. 1936ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் உலகின் வடக்கு-தெற்கு துருவங்களுக்குப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த மூவரைச் சிறப்பிப்பதற்காகவும் உலகின் வடக்கு தெற்கு துருவங்களுக்குப் பயணம் செல்லப் பயன்படுத்திய ஃப்ராம் என்ற பெயர்கொண்ட மரக்கலத்தைச் சிறப்பிப்பதற்காகவும் அமைக்கப்பட்டது.



இந்த அருங்காட்சியகத்தின் அமைப்பை முதலில் காண்போம். அருங்காட்சியகத்தின் மையப்பகுதியில் ஃப்ராம் மரக்கலம் நிறுத்தப்பட்டுள்ளது. கப்பலைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று தளங்களில் கண்காட்சி சுவர்ப்பகுதியை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஃப்ராம் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்று அதனை முழுமையாகப் பார்த்த பின்னர் படிகளில் இறங்கி கப்பலின் இரண்டாம் தளத்திற்கு வரலாம். அங்கு மாலுமிகள், ஆராய்ச்சியாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் தங்குவதற்கான அறைகள் உள்ளன. அங்கேயே சமையலறை, உணவருந்தும் பகுதி, ஓய்வெடுக்கும் பகுதி, நூலகப் பகுதி ஆகியன அமைந்திருக்கின்றன. இதற்கு அடுத்த கீழ்த்தளத்தில் கப்பலின் இயந்திரம் உள்ளது. இங்கு சமையல் பொருட்கள், பயணத்தில் தேவைப்படும் கருவிகள், போன்றவை வைக்கும் பகுதி உள்ளது.



உலகின் வடதுருவத்திற்குப் பயணம் சென்று அறிந்து வரவேண்டும் என்ற எண்ணத்துடன்1891ம் ஆண்டு நோர்வே அரசும் தனியாரும் சேர்ந்து இவ்வாய்வுப் பயணத்திற்கானப் பொருளாதாரத்தைச் சேகரித்துக் கொடுக்க, திரு.நான்சன் ( Fridtjof Nansen ), கோலின் ஆர்ச்சர் (Colin Archer) என்ற கப்பல் கட்டும் பொறியியலாளரை அமர்த்தி இக்கப்பலை உருவாக்கச் செய்தார். இந்தப் பிரத்தியேகக் கப்பலே உலகின் துருவங்களுக்குச் சென்ற ஆய்வுப்பயணங்களில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட கப்பல் என்ற பெருமையைப் பெறுகின்றது.



உலகின் துருவங்களுக்குப் பயணித்தோர் என்று குறிப்பிடும் போது இதில் முதன்மையாகப் பட்டியலில் இடம் பெறுவோர் நோர்வே நாட்டினர் மூவர். அவர்கள் திரு. பிரிட்ஜோவ் நான்சன் ( Fridtjof Nansen ), திரு.ஓட்டோ சுவேதுருப் (Otto Sverdrup) மற்றும் திரு. ரோல்ட் அமுண்ட்சன் ( Roald Amundsen) ஆகியோர்.

திரு. பிரிட்ஜோவ் நான்சன் (10 அக்டோபர் 1861 – 13 மே 1930) நோர்வே நாட்டைச் சேர்ந்தவர். ஒரு ஆய்வாளர், சமூக நல செயற்பாட்டாளர், அரசப்பிரதிநிதி, விஞ்ஞானி என்ற பன்முக ஆளுமையாக அறியப்படுபவர். இவரது சாதனைகளுக்காக அமைதிக்கான நோபல் பரிசினை 1922ம் ஆண்டு இவர் பெற்றார் என்பதை நினைவு கூர்வது தகும்.



திரு.நான்சன் இன்று உலக வரைபடத்தில் நாம் அறியும் க்ரீன்லாந்து எனும் நாட்டின் உட்பகுதியை ஸ்கீ பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்யச் சென்ற குழுவிற்குத் தலைமை தாங்கியவர். ஆயினும் 1893லிருந்து 1896 வரையிலான ஆய்வுப்பயனத்தில் வடதுருவத்தின் 86°14′ அடைந்து செய்த சாதனை இவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. இந்தப் பயணத்திற்குப் பின்னர் பயணங்களிலிருந்து ஓய்வெடுத்துக் கொண்டு தனது ஆய்வுகளிலும் தனது சமூக நலப்பணிகளிலும் நோர்வே நாட்டின் அரசியல் அமைப்புப் பணிகளிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.


திரு. ஓட்டோ சுவேதுருப் (31 அக்டோபர்1854 – 26 நவம்பர் 1930) வடதுருவத்திற்கான திரு.நான்சனின் முதல் பயணத்தில் அவரோடு இணைந்து ஆய்வில் ஈடுபட்டவர்களுள் ஒருவர். அப்பயணத்தின் முக்கிய அதிகாரிகளுள் ஒருவராக அமர்த்தப்பட்டு பின் திரு.நான்சன் கப்பலை விட்டு ஸ்கீ செய்து வடதுருவத்திற்குச் சென்ற போது ஃப்ராம் கப்பலை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். 1898ம் ஆண்டு திரு. ஓட்டோ சுவேதுருப் வடதுருவத்திற்கான இரண்டாவது பயணத்தை நிகழ்த்தினார். ஃப்ராம் கப்பலிலேயே இந்த இரண்டாவது பயணமும் நிகழ்ந்தது. இப்பயணம் 1902ம் ஆண்டு வரை நீடித்தது. க்ரீண்லாந்து நாட்டைக் கடந்து மேலும் பல தீவுகளைக் கண்டுபிடித்து அவற்றை வரைபடத்தில் இணைக்கும் பணியைச் செய்தார். இவற்றுள் பல சிறு தீவுகள் கண்டறியப்பட்டன, பெயரிடப்பட்டன, வரைபடத்தில் இணைக்கப்பட்டன. இந்தத் தீவுத் தொகுதிகளுக்கு இவரது பெயரிலேயே சுவேதுரூப் தீவுகள் (Sverdrup Islands) என்ற பெயரும் வழங்கப்பட்டது. இவருக்கு அந்நாளைய ஜெர்மனியின் பெரூசியன் அரசின் விருது 1917ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் 2ம் உலகப்போரில் ஜெர்மானியப் படை நோர்வேயின் மீது தாக்குதல் நடத்தி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தமையை எதிர்த்து இந்த விருதை திரு. ஓட்டோ சுவேதுருப் ஜெர்மனிக்கே திருப்பிக் கொடுத்து விட்டார். பல தனியார் அமைப்புக்களினாலும் பல்கலைக்கழகங்களினாலும் இவர் கவுரவிக்கப்பட்டார். இவரது பிறந்த ஊரான சாண்ட்விகா நகரில் இவருக்கு ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



திரு. ரோல்ட் அமுண்ட்சன் (16 ஜூலை1872 -18 ஜூன் 1928) வரலாற்றில் தனக்கெனத் தனியிடத்தைப் பெறுபவர். இவரே உலக வரைபடத்தில் தென்துருவத்தை முதலில் அடைந்து ஆராய்ந்து அதனைப் பதிவு செய்தவர் என்ற பெருமையைப் பெறுகின்றார். இவரது தென் துருவத்திற்கானப் பயணத்திலும் ஃப்ராம் மரக்கலமே பயன்படுத்தப்பட்டது. இவர் 1911ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் நாள் தென்துருவத்தை அடைந்து சாதனை நிகழ்த்தினார். கடல் மார்க்கமாகவும் நில மார்க்கமாகவும் வடதுருவத்தை இவருக்கு முன்னரே திரு.நான்சன் சென்றடைந்து சாதனைப் படைத்திருந்தார். இவர் விமானம் வழிப்பயணித்து வடதுருவத்தை 1926ம் ஆண்டு சென்றடைந்தவர் என்ற சிறப்பும் பெறுகின்றார். முதலில் ஆர்க்டிக் பகுதியில் அதாவது வடமேற்குப் பகுதிப் பயணத்தை (1903-1906) நிகழ்த்தியவர் என்ற சிறப்பும் இவருக்குச் சேர்கின்றது. இத்தகைய ஒரு பயணத்தில் 1928ம் ஆண்டு ஈடுபட்டிருக்கும் போது காணாமல் போன தமது குழுவின் சிலரை கண்டுபிடிக்கச் சென்றபோது இவர் சென்ற அவசரக்கால பாதுகாப்பு விமான தொலைந்து போனதில் இவரும் காணாமல் போய்விட்டதாக ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.


வட துருவம் என்பது உலக உருண்டையின் வடக்கின் கடைக்கோடியில் உள்ள புள்ளி. அதே போல தென்துருவம் என்பது உலக உருண்டையின் தெற்கே கடைக்கோடியில் உள்ள புள்ளி. இப்பகுதிகள் பனிக்கட்டிகளாலும் பனித்துகள்களாலும் சூழப்பட்டு கடுங்குளிருடன் ஆண்டு முழுக்க இருக்கும் நிலப்பகுதிகளாக அறியப்படுபவை. இவற்றிற்குப் பயணம் மேற்கொள்வது என்பது ஒரு அசாதாரணக் காரியமே. கடலில் பயணிக்கலாம் என்றால் நீர்மட்டம் பனிக்கட்டிகளால் இறுக்கமாகச் சூழப்பட்டு கப்பல் பயணத்தைத் தடுத்துவிடும் சூழல் உண்டு. ஆக இப்பகுதிகளில் ஆய்வு செய்யச் சொல்வோர் ஓரளவிற்குக் கடலில் கப்பல் வழி பயணித்து பின்னர் பனியில் சருக்கிச் செல்லும் ஸ்கீ வகை கருவிகளைப் பயன்படுத்திச் சென்றே ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். இதே போன்று பிரத்தியேக விமானங்களின் வழி பயணம் மேற்கொள்வதும் இவ்வகைப் பயணங்களைச் சாத்தியப்படுத்துகின்றன.



வடதுருவங்களிலும் தென் துருவங்களிலும் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இன்று நமக்குக் கிடைக்கின்ற சான்றுகளின் அடிப்படையில் வடதுருவத்தில் இன்றைக்கு ஏறக்குறைய 4500 ஆண்டுகள் வாக்கிலேயே மனித இனம் இங்கு வாழ்ந்துள்ளது என்ற தகவல்கள் ஆராய்ச்சிகளின் வழி கிடைத்துள்ளன. குளிரான தட்பவெட்ப நிலையினால் இங்கு மக்கள் குடியேற்றம் என்பது மிகக் குறைவாகவே அமைந்திருக்கின்றது என்பதையும் நோக்கவேண்டியுள்ளது. இக்குளிரான தட்பவெட்ப சூழலிலும் இங்குள்ள சூழலுக்கேற்ற வகையில் தாவரங்களும் விலங்குகளும் இங்கு உயிர்வாழ்கின்றன. இவற்றைப்பற்றிய தொடர் ஆய்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. இவ்வகை ஆய்வுகளில் குறிப்பாக ஸ்கேண்டினேவியன் நாடுகள் என நாம் குறிப்பிடும் நோர்வே, டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகியவற்றோடு கனடா, வட அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா ஆகிய நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.

மனிதனின் தேடுதல் எல்லைகள் அற்றது. அத்தகைய ஒரு செயலே மனிதன் உலக உருண்டையின் வட துருவத்திற்கும் தென் துருவத்திற்கும் பயணம் மேற்கொண்டு நிகழ்த்திய சாதனை. உலகின் அறியப்படாத விடயங்கள் பல இன்னமும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அறிவதில் அறிவியல் முயற்சிகள் ஒவ்வொரு நாளும் முன்நோக்கிச் சென்று கொண்டே இருக்கின்றது. அத்தகைய அறிவியல் சாதனைகளில் பங்கு எடுத்துக் கொண்ட ஃப்ராம் கப்பல் பாதுகாக்கப்படும் ஃப்ராம் அருங்காட்சியகம் உலகப் பிரசித்தி பெற்ற அருங்காட்சியகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது!