Wednesday, July 30, 2014

33. பெரானாக்கான் அருங்காட்சியகம் (2), சிங்கப்பூர்

இன்றைய வலல்மை மின்னிதழில் வெளியிடப்பட்ட பகுதி!
மின்னிதழில் வாசிக்க! http://www.vallamai.com/?p=48607
முனைவர்.சுபாஷிணி 

​மலேசியா-சிங்கை வாழ் மக்களைத் தவிர ​பெரானாக்கான் சமூகத்தைப் பற்றி ஏனைய பலர் அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. இந்தச் சமூகம் ​மலேசியா-சிங்கை கடல் வணிகப் பகுதியை மையமாகக் கொண்ட நிலப்பகுதியில் மட்டுமே அதிகமாக உருவாகி வளர்ந்த ஒரு சமூகம் என்பதே இவர்களின் தனித்துவம்.
14ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின் படிப்படியாக 15ம் நூற்றாண்டில் அன்றைய மலாயாவின் வர்த்தக மையமாக மலாக்கா வளர்ச்சியுற்றது. அரேபிய வணிகர்கள், சீன வணிகர்கள் என இப்பகுதிக்கு வந்து செல்லும் வேற்று நாட்டினர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டமது. சோழ சாம்ராஜ்ஜியம் மலாக்காவுக்கு மேலே வடக்கு மானிலத்தில் கடாரத்தில் மையமிட்டு மலாயா தீபகற்பம் முழுமைக்கும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அதாவது 9ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை ஹிந்து சமயப் பின்னனியுடன் அமைந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்தது. இந்தோனேசிய தீவுகளில் ஆட்சி செய்த ஸ்ரீவிஜயா மன்னர்களும் ஹிந்து சமயம் தழுவி ஹிந்து சமய சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த காலம் அது.
பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம்பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம்
ஆயினும் 11ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம் வந்த அரேபியர்களின் தாக்கத்தால் மலாயா இஸ்லாமிய நாடாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டு கொண்டிருந்தது. கடாரப் பகுதியில் அரச பரம்பரையினர் 12ம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய சமயம் சார்ந்த அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களது ஆட்சி என்பது மலாயா முழுமைக்கும் என்றில்லாது இன்றைய பெர்லிஸ், கெடா, பினாங்கு ஆகிய பகுதிகளில் அடங்கியதாக மட்டுமே இருந்தது.
15ம் நூற்றாண்டு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுவது. அதுவே ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய ஒரு மலாய் அரசாட்சியின் தொடக்ககாலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலாய் ஆட்சிக்கு வித்திட்டவர் பரமேஸ்வரா.
சிங்கபுரம் என்ற சிங்கப்பூரை ஆட்சி செய்து கொண்டிருந்த ஸ்ரீ மஹாராஜாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு அவரது மகன் பரமேஸ்வரா (1344-1414) தனது ஆட்சியைத் தொடங்கினார். இது நிகழ்ந்த ஆண்டு 1389. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான மஜபாஹிட் தீவில் தனியாட்சி செய்து வந்த ஒரு குழு சிங்கப்பூர் தீவைக் கைப்பற்ற செய்த முயற்சியில் அத்தீவு அவர்கள் வசம் விழ, பரமேஸ்வரா தனது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பித்து மலாயாவின் மெர்போக் நதிக்கரைக்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்கின்றார். மலாக்கா பசுமை வளம் நிறைந்த கடற்கரை பகுதி நகரம். இத்தகைய அருமையான பகுதியில் தலைமைத்துவம் இன்றி இருக்கும் அப்பகுதிக்கு தானே தன்னை தலைவனாக்கிக் கொண்டு பின்னர் மன்னராக முடிசூட்டிக் கொண்டு அங்கே மலாக்காவின் அரச பரம்பரைக்கு ஒரு தொடக்கத்தை வைக்கின்றார் பரமேஸ்வரா
பரமேஸ்வரா பின்னர் வணிக நோக்கத்துடன் மலாக்கா வரும் பெர்ஷிய குழுவினருடன் அணுக்கமான உறவினை வளர்க்கும் பொருட்டு பெர்ஷிய இளவரசி ஒருவரை மணந்து பின்னர் இஸ்லாமிய மதத்தையும் தழுவுகின்றார். தன் பெயரையும் ஸ்ரீ இஷ்கந்தர் ஷா என மாற்றிக் கொள்கின்றார். இதுவே மலாயா அதிகாரப்பூர்வமாக ஒரு இஸ்லாமிய மதம் சார்ந்த நாடாக உருவாகக் காரணமாக அமைந்த முக்கியச் சம்பவம்.
அதன் பின்னர் சீனாவுடன் சிறந்த வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார் பரமேஸ்வரா. இதன் பொருட்டு சீனாவில் ஒரு பகுதியின் அரச குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு இளவரசி ஹங் லீ போவை திருமணம் செய்கிறார். சீனாவிற்கும் வர்த்தகத்தை விரிவாக்கும் பொருட்டு கடல் பயணம் செய்தவர் இவர்.
இக்கால கட்டத்தில் சீனாவிலிருந்து மலாக்காவிற்கு வந்து சேரும் வர்த்தகக் குழுவினரில் பலர் உள்ளூரிலேயே தங்கிவிட அவர்களில் பலரும் படிப்படியாக உள்ளூர் மக்களை மணந்து அங்கேயே ஒரு புதிய இன உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கின்றனர். இதுவே பெரானாக்கான் சமூகம் உருவான சரித்திரம்.
​பெரானாக்கான் இனமக்கள் - ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்
​பெரானாக்கான் இனமக்கள் – ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்
இப்படி உருவான பெரானாக்கன் சமூகத்தினர் குறிப்பாக மலாக்காவிலும் அதற்கடுத்த வகையில் சிங்கையிலும் பினாங்கிலும் மட்டுமே குடியிருந்தனர். கடல் வணிகம் என்பது முக்கியமாக மையம் கொண்டிருந்த துறைமுகப் பகுதிகள் இவை மூன்றும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மலாக்கா அரச குடும்பத்தின்அரது ஆதரவும் இம்மக்களுக்கு அமைந்திருந்தது. அடிப்படையிலேயே வர்த்தகமே இச்சமூகத்தினரின் அடிப்படை தொழிலாக அமைந்ததால் இச்சமூகத்தினர் ஆரம்ப காலம் தொட்டு செல்வச் செழிப்புடன் வாழும் சமூகமாகத் திகழ்கின்றனர்.
சீன ஹொக்கிய சமூகம் மலாய் இன மக்களோடு திருமண உறவின் வழி கலந்ததின் விளைவாக உணவு, உடை, பேச்சு மொழி ஆகியன மலாய் அடிப்படையிலும் மருத்துவம், பெயர், கலாச்சாரம், பண்பாடு , திருவிழாக்கள் ஆகியன சீன சமூகத்தின் வழக்கத்தின் அடிப்படையிலும் அமைந்திருப்பவை. இவர்களது சமயம் சீனாவில் பாரம்பரியமாக இவரகள் வழிபாட்டு சமயமாக அமைந்த தாவோயிஸம். சிலர் புத்த மத வழிபாடும், கிறிஸ்துவர்களாக மதம் மாறியோர் சிலர் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுவோராகவும் இருக்கின்றனர். திருமணச் சடங்குகள் எனும் போது அது சீன பாரம்பரியத் திருமணச் சடங்கு முறையை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.
​சிங்கையில் உள்ள பெரானாக்கான் அருங்காட்சியகம் செல்லும் போது படங்களுடன் இம்மக்களைப் பற்றிய மேலும் பல தகவல்களை வருகையாளர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த அருங்காட்சியகம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை இங்கு காணலாம் http://www.peranakanmuseum.org.sg/. சிங்கை செல்பவர்கள் சென்று கண்டு வர வேண்டிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது.
இத்தொடரின் எனது அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். காத்திருங்கள்..!

Wednesday, July 23, 2014

32. பெரானாக்கான் அருங்காட்சியகம், சிங்கப்பூர்

-
முனைவர்.சுபாஷிணி 

மலாயா இந்தோனேசிய நாடுகளுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேற்றம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருவது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பல்லாண்டுகளாகப் பல காலகட்டங்களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் மக்கள் குடியேற்றம் என்பது நிகழ்ந்துள்ளது.
சீனர்களின் வர்த்தக ஈடுபாடு அவர்கள் உலக உருண்டையின் பல பகுதிகளுக்குச் செல்ல உந்துதலாக அமைந்தது. மலாயா தீபகற்பத்திற்குச் சீனர்களின் குடியேற்றம் என்பது பல காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றது. சீனாவின் பல்வேறு நிலப்பகுதிகளிலிருந்து மக்கள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடனும், உழைத்துப் பொருள் சேர்க்கும் நோக்கத்துடனும் இப்பகுதிகளுக்குப் புதிய வாழ்வை தேடி வந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்களில், அதிலும் குறிப்பாக 15ம் நூற்றாண்டு தொடக்கம் மலாக்கா சிங்கை ஆகிய பகுதிகளில் வந்து குடியேறியோர் தனித் தன்மை வாய்ந்தவர்களாகக் கருதப் படுகின்றனர்.
மலேசியாவைப் பொருத்தவரை சீனர்களில் பெரும்பாலானோர் ஹொக்கியான் இனக்குழுவைச் சார்ந்தவர்கள். இதற்கு அடுத்தார்போல அமைவது தியோச்சூ, கண்டனீஸ் இனக்குழு மக்கள்.
​மலேசியா சிங்கை ஆகிய இருநாடுகளும் இரு தனி நாடுகள் என்ற போதும் ​சிங்கப்பூர் ​மலாயா மக்களால் அன்றும் மலேசிய மக்களால் இன்றும் பிரித்துப் பார்க்க முடியாத வகையிலேயே இணைந்தே காணப்படும் நிலை உள்ளது. ஒரு வகையில் சிங்கை மலாயாவின் ஒரு பகுதியாகவே 1965ம் ஆண்டு வரை கருதப்பட்டது. மலாயா சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியில் இடம்பெறுவது தொடர்ந்து, அதன் பின்னர் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுபட்டு 1963ம் ஆண்டு சுதந்திர மலேசியாவுடன் ​சிங்கப்பூர் ​இணைந்தாலும் இந்த நிலை நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 1965ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தன்னை பிரகட​ன​ப்படுத்திக் கொண்டது சிங்கப்பூர். மலேசிய மக்கள் போலவே சிங்கையின் மக்கள் தொகையில் மலாய், சீன, இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மையினராக அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நான் அறிமுகம் செய்யும் அருங்காட்சியகம் ​பெரானாக்கன் என அறியப்படும் ​ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் விஷயங்களைச் சேகரித்து வைத்துள்ள ​ ​ஓர் அருங்காட்சியகம்.
பெரானாக்கன் அருங்காட்சியகம்
பெரானாக்கன் அருங்காட்சியகம்
சிங்கையில் அமைந்திருக்கும் இந்த பெரானாக்கன் அருங்காட்சியகம் பெரானாக்கான் எனப்படும் பாபா-ஞோஞ்ஞா (baba-Nyonya) மக்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் ஒரு அருங்காட்சியகம். இது சிங்கை நகரி ​ன் மையத்தில் முக்கியப் பகுதியில் அதிலும் குறிப்பாக சிங்கை நேஷனல் அருங்காட்சியகம், ஆர்க்கைவ் ஆகியவை உள்ள​ பகுதியில் அமைந்திருக்கின்றது. ​வெளிப்புரத்தில் காலணித்துவ ஆட்சியின் கட்டிட கட்டுமான வடிவத்தை கொண்டு அமைந்திருக்கும் இக்கட்டிடம் உள்ளே ​ கண்ணைக் கவரும் வர்ணங்களில் ஆன அலங்கார​ங்களையும் அரும்பொருட்களின் சேகரிப்புக்களையும் கொண்டுள்ளது. ​ இந்த அருங்காட்சியகம் அடிப்படையில் 1912ம் ஆண்டு தாவ் நான் சீன ​ப்​ பள்ளியை மாற்றி உருவாக்கப்பட்டது. 2005ம் ஆண்டு நான் சிங்கை சென்றிருந்த சமயம் இந்த அருங்காட்சியகம் சென்று பார்த்து வரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
பாபா என்பது இவ்வினத்து ஆண்களைக் குறிக்கவும், ஞோஞ்ஞா என்பது இவ்வினத்துப் பெண்களைக் குறிக்கவும் பயன்பாட்டில் உள்ள சொல். சீன ஹொக்கியன் சமூகத்தைச் சேர்ந்த இம்மக்கள் தாம் புதிதாக வந்து குடியேறிய மலாயாவில் அங்கிருந்த உள்ளூர் மக்களின் மொழி, பழக்க வழக்கங்களை உள்வாங்கிக் கொண்டும் உள்ளூரில் ​திருமணம் புரிந்து கொண்டும் உள்ளூர் மக்களோடு மக்களாக கலந்து போனவர்கள். இம்மக்களின் முகச் சாயலில் மலாய் சீன இரு ​சமூகங்களின் ​இனக்கலப்பும் மிக நன்கு தெரியும். பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தவர்கள் இவர்கள்.
​பெரானாக்கன் சமூகத்தினர் பயன்படுத்தும் நாற்காலி, கட்டில்கள்
​பெரானாக்கன் சமூகத்தினர் பயன்படுத்தும் நாற்காலி, கட்டில்கள்
​ஆச்சரியப்படத்தக்க வகையில் ​இவர்கள் சீனர்களிடமிருந்து, அதிலும் குறிப்பாக ஹொக்கியான் சமூகத்து சீனர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ஒரு புதிய சமூகமாக உருவானவர்கள் என்பதே இவர்களின் தனிச்சிறப்பு.
சீன மொழியில் ஒன்றான ஹொக்கியான் மொழியின் சொற்கள் கலந்த மலாய் மொழியின் ஒரு வடிவம் இவர்கள் பேசும் மொழி. இம்மொழி இப்போது பயன்பாட்டில் மிகக் குறைந்து வருகின்ற போதிலும் இன்னமும் இல்லங்களில் பெரானாக்கான் சமூக மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றது.
உணவுப் பாத்திரங்கள்
உணவுப் பாத்திரங்கள்
மலேசியாவின் மலாக்கா மானிலத்தி​ன் ​மலாக்கா நகரில் பெரானாக்கன் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. ​அங்கும் இவ்வகை சமூகத்தினர் ஏராளமானோர் இன்றளவும் வாழ்கின்றனர். அங்கிருக்கும் அருங்காட்சியகத்தைவிட பெரியதாக உள்ளது சிங்கையில் இருக்கும் இந்த பெரானாக்கான் அருங்காட்சியகம். இங்கு பாபா-ஞோஞ்ஞா சமூகத்தினரின் புகைப்படங்கள் சில உள்ளன. திருமணச் சடங்குகளைக் காட்டும் புகைப்படங்கள், சமூக நிகழ்ச்சிகளைக் காட்டும் புகைப்படங்கள் ஆகியனவாக இவை அமைந்திருக்கின்றன. அதில் குறிப்பாக ஆண் பெண் உடைகள், திருமண உடைகள், விழாக்களில் எடுத்த புகைப்படங்கள் என இங்குள்ள சேகரிப்புக்கள் இம்மக்களின் உருவத்தோற்றம், உடையலங்காரம் ஆகியனவற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன.

தொடரும்…