Friday, July 14, 2017

94. டனூப் நதி அருங்காட்சியகம், டோனாவேஷிங்கன், ஜெர்மனி

http://www.vallamai.com/?p=78183

முனைவர் சுபாஷிணி
நதிகள் பார்ப்போர் மனதை அமைதி கொள்ளச் செய்யும் பண்பு கொண்டவை. நதிகளின் பிரமாண்டம் காண்போரைத் தன்னிலை இழக்கச் செய்யும் தன்மையுடையது. தமிழகச் சூழலில் தாமிரபரணி, வைகை, காவேரி, கொசத்தலை, பெண்ணையாறு போன்ற நதிகள் புகழ்பெற்றவை.
ரஷ்யாவின் வோல்கா நதிக்கு அடுத்து இப்பிராந்தியத்தில் மிக நீளமான நதி என்ற சிறப்பைப் பெறுவது டனூப் நதி. ஜெர்மனியை மட்டும் எடுத்துக் கொண்டால் இங்கு பிரபலமான மூன்று நதிகளில் ஒன்று என டனூபை குறிப்பிடலாம். ரைன், நெக்கார் ஆகிய இரண்டிற்கும் அடுத்து டனூப் நதி சிறப்புடன் காணப்படும் நதியாக விளங்குகின்றது எனலாம். ஜெர்மனியின் கருங்காட்டில் (Blackforest) ஊற்றாகி அங்கிருந்து வளர்ந்து ஏனைய சிறு ஓடைகளையும் கிளை நதிகளையும் இணைத்துக் கொண்டு ஐரோப்பாவின் பத்து நாடுகளைக் கடந்து செல்கின்றது இந்த டனூப் நதி. இதன் நீளம் 2800 கிமீட்டர் ஆகும் ஜெர்மனிக்கு அடுத்ததாக ஆஸ்திரியா, சுலோவாக்கியா, ஹங்கெரி, குரோஷியா, செர்பியா, ரொமானியா, புல்கேரியா, மொல்டோவா, உக்ரேயின் ஆகிய பத்து நாடுகளில் பாய்ந்து கடந்து கருங்கடலில் கலக்கின்றது டனூப். டனூபின் மொத்த நீளத்தில் மூன்றில் ஒரு பகுதி ஹங்கெரி நாட்டில் ஓடும் பகுதியாக அமைந்திருக்கின்றது. ஜெர்மனியின் டோய்ச் மொழியில் இந்த நதி டோனாவ் என அழைக்கப்படுகின்றது.

​டனூப் நதி பாயும் நாடுகள்
கோடைகாலத்தில் சுற்றுப்பயணிகளைக் கவரும் படகுச் சவாரிகள் டனூப் நதியில், அதிலும் குறிப்பாக நாடுகளின் தலைநகரங்களை டனூப் கடக்கும் பகுதிகளிலெல்லாம் காணலாம். ஐரோப்பாவில் இடம்பெறும் இந்தப் பத்து நாடுகளில் நான்கின் தலைநகரங்களும் டனூப் நதிக்கரையை அண்டியவாறு அமைந்துள்ளன. நதிக்கரையோரங்களில்தானே மனித குலங்களின் நாகரிகம் வளர்ந்து செழித்தது. சிந்து சமவெளி, நைல் போல டனூப் நதியும் இதற்குச் சான்றாகவே விளங்குகின்றது.
unnamed (5)
ஹங்கெரியின் தலைநகர் பூடாபெஷ்டில் டனூப்
டனூப் நதியில் இணையும் கிளை நதிகள் ஏறக்குறைய 300 ஆகும். இவற்றில் ஏறக்குறைய 30 கிளை நதிகளில் படகுப் பயணமும் செல்லலாம். இந்த நதியின் கரையோரங்களிலும் இவை உருவாகிவரும் பகுதிகளிலும் வாழும் தாவர வகை, பறவைகள் மற்றும் விலங்கு வகை உயிரினங்களின் எண்ணிக்கை 5000 வகைகளுக்கும் குறை யாது உள்ளன.
unnamed (4)
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் டனூப்
நதிகள் என்றாலே மனித குல நாகரிகங்கள் தம் இருப்பிடங்களை அமைத்து, விவசாயத்தை வளர்த்து விரிவாக்கி கலைகள் செழித்து வளர்ந்த செய்திகளை வரலாற்றில் காண்கின்றோம். டனூப் நதி ஐரோப்பாவின் பழமையான கெல்ட் இன மக்கள் வாழ்ந்த நிலப்பகுதியாக வரலாற்று ஆய்வாளர்களால் அறியப்படுகின்றது. இந்த நதி ஓடும் கரையின் பல பகுதிகளில், அதிலும் குறிப்பாக ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ப்ராட்டிஸ்லாவா ஆகிய பகுதிகளில் கெல்ட் இன மக்கள் இன்றைக்கு 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்விடங்களை அமைத்து வாழ்ந்ததாக கெல்ட் இன மக்கள் தொடர்பான வரலாற்றுச் செய்திகளை அறியலாம். கி.மு. 7ம் நூற்றாண்டு வாக்கில் கிரேக்க கடலோடிகள் இந்த நதியில் பயணித்த விபரங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பின்னர் ரோமானியப் பேரரசு தன் ஆளுமையை விரிவாக்கிய சமயத்தில், போர் வீரர்கள் இந்த நதி மார்க்கமாக பயணித்து வந்து தங்கள் ஆளுமைக்கு உட்படாத நிலப்பகுதிகளைக் கைப்பற்றி பேரரசை விரிவாக்கினர்.
இந்தப் பத்து நாடுகளைச் சேர்ந்த பொது மக்கள் இந்த நதியை எந்த தங்கு தடையுமின்றி பயன்படுத்துகின்றனர். இந்த நதியில் சுற்றுலா பயணிகளுக்கான நதிப்பயணம் என்பது 19ம் நூற்றாண்டு வாக்கில் தொடங்கியது. இன்றோ டனூப் நதிக்கரை பயணம் என்பது உலகளாவிய அளவில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கவரும் ஒரு பயணமாகத் திகழ்கின்றது.
unnamed (6)
டோனாவ்குவெல்ல – ​டனூப் தொடங்கும் ஊற்று
டனூப்/ டோனாவ் ஊற்றெடுக்கும் பகுதி அமைந்திருக்கும் சிற்றூரின் பெயர் டோனாவேஷிங்கன். ப்ரெக், ப்ரிகாக் என்ற இரு பகுதிகளிலிருந்து ஊற்றெடுத்து ஒன்றாகிப் பின்னர் 300க்கும் மேற்பட்ட கிளை நதிகள் இணைந்து இது உருவாக்கம் பெறுகின்றது. டோனாவ்குவெல்ல ( Donauquelle) என்பதன் பொருள் டோனாவ் நதியின் ஊற்று தொடங்கும் இடம் என்பதாகும். இந்தப் பகுதியில் தான் டனூப் நதியின் ஆரம்பப்புள்ளி தொடங்குகின்றது. இங்குதான் மிகச் சிறிய வடிவிலான டனூப் நதி அருங்காட்சியகம் இருக்கின்றது. இங்கே டனூப் நதியைப் பற்றிய அடிப்படை தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் கருங்காடு சூழ்ந்த இப்பகுதியில் கருங்காட்டினுள், பசுமை அழகு கண்களையும் மனதையும் கொள்ளைக்கொள்ளும் சூழலில் இந்த நீரூற்று அமைந்திருக்கின்றது.
unnamed (7)
இந்த நதி ஊற்றெடுக்கும் பாடன் உர்ட்டென்பெர்க் மாநிலத்தில் தான் நான் வசிக்கின்றேன். இந்த மாநிலத்தின் குடிநீர் டனூப் நதியிலிருந்து பெறப்படுகின்றது என்பதும் இந்த நதிநீரைத்தான் நான் தினமும் பருகி வாழ்கின்றேன் என நினைக்கும் போது எனக்குள் இந்த நதியின் மீது மிக ஆழமான பற்றுதல் ஏற்படுகின்றது. தாய் போலத்தான் நதியும் நம்மை வாழ்விக்கின்றது, அல்லவா?

Friday, July 7, 2017

93. தேசிய அருங்காட்சியகம், கிப்ரால்ட்டார்

http://www.vallamai.com/?p=78054


முனைவர் சுபாஷிணி
ஸ்பெயின் நாட்டின் தெற்கில், ஆப்பிரிக்க கண்டத்தின் மொரோக்கோ நாட்டின் வடக்கில், அல்போரான் கடல் பிரிக்கும் இடத்தில் இருப்பதுதான் கிப்ரால்ட்டார். ஸ்பேனிஷ் தாக்கத்துடன் கூடிய அரேபிய சொல் – ஜபால் தாரிக் – அதாவது தாரிக் மலைகள் எனப்படுவது கிப்ரால்ட்டார் என வழக்கில் வந்தது. ஸ்பெயின் நாட்டின் தெற்கு எல்லையில் தொங்கிக்கொண்டிருக்கும் இப்பகுதி ஸ்பெயினுக்குச் சொந்தமானதாக இருக்குமோ என சிலர் நினைக்கலாம். ஆனால் அதுதான் இல்லை. இது இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் ஒரு பகுதி என்பது ஆச்சரியப்படுத்தலாம்.
1
நான் 2011ம் ஆண்டு தெற்கு ஸ்பெயின் பகுதிகளில் சுற்றுலா சென்றிருந்த சமயம் அங்குள்ள சில பகுதிகளுக்குச் சென்றுவர சுற்றுலாத்துறை அலுவலகத்தில் விசாரித்தபோது ஒரு பட்டியலை அளித்திருந்தார்கள். கிப்ரால்ட்டாரின் பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது. ஸ்பெயினின் கடற்கரை நகரமான மலாகாவிலிருந்து கிப்ரால்டா வாகன பயணத்தில் சென்றடையலாம். மலாகாவிலிருந்து ஏறக்குறைய 100 கிமீ தூரம். வாகனத்தில் செல்லும்போது ஸ்பெயின் எல்லையிலிருந்து கிப்ரால்ட்டாவிற்குச் செல்ல ஒரு பாலம் அமைத்திருப்பதைக் காணலாம். கிப்ரால்ட்டாரின் உள்ளே நுழையும் போது ஒவ்வொருவரும் கட்டாயமாக பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது அவசியம். பாஸ்போர்ட் சோதனைக்குப் பின்னர் வாகனங்கள் ஒவ்வொன்றாகச் செல்ல அனுமதி வழங்கப்படுகின்றது.
கிப்ரால்ட்டாவை முழுமையாக இரண்டே நாட்களில் சுற்றிப்பார்த்து விடலாம். அங்கே வட இந்தியர்கள் கட்டியிருக்கும் ஒரு சிறிய ராமர் கோயிலும் இருக்கின்றது. சிறிய எண்ணிக்கை அளவில் தமிழ் மக்களும் இத்தீவில் வசிக்கின்றார்கள்.
2
கிப்ரால்ட்டாரின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம். மக்கள் தொகை மொத்தம் 39,000 தான். இங்கு பயன்படுத்தப்படுவது இங்கிலாந்து அரசியாரின் படம் பதித்த பவுண்டு காசுகள் தாம்.
கிப்ரால்ட்டாரின் புகழ் பெற்ற ஒரு அருங்காட்சியகமாக இங்கே இருப்பது தேசிய அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தைப்பற்றிய சில தகவல்களை அறியுமுன்னர் இங்கு கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தால் மனிதரின் மண்டை ஓட்டினைப் பற்றி சிறிது அறிந்து கொள்வோம்.
3
கிப்ரால்ட்டர் பாறைக்குன்றுகள் இருக்கும் பகுதியில் அமைந்திருப்பது ஃபோர்பெஸ் குவாரி. இங்குள்ள கோர்ஹாம் குகைகளில் தான் நியாண்டர்தால் மனிதர்களின் எலும்புக்கூடு மண்டை ஓடு ஒன்று கிட்டியது, இது ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தால் மனித மண்டை ஓட்டிற்குப் பின் கிடைத்த இரண்டாவது நியாண்டர்தால் மண்டை ஓடு என்ற சிறப்பைக் கொண்டது. 1848ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தேசிய கடற்படையைச் சேர்ந்த கேப்டன் எட்முண்ட் ஃப்லிண்ட் இந்த மண்டை ஓட்டைக் கண்டுபிடித்தார். தான் கண்டுபிடித்த இந்த மண்டை ஓட்டின் பழமை, அதன் சிறப்பு என்ன என்பதை அறியாத நிலையிலேயே அவர் இதனை கிப்ரால்ட்டார் சைண்டிஃபிக் சொசைட்டிக்கு அளித்தார். 1864 வரை இதன் சிறப்பு யாராலும் அறியப்படவில்லை. 1856ஆம் ஆண்டு ஜெர்மனியின் நியாண்டர் பள்ளத்தாக்கில் நியாண்டர்தால் எலும்புக்கூடுகள் ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், அது ஹோமோ நியாண்டர்தால் வகை மனிதனின் எலும்புக்கூடு என அடையாளப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கிப்ரால்ட்டாரில் கிடைத்த மனித மண்டை ஓட்டினை ஆராயும் ஆர்வம் இங்கிலாந்தில் தொடங்கியது.
4
பரிணாம விதி தத்துவக் கொள்கையை விவரித்து எழுதிய சார்ல்ஸ் டார்வின் இந்த மண்டை ஓட்டினை ஆராய்ச்சி செய்ய மிகுந்த ஆர்வம் கொண்டார். உடல் நலமில்லாத நிலையில் அவரால் ஆராய்ச்சி மாநாட்டில் சென்று கலந்து கொண்டு இந்த மண்டைஓட்டினை விரிவாக ஆராய இயலாமல் போனது. ஆயினும் அவரது நண்பர்கள் சார்ல்ஸ் லயல், ஹூ ஃபல்கோனர் ஆகிய இருவரும் இந்த மண்டை ஓட்டை அவர் இருக்கும் இடத்திற்கு எடுத்து வர ஏற்பாடு செய்தனர். அதனைப் பார்த்த சார்ல்ஸ் டார்வின் அதிசயப் பொருள் என அதனை வர்ணித்தார். ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
இந்த மனித மண்டை ஓடு நியாண்டர்தால் மனித இனத்தில் ஒரு பெண்ணின் உடல் என அறியப்பட்டது. 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணின் உடல் இது என ஆராய்ச்சியில் கண்டுபிடித்தனர். இதன் வயது 30,000 லிருந்து 50,000 வரை இருக்கலாம் என ஆராய்ச்சி முடிவுகள் தெளிவு படுத்தின.
இந்த மண்டை ஓட்டினை “கிப்ரால்ட்டர் 1” எனப் பெயரிட்டு இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் இருக்கும் நாச்சரல் ஹிஸ்டரி அருங்காட்சியகத்தில் இதனைப் பாதுகாத்து வருகின்றனர். லண்டனில் உள்ள இந்த அருங்காட்சியகத்தில் இதனை நான் நேரில் ஒரு முறை பார்த்திருக்கின்றேன்.
இந்த மண்டை ஓட்டின் மாதிரி, அதாவது ரெப்ளிக்காவை கிப்ரால்ட்டார் தேசிய அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள். இந்த அருங்காட்சியகம் 1930ஆம் ஆண்டு அப்போதைய கிப்ரால்டார் ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த மண்டை ஓட்டின் மாதிரியோடு கிப்ரால்ட்டார் குன்றுகளில் அகழ்வாய்வின் போதும் குவாரி பணிகளின் போதும் கண்டெடுக்கப்பட்ட பல அரும்பொருட்களைக் காட்சிக்கு வைத்திருக்கின்றார்கள். இங்கே கி.பி.14ஆம் நூற்றாண்டு அரேபிய குளியல் அறை ஒன்றும் பாதுகாக்கப்படுகின்றது. இது இன்று பார்க்கும் போதும் அதன் பழமை சிறப்பை எடுத்துக்கூறும் வகையில் அமைந்திருக்கின்றது என்பதை மறுக்க முடியாது அதுமட்டுமன்றி பண்டைய கிரேக்க ஆட்சி இங்கு விரிவடைந்திருந்த போது அமைக்கப்பட்ட கட்டுமானங்களின் சில பகுதிகள் இன்னமும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன.
5
இது மிகப்பெரிய ஒரு அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. உள்ளே நுழைந்தால் அனைத்து அரும்பொருட்களையும் பார்க்கக் குறைந்தது 4 மணி நேரங்களாவது தேவைப்படும். வெவ்வேறு அறைகளில் தனித்தனியாக கிப்ரால்ட்டார் தொடர்பில் அமைந்த வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சம்பவங்களை நினைவுகூரும் வகையிலான செய்திகளும் அரும்பொருட்களும், இங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அருங்காட்சியகங்களில் ஒன்று என கிப்ரால்ட்டார் அருங்காட்சியகத்தையும் குறிப்பிடலாம். கிப்ரால்ட்டார் தீவு முழுமையுமே வரலாற்று ஆர்வலர்களுக்குப் பல சுவாரசியமான தகவல்களை வழங்கக்கூடிய ஒரு தீவு தான். அதில் இந்த அருங்காட்சியகம் தனிச் சிறப்புடன் அமைந்துள்ளது.