Monday, August 20, 2018

111. நூபியன் அருங்காட்சியகம், அசுவான், எகிப்து


முனைவர். க.சுபாஷிணி

எனது எகிப்துக்கான பயணத்தில் அதன் தலைநகராகிய கைரோவில் உள்ள பிரமிட்களைப் பார்க்க சில ஆண்டுகளுக்கு முன் சென்றிருந்தேன். கட்டணம் செலுத்தும் இடத்தில் இருந்த இளம் வயது எகிப்திய ஆண்கள் ஓரிருவர் என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டு நூபியன், நூபியன் என எகிப்திய மொழியில் என்னிடம் ஏதோ பேசினர். அப்போது எனக்கு அவர்கள் என்னைப் பார்த்து என்ன சொல்லி பேசி சிரித்துக் கொள்கின்றனர் எனப் புரியவில்லை. அதே பயணத்தில் நைல் நதியில் பயணித்து எகிப்தின் தெற்கு எல்லையை அடைந்து வடக்கு சூடான் நாட்டின் எல்லைப்பகுதியில் இருக்கும் அசுவான் அணைப்பகுதிக்கு வந்த போது நூபியன் என்பதன் பொருளை ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.





நூபியன் என்னும் இனத்தோர் இன்றைய சூடான் நாட்டிலும் தெற்கு எகிப்திலும் தோன்றிய இனம். மனித இனத்தின் நாகரிகக்காலம் தொடங்கியபோதிலிருந்து அடையாளம் காட்டப்படும் சில இனக்குழுக்களில் நூபியன் இனமும் ஒன்று. எகிப்தில் பாயும் நைல் நதியினை ஒட்டியவாறு வாழ்ந்த ஒரு இனம் நூபியன் இனம். பண்டைய எகிப்தில் ஆட்சி செலுத்திய இனம் என்றும் கி.மு.7000 ஆண்டில் இன்றைய வடக்கு சூடான் நகரான வாடிஹல்வா (Wadi Halfa) நகரில் பேரரசினை நிறுவிய ஒரு இனக்குழு என்றும் அறிகின்றோம் (http://www.ancientsudan.org). கி.மு 8ம் நூற்றாண்டு வரை எகிப்திலும் அதன் பின்னர் படிப்படியாக சூடான் நாட்டில் மட்டிலுமே என்ற வகையிலும் நூபியன் இனக்குழுவின் ஆளுமை விளங்கியது. இன்று நூபியன் இனக்குழு மக்கள் எகிப்தின் தெற்குப் பகுதி நகர்களான லுக்சூர், அசுவான் ஆகிய பகுதிகளிலும் சூடானிலும் வாழ்கின்றனர்.




சூடான்-எகிப்து எல்லைப் பகுதிக்குப் படகுப் பயணம் மேற்கொண்டு வந்த போது கைரோவில் ஏன் அந்த இளைஞர்கள் என்னைப் பார்த்து நூபியன் என்று அழைத்து கேலி பேசி சிரித்தனர் என்பது எனக்குப் புரிந்தது. இங்கு வசிக்கும் நூபியன் இன மக்களின் தோற்றம் எனது தோற்றத்தை ஒத்திருந்ததைக் காண முடிந்தது. எங்கள் பயண வழிகாட்டியும் அப்பயணத்தில் இணைந்து வந்திருந்த ஏனைய ஜெர்மானிய சுற்றுப் பயணிகளும் என்னிடம் இதையே கூறினர். ஆப்பிரிக்க கண்டத்து மக்களில் அதிலும் குறிப்பாக, சூடான், எகிப்து, எத்தியோப்பியா ஆகிய நாட்டு மக்களின் உடல் கூறுகள் தமிழ் மக்களின் உடற்கூறுகளுடன் ஒத்திருப்பதைப் பலமுறை அவதானித்திருக்கின்றேன். நேரில் சூடான் நாட்டின் எல்லையில் இருந்த போது நானும் அந்நாட்டு மக்களின் தோற்றத்துடனேயே இருப்பதை ஆழமாக உணர்ந்தேன்.



இந்த நூபிய இனக்குழுவின் பிரத்தியேக செய்திகளைக் காட்சிப்படுத்தும் ஒரு அருங்காட்சியகம் தான் நூபியன் அருங்காட்சியகம். இது சூடான் நாட்டின் எல்லையில் அசுவான் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பிரத்தியேகமானதொரு அருங்காட்சியகம். நூபிய மக்களின் வரலாற்று, பண்பாட்டுச் செய்திகளை விவரிப்பதற்காகவும், நூபிய இனக்குழுவின் நாகரிகத்தையும் தொன்மைச் சிறப்புக்களையும் பதிந்து வைப்பதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அருங்காட்சியகமாகும்.




எகிப்து ஒரு பாலைவனம். எங்கு நோக்கினாலும் வெளிர் ஆரஞ்சு நிறத்து மணல் துகள்கள் தான் நிறைந்திருக்கும். இங்கு குன்றுகளைப் பார்ப்போம். ஆனால் அவை மணல் குன்றுகளாகத்தான் இருக்குமே தவிர மரங்களை அங்கு காண்பது அரிது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பேரீச்சம் பழ மரங்களைக் காண்போம். ஆனால் இந்த அருங்காட்சியகத்தினைச் சுற்றி பசுமையை உருவாக்கியிருக்கின்றனர். நல்லதொரு பூந்தோட்டம் இந்த அருங்காட்சியகத்திற்கு அழகு சேர்க்கின்றது.




வறண்டப் பாலைவனத்தில் மணலின் நிறத்திலேயே எழுப்பப்பட்ட மூன்று மாடிக் கட்டிடம் இந்த அருங்காட்சியகம். அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமான புராதனச் சின்னங்கள் இங்குக் காட்சி படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு ஒரு நூலகமும் இந்த அருங்காட்சியக வளாகத்தின் உள்ளே இயங்கி வருகின்றது. வரலாற்று ஆர்வலர்களுக்கும். ஆராய்ச்சியில் ஈடுபட்டோருக்கும், மாணவர்களுக்கும் இந்த அருங்காட்சியகம் சிறந்த சூழலை ஏற்படுத்தி வழங்கியிருக்கின்றது என்பதை இந்த அருங்காட்சியகத்தைச் சுற்றிப்பார்த்த சில நிமிடங்களில் அறிந்து கொண்டேன். எகிப்து பழமையான பாரம்பரியத்திற்குச் சொந்தமான ஒரு நாடு. வரலாற்றுச் செழுமை எனும் போது உலக நாடுகளில் முதல் இடம் வகிக்கும் அளவிற்கு மிக நீண்ட மனித நாகரிகத்திற்கும், பேரரசுகளுக்கும், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களுக்கும், புராணக் கதைகளுக்கும், பிரமிடுகளுக்கும், மம்மிக்களுக்கும் புகழ் பெற்ற நாடு எகிப்து. இன்று அயல் நாட்டு அருங்காட்சியகங்களிலேயே ஏராளமான எகிப்திய அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புக்களை காண்கின்றோம். இப்படிப்பட்ட சூழலில் எகிப்திலேயே இருக்கும் அருங்காட்சியகங்களில் சொல்லவும் வேண்டுமா?






இந்த நூபியன் அருங்காட்சியகத்தில் நான் சென்றிருந்த 2008ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மூவாயிரத்திற்கும் குறையாத நூபியன் இனக்குழு தொடர்பான புராதன சின்னங்கள் சேகரிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தன. நூபியன் பண்பாட்டு வரலாற்றுச் சின்னங்கள் தவிர இப்பகுதியில் ஆளுமை செலுத்திய கிரேக்க, இசுலாமிய சின்னங்களும் இங்குச் சேகரிப்பில் இடம்பெறுகின்றன.




நூபியன் அருங்காட்சியகத்தினைப் பார்ப்பதற்கு ஒரு நாள் போதாது என்பதோடு இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கும் பகுதியில் பயணிப்பதற்கும் இப்பகுதியின் இயற்கை அழகை ரசிப்பதற்கும் குறைந்தது ஒரு வார காலம் நிச்சயம் தேவை. நைல் நதியிலேயே பயணம் செய்து இந்த அருங்காட்சியகப் பகுதிக்கு வந்து விடலாம். நைல் நதியில் சிறு படகில் பயணம் மேற்கொள்ளும் போது நாம் பயணம் செய்யும் படகுகளை நோக்கி வியாபாரிகள் படகிலேயே வந்து தங்கள் விற்பனைப் பொருட்களை விலை பேசி விற்கின்றனர். வாசனை திரவியங்கள், துணி வகைகள், மருந்துகள், மசாலா பொடிகள் என்பன இத்தகைய படகு வியாபாரிகள் கொண்டு வருகின்ற பொருட்களில் முக்கியமானவை.



1997ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நூபியன் அருங்காட்சியகம் வார நாட்கள் அனைத்திலும் திறந்திருக்கின்றது. எகிப்தில் இருக்கின்ற முக்கிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இணைந்திருக்கும் ஒரு அருங்காட்சியகம் இது. இதன் முகவரி Assuan, Sheyakhah Oula, Qism Aswan, Aswan Governorate, Egypt. எகிப்திற்குப் பயணம் செய்பவர்கள் குழுவாக பயணம் செய்வதே சாலச் சிறந்தது. தீவிரவாத நடவடிக்கைகள் எகிப்தில் தொடர்ந்து நிகழ்வதால் குழுவாகப் பயணிப்பது சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பிற்கு மிக அவசிமானதாகும் என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த அருங்காட்சியகத்திற்கான உங்கள் பயணத்தை திட்டமிடலாம்.

Monday, August 6, 2018

110. ஸ்மித்சோனியன் நிறுவன அருங்காட்சியகம், வாஷிங்டன் டிசி, வட அமெரிக்கா.

Vallamai - http://www.vallamai.com/?p=86698

முனைவர் சுபாஷிணி

ஒரு மனிதரால் பல காரியங்களில் ஈடுபாடு காட்டமுடியுமா? பல விஷயங்களில் நுணுக்கமாக ஆராய்ச்சி செய்ய முடியுமா? தன் சுய வாழ்க்கையில் பல இறக்கங்களையும் தாக்குதல்களையும் சந்தித்தாலும் அவற்றையெல்லாம் எதிர்நீச்சல் போட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு, ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை நிகழ்த்த முடியுமா? ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாடு என மாறி மாறிப் பயணித்து அனுபவங்களைச் சேகரிக்கும் போதே சிறைவாசங்களையும் அனுபவித்து, பின் அவற்றிலிருந்தெல்லாம் மீறி வந்து ஆய்வுலகில் இன்பம் காண முடியுமா? இவை சாத்தியமே என்பதற்கு உதாரணம் தான் ஜேம்ஸ் ஸ்மித்சன் (James Smithson).





இவர் பிறந்த போது இவருக்கு பிரஞ்சு பெயர் அளிக்கப்பட்டது. Jacques-Louis Macie என்பது அவரது தந்தையாரால் அவருக்கு அளிக்கப்பட்ட பெயர். பழமைவாதம் முழுமையாகக் குடிகொண்டிருந்த அன்றைய ஐரோப்பாவில், இங்கிலாந்தின் விதவைப்பென்ணான James Macieக்கும் பிரஞ்சு பிரபு Hugh Percyக்கும் மகனாக 1765ம் ஆண்டு பாரீஸ் நகரில் இவர் பிறந்தார். இவரது பிறந்த தேதியும் மாதமும் ஆவணப்படுத்தப்படாமல் ரகசியமாக மறைக்கப்பட்டது. இளம் வயதிலேயே பெற்றோரை இழக்கும் நிலை இவருக்கு ஏற்பட்டது. பெற்றோரின் குடும்பச் சொத்துக்கள் இளம்வயதிலேயே இவருக்குச் சொந்தமாகின. தனது குடும்பப்பெயரை இவரது தந்தையின் குடும்பப்பெயரான ஸ்மித்சன் என்ற பெயருக்கு மாற்றிக் கொண்டு ஜேம்ஸ் ஸ்மித்சன் என அமைத்துக் கொண்டார். பாரீசிலிருந்து இங்கிலாந்திற்குத் தனது தாயாரின் குடும்பத்தினர் பாதுகாப்பில் தம் இளம் பிராயத்திலேயே குடிபெயர்ந்தார்.




இங்கிலாந்தில் இவரது கல்வி தொடர்ந்தது. 1782ம் ஆண்டு ஆக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தின் பெம்ப்ரோக் கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடங்கி, 1786ம் ஆண்டு முதுகலைப்பட்டமும் பெற்று வெளிவந்தார். கல்விப்படிப்பு மட்டும் தனது சுயவளர்ச்சிக்குப் போதாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. ஐரோப்பாவின் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டார். இவர் புவியியல் சார்ந்த துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்தார். பிரஞ்சுப் புரட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டமது. நெப்போலியன் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு முறை பயணத்தில் இருக்கும் போதே இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தனது உறவினர்கள் நண்பர்களின் உதவியால் சிறையிலிருந்து மீண்டு வந்தார்.





இங்கிலாந்து தாயாருக்கும் பிரஞ்சு தந்தைக்கும் பாரீஸில் பிறந்து, பின் இங்கிலாந்தில் உயர்கல்வி பெற்று, ஐரோப்பாவெங்கும் சுற்றிய ஸ்மித்சன், இத்தாலியில் 1829ம் ஆண்டு ஜூன் மாதம் 27ம் தேதி காலமானார். பல பிரபுக்களைப் போல இவரது வாழ்க்கையும் பொருளாதார வளத்துடன் அமைந்திருந்தது. ஆனால் இவரது கவனமும் ஆர்வமும் பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் மூழ்கிப்போய் கிடந்தது. எளிய விசயமானாலும் சரி, மிக நுணுக்கமான புவியியல், வானியல் சார்ந்த ஆய்வானாலும் சரி, இவர் முழு கவனத்துடன் ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார்.

ஸ்மித்சன் தன் வாழ்நாளில் திருமணம் செய்து கொள்ளவில்லை. குழந்தைகள் இல்லாமையால் இவருக்கு நேரடி வாரிசு யாரும் இல்லை. தனது எல்லா சொத்துக்களையும் அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் டிசி நகரில் ஒரு ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும் என தனது உயிலை ஏற்பாடு செய்து வைத்தார் ஸ்மித்சன். அவரது இறப்புக்குப் பிறகு அவரது கோடிக்கணக்கான சொத்துக்கள் அனைத்தும் அமெரிக்காவில் ஆய்வுக்குப் பயன்படும் வகையில் அருங்காட்சியகத் தொகுதியினை அமைக்கப் பயன்படுத்தப்பட்டது.




அவர் தனது உயிலில் "I then bequeath the whole of my property, . . . to the United States of America, to found at Washington, under the name of the Smithsonian Institution, an Establishment for the increase & diffusion of knowledge among men." என எழுதி வைத்தார். ஸ்மித்சன் இறந்தபோது அவரது உடல் இத்தாலியின் கெனோவா நகரிலேயே புதைக்கப்பட்டது. ஆனால் அலெக்சாண்டர் க்ரஹெம் பெல் அவர்கள் ஸ்மித்சன் அவர்களின் உடல் வாஷிங்டன் டிசியில் ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் அறக்கட்டளையின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட வேண்டும் என முயற்சி மேற்கொண்டு இத்தாலியிலிருந்து அவரது உடலைக் கொண்டு வந்து இந்த ஆய்வுக்கூடத்திலேயே அவ்வுடலைப்பதித்து வைத்து ஒரு நினைவுச்சின்னத்தை எழுப்பினார்.

ஸ்மித்சனின் சொத்துக்களைக் கொண்டு வாஷிங்டன் டிசியில் உருவாக்கப்பட்ட ஸ்மித்சோனியன் நிறுவனம் 1846ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ம் தேதி தொடங்கப்பட்டது. மனிதகுலத்தின் அறிவுப் பரவலை அதிகரிக்கும் நோக்கத்துடன் பல்வேறு அருங்காட்சியகங்களையும் ஆய்வுக்கூடங்களையும் உள்ளடக்கிய வகையில் ஸ்மித்சோனியன் வளாகம் அமைக்கப்பட்டது. ஜேம்ஸ் ஸ்மித்சனின் பெயரை நினைவூட்டும் வகையில் ஸ்மித்சோனியன் நிறுவனம் என்றே இது அன்று முதல் அழைக்கப்படுகின்றது.




ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கும் அருங்காட்சியகங்கள் அனைத்தும் பொதுமக்கள் பார்வைக்கும் பயன்பாட்டிற்கும் இலவசமாக அனுமதிக்கப்படுகின்றன. இந்த நிறுவனத்தின் மேற்பார்வையில் இதன் தலைமை அலுவலக வளாகத்தைச் சுற்றி பத்தொன்பது அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்துமே ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் மேற்பார்வையில் இயங்குகின்றன. இதைத் தவிர்த்து அரிசோனா, மேரிலாண்ட், மெசாசூசெட்ஸ், நியூயோர்க், பிட்ஸ்பெர்க், டெக்ஸாஸ், விர்ஜீனியா மாநிலங்களில் என அமெரிக்காவின் 45 மாநிலங்களில் 200 நிறுவனங்கள் ஸ்மித்சோனியன் பெயரால் இந்த ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகின்றன. வட அமெரிக்கா மட்டுமன்றி பனாமா, போர்டோ ரிக்கோ ஆகிய நாடுகளிலும் இந்த நிறுவனத்தின் சேவை இயங்கி வருகின்றது.

இந்த நிறுவனங்களில் வந்து பார்த்து பயன்படுவோரின் எண்ணிக்கை ஒரு ஆண்டிற்கு 30மில்லியனாகும். இந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் வாஷிங்டன் டிசி சென்றிருந்த போது இந்நிறுவனத்தின் பல அருங்காட்சியகங்களை நேரில் சென்று பார்த்து குறிப்பெடுத்து வரும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொண்டேன். ஸ்மித்சோனியன் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று ஸ்மித்சனின் கைப்பட எழுதிய ஆவணங்களை நேரில் பார்த்ததும் ஸ்மித்சனைன் வரலாற்றை புகைப்படங்களோடு வாசித்ததும், அவரது சேகரிப்புக்களை நேரில் கண்டதும் எனக்கு மறக்கமுடியாத அனுபவமாக அமைந்தது.



கி.பி.18ம் நூற்றாண்டின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு மாமனிதராக ஸ்மித்சன் நமக்குக் காட்சியளிக்கின்றார். ஆராய்ச்சியும் ஆய்வுத்தகவல்களும் மனித குலத்தை மேம்படுத்தும் என்பதை அவர் முழுமையாக நம்பினார். அவர் காலத்தைய எல்லா ஆய்வறிஞர்களையும் அவர் அறிந்திருந்தார். அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார். பல்வேறு துறைகளில் ஆய்வுகளில் அவருக்கிருந்த ஆர்வம் விரிவான நட்புச் சூழலை அவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. மக்களின் மேம்பாட்டிற்கு ஆய்வுகள் அடிப்படை என்பதை அவர் உணர்ந்திருந்தார். தனது வாழ்க்கையை மட்டுமன்றி தனது சொத்துக்கள் அனைத்துமே மனித குல அறிவு மேம்பாட்டிற்குப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடனே வாழ்ந்து செயல்பட்டவர் ஸ்மித்சன்.  பூவுலகை விட்டு மறைந்தாலும் ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் செயல்பாடுகளால் அழியா புகழ்பெற்று வாழ்கின்றார் ஸ்மித்சன்!