Friday, December 29, 2017

103. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 102

http://www.vallamai.com/?p=82406

முனைவர் சுபாஷிணி
அப்ரோடைட் தெய்வத்தின் பெயரில் அப்ரோடையாஸிஸ் என்ற ஒரு நகரம் துருக்கியின் அனாத்தோலியா பகுதியில் உள்ளது. மிகப் பழமையானதொரு நகரம் என இது இப்பகுதியில் நிகழ்ந்த விரிவான அகழ்வாராய்ச்சிகளின் வழி கண்டறியப்பட்டது. கி.மு. 5800 வாக்கில் இங்கு ஒரு கோயில் இருந்திருக்கின்றது. அக்காலத்தில் இப்பகுதியில் விவசாயம் செய்து வாழ்ந்த குடியானவ மக்கள் இங்கு இக்கோயிலுக்கு வந்து வழிபாடுகள் நடத்தியிருக்கின்றனர். அதிலும் மிக முக்கியமாகத் தாய் தெய்வம் இங்கே தலைமை தெய்வமாக வழிபடப்பட்டது என்றும் தாய்மை, மக்கள் பெருக்கம், பயிர்களின் விளைச்சல் ஆகியவற்றிற்காக இங்கே வழிபாடுகள் செய்யப்பட்டன. படிப்படியாக ஏறக்குறைய கி.மு. 2ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தக் கோயில் கிரேக்க தெய்வமான அப்ரோடைட் தெய்வத்திற்கான ஆலயமாக படிப்படியாக உருமாற்றம் கண்டது.


அப்ரோடைட் (Aphrodite) கிரேக்கத்தின் காதல் தெய்வம். இத்தெய்வம் அழகுக்கும் காதலுக்கும் இலக்கணமானவள். இவளே அழகு . இந்தத் தெய்வத்தின் பெயரில் ஓர் ஊர். அப்படியென்றால் எத்தனை அழகு நிரம்பியதாக அந்த ஊர் இருக்க வேண்டும் என்று நம்மால் ஊகிக்க முடிகின்றதா?
unnamed (2)
பல ஆண்டுகளாக இப்பகுதியில் இருந்த அப்ரோடைட் தெய்வத்திற்கான இக்கோயில் கி.மு.74 வாக்கில் ரோமானியர்கள் துருக்கியின் இப்பகுதிக்கு வந்து தங்கள் ஆளுமையைச் செலுத்த ஆரம்பித்தப் பின்னர் மேலும் செழிப்புற்றது. அப்ரோடையாஸிஸ் நகரம் ஒரு கலாச்சார மையமாக படிப்படியாக விரிவாக்கம் கண்டது. அடுத்த சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், பைசண்டைன் காலத்தில், இந்த அப்ரோடையாஸிஸ் நகரின் அப்ரோடைட் தெய்வம் வீழ்ச்சி கண்டது. அப்ரோடைட் கோயில் கிருத்துவ தேவாலயமாக மாற்றம் பெற்றது. அதற்கு அடுத்த காலகட்டத்தில் இதன் சிறப்பும் புகழும் மங்கிக் குறையத்தொடங்கின. துருக்கி முழுமையான இஸ்லாமிய மத நாடாக உருமாற்றம் கண்டது. இன்று அப்ரோடையாஸிஸ் ஒரு கிராமமாகவே அறியப்படுகின்றது. ஆயினும் இங்கு நிகழ்த்தப்பட்ட விரிவான அகழ்வாராய்ச்சியின் வழி அறியப்பட்ட பண்டைய நகரம் இன்று இப்பகுதியைத் துருக்கியின் முக்கியமானதொரு சுற்றுலா தளங்களில் ஒன்றாகப் பட்டியலில் இடம்பெறச் செய்துள்ளது.
நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியின் அண்டாலியா நகர் சென்றிருந்தபோது ஒரு நாள் பயணமாக அப்ரோடையாஸிஸ் நகருக்கும் அதன் அருகே உள்ள பமுக்காலே நீரூற்று பகுதிக்கும் சென்று வந்தேன். உலகப்பிரசித்தி பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக இடம்பெறுவது பமுக்காலே. இதனைப் பார்த்து விட்டு அப்ரோடையாஸிஸ் நகர் வந்து அங்கு காணப்படும் சிதிலமடைந்த அப்ரோடைட் காதல் தெய்வத்தின் கோயிலைப் பார்த்து அங்கிருக்கும் அருங்காட்சியகம் வந்து இங்கு சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்களைக் காணும் வாய்ப்பு கிட்டியது.
அப்ரோடைட் ஆலயம் இருக்கும் அப்பெரும் வளாகம் முழுமையும் அருங்காட்சியகம் பகுதியில் அடங்குகின்றது. இன்று நாம் காணும் அப்ரோடைட் கோயிலின் சிதிலமடைந்த பகுதிகள் அனைத்துமே கி.பி.1ஆம் நூற்றாண்டில் விரிவாக்கிக் கட்டப்பட்ட அப்ரோடைட் ஆலயத்தின் பகுதிகளாகும்.
unnamed (3)
அப்ரோடையாஸிஸ் அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்காக 1979ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அப்ரோடையாஸிஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட அகழ்வாராய்ச்சிகளின் போது கிடைத்த அரும்பொருட்களே இங்கே ஆவணப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தொடங்கப்பட்டபோது பதியப்பட்ட ஆவணக்குறிப்பின் அடிப்படையில் ஏறக்குறைய 13,000 அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் இதன் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம். இவற்றுள் கி.மு.5000 வாக்கில் கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் அடங்கும் என்பது இப்பகுதி மிகப்பழமையானதொரு மக்கள் குடியிருப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாகின்றது அல்லவா?
அனாத்தோலியாவில் உள்ள இப்பகுதியில் பல்வேறு காலகட்டங்களில் அகழ்வாராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டன. 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் சிலர் இப்பகுதியை அடையாளங்கண்டு இதனைப்பற்றிய செய்திகளை இங்கிலாந்தில் வெளியிட்டனர். வில்லியம் ஷெரார்ட் என்பவர் அப்ரோடையாஸிஸ் ஆலயத்தின் சிதலமடைந்த பகுதிகளின் சுவர்களில் காணப்பட்ட கல்வெட்டுக்களைப் பற்றிய செய்திகளை 1705ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளியிட்டார். 1812ஆம் ஆண்டில் இங்கிலாந்திலிருந்து சென்ற ஒரு குழு இப்பகுதியை ஓவியமாக வரைந்து வந்தது.

அதன் பின்னர் பிரெஞ்சுக்குழு ஒன்றும் இப்பகுதிக்குச் சென்று இங்குள்ள ஆவணங்களைப் பற்றிய ஆய்வுகளை நிகழ்த்தி அறிக்கைகளையும் ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியிட்டது. இங்கு முதல் அகழாய்வுப் பணி 1904ஆம் ஆண்டு ஒரு பிரஞ்சுக்குழுவினரால் நிகழ்த்தப்பட்டது. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட குளியல் தொட்டிகள், கி.மு.27ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாக அறியப்படும் நாடக மேடை (Theater) ஆகியவற்றை ஆலய வளாகத்தில் வெளிப்புறத்தில் இன்றும் காணலாம். முதல் அகழாய்வுப்பணிக்குப் பின்னர் மீண்டும் பல அகழ்வாய்வுப் பணிகள் இங்கேயும் இதன் அருகாமை நகர்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன, இன்றைய தேதி வரை. ஒவ்வொரு ஆய்வும் பண்டைய நாகரிகங்களை அடையாளப்படுத்தும் சான்றுகளாகத் திகழும் பலப் பல அரும்பொருட்களை நமக்கு வெளிக்காட்டுவனவாக அமைகின்றன.
இந்த அருங்காட்சியகத்தின் முகவரி
Geyre Mahallesi, 09385 Karacasu/Aydın Province, Turkey


வார நாட்களில் திங்கட்கிழமை தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கின்றது. இப்பகுதிக்குச் சென்று கோயில் வளாகம், நாடகமேடை, அருங்காட்சியகம் என அனைத்தையும் பார்த்து விட்டு வரும்போது இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் சென்ற உணர்வுகளுடன் தான் திரும்பி வருவோம். சில ஆண்டுகள் கடந்து விட்டாலும் கூட இன்றும் என் மனதில் பசுமையாகக் காட்சியளிக்கின்றது அப்ரோட்டைட் நினைவாக உருவாக்கப்பட்ட இந்த அப்ரோடையாஸிஸ் கிராமம்.

Friday, December 22, 2017

102. வோல்வோ அருங்காட்சியகம், கோத்தபெர்க், சுவீடன்


http://www.vallamai.com/?p=82238

முனைவர் சுபாஷிணி
உலகின் உயரிய தொழில்நுட்பத்தை உருவாக்குவதோடு அவ்வுயரிய தொழில்நுட்பத்தைப் பொதுமக்களும் பயன்படுத்தும் ஒரு நாடு; உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் 6வது இடத்தைப் பிடிக்கும் நாடு; குறைந்த மக்கள் தொகை; தூய்மை; தரமான சுகாதாரம்; மக்கள் வாழ்வதற்கு விரும்பி ஏற்கும் ஒரு நாடு என்ற பெருமைகள் கொண்டது சுவீடன்.
ஸ்கேண்டினேவிய நாடுகள் குழுவில் ஒன்றாக இடம்பெறுகிறது சுவீடன். நார்வே டென்மார்க் பின்லாந்து ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட நாடு. ஐரோப்பிய நாடுகளில் ஆங்கில மொழி பயன்பாட்டை இரண்டாம் மொழி என்ற நிலையில் வைத்திருக்கும் நாடு என்பதும் இதன் சிறப்பு. இதற்கும் மேலாக வாகன உற்பத்தியில் தனித்துவத்துடன் இயங்கும் ஒரு நாடு என்ற பெருமையும் கொண்டது. வோல்வோ கார் என்றால் நம் நினைவுக்கு வருவது சுவீடன் தானே!. ஆம் இந்த வோல்வோ கார் பிறந்தது சுவீடனின் கோத்தபெர்க் நகரில் தான்.
2016ஆம் ஆண்டு எனது அலுவலக பணி நிமித்தமாக கோத்தபர்க் நகரில் நிகழ்ந்த ஒரு வார கால மாநாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. வோல்வோ கார் நிறுவனத்தின் தாயகம் கோத்தபெர்க் நகரம் தான் என முன்னரே நான் அறிந்திருந்ததால் இந்த வாய்ப்பைத் தவற விடாமல் இங்கு அமைந்திருக்கும் வோல்வோ வாகன அருங்காட்சியகத்திற்குச் சென்று வந்தேன். இங்குச் செல்வதற்கு எனக்கு மற்றுமொரு காரணமும் இருந்தது. அது என்னவெனில் நான் முதன் முதலில் கார் ஓட்டப்பழகிக் கொண்ட காலத்தில் நான் வாங்கிய இரண்டாவது கார் ஒரு பழைய வோல்வோ வாகனம். கடல் நீல வர்ணத்தில், ஏறக்குறைய 14 ஆண்டு பழமையான வாகனம் அது. ஏறக்குறைய நான்கைந்து ஆண்டுகள் இந்த வாகனம் என் பயன்பாட்டில் இருந்தது. தூரப் பயணங்கள் மேற்கொள்வதற்கு ஏற்ற வசதியானதொரு வாகனமாக அது இருந்தது. அந்த நினைவும் என் மனதில் பசுமையாக இருந்தது.
unnamed (2)
வோல்வோ அருங்காட்சியகம் உள்ள பகுதிக்குச் செல்வதற்குப் பேருந்து எடுத்துத் தான் சென்றிருந்தேன். அது கடற்கரையைச் சார்ந்த துறைமுகப் பகுதி. ஏறக்குறைய 3 மணி நேரங்கள் இருந்து இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகச் சுற்றிப்பார்த்தேன். வோல்வோ என்றால் நான் அன்றாட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே என்ற என் சிந்தனையை மாற்றியது இந்த அருங்காட்சியகத்திற்கான என் பயணம். ஏனெனில் வோல்வோ நிறுவனத்தாரின் கனரக தொழில்நுட்பம் என்பது பொதுமக்கள் பயன்பாட்டில் இருக்கும் வாகனங்கள் மட்டுமன்று, கனரக வண்டிகள், லாரிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள், விமானப்படை விமானங்கள், என பலதரப்பட்டவையாக இருப்பதை இந்த அருங்காட்சியகம் சென்றிருந்த போது அறிந்து கொள்ள முடிந்தது.
வோல்வோ பிறந்தது 1927ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி. ஏனெனில், அன்றுதான் வோல்வோ தொழிற்சாலையில் “ஜேக்கப்” முழுமையாக்கப்பட்டு இந்த கோத்தபெர்க் தொழிற்சாலையிலிருந்து வெளியிடப்பட்டது. வோல்வோ கார் உற்பத்தி பற்றிய எண்ணம் முதன் முதலில் Assar Gabrielsson மற்றும் Gustaf Larsson ஆகிய இருவருக்கும் எழுந்தது. இந்தக் கனவு நிஜமாகியது. 4 சிலிண்டர்கள் கொண்ட OV4, PV4 வகை வாகனங்களை இந்தத் தொழிற்சாலையில் வடிவமைத்து உருவாக்கினர். 1929ஆம் ஆண்டு 6 சிலிண்டர் கொண்ட இயந்திரத்துடன் PV651 வகை வாகனத்தை உற்பத்தி செய்தனர். இது வாகன உற்பத்தியில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு இருவருக்கும் மிகப் பெரிய இலாபத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

1932ஆம் ஆண்டில் 10,000 வாகனங்களை உற்பத்தி செய்து வாகன தொழில்நுட்பத்தில் தன் தனித் திறமையை வெளிப்படுத்தியது வோல்வோ. இவ்வகை வாகனங்களைப் பணம் படைத்தவர்கள் மட்டுமே வாங்கக்கூடியதாக இருந்தமையால் பலதரப்பட்ட மக்களிடமிருந்து எளிய மக்களும் வாங்கிப் பயன்படுத்தி மகிழும் வண்ணம் குறைந்த பட்ஜெட் வாகனங்களை உற்பத்தி செய்யுமாறு பொது மக்களிடமிருந்து கோரிக்கை எழுந்தது. இதன் பலனாக 1936ஆம் ஆண்டில் வோல்வோ தயாரித்து வெளியிட்டதுதான் PV51 மாடல் வகையிலான கார்கள்.
இரண்டாம் உலகப்போர் வாகன உற்பத்தியைப் பாதிக்கச் செய்தது. ஆயினும் 1944ஆம் ஆண்டின் இறுதி வாக்கில் வோல்வோ அதன் PV444 வகை வாகனங்களை உற்பத்தி செய்து வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் இவையே சிறிய இரகத்திலான வோல்வோ கார்கள். இந்த இரகக் கார்கள் ஏற்படுத்திய அலை 1960 வரை ஓயவில்லை எனலாம். அந்த அளவிற்கு இந்த இரக வோல்வோ வாகனங்கள் பொது மக்களால் விரும்பி வாங்கப்படும் வாகனமாகத் திகழ்ந்தது. இப்படிப் பலப்பல புதுமைகளை ஏற்படுத்தி மக்களின் தேவைக்கேற்பவும் தொழில்நுட்பத் தேவைக்கேற்பவும் தனது வாகனங்களை வெளியிடுவதில் வோல்வோ சலிக்கவில்லை எனலாம். 1927 ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முதல் 2017 நவம்பர் மாதம் 30ஆம் தேதி வரை வோல்வோ கார் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 19,971,128 ஆகும்.
unnamed (4)
வோல்வோ நிறுவனமும் தொழிற்பேட்டையும் அமைந்திருக்கும் கோத்தபர்க் நகரின் துறைமுகப்பகுதியில் தான் வோல்வோ அருங்காட்சியகம் இருக்கின்றது. இந்த அருங்காட்சியகம் 1995ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பக் கால உற்பத்தியிலிருந்து அதி நவீன தொழில்நுட்பம் பொருந்திய வாகனங்கள் என இங்கே நூற்றுக்கணக்கான வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வோல்வோ நிறுவனம் முதலில் வெளியிட்ட Volvo ÖV4 வகை வாகனமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படியும் ஒரு அருங்காட்சியகமா என வருவோரைத் திகைக்க வைக்கும் ஒரு பிரம்மாண்டம் இந்த வாகன அருங்காட்சியகம்.
unnamed (5)
இங்கு வரிசை வரிசையாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களைப் பார்த்து அவற்றின் தகவல்களை வாசித்து அறிந்து கொண்டே வரும்போது அலுப்பு ஏற்பட்டால் அமர்ந்து ஓய்வு எடுத்துக் கொள்ளவும் ஆங்காங்கே நாற்காலிகளை வைத்திருக்கின்றார்கள். அதுமட்டுமன்றி வோல்வோ நிறுவனத்தின் ஆரம்பக்கால முயற்சிகள், வெளியீடுகளை விவரிக்கும் காட்சிப்படங்கள் ஒரு சிறிய பகுதியில் திரைப்படமாகவும் காட்டப்படும் வகையில் ஏற்பாடு செய்திருக்கின்றனர். ஆக அலுப்பே ஏற்படாமல் நிதானமாக பார்த்து இரசித்து வரலாம்.
வாகன உற்பத்தியில் இன்று முன்னிலை வகிக்கும் நாடுகளாகத் திகழ்பவை ஜெர்மனி, பிரான்சு, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கொரியா போன்ற நாடுகளாகும். இந்த வரிசையில் சுவீடனும் இடம் பெறுகின்றது. வாகன உற்பத்தியில் மக்களின் தேவைக்கேற்பவும் கால சூழலின் தேவைக்கேற்பவும் தொழில் நுட்பத்தில் மாற்றங்களைச் செய்து புதிய வடிவங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில் வாகனங்களில் புதுமைகளைச் செய்ய வேண்டிய தேவை வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு இன்று இருக்கும் கட்டாயத் தேவை. இதனை நன்கு கருத்தில் கொண்டு மின்சாரத்தில் இயங்கும் வாகனம், தானியங்கி வாகனம், என காலத்திற்கேற்ற வகையில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றது வோல்வோ. கடுமையான போட்டி நிலவும் இந்த வாகன உற்பத்தித் தொழிலில் இன்றும் முக்கிய இடத்தை வகிக்கின்றன வோல்வோ கார்கள். பலரால் விரும்பி வாங்கப்படும் ஒரு வாகனமாக இது திகழ்கின்றது.
பொது மக்கள் வாங்கிப் பயன்படுத்தும் கார்கள் மட்டுமன்றி தனது பயணத்தைக் கடல் மற்றும் விமானப் போக்குவரத்து துறைகளிலும் செலுத்தியுள்ளது வோல்வோ. வோல்வோவின் சிறிய வடிவிலான நீர்மூழ்கி ஆய்வுக் கப்பல்கள் சிலவற்றை இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைத்திருக்கின்றனர். அதோடு பனி அடர்ந்த பகுதிகளில் பயணிக்கும் வாகனங்களையும் வோல்வோ நிறுவனம் தயாரிக்கின்றது.


சுவீடன் நாட்டிற்குச் செல்பவர்கள் தவறாமல் பார்த்து வர வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த அருங்காட்சியகம் அமைகின்றது. இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட செலுத்த வேண்டிய கட்டணம், திறந்திருக்கும் நேரம், சிறப்புக் கண்காட்சிகள் பற்றிய செய்திகள் அதன் அதிகாரத்துவப் பக்கமான http://www.volvomuseum.com/ என்ற பக்கத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

Monday, December 18, 2017

101 பார்த்தோல்டி அருங்காட்சியகம், கோல்மார், பிரான்சு

இன்றைய வல்லமையில் வெளியிடப்பட்டது. - http://www.vallamai.com/?p=82103

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் - 
101. பார்த்தோல்டி அருங்காட்சியகம், கோல்மார், பிரான்சு

முனைவர் சுபாஷிணி



அமெரிக்காவை நினைத்தால் நம் மனதில் முதலில் தோன்றுவது பிரம்மாண்டமாக நியூயோர்க் மாநிலத்தின் லிபர்ட்டி தீவில் உயர்ந்து நிற்கும் சுதந்திர அன்னையின் சிற்பம் என்றால் அதனை மறுக்க முடியாது அல்லவா? இந்தச் சுதந்திர அன்னையின் சிலை உருவாக்கத்தின் பின்னணியை அறிந்து கொள்வதும் சுவாரசியமான ஒன்று தானே. 

Inline image 1

முதன் முதலில் பிரஞ்சுக்காரரான எடுவர்ட் (Edouard de Laboulaye) அமெரிக்காவில் சுதந்திர சிந்தனையைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு சின்னம் ஒன்று கட்டப்பட வேண்டும் என்ற தன் கருத்தினை 1865ம் ஆண்டு வெளியிட்டார். இதற்கு 10 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரஞ்சு சிற்பியான திரு.பார்த்தோல்டியிடம் (Frederic Auguste Bartholdi) இச்சிலையை வடிவமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனைக் கட்டுவதற்குப் போதுமான பொருளாதார பலமின்றி இருந்த சூழலினால் பல கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தும், லாட்டரி, கேளிக்கை நிகழ்வுகள் என்ற வகையிலான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தும் இதனைக் கட்டி முடிக்கத் தேவைப்படும் பணத்தைச் சேகரிக்கும் பணி மிகத் துரிதமாகவும் விரிவாகவும் நடைபெற்றது. 

Inline image 2


சிற்பி பார்த்தோல்டி செம்பினால் உருவாக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவித் தேவைப்பட்டதால் ஐஃபெல் ( Alexandre Gustave Eiffel ) அவர்களைத் தொடர்பு கொண்டு இந்தப் பணியில் இணைந்து பணியாற்றக் கேட்டுக் கொண்டார். ஐஃபல் அவர்கள் தான் உலக அதிசயங்களில் ஒன்றாக இன்று பாரீஸ் நகரில் உயர்ந்து நிற்கும் ஐஃபெல் கட்டிடத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. படிப்படியாக இந்தச் சிற்பம் வடிவம் பெற்று 1884ம் ஆண்டு முழுமை பெற்றது. ப்ரான்ஸிலிருந்து கடல் மார்க்கமாகக் கப்பலில் பயணித்து நியூ யோர்க் நகரை ஜூன் மாதம் 1885ம் ஆண்டு வந்தடைந்தது. தனித்தனி பகுதியாக 350 பாகங்களாக 214 பெட்டிகளில் வைக்கப்பட்டு வந்த இந்தச் சிற்பம் நியூ யோர்க் நகரம் வந்தடைந்த பின்னர் அக்டோபர் மாதம் 1886ம் ஆண்டு முழுமைப்படுத்தப்பட்டது. 



Inline image 4


அமெரிக்க சுதந்திர தேவி சிலையை வடிவமைத்த பிரஞ்சு சிற்பி பார்த்தோல்டி 1834ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி பிரான்சின் கோல்மார் நகரில் பிறந்தார். ”சுதந்திர சிந்தனை உலகிற்கு வெளிச்சம் தரும்” (Liberty Enlightening the World) என்ற கருத்துடன் அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை ஒரு சின்னமாக உருவாக்கியது  உலகுக்கு இவர் அளித்த முக்கிய பங்களிப்பாகும். 

பார்த்தோல்டி அடிப்படையில் இத்தாலிய, ஜெர்மானிய பின்புலத்தைக் கொண்ட குடும்பத்திலிருந்து வந்தவர். பிரான்சில் இளமை முதலே ஓவியம் சிற்பக்கலை என ஆர்வம் கொண்டிருந்தவர். தனது சிற்பக்கலைப் பயிற்சியைப் புகழ்மிக்க சிற்பிகளிடம் பெற்றவர். தனது சிறந்த படைப்புக்களினால் பாரிஸ் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய நகர்களிலும் சிற்பக்கலை வடிப்பதற்காக அழைக்கப்பட்டார். அதிலும் குறிப்பாக 1868ம் ஆண்டில் எகிப்தின் சூயஸ் கால்வாயின் கலங்கரை விளக்கத்தை வடிவமைத்துக் கட்டும் பணி இவருக்கே வழங்கப்பட்டது. ”எகிப்து ஆசியாவிற்கான ஒளியை ஏந்திக்கொண்டிருக்கின்றது” (Egypt Carrying the Light to Asia) என்ற தலைப்பில் இக்கலங்கரை விளக்கத்தை  அவர் வடிவமைத்தார். இது தவிர பிரான்சில், அதிலும் குறிப்பாக தான் பிறந்த கோல்மார் நகரில் புகழ்மிக்க சிற்பக்கலைப் படைப்புக்களை இவர் உருவாக்கியுள்ளார். 

Inline image 6

கோல்மார் நகரில் உள்ள பார்த்தோல்டியின் பிறந்த இல்லம் இன்று அவர் பெயரில் இயங்கும் அருங்காட்சியகமாகத் திகழ்கின்றது. ஒரு சிறிய அரண்மனை போன்ற கட்டிடம் இது. மூன்று மாடிக் கட்டிடத்தில் பார்த்தோல்டி அவர்களின் அனைத்து படைப்புக்களைப் பற்றிய தகவல்களும் சிற்பங்களும் இடம் பெறுகின்றன. அமெரிக்க சுதந்திர தேவி சிலை செய்வதற்காக அவர் செய்த முதல் மாடல் அமைப்பும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 

Inline image 5



இந்த அருங்காட்சியகத்தின் முகவரி: 
30 rue des Marchands, 68000 Colmar, France 

அருங்காட்சியகம் பற்றிய மேலதிகத் தகவல்களை www.musee-bartholdi.com என்ற வலைப்பக்கத்தின் வழி அறியலாம். இந்த அருங்காட்சியகம் பொதுவாக செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் மூடப்பட்டு ஏனைய நாட்களில் காலை 10 முதல் மாலை 6 வரை பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் சுதந்திர தேவியின் சிற்பத்தை வடித்த பெருமையைப் பிரான்சு பெறுகின்றது.  பார்த்தோல்டியின் ஒளி மிகுந்த சிந்தனையின் சிற்ப வடிவமாக இந்தச் சிலை அமைந்திருக்கின்றது!

Wednesday, October 18, 2017

100. வீல்ஸ்கா உப்புச் சுரங்கம், க்ராக்காவ், போலந்து

http://www.vallamai.com/?p=80613

முனைவர் சுபாஷிணி
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பது நம் வழக்கில் உள்ள பழமொழி. எவ்வளவு தான் சுவையாகச் சமைத்தாலும், ஒரு துளி உப்பில்லாவிட்டால் அந்த உணவே பாழ் தான். உலக மனிதர் அனைவருமே உப்பினை உணவில் சேர்த்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். கடற்கரையோரங்களில் தான் உப்பளங்கள் பொதுவாக இருக்கும். ஒரு நாட்டின் மையப் புள்ளியிலே நிலத்துக்குக் கீழே 327 மீட்டர் ஆழத்தில் ஒரு உப்புச் சுரங்கம் இருக்கின்றது. அதனோடு இணைந்தார் போன்ற, உப்பினாலேயே வடிக்கப்பட்ட ஒரு சிற்பக் கலைக்கூடமும் இருக்கின்றது. அதனோடு இணைந்த வகையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அருங்காட்சியகமும் இருக்கின்றது. இதனைக் காண வேண்டுமா? அப்படியென்றால் நாம் போலந்து நாட்டின் கிராக்காவ் நகரத்துக்குத் தான் செல்ல வேண்டும்.
as1
க்ராக்காவ் நகருக்கு அருகே இருக்கும் ஊர் வீல்ஸ்கா. இந்த நகரின் பெயரிலேயே இந்த உப்புச் சுரங்கம் செயல்படுகின்றது. இங்கு நிலத்தின் அடியில் உப்புப் பாளங்களைச் சுரண்டி எடுத்து வந்து அவற்றை விற்பனை செய்வது இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது என்பதைக் கேட்கும் போது இதன் பழமையை நினைத்து ஆச்சரியம் ஏற்படுகின்றது அல்லவா?
இங்கே உள்ளே செல்வதற்குக் கட்டணம் கட்ட வேண்டும். தனியாக யாரும் செல்ல அனுமதி கிடையாது. ஆக ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரஞ்சு, இத்தாலி ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து விளக்கம் சொல்லும் வழிகாட்டிகள் உதவியுடன் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள். உள்ளே நுழைந்ததும் நாம் மரப்பலைகைகளால் அமைக்கப்பட்ட படிகளில் இறங்கி நடக்க வேண்டும். ஏறக்குறைய450க்கும் குறையாத படிகள் உள்ளன. கீழே இறங்கியதும் முதலில் தென்படுவது ஒரு ரகசிய அறை. அந்த அறை பொதுவாகவே பூட்டப்பட்டிருக்கும். நான் சென்ற வேளை என்னுடன் கூடுதலாக 2 அமெரிக்க பெண்களும் வந்திருந்தனர். ஆகவே கூட்டம் குறைவு என்பதால் எங்கள் வழிகாட்டி அந்த ரகசிய அறையை எங்களுக்குத் திறந்து காட்டினார். உள்ளே உப்புப்பாறைகளினாலேயே செதுக்கப்பட்ட அன்னை மேரியின் சிற்பமும் முக்கிய கத்தோலிக்க குருமார்களின் சிற்பங்களும் செதுக்கப்பட்ட ஒரு தேவாலயமே கண் முன்னே இருந்தது. இது என்ன உலக அதிசயமா, என வியந்து நின்ற எங்களுக்குச் சிறு விளக்கம் அளித்து விட்டு, வாருங்கள் இன்னும் இருக்கின்றது .. இதை விடப் பிரமாதமாக எனச் சொல்லி அழைத்துச் சென்றார் எங்கள் வழிகாட்டி.
as2
கி.பி 13ம் நூற்றாண்டில் இங்கு உப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனே இதனை வணிகமாக்கும் பொருட்டு உள்ளே சுரங்கப்பாதையைத் தோண்ட ஆரம்பித்திருக்கின்றனர். தோண்டப்பட்ட சுரங்கப்பாதையில் கீழே குதிரைகளை எடுத்துச் சென்று வண்டிகளை உருவாக்கி, தண்டவாளங்களை உருவாக்கி, சாலைப்பகுதிகளை உருவாக்கி உப்பினை தோண்டத் தோண்ட அவற்றை வெளியே எடுத்து வரத் தேவையான கருவிகளை படிப்படியாக உருவாக்கியிருக்கின்றனர்.
as3
சுரங்கத்திற்குள் செல்லும் போது பாதையைத் தவிர்த்து உப்பு சுவர்களில் பொதிந்து காட்சியளிக்கின்றது. உள்ளே காற்று மிதமாக இருக்கின்றது. உள்ளே நடக்கும் போது நாம் சுவாசிப்பது பல தாதுப்பொருட்கள் கலந்த ஆக்ஸிஜன் காற்று என்பதால் உடலுக்கு நன்மை தரும் ஒரு பயணமாகவும் இந்த சுரங்கப்பாதை பயணம் அமைந்தது. சுரங்கப்பாதை உள்ளே வளைந்து வளைந்து செல்லும் வகையில் அமைத்திருக்கின்றனர். இதன் மொத்த நீளம் 287 கிமீட்டர் ஆகும். ஏறக்குறைய 4 மணி நேரங்களை உள்ளே அந்தச் சுரங்கப்பாதைக்குள் நாங்கள் செலவிட்டமையால் ஏறக்குறைய 5 கிமீ தூரம் நடந்திருப்பேன் என்றே கருதுகிரேன்.
இந்த உப்புச் சுரங்கத்திற்குள்ளே நீர் தேங்கிய குளங்கள் இருக்கின்றன. இங்குப் பணியாற்றிய சுரங்கத் தொழிலாளர்கள் பல நாட்கள் வெளியே செல்ல முடியாத சூழலில் சுரங்கத்திற்குள்ளேயே இருந்து பணிபுரிந்தனர். இவர்கள் தங்கள் மத நம்பிக்கையின் காரணமாக அச்சுரங்கத்திற்குள் ஏறக்குறைய 7க்கும் மேற்பட்ட தேவாலயங்களைக் கட்டியுள்ளனர். ஒவ்வொன்றிலும் மேரி மாதாவும். சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிருத்துவும் உள்ள வகையில் உப்பு பாறைப்படிவங்களால் அமைக்கப்பட்ட சிற்பங்கள் உள்ளன.
as4
இந்த உப்புச் சுரங்கத்தின் மையப்பகுதி உலகப் பிரமாண்டங்களில் ஒன்று எனத் தயங்காது கூறலாம். ஒரு மிகப்பெரிய அரண்மனையில் விருந்தினர் பகுதியின் அலங்கரிப்பு போல சுவர்களில் நிறைந்துள்ள சிற்பங்களின் அழகை வர்ணிக்க சொற்கள் கிடையாது. கனவுலகத்தில் இருக்கின்றோமா என நம்மையே நாம் கேட்டுக் கொள்ளும் வகையில் இந்த மையப்பகுதியை வடிவமைத்திருக்கின்றனர். இங்கு சுவரில் புடைப்புச் சிற்பங்களாக உள்ள அனைத்துச் சிற்பங்களுமே உப்புப் பாளங்களினால் மட்டுமே தயாரிக்கப்பட்டவைதாம் என்பதே இதன் தனிச்சிறப்பு எனலாம். இந்த கலைப்படைப்புத் தொகுதியில் புதிதாக இணைந்திருக்கும் சிற்பம் மறைந்த போப்பாண்டவர் இரண்டாம் ஜோன் பவுல் அவர்களின் சிற்பமாகும். இவரது சிற்பமும் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
உலகப் பிரமாண்டங்களில் ஒன்றாகத் திகழும் இந்த உப்புச் சுரங்கம் 1978ம் ஆண்டு யுனெஸ்கோவினால் பாதுகாக்கப்படும் வரலாற்றுச் சின்னமாக அங்கீகாரம் பெற்றது. 2007ம் ஆண்டு வரை இங்கு உப்பு உற்பத்தி தொழில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 2007ம் ஆண்டு முதல் இங்கு உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டு சுற்றுலா தளமாக மட்டுமே இது இன்று இயங்கி வருகின்றது.
as5
இந்த உப்புச் சுரங்கத்திற்குள் உள்ள சிற்பங்களில் கிருத்துவ மத சார்புள்ள சிற்பங்களைத் தவிர்த்து முக்கியஸ்தர்களின் சிலைகளும் இங்கே உப்புப்பாளங்களினால் வடிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் மிகப்பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள மன்னர் கசிமியர், நிக்கோலவுஸ் கோப்பர்நிக்கஸ், யோஹான் வோல்வ்காங் ஃபோன் கோத்த, அலெக்ஸாண்டர் ஃபோன் ஹும்போல்ட், பில் கிளிண்டன் ஆகியோரது சிற்பங்களைக் குறிப்பிடலாம். பிரபலங்கள் மட்டுமன்றி உள்ளே பணிபுரியும் தொழிலாளர்களும் வேலையை விவரிக்கும் வகையில் அமைக்கப்பட்ட சிற்பங்களும் இங்கே உள்ளன. குதிரையில் பூட்டிய உப்புக்கட்டிகளைத் தூக்கிச் செல்லும் மனிதன், பாறைகளைத் தீ வைத்து உடைக்கும் தொழிலாளி, குளத்தைத் தூய்மை செய்யும் தொழிலாளி என இன்றைக்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த சுரங்கப்பாதைப் பணிகளை விவரிக்கும் வகையில் இந்தச் சிற்பங்கள் அமைந்திருக்கின்றன.
as6
போலந்து ஐரோப்பாவின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நாடு. ஆக ஐரோப்பாவின் பல நாடுகளுக்குப் போலந்திலிருந்து வர்த்தகம் நடைபெற்ற மிகப்பிரபலமான நகரமாக க்ராக்காவ் பல நூற்றாண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதன் முக்கியத்துவம் இன்றைய பொருளாதார மாற்றத்தால் சற்றே சரிந்திருந்தாலும் கூட இப்பகுதி ஐரோப்பாவின் மிக முக்கிய வணிகப்பாதையில் அமைந்திருக்கும் ஒரு பகுதி. ஆக இங்கிருந்து தோண்டப்பட்ட உப்பு பல்வேறு இடங்களுக்கு ஆற்றின் வழியாகவும் தரை வழியாகவும் கொண்டு செல்லப்பட்டது என்பது வரலாறு.
அருங்காட்சியகங்களில் பல வகை உண்டு. உலக அதிசயங்களில் ஒன்று அருங்காட்சியகமாகக் காட்சி தரும் அமைப்பாகவே, வருவோரை வியப்பில் ஆழ்த்தும் வீல்ஸ்கா உப்புச் சுரங்கமும் அதன் அருங்காட்சியகமும் விளங்குகின்றன.

Wednesday, October 4, 2017

99. செக்போயிண்ட் சார்லி அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி

http://www.vallamai.com/?p=80318

முனைவர் சுபாஷிணி
ஜெர்மனியின் வரலாற்றில் பல முக்கிய தேதிகள் நீண்ட பட்டியலாகவே உள்ளன. மிகப் பல அரசியல் மாற்றங்களைச் சந்தித்த நாடு ஜெர்மனி என்பது உண்மையே. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு ஏனைய உலக நாடுகளின் மத்தியில் கிடைத்த பிரபலம் போல ஜெர்மனிக்குக் கிடைக்கவில்லை என்பதைக் குறிப்பிடத்தான் வேண்டும். அப்படி மிக முக்கியமான தேதிகளில் ஒன்றாகத் திகழ்வது ஆகஸ்டு 13, 1961ம் ஆண்டு. சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவிற்கும் ஜெர்மனியைப் பாதுகாப்பதில், குறிப்பாக அதன் அரசியல் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மோதலின் விளைவாக உருவானதுதான் 1961ம் ஆண்டு பெர்லின் பிரச்சனை. இதுவே ஜெர்மனியின் கிழக்கு ஜெர்மனிக்கும் மேற்கு ஜெர்மனிக்கும் இடையே பெர்லின் மக்களைச் சுவர் அமைத்துப் பிரித்து வைத்த அரசியல் நிகழ்வினைக் குறிப்பிடும் ஒரு நாளாக அமைகின்றது.
as1
2ம் உலகப்போருக்குப் பின்னர் கூட்டு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்சு, சோவியத் யூனியன் ஆகிய நான்கு நாடுகளும் ஜெர்மனியைத் தங்கள் ஆளுமைக்குள் அடக்கி வைக்கும் வகையில் அதன் மையமாகிய பெர்லின் நகரை நான்கு பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்யும் முறையை உருவாக்கின. 1948ம் ஆண்டில் சோவியத் பகுதிக்குள் அமெரிக்கா செல்வதற்குத் தடைகளை சோவியத் யூனியன் ஏற்படுத்தியது. அந்த நிலையில் கிழக்கு பெர்லின் மக்களுக்கு உதவும் வகையில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் தரை வழி செல்ல இயலாததால், விமானங்களின் வழி கிழக்கு பெர்லின் மக்களுக்கு உணவும் அடிப்படைத் தேவைக்கான பொருட்களையும் வழங்கத் தொடங்கின. பின் 1949ம் ஆண்டு சோவியத் யூனியன் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு உதவிப் பொருட்களைத் தரை வழியே கிழக்கு பெர்லின் மக்களுக்குக் கிடைக்கும் வகையில் பாதையைத் திறந்தது.


1950 வாக்கில் சோவியத் யூனியன் மேற்கிலிருந்து கிழக்கு ஜெர்மனிக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் பொருட்டு தடைகளை அறிமுகப்படுத்த ஆரம்பித்தது. அரசியல் நிலைமைகளின் காரணமாக பெர்லின் மக்கள் பட்ட இன்னல்களுக்கு அளவே இல்ல எனலாம். 1949க்கும் 1961க்கும் இடையில் கிழக்கு பெர்லினிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனிக்குச் சென்றோரின் எண்ணிக்கை இரண்டரை மில்லியன் மக்கள் தொகை ஆகும்.
அகஸ்டு 13ம் நாள், 1961ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனி தன்னை மேற்கு ஜெர்மனியிலிருந்து பிரித்துக் கொள்ளும் வகையில் பெர்லின் சுவரை எழுப்பியது. 155 கி.மீ. நீளம் கொண்ட சுவர் இது. கிழக்கையும் மேற்கையும் அரசியல் ரீதியாகப் பிரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுவர் இது. கருங்கல்லால் மட்டுமன்றி இரும்புக் கம்பிகளும் முள் வேலிகளும் பொருத்தப்பட்ட மிக உறுதியான சுவராக இந்த பெர்லின் சுவரை சோவியத் யூனியன் கையில் இருந்த கிழக்கு பெர்லின் அரசு உருவாக்கியது.
சுவர் கொண்டு எழுப்பினாலும் ஒரு நுழைவுப் பாதை இந்தச் சுவற்றுப் பகுதியில் உருவாக்கப்பட்டது. அந்த வகை எல்லைக்காவல் நிலயம் தான் செக்போயிண்ட் சார்லி (Checkpoint Charlie). இந்தப் பாதை வழியாக ஒருவர் கால்நடையாகவும், வாகனத்தின் வழியாகவும் கிழக்கிலிருந்து மேற்கிற்கும் மேற்கிலிருந்து கிழக்கிற்கும் வந்து செல்லலாம். சார்லி (Charlie) என்பது ஒரு மறைமுகக் குறியீடு (code word). நாட்டோவினால் பயன்படுத்தப்பட்ட ஒரு ரகசியக் குறியீட்டுச் சொல்லை பிரதிபலிப்பது இச்சொல்.
as3
செக்போயிண்ட் சார்லி குறிப்பிடத்தக்க சில ஆங்கில, ஜெர்மானிய திரைப்படங்களில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. ஜேம்ஸ் போண்ட் படமான ஆக்டபஸி திரைப்படமும் அதில் ஒன்று. Cafe Adler (Eagle Café) என்ற திரைப்படமும் இந்தப் பகுதிக்கு எதிராக உள்ள ஒரு உணவகத்தில் அமர்ந்தவாறு நிகழும் சில செய்திகளைச் சொல்லும் படம். இந்த உணவகம் இன்றும் இருக்கின்றது. 2013ம் ஆண்டு நான் பெர்லினுக்குச் சென்றிருந்தபோது இந்த உணவகத்தில் அமர்ந்தவாறு செக்போயிண்ட் சார்லியைப் பார்த்துக் கொண்டிருந்த நிமிடங்கள் மனதில் பசுமையாக இருக்கின்றன.
இந்த பெர்லின் சுவர் பல மரணங்களைப் பார்த்துள்ளது. மக்களின் சோக வாழ்க்கையை பெர்லின் சுவர் தன்னுள்ளே உறிஞ்சிக்கொண்டது என்று தான் குறிப்பிட வேண்டும்.
as4
1990ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் நாள் செக்போயிண்ட் சார்லியின் கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட்டன. இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது தொடர்ச்சியாக இரு தரப்பிலிருந்தும் ஜெர்மானிய மக்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்த மனித உரிமைக்கு எதிரான இந்த நடவைக்கைகளுக்கான எதிர்குரலே. ஜூன் மாதம் இக்கதவுகள் திறக்கப்பட்டாலும் எல்லைச் சோதனைகள் அக்டோபர் 2ம் தேதி வரை தொடர்ந்து கொண்டிருந்தன. 2ம் தேதி இரவு பெர்லின் சுவர்கள் ஜெர்மானிய மக்களால் தகர்த்து உடைக்கப்பட்டது. மக்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்துச் சுவர்களைத் தகர்த்து உடைத்தனர். கிழக்கும் மேற்கும் ஜெர்மானிய மக்களின் உறுதியால் ஒன்றிணைந்தது.
​1990ம் ஆண்டில் பெர்லின் சுவற்றை உடைப்பதற்கு முன்னரே இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு விட்டது. ​முதலில் Dr. Rainer Hildebrandt என்பவர் அக்டோபர் 19ம் தேதி 1962ம் ஆண்டு உடைபட்டுக் கிடந்த பெர்லின் சுவரின் கற்களின் மேல் சில வாசகங்களை எழுதி வைத்தார். இது அப்பகுதியில் மக்களின் வலியைப் பதிவாக்கும் ஒரு அருங்காட்சியகம் தேவை என்ற சிந்தனையை எழுப்பியது. தற்சமயம் இந்த செக்பாயிண்ட் சார்லி அமைந்திருக்கும் அருங்காட்சியகமானது1963ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 13 August Consortium என்ற அமைப்பு இந்த அருங்காட்சியகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை மேற்கொண்டுள்ளது. 13ம் தேதி என்பது பெர்லின் சுவர் எழுப்பப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் அமைந்த ஒரு அமைப்பாகும். இதன் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர் Alexandra Hildebrandt அதாவது முதலில் கண்காட்சியை உருவாக்கிய Dr. Rainer Hildebrandt அவர்களின் மனைவியாவார். பெர்லினின் நகரிலுள்ள 100க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களும் மிக அதிகமான வருகையாளர்களால் வந்து பார்த்துச் செல்லும் அருங்காட்சியகங்களில் ஒன்று என்ற சிறப்பு கொண்டது இந்த அருங்காட்சியகம்.
இந்த அருங்காட்சியகத்தின் கண்காட்சியில் பெர்லின் சுவர் எழுப்பப்படுவதற்குக் காரணமாக இருந்த அரசியல் நிகழ்வுகளைக் குறிப்பிடும் ஆவணங்களும், அதில் ஈடுபட்ட மனிதர்களைப் பற்றிய செய்திகளும், நாட்டோ கூட்டு நாடுகளைப் பற்றிய செய்திகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 13, 1961ம் ஆண்டு பெர்லின் சுவர் அமைக்கப்பட்ட நிகழ்வு, அதன் தொடர்ச்சியாக அமுலுக்கு வந்த சட்டங்கள், நடைபெற்ற துர்சம்பவங்கள் ஆகியன பற்றிய ஆவணங்களும் கண்காட்சியில் உள்ளன. 2007ம் ஆண்டு நிரந்தர கண்காட்சிப்பகுதியை இந்த அருங்காட்சியகம் உருவாக்கியது. அதில் நாட்டோவின் (NATO) வரலாற்றைச் சொல்லும் ஆவணங்கள் காட்சிப்படுத்தப்பட்ட்டுள்ளன. உலக அளவில் நாட்டோவின் (NATO) ஆரம்பக்கால வரலாற்றைக் குறிப்பிடும் மிக முக்கிய அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது எனலாம்.
as5
பெர்லின் நிகழ்வுகள் மட்டுமன்றி உலகின் பல பகுதிகளில் அரசியல் அடக்குமுறைகளை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் குறிப்புக்களும் ஆவணங்களும் இங்கு உள்ளன. இந்தியாவிலிருந்து காந்தியின் குடும்பத்தார் வழங்கிய 14 ஆவணங்களும் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றன என்பதும் ஒரு சிறப்பே.
இந்த அருங்காட்சியகத்தின் முகவரி Friedrichstraße 43-45, 10969 Berlin.
பெர்லின் செல்பவர்கள் தவறாமல் பார்த்து வரவேண்டிய ஒரு வரலாற்று மையம் இது என்பதால் கண்டிப்பாக தங்கள் சுற்றுப்பயணப் பட்டியலில் இதனை இணைத்துக் கொள்ள வேண்டும்.
நிகழ்கால நிகழ்வுகள் வரலாறாக மாற்றம் பெறுகின்றன. வன்முறையை இல்லாதாக்கி அன்பை மேம்படுத்தி மனிதக் குலம் வாழ்வதே நல்வாழ்க்கையாக அமையும்.
சரி.. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தைக் காண அழைத்துச் செல்கிறேன். இப்போது செக்போயிண்ட் சார்லி நினைவில் மூழ்கியிருங்கள் !

Friday, September 15, 2017

98. உடைந்த உறவுகள் – அருங்காட்சியகம், சாக்ரெப், குரோய்ஷியா

http://www.vallamai.com/?p=79753

முனைவர் சுபாஷிணி
காதல்.. காதல்.. காதல்..
பழமையைப் போற்றுவதற்கும், மானுடவியல் ஆய்வுகளில் உதவுவதற்கும், தொல்லியல் கண்டுபிடிப்புகளையும் அறிவியல் ஆக்கங்களைப் பட்டியலிடவும் மட்டும் தான் அருங்காட்சியகமா? மனித உறவுகளில் உள்ள சில கூறுகளைப் பதிவாக்கி வைக்கவும் அருங்காட்சியகங்கள் வேண்டாமா?
as1
வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் பலர்.
தற்செயலாகச் சந்திக்கும் அவர்களில் யாரோ ஒருவருடன் மனதில் திடீரென ஈர்ப்பு ஏற்பட்டு விடுவதை மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருமே உணர்ந்து அனுபவித்துக் கடந்து வருகிறோம். மனிதர்களின் வாழ்வில் நடக்கும் முக்கிய அம்சங்களான குழந்தை பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடும் நாம், நம் தனி மனித உணர்வுகளின் அதி உயர்வான காதல் உணர்வைப் போற்றி மதிக்காமல் போய்விடுகின்றோமே..
சில வேளைகளில் காதல் தோல்வியைத் தற்கொலையால் பூசிப்பவர்களும் உண்டு. காதல் தோல்வியால் மதுபானம், போதைப்பொருள் என சில தீய பழக்கங்களுக்கு ஆளாகி, தன் நலனையே கெடுத்துக் கொள்பவர்களும் உண்டு. ஒரு சிலரோ, உடைந்து போன காதலுக்கு மரியாதையைச் செலுத்தி விட்டு புதிதாகத் தோன்றியிருக்கும் காதலை வளர்த்தெடுப்பதில் மூழ்கிவிடுபவர்களும் உண்டு. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் காதல் உணர்வுகள் எழுவது இயல்பு. காதல் வயப்பட்டோர் ஏதாவதொரு ஒரு காரணத்திற்காகத் தோல்வியைச் சந்தித்திருப்பதும் உண்டு. அதிலிருந்து மீண்டு வந்து புதிய காதலை ரசித்து வாழ்க்கையைத் தொடர்வதே வாழ்க்கைக்கான வெற்றி. ஒருவர் வாழ்வில் நிகழ்ந்த சோகம் மற்றொருவருக்குப் புதிய பாதையைக் காட்டலாமே, என்ற சிந்தனையுடன் உருவாக்கப்பட்டதுதான் குரோய்ஷியா நாட்டின் தலைநகரமான சாக்ரெப்பில் அமைந்திருக்கும் உடைந்த உறவுகள் அருங்காட்சியகம்.


2006ஆம் ஆண்டு இத்தகைய ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் ஏற்படவே அரசு இந்த முயற்சியில் இறங்கியது. அதன் அடுத்த ஆண்டில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு படிப்படியாகப் பல ஆவணங்களும் காட்சிப் பொருட்களும் இங்கு இணைக்கப்பட்டன. இன்றளவும் இணைக்கப்படுகின்றன.
அருங்காட்சியகங்கள் என்றால் பொதுவாக எதனை எதிர்பார்ப்போம்..? சிதிலமடைந்த சுவர்கள், சிற்பங்கள், கற்கள், எலும்புக் கூடுகள், சின்னங்கள், நாணயங்கள் … இப்படித்தானே..?
இங்கே அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பொருட்கள் எல்லாம் தனி நபர்கள் நன்கொடையாக இந்த அருங்காட்சியகத்திற்கு வழங்கிய சுய அனுபவங்களின் சான்றுகள் தாம். இங்கு உலகம் முழுவதிலிருந்து இத்தகைய பொருட்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. அவற்றை முறையாகக் காட்சிப்படுத்தி குரோய்ஷிய மொழியிலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இங்கு வைத்திருக்கின்றார்கள்.
இங்குள்ள ஒரு சில சொந்தக் கதை அனுபவங்கள் சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.
நெதர்லாந்தில் வசிக்கும் பெண்மணி ஒருவர். அவரது ஒரு காலணியும் எதனால் இதனை நினைவுச் சின்னமாக அனுப்பினார் என்ற விளக்கமும் உள்ளது. அதில் அவர் சொல்கிறார்.
“1959ஆம் ஆண்டு. எனக்கு 10 வயது. அவனுக்கு 11 வயது. நாங்கள் இருவரும் மிகுந்த காதலில் இருந்தோம். நாங்கள் இருவரும் வெளியே தனியாகச் சுற்றினோம் என்பதை என் தாயாருக்குச் சொன்ன போது என் காதில் பலமான அடி விழுந்தது. என்னை என் அத்தை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். எனக்கு 15 வயது. மீண்டும் அவனைச் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது. சில மாதங்கள் எங்கள் உறவு இனிமையாகக் கழிந்தது. பின்னர் அவன் ஜெர்மனி சென்று விட்டான். ஆனால் கடிதத் தொடர்பில் இருந்தோம். வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லை என உறுதி எடுத்துக் கொண்டோம். ஆனால் எங்கள் தொடர்பு துண்டித்துப் போனது.1998ஆம் ஆண்டு. நான் தொழில் ரீதியாக ஒரு பணியில் இருந்தேன். அச்சமயம் ஒரு வாடிக்கையாளர் வந்து பேசிக் கொண்டிருந்தார். சில நிமிடங்களில், அவர் அவன் தான் என அறிந்து கொண்டேன். அவனும் என்னை அடையாளம் கண்டு கொண்டான். தனக்கு முதல் திருமணம் வெற்றியாக அமையவில்லை என்றும் இரண்டாம் திருமணம் செய்திருப்பதாகவும் கூறினான். இனி இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது என நான் கூறினேன். அவன் என் நினைவாக நான் அணிந்திருந்த காலணியில் ஒன்றினைக் கேட்க அவனுக்குக் கொடுத்து விட்டேன். பின்னர் யோசித்தேன். அந்த நினைவுகள் மீண்டும் தேவையில்லை. எஞ்சிய இந்த ஒரு காலணியை அருங்காட்சியகத்திற்கு என் வாழ்க்கை நினைவாகக் கொடுக்கின்றேன்.”
..என அவரது காதல் தோல்வி கதை அமைகிறது.
அடுத்த கதை. இதனையும் ஒரு பெண் பிரேசில் நாட்டிலிருந்து எழுதியிருக்கின்றார். கடிதத்தோடு காகிதத்தால் செய்யப்பட்ட திருமண அலங்கார வளையத்தை அனுப்பியுள்ளார்.
“நான் ஒரு எழுத்தாளர். நான் எனது பதிப்பக உரிமையாளரையே மணந்து கொண்டேன். திருமணத்திற்காக இந்த காகித அழகு வளையத்தை இருவருமே செய்தோம். இது முழுக்க முழுக்க காகிதத்தால் மட்டுமே ஆனது. நாங்கள் இருவரும் எழுத்துத் துறையில் இருப்பதால் அதனைப் பிரதிபலிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்தோம். எங்கள் 5ஆம் ஆண்டு திருமண நாளின் போது அவன் மற்றொரு பெண்ணுடன் உறவு வைத்திருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் ஆராய்ந்த போது அது ஊர்ஜிதமாகியது. அவனிடமிருந்து விலகி விட்டேன். அவன் நினைவுகளும் தேவையில்லை என்பதால் இந்தக் காகித அலங்கார வளையத்தை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்புகிறேன். ”
.. இது அவரது கதை.
இன்னொரு பெண்மணி.. குரோய்ஷியாவிலேயே இருப்பவர். அவரது திருமண ஆடையை இங்கு வழங்கியதோடு ஏன் என்ற காரணத்தை சில வரிகளில் கூறியிருக்கின்றார்.
as3
“நீண்ட சண்டைகள் எங்களுக்குள் ஏற்பட்டன. அவை தொடர்ந்தன. அவன் தன் பக்க நியாயத்தை மட்டுமே ஓயாது பேசிக் கொண்டிருந்தான். பேசுவதே அதிகம். தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. அவன் வேலைக்கும் செல்லவில்லை. திருமணம் முதல் எல்லாமே எனது செலவிலேயே நடந்தது. அவனால் எனக்குக் கடன் தொல்லையும் ஏற்பட்டது. அவனது கடன்களை அடைத்தேன். அவனை வெளியே விரட்டினேன். அவன் நினைவுகளும் வேண்டாம். இந்தத் திருமண கவுனும் வேண்டாம். ”
..இது அவரது வாழ்க்கையில் காதல் ஏற்படுத்திய காயத்தின் சான்று.
இங்குள்ள காதல் தோல்வி சான்றுகள் பெண்கள் அனுப்பியவே அதிகம். இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து ஆண் ஒருவர் அனுப்பிய காதல் தோல்விக்கான காரணத்தையும் சான்றையும் பார்ப்போமே.
“நான் அவளை முதன் முதலில் டிசம்பர் மாதத்தில் சந்தித்தேன். ஆரம்பத்தில் நட்பாக மட்டுமே எங்கள் உறவு தொடர்ந்தது. ஏனெனில் நான் அப்போது ஒரு காதலிக்காக ஏங்கிக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவளிடம் எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவள் ஆஸ்திரேலியாவிலிருந்து படிக்க வந்திருந்தாள். எங்கள் உறவு இனிதே தொடங்கியது. அவள் திரும்பிச் செல்ல வேண்டிய காலம் வந்தது. என்னையும் அழைத்தாள். நான் லண்டனிலிருந்து வரமுடியாது எனக் கூறிவிட்டேன். எங்கள் உறவு முறிந்தது. “
ஏன் முறிந்தது? எதனால் லண்டனிலிருந்து வரமுடியாது என 10 காரணங்களைச் சொல்லி அவளை அனுப்பி வைத்திருக்கின்றார் இந்த ரோமியோ. அந்த 10 காரணங்கள் அடங்கிய பட்டியல் மனதை உறுத்தி வருத்தியிருக்கும் போல. அதனால் அதனை இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவிட்டார்.
இன்னொரு பெண்மணி.. தனது ஒரு வருடக் காதல் அனுபவம் .. பின் ஏற்பட்ட காதல் முறிவு ஆகியவற்றுக்கான காரணத்தை இப்படிக் கூறுகிறார்.
as4
“ஒரு முறை போதைப் பொருளுக்கு அடிமையானவன் மீண்டும் அதிலிருந்து தப்பவே முடியாது. போதைக்கு அடிமையானவன் வாழ் நாள் முழுதும் போதைப்பொருளுக்கு அடிமைதான். ஆனால் முதலில் என் நண்பர்கள் இதனைக்கூறியபோது நான் ஏற்றுக் கொள்ளவில்லை. போதைப் பொருளுக்கு அடிமையான ஒருவன் வாழ்க்கையில் மறு வாய்ப்பு வழங்கப்படும் போது மாறிக் கொள்ள மாட்டானா? என் காதல் அவனை மாற்றும் என என் நண்பர்களிடம் வாதிட்டு அவனுடன் காதல் நட்பினைத் தொடங்கினேன். அவன் என்னை அதிகம் காதலித்தான். நானும் அவனை உயிருக்கு உயிராகக் காதலித்தேன். எனக்குச் சிரமம் ஏற்படும் போதெல்லாம் துணையாக இருந்தான். அதனால் என் நண்பர்களிடமிருந்தும் கூட விலகி விட்டேன். நாங்கள் இணைந்து வாழ்க்கையைத் தொடங்கினோம். வியாபாரத்தைத் தொடங்கினோம் . குடும்பம் அமைப்பது பற்றி அதிகமாகப் பேசினோம். ஒருநாள் திடீரென்று அவனிடம் மாறுதலைக் கண்டேன். எனக்குத் தெரியாமல் போதைப் பொருளை உட்கொள்வதை மீண்டும் தொடங்கியிருந்தான். சொல்லிப் பார்த்தேன். கேட்கவில்லை. ஆறு மாதங்கள் போராடிப் பார்த்தேன். அவன் மாறவில்லை. நான் அவனிடமிருந்து பிரிந்து வந்து என் வாழ்க்கையைத் தொடர்கின்றேன். அவன் நினைவாகக் போதைப்பொருள் சோதனைக்கருவி ஒன்றினை சான்றாக அனுப்பி, இக்கடிதத்தையும் அனுப்பியிருக்கின்றார். “
இப்படிப் பல பல கதைகள்.. நின்று வாசித்தால் பெருமூச்சு ஏற்படும். ஆனாலும் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள் பிறருக்கு புது வாழ்க்கையைத் தொடங்க ஒரு தூண்டுதலாக இருக்கும் என்ற நல்ல எண்ணத்துடன் இத்தகைய தகவல்களை அனுப்பியிருக்கும் நல்ல உள்ளங்களை வாழ்த்தத்தான் வேண்டும்.
as5
காதலில் தோல்வி ஏற்பட்டு மனம் வருந்திக் கொண்டிருப்பவர்கள் முதலில் அக்காதலை நினைவூட்டும் எல்லாப் பொருட்களையும் ஒதுக்கி விடுவதே நல்லது. பழைய நினைவுகள் நிகழ்கால வாழ்க்கையைப் பாதிக்க நாமே இடம் கொடுக்கக் கூடாது., ஆக, காதலில் தோல்வி அடைந்தோர் ஏதேனும் நினைவுப் பொருட்கள் வைத்திருந்தால் உங்கள் காதலை விவரித்து அப்பொருளையும் சேர்த்து இந்த அருங்காட்சியகத்திற்கு அனுப்பி விடலாம். இதன் முகவரி,
Museum of Broken Relationships,
Ćirilometodska ul. 2, 10000, Zagreb, Croatia
வாழ்வதற்குத்தான் வாழ்க்கை. முதல் தோல்வி என்றும் தோல்வியல்ல. ஒருமுறை காதலில் தோல்வியடைந்தால் மனம் உடைந்து போக வேண்டாம் தோழர்களே. வாழ்க்கையில் நல்ல துணையைக் காதலித்துக் கைகோர்த்து நலமுடன் காதல் செய்து மகிழ்ந்து வாழ்வீர். முடிந்தால், சாக்ரெப் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அப்படியே ஒரு முறை இந்த அருங்காட்சியகத்திற்கும் சென்று இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுயவாழ்க்கை அனுபவக் காதல் தோல்விச் சான்றுகளையும் பார்த்துச் செல்லுங்கள்!

Friday, September 1, 2017

97. தேசிய ​அருங்காட்சியகம், கோலாலம்பூர், மலேசியா

http://www.vallamai.com/?p=79424


முனைவர் சுபாஷிணி
​மலேசியா ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலைப் பெற்று 60 ஆண்டுகள் ஆகிய மகிழ்ச்சியைக் கொண்டாடும் வேளையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அமைந்திருக்கும் தேசிய அருங்காட்சியகத்தினைப் பற்றி இந்தப் பதிவில் சில செய்திகள் பகிர்ந்து கொள்கிறேன்.
கோலாலம்பூரின் ப்ரிக்ஃபீல்ட்ஸ் பகுதிக்கு அருகே, டாமான்சாரா சாலையில் அமைந்திருக்கின்றது மலேசிய தேசிய அருங்காட்சியகம். மலேசிய மக்கள், வரலாறு, மன்னர்கள், பேரரசுகள், காலனித்துவ ஆட்சிக்கால செய்திகள், கலாச்சாரம், அகழாய்வு என மலேசியாவைப் பற்றி பொதுவாக ஒருவர் அறிந்து கொள்ள விரும்பும் அனைத்துத் தகவல்களையும் அறிந்து கொள்ளும் வகையில், மிக நேர்த்தியான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சிலாங்கூர் அருங்காட்சியகம் சிதிலமடைந்த பிறகு இந்த புதிய கட்டிடத்தை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 21 ஆகஸ்ட் 1963ஆம் ஆண்டு இப்புதிய கட்டிடம் திறப்பு விழா கண்டது. பாரம்பரிய மீனாங்கபாவ் கட்டுமான வடிவத்தில் இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டிருக்கின்றது என்பது இதன் தனிச்சிறப்பாகும்.
as4
அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் இருக்கும் வரவேற்பு வளையம் கெடா மாநிலத்திலிருக்கும் குவாலா கெடா கோட்டையின் முகப்பில் இருந்த வரவேற்பு வளையமாகும். அதனை பெயர்த்தெடுத்து வந்து இந்த அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதியாக அது​ இங்கு​ இணைக்கப்பட்டிருக்கின்றது. கெடா மாநிலத்திலிருக்கும் அக்கோட்டைப் போர்த்துக்கீசியர்கள் மலாயாவைக் கைப்பற்ற 1611ம் ஆண்டில் நிகழ்த்திய போரின் போது பெருமளவு சேதமடைந்தது. மீண்டும் 1771ம் ஆண்டு அக்கோட்டை அப்போதைய கெடா மன்னர் சுல்தான் முகமது ஜீவா ஜைனல் அசீலீன் முஆஸாம் ஷா (1778 – 1797) அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. மலாயாவை ஆட்சி செய்த மன்னர்களின் பலத்தையும் உறுதியையும் பிரதிபலிக்கும் ஒரு அம்சமாக இந்தக் கோட்டையின் வாயில் பகுதி திகழ்வதால்​,​ அது இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு முன் வாயிலில் பொருத்தப்பட்டு சிறப்பளிக்கப்பட்டுள்ளது.
as3
வாசல் பகுதியிலேயே அன்றைய மலாயாவில் செயல்பாட்டில் இருந்த ரயில்பெட்டிகள் சில வைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ரயில்பெட்டி 121,600,00 மலேசிய ரிங்கி​ட்டிற்கு இங்கிலாந்திலிருந்து வாங்கப்பட்டதாகும். 1921ம் ஆண்டு இது​ தன்​ சேவையைத் தொடங்கியது. இதன் எடை 88 1/2 டன் ஆகும். Kitson and Co. என்ற இங்கிலாந்தில் உள்ள நிறுவனம் இதனைத் தயாரித்தது. நவம்பர் மாதம் 1969ம் ஆண்டு இது தன் சேவையை நிறுத்திக் கொண்டது என்றும் தனது சேவைக் காலத்தில் இந்த ரயில் மலாயா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் சேவையில் இருந்ததாகவும், ஏறக்குறைய ஒன்றரை மில்லியன் ரயில் மைல்கள் இது பயணித்துள்ளது என்றும் அறிய முடிகின்றது. இதைப் போல இன்னும் சில ரயில்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பினாங்கு மலை உச்சிக்குச் செல்ல பயன்படுத்தப்பட்ட பழைய கேபிள் ரயில் ஒன்றின் பகுதி ஒன்றும் இதே அருங்காட்சியகத்தில் இடம்பெறுகின்றது.
as2
​அன்றைய மலாயா உட்பட கிழக்காசிய நாடுகள்​ அனைத்தும் புத்தமதம் செழித்துப் பரவிய நாடுகள் எனலாம். கி.பி 2ஆம் நூற்றாண்டு தொடக்கம் கிழக்காசிய நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து வந்த வணிகர்கள் வணிகம் செய்யவந்து பின்னர் இந்த​ புதிய நிலப்பகுதியிலேயே தங்கி​,​ இங்கே பௌத்த மதம் செழிக்கவும் காரணமாக இருந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள சூழலுக்கேற்ப தங்கள் வாழ்க்கை நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டாலும் கூட பௌத்த மத வழிபாட்டினைக் கடைபிடிப்போராகவே தங்கள் பண்பாட்டினைத் தொடர்ந்தனர் என்பதை அறியமுடிகின்றது. கி.பி.6ஆம்​,​ 7ஆம் நூற்றாண்டு கோயில்களின் பகுதிகள்​ ஆங்காங்கே நிகழ்த்தப்பட்ட ​ அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. கெடா மாநிலத்திலுள்ள பூஜாங் பள்ளத்தாக்கு இன்றளவும் இந்திய பழம் பண்பாட்டின் தாக்கத்தைக் காட்டும் உதாரணமாகத் திகழ்கின்றது எனலாம். அந்த வகையில் பேராக் மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட அவலோகிதர் சிற்பம் ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 1936ஆம் ஆண்டில் ஈயம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழுவினருக்கு இந்தச் சிற்பம் கிட்டியது. இது செம்பினால் செய்யப்பட்ட சிற்பம். இதன் காலம் கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்டதாக இருக்கலாம் எனக்கணக்கிடுகின்றனர். இக்காலகட்டத்தில் இந்து சமயமும் பௌத்த சமயமும் இப்பகுதிகளில் மிகச் செழிப்புற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
as1
மலேசிய வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் என்றால் அது 31 ஆகஸ்ட் 1957ஆம் ஆண்டினைத்தான் குறிப்பிட வேண்டும். சுதந்திரம் வேண்டிய உள்ளூர் மக்கள் இங்கிலாந்தின் காலணித்துவ அரசை எதிர்த்து அகிம்சைப் போராட்டத்தை நடத்தினர். 1955ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1955ஆம் ஆண்டும் சட்டப்பேரவைக்கான முதல் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகளாகச் செயல்பட்ட அம்னோ, எம்.ஐ.சி, எம்.சி.எ ஆகிய மூன்று கட்சிகளும் மலாயாவின் பெரும்பான்மை சமூகத்தினைப் பிரதிநிதித்து தேர்தல் களத்தில் போட்டியிட்டன. இத்தேர்தலில் இக்கூட்டணி பெரும்பான்மையைக் கைப்பற்றி வெற்றி பெற்றது. அடுத்த இரண்டாண்டுகளில் படிப்படியாக நிகழ்ந்த முன்னேற்றம் மலேசியா விடுதலைப் பெற்ற சுதந்திர நாடாக வலம் வர வழிவகுத்தது. சுதந்திர மலேசியாவின் முதல் பிரதமராக துன் அப்துல் ரகுமான் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்ட நாள் மலேசிய வரலாற்றில் ஒரு பொன்னாள் என்பதில் ஐயமில்லை. இந்த அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி மலேசிய சுதந்திரம் தொடர்பான பல ஆவணங்களையும் புகைப்படங்களையும் காட்சிக்கு வைத்துள்ளது.
as
இப்படி இங்கிருக்கும் ஒவ்வொரு பகுதியையும் தனித்தனியே விவரித்துக் கொண்டே போகலாம். பெருங்கற்காலக்கருவிகள், மரப்பட்டை ஆடைகள், மனித எலும்புக்கூடுகள், விவசாயக் கருவிகள், மன்னர்களின் வரலாறுகள், பேரரசர்களின் வரலாறுகள் என சுவாரசியம் குறையாமல் இந்த அருங்காட்சியகத்தில் நேரத்தைச் செலவிடலாம். ஒவ்வொரு பகுதியும் வருகை தருவோருக்குத் தேவையான தகவல்களை​ குறையாமல் வழங்குகின்றன. மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வருபவர்கள் தவறாமல் வந்து பார்த்து செல்ல வேண்டிய ஒரு முக்கிய இடமாக இந்த தேசிய அருங்காட்சியகத்தை நான் கருதுகிறேன்.
சரி. அடுத்த பதிவில் மற்றுமொரு நாட்டில் சுவாரசியமான தகவல்கள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். வரத் தயார் தானே?​

Friday, August 18, 2017

96. தேசிய அகழாய்வு அருங்காட்சியகம் , ஏதன்சு, கிரேக்கம்.

http://www.vallamai.com/?p=79098

முனைவர் சுபாஷிணி
கிரேக்கம் என்ற பெயரைக் கேட்டவுடன் நம் மனதில் எழும் அதிர்வுகள் அதன் பழமையின் பெருமையைக் குறிப்பதாகத்தான் இருக்கும். இன்றைய கிரேக்கமும் பழமையான நாகரிகத்தின் எச்சங்களைப் போற்றும், அதன் சிறப்பைப் பறைசாற்றும் வகையில் தான் உள்ளன. கிரேக்கத்தின் ஏறக்குறைய எல்லாப் பகுதிகளுமே அகழ்வாராய்ச்சி நடத்தினால் தோண்டத் தோண்ட புராதனச் சான்றுகள் கிடைக்கும் வகையில் தான் உள்ளன. அகழ்வாராய்ச்சியின் வழியாகத் தான் வரலாற்றுப் பழமை சொல்லும் சான்றுகளைத் தேட வேண்டும் என்ற வரையறை இன்றி நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றுச் சின்னங்கள் பல நிறைந்த நாடு தான் கிரேக்கம். அதில் குறிப்பாகச் சொல்வதென்றால் கிரேக்கத்தின் தலைநகரமாக விளங்கும் ஏதன்ஸ் நகரைக் குறிப்பிட வேண்டும். இதில் முதன்மையாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுவது அக்ரோபோலிஸ். ஒரு தனி கட்டிடம் அல்லது ஊர் என்றில்லாது, ஒரு சிறு நகரமே தொல்லியல் அகழாய்வுச் சிறப்பு பெற்ற உலகின் மிக முக்கிய வரலாற்றுப் பகுதியாக கருதப்படுகின்றது . அக்ரோபோலிஸ் வகை கட்டிட கட்டுமான அமைப்பைச் சார்ந்து கட்டப்படாத உலக நாடுகளின் கட்டிடங்கள் மிகக் குறைவே எனலாம். அதிலும் குறிப்பாக, வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவின் ஏனைய அனைத்து நாடுகளின் கட்டிட அமைப்பு பாணி பெரும்பாலும் அக்ரோபோலிஸ் வகை அமைப்பாக இருப்பதே இதற்குச் சான்று.
அக்ரபோலிஸ் போன்றே அகோரா, அசுப்ரோசாலிகொ, ப்ரவுரன், கிரேட்ட, டெலொச், டெல்ஃபி, டிமினி, எப்பிடவுரஸ் ​டொடோனா, ​ மாரத்தோன், ஒலிம்பியா போன்ற அகழாய்வு நகரங்களையும் நாம் குறிப்பிடலாம். நிலத்துக்கு மேல் உள்ள சான்றுகளும், நிலத்துக்கு அடியில் அகழ்ந்து தோண்டி கண்டெடுத்த சான்றுகளும் சொல்லும் வரலாற்றினை மேலும் வளப்படுத்தும் வகையில் கிரேக்கத்தின் கடற்கரையோர அகழாய்வுகளும் தீவுகளில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான அகழாய்வுகளும் புதிய வரலாற்றுச் சான்றுகளை வழங்கியவாறு இருக்கின்றன.
2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏதன்ஸ் நகருக்கு சில நாட்கள் பயணம் சென்றிருந்தேன். இந்தப் பயணத்தின் போது ஏதன்ஸ் நகரைச் சுற்றிலுமுள்ள வரலாற்றுச் சான்றுகளைப் பார்வையிடுவதிலும் அங்குள்ள சில அருங்காட்சியகங்களுக்குச் சென்று பார்த்து அங்கு ஆய்வுகளைச் செய்வதாகவும் எனது நாட்கள் கடந்தன. அந்தப் பயணத்தில் நான் சென்று வந்த அருங்காட்சியகங்களில் ஒன்று ஏதன்ஸ் தேசிய அருங்காட்சியகம்.
as1
19ம் நூற்றாண்டு வாக்கில் ஏதன்ஸ் நகரில் நிகழ்த்தப்பட்ட தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் சான்றுகளைச் சேகரித்து வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் இது. ஆயினும் பின்னர் ஏதன்ஸ் நகருக்கு வெளியே கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்களும் இந்த அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டு இங்கே பாதுகாக்கப்படுகின்றன. இன்றைய நிலையில் கிரேக்கத்தின் மிகப் பெரிய அருங்காட்சியகம் என்ற சிறப்பு பெற்ற அருங்காட்சியகம் இது என்பதோடு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெறும் ஒரு அருங்காட்சியகம் இது என அறியப்படுகின்றது. 11,000க்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன என்பதை அறியும் போது இது எவ்வளவு பெரிய ஒரு அருங்காட்சியகம் என்பதை ஓரளவு வாசிப்போரால் ஊகிக்க முடியுமல்லவா?
1866ம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடம் இது. எலனி டொசொடா என்பவர் வழங்கிய நிலத்தில் இந்த அருங்காட்சியகக் கட்டிடம் கட்டப்பட்டது. இங்குள்ள சேகரிப்புக்களை நான்கு பெரும் பகுப்புக்களாகப் பிரித்து விடலாம்.
வரலாற்றுக் காலத்துக்கும் முந்திய நாகரிகத்தின் தொல்லியல் சான்றுகள் – கி.மு 6000 லிருந்து கி.மு. 1050 வரையிலான தொல்லியல் சான்றுகளின் சேகரிப்புத் தொகுப்புக்கள்.
சிற்பத் தொகுதி – கி.மு.7ம் நூற்றாண்டிலிருந்து கி.மு 5 வரையிலான சிற்பக் கலை வடிவங்களின் சேகரிப்புக்கள்.
குடுவைகளும் பானைகளும் – பண்டைய கிரேக்க நாகரிகத்தின் சான்றாகத் திகழும் பானை வடிவங்களின் தொகுப்பு. இந்தப் பானை வடிவங்களின் மேல் கீறப்பட்டுள்ள ஓவியங்களும் காட்சிகளும் வெவ்வேறு காலகட்டங்களின் வரலாற்றுச் செய்திகளைத் தருகின்ற ஆவணங்களாகத் திகழ்கின்றன. இந்த சேகரிப்பில் இவற்றில் பெரும்பாலானவை கி.மு 11ம் நூற்றாண்டு தொடங்கி ரோமானிய பேரரசின் காலம் வரையிலான சேகரிப்புக்களே.
இரும்புக்கால சேகரிப்புக்கள் – வெவ்வேறு வகையான சிற்பங்கள், சிறிய கைவினைப் பொருட்களின் வடிவங்கள் ஆகியவற்றின் சேகரிப்புக்கள்.
இவை தவிர உலக நாகரிகங்களில் புகழ்பெற்ற பழம்பெருமை கொண்ட எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் சேகரிப்புக்களுடன் சைப்ரஸ் தீவின் சேகரிப்புக்களும் இடம்பெறுகின்றன.
இந்த அருங்காட்சியகத்தில் சேகரிக்கப்பட்டுள்ள அரும்பொருட்கள் ஏராளம். ஒவ்வொன்றுமே தனித்துவம் பெற்றவையே என்றாலும் வரலாற்றுப் புகழ் மிக்க சில அரும்பொருட்களை மட்டும் ஓரளவு விளக்குவது அவசியம் எனக் கருதுகிறேன்.
as2
இந்த அருங்காட்சியகத்தின் முகப்பில் முதலில் நுழைந்ததும் நம்மை வரவேற்பது வரலாற்றுக்கு முந்தைய காலத்து தொல்பொருட்களின் சேகரிப்பு. அங்கு மிக நேர்த்தியாக முதலில் நம் பார்வையில் தென்படுவது “Thinker” சிற்பம். கி.மு. 4500லிருந்து கி.மு. 3300 பழமையானது என அறியப்படுகின்றது இந்தச் சிற்பம். சிந்தனையில் ஒரு மனிதன் ஆழ்ந்திருப்பது போல இதன் வடிவம் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். இந்தச் சிந்திக்கும் மனிதனின் சிற்பம் என்பது கிரேக்கத்தினை உருவகப்படுத்தும் மிகச் சிறந்த ஒரு சிற்பம் என்ற சிறப்பினைப் பெறுகின்றது. உலக சிந்தனையாளர்கள் வரிசையில் நீங்கா இடம்பெற்ற சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில் ஆகியோரின் சிற்பங்கள் ஏறக்குறைய இவ்வகையில் அமர்ந்த நிலையில் வடிவமைக்கப்பட்டிருப்பதையும் நாம் தொடர்புப்படுத்திக் காணலாம். ஐரோப்பாவின் பெரும் நகரங்களில் ஆங்காங்கே உள்ள சிற்பங்களில் சிந்திக்கும் மனிதனின் வடிவம் செம்பிலும் கருங்கல்லிலும் சற்றே வேறு வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் இந்த வடிவமே இதுவரை கண்டெடுக்கப்பட்ட சிந்திக்கும் மனிதனின் ஆரம்பக்கால மிகப் பழமையான சிற்ப வடிவமாக அறியப்படுகின்றது.
as3
“The Nurse” எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தச் சிற்பம் சற்றே நுணுக்கமானது. இச்சிற்பத்தில் தலைப்பகுதி துண்டிக்கப்பட்ட வகையில் இது அமைந்துள்ளது. கி.மு.4800 லிருந்து கி.மு.4500 ஆண்டு வாக்கில் செய்யப்பட்ட சிற்பம் என இதனை வரலாற்றாய்வாளர்கள் கருதுகின்றனர். ஒரு நாற்காலியில் அமர்ந்த நிலையில் ஒரு பெண் ஒரு குழந்தையை மிகுந்த வாஞ்சையுடன் அணைத்துப் பாதுகாப்பது போல அமைக்கப்பட்ட சிற்பம் இது. நாற்காலி பயன்பாடு என்பது இக்கால கட்டத்தில் ஏதன்ஸ் பகுதியில் இருந்தது என்பதற்குச் சான்றாகவும் இச்சிற்பம் இருக்கின்றது.
டான் ப்ரவுனின் இன்ஃபெர்னோ நாவலைப் படித்தவர்களோ அல்லது அதன் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்தவர்களோ Death Mask என்பதைப் பற்றி அறிந்திருக்கலாம். கி.பி. 14ம் நூற்றாண்டு வாக்கில் ப்ளேக் நோயினால் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்ததை குறியீடாகக் காட்டும் இன்ஃபெர்னோவின் இறப்பு முகமூடி. அது மெழுகால் செய்யப்பட்டது. ஆனால், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன் மைசேனியன் நாகரிகத்து மக்களால் செய்யப்பட்ட Death Mask ஒன்று இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த முகமூடியோ முழுதும் தங்கத்தால் செய்யப்பட்ட முகமூடி. கி.மு.16ம் நூற்றாண்டைச் சேர்ந்த முகமூடி என இது அறியப்படுகின்றது. தாடியுடன் கூடிய ஒரு மனிதனின் முகமாக இது அமைந்துள்ளது. காதுப் பகுதியில் இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருப்பதையும் காணலாம். இறந்து போல ஒரு அரச குலத்தவர் அல்லது பிரபுவின் முகத்தின் மீது வைத்து மூடப்பட்ட வகையில் இது பயன்பாட்டில் இருந்துள்ளது. இன்று இந்தத் தங்க முகமூடி ஆண்டுகள் பல கழிந்தாலும், தான் அழியாமல் ஏதன்ஸ் அகழாய்வு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு அரும்பொருட்களையும் பற்றி விளக்கிக் கொண்டே செல்லலாம். மனிதர்கள் இறந்தவுடன் அவர்களது உடலைப் பானைக்குள் வைத்து அதனைப் புதைக்கும் முதுமக்கள் தாழி எனப்படும் பானைகள் இந்த அருங்காட்சியகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளன. அவை மட்டுமன்றி அக்ரபோலிஸ், ஒலிம்பியா போன்ற மிகப்பெரிய தொல்லியல் அகழ்வாய்வுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஏராளமானச் சான்றுகள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
as5
இந்த அருங்காட்சியகத்தில் ஒரு நூலகமும் இருக்கின்றது. 25,000க்கும் மேற்பட்ட நூல்கள் இந்த நூலகத்தில் உள்ளன. பெரும்பாலானவை அகழ்வாராய்ச்சி தொடர்பானவை. சில நூல்கள் 17ம் நூற்றாண்டினைச் சேர்ந்தவை. பெரும்பாலானவை 19ம், 20ம் நூற்றாண்டைச் சார்ந்த தொல்லியல் துறை சார்ந்த நூல்களே.
பணடைய கிரேக்கத்த்க்கும் தமிழகத்துக்கும் நீண்ட நெடிஅ கடல்வழித் தொடர்புகள் இருந்தன. கிரேக்கத்திலிருந்து வணிகர்களும் பண்டைய தமிழகத்திலுரிந்து வணிகர்களும் இரு நாடுகளிலும் வணிகம் செய்தனர் என்பதை மறந்து விடலாகாது. இதனைக் குறிக்கும் வகையிலான குறியீடுகளைக் கொண்ட பானைகளும் சிற்பங்களும் இங்கே கிடைப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. அந்த சிந்தனையோடு காணும் போது தமிழக வரலாற்றாய்வாளர்கள் இந்த அருங்காட்சியகம் சென்றும் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்வது மிகப் பயணளிக்கும் என்பதில் ஐயமில்லை.