Friday, June 2, 2017

90. அக்வின்க்கும் பண்டைய ரோமானிய நகரம், அதன் அருங்காட்சியகம் – பூடாபெஷ்ட், ஹங்கேரி

http://www.vallamai.com/?p=77290

முனைவர் சுபாஷிணி
பண்டைய ரோமானிய பேரரசு தெற்கே மத்தியத்தரைக்கடல் பகுதியிலிருந்து வடக்கு நோக்கி ஐரோப்பா முழுமைக்கும், இங்கிலாந்து, அயர்லாந்து என விரிந்த மிகப்பெரிய பேரரசாகத் திகழ்ந்தது. தன் ஆட்சி காலத்தில் ரோமானியப் பேரரசு தனது எல்லைக்குட்பட்ட நிலப்பகுதிகளில் நகரங்களை நிர்மானித்தது. பண்டைய ரோமானிய நகரங்களின் எச்சங்களை ஐரோப்பாவின் நாடுகளில் இன்றும் ஆங்காங்கே காணலாம். அத்தகைய சிதலமடைந்த ஒரு பண்டைய நகரமே ஹங்கேரியின் தலைநகரமான பூடாபெஷ்ட் நகரிலிருக்கும் அக்வின்க்கும் (Aquincum).
as
அக்வின்க்கும் ரோமானியப் பேரரசின் போர்த்தளவாடங்கள் நிறைந்திருந்த ஒரு பகுதி. இங்கே வீரர்களின் குடியிருப்புப்பகுதியோடு மக்களின் வாழ்விடங்களும் இணைந்த வகையில் இந்த நகரில் அமைக்கப்பட்டன. ரோமானியப் பேரரசு தனது எல்லையை விரிவாக்கிக் கொண்டே செல்லும் போது எல்லைப்பகுதி நகரங்களாக அமைந்த நகரங்களில் ஒன்று என்றும் அக்வின்க்கும் நகரைக் குறிப்பிடலாம். ரோமானியப் படை வருவதற்கு முன்னர் இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் கெல்ட்டிக் இனக்குழுவின் ஏராவாசி (Eravisci) சமூக மக்கள். கி.பி.41 வாக்கில் இங்கு 6000 பேர் கொண்ட ரோமானியப் படைகள் இங்கு வந்து, நகரை அமைத்து, கி.பி.89 முதல் இங்கு ரோமானியப் படைவீரர்களின் குடும்பங்கள் தங்கும் நகரமாக இது உருவெடுத்தது. சிறு நகரமாக இருந்த இந்த ஊர் பனோனியா வெற்றிக்குப் பிறகு பனோனியா நிலப்பகுதியின் தலைநகராமக உருவெடுத்தது. இது நிகழ்ந்தது கி.பி 106ம் ஆண்டில். அச்சமயத்தில் இந்த நகரில் 30,000லிருந்து 40,000 மக்கள் வாழ்ந்ததாக குறிப்புக்கள் சொல்கின்றன.
அக்வின்க்கும் அருங்காட்சியகம் 1894ம் ஆண்டில் பொது மக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டது. இதனை முதன் முதலில் 1778ம் ஆண்டில் பூடாபெஷ்ட் நகரில் திராட்சை தோட்டம் போடுவதற்காக நிலத்தை சீர்செய்யத் தொடங்கிய ஒரு விவசாயிதான், இப்பகுதியில் நிலத்துக்குக்கீழே தோண்டும் போது, ஒரு கட்டுமானப் பகுதி இருப்பதைக் கண்டுபிடித்து அரசுக்கு அறிவித்தார். பின்னர் இந்த நகரத்தின் ஏனைய பகுதிகள் படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்டன என்றாலும் இவை எதைச் சார்ந்தவை என அறியப்படாமலேயே இருந்தது. 1820ல் தான் இப்பகுதியில் முறையான தொல்லியல் அகழ்வாய்வு நிகழ்த்தப்பட்டது. 1860 வாக்கில் ரோமானிய குளிக்கும் குளங்கள், நீர்த்தொட்டிகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன. 1876ல் அப்போதைய இளவரசர் இந்த அகழ்வாய்வுப் பகுதிக்கு வந்து இதனை பார்வையிட்டுச் சென்றிருக்கின்றார். 1881ல் இங்குள்ள அம்பிதியேட்டர் பகுதி முழுமையாக அகழ்வாய்வில் வெளிக்கொணரப்பட்டது. 1889ல் அக்வின்க்கும் அகழ்வாய்வு அறிக்கை முறையாகச் சமர்ப்பிக்கப்பட்டு உலகுக்கு இந்த நகர் பற்றிய செய்தி விரிவாக அறிமுகமானது. 1936ம் ஆண்டு ஒரு அருங்காட்சியகமும் இணைக்கப்பட்டு இங்கு கண்டெடுக்கப்பட்ட அரும்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
as1
இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழைந்த பின்னர் வலது புறத்தில் காணப்படுவது ஒரு ஓவியனின் வீடு. இன்று காணப்படும் வடிவிலேயே கி.பி.2லும் பின்னர் மேலும் கி.பி.3லும் கட்டப்பட்ட வீடு இது. வீட்டின் வெளிப்புறம் தற்சமயம் புதுப்பிக்கப்பட்டு அக்காலத்தில் வீடு எவ்வாறு இருந்ததோ அதே நிலையில் காட்டப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் உள்ளே இது கட்டப்பட்ட, அதாவது இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த தரைப்பகுதி, அறைகள், தரையில் அமைக்கப்பட்டுள்ள மொசைக் கல்வடிவம் ஆகியன இன்றும் அதன் நிலை கெடாமல் பாதுகாக்கப்படுகின்றன. இந்த ஓவியனின் வீட்டில் வாசலில் நிலைப்பகுதி, உட்காரும் திண்ணை, உள்ளே நுழைந்ததும் வரவேற்பரை, வெவ்வேறு அறைகள், சமயலறை, உணவருந்தும் அறை, வெளிப்பகுதி என பிரித்து பிரித்துக் கட்டியிருக்கின்றார்கள். இன்று எப்படி ஒரு வீடு அமைந்திருக்கின்றதோ அதே வடிவில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லாத வீட்டின் கட்டுமானத்தை இந்த கி.பி.2ம் நூற்றாண்டு ஓவியனின் வீடு காட்டுகின்றது.
ரோமானிய வரலாற்றை பின் நோக்கிப் பார்க்கும் போது இந்த நாகரிகம் ஏராளமான தெய்வ வடிவங்களையும் புராணங்களையும் தன்னுள்ளே கொண்டிருப்பதை விலக்கிப் பார்க்க முடியாது. வீனஸ், மார்ஸ், நெப்டியூன், டயானா, அப்போலொ, வோல்கானூஸ் என பல தெய்வங்கள் பண்டைய ரோமானிய பண்பாட்டை அலங்கரித்தன. அரக்கர்களும், தேவர்களும், தேவதைகளும் குட்டி பூதங்களும் கொடிய விலங்குகளும் நிறைந்தவையே ரோமானியப் புராணக் கதைகள். கற்பனைக்கு எல்லையே ஏற்படுத்திக் கொள்ளாத ஏராளமான புராணக் கதைகள் மக்களின் வழிபாட்டிலும் அங்கம் வகித்தன எனக் குறிப்பிடும் அதே வேளையில் மன்னனையும் ஒரு கடவுளாக ஏற்றி வைத்துப் புகழ்பாடி வழிபடும் வழக்கமும் ரோமானிய பண்பாட்டில் இருந்தது என்பதையும் குறிப்பிடத்தான் வேண்டும். ரோமானிய பண்டைய புராணக்கதைகளை நினைவு படுத்தும் வகையில் ஒரு விளையாட்டு மைதானமும், புராணக்கதைமாந்தர்களின் நினைவினை ஏற்படுத்தும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியக வளாகத்திற்கு வரும் குழந்தைகள் மட்டுமன்றி பெரியோரும் இந்த விளையாட்டு மைதானத்தில் சற்று ஓய்வெடுக்கலாம்.


இந்த ரோமானிய குடியிருப்புப் பகுதியில் ஒரு பகுதியில் கசாப்புக் கடைக்காரரின் வீட்டின் அடித்தளம் அமைந்திருக்கின்றது. அதன் மறுபுறத்தில் மளிகைக்கடைக்காரரின் இல்லப்பகுதி இருக்கின்றது. ஒரு வீடு போன்ற வடிவமைப்பின் அடித்தளம் தான் இங்கு நாம் காண்பது. இந்த அடித்தளத்தைக் காணும் போது இந்த கடையின் முன்வாசல் பகுதி தெற்குப்புறமாகவும், மேற்குப் பகுதியில் சிறு கூடம் ஒன்று இருப்பது போலவும் அமைக்கப்பட்டதைக் காணமுடிகின்றது. வருகையாளர்களும் வாடிக்கையாளர்களும் சாலையிலிருந்து வரும் போது தெற்குப்புற வாசலின் வழியாக வந்து உள்ளே உள்ள பெரிய பகுதியில் தான் பொருட்களை வாங்கிச் சென்றிருக்க வேண்டும். கடையும் வீடும் ஒரே கட்டிடத்திற்குள் இருப்பது போல அமைந்திருக்கின்றார்கள். இம்மாதிரியான தொழில் செய்யும் இடமும் இல்லமும் ஒரே இடத்தில் இருப்பது பண்டைய நாகரிகங்களில் பொதுவாகக் காணப்படக் கூடிய ஒரு அம்சம் தான். ஆக, முன்புறம் உள்ள கடைப்பகுதியை அடுத்து தொடர்ந்தார்போல வருவது இல்லப்பகுதி. இங்கே சிறிய சிறிய அறைகள், சமயலறை போன்றவற்றைக் காணலாம். உடைந்தும் மிஞ்சி இருக்கும் சுவர்களில் இன்னமும் கூட ஆங்காங்கே சுவர் ஓவியங்களின் சில பகுதிகள் காணக்கிடைக்கின்றன.
as3
ரோமானிய பண்டைய நகரங்களில் நாம் காணக்கூடிய ஒரு பொது அம்சமாகத் திகழ்வது அம்பிதியேட்டர். கிரேக்கர்களைப் போலவே ரோமானிய பண்பாட்டிலும் கலையும் இசையும் பிரிக்கப்பட முடியாத அம்சங்களாகத் திகழ்ந்திருக்கின்றன. இதனைப் பிரதிபலிக்கும் சான்றுதான் அம்பிதியேட்டர் என்பது. அம்பிதியேட்டர் என்பது திறந்த வெளி மைதானத்தில் அடுக்கடுக்காக மேலே எழும்பும் வகையில் பார்வையாளர்கள் அமர செய்விக்கப்பட்ட அடுக்குகள் கொண்ட அறைவட்ட வடிவிலான மேடை. இந்த அறைவட்ட வடிவு இருக்கும் பகுதியில் பார்வையாளர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்னால் மேடையில் கலைஞர்களின் இசை நிகழ்ச்சியோ, நாடகமோ, நடனமோ, மல்யுத்தமோ ஏதாகினும் ஒன்று நடைபெறும் . இன்று நாம் பார்க்கும் காற்பந்து வளாகங்களின் முன்னோடிதான் அம்பிதியேட்டர் என்பது. அக்வின்க்கும் நகரிலும் ஒரு அம்பிதியேட்டர் கண்டுபிடிக்கப்பட்டது. அது இன்றும் நன்றாகப் பயன்படுத்தகூடிய வகையில் வெள்ளை நிறப்பளிங்கினால் வடிக்கப்பட்ட தளங்களுடன் கூடிய வகையில் அமைந்திருக்கின்றது. ஆகா.. என்ன கலைப்பாடு.. என பார்ப்போரை வியக்க வைக்கின்றது இதன் அமைப்பு.
as4
பண்டைய ரோமானிய நகரங்களின் மற்றுமொரு சிறப்பு அம்சம் பொதுக்குளியல் இடங்கள் எனலாம். சற்றே பெரிய நகரங்களில் மிகப்பெரிய குளங்களைக் காணமுடியும். அக்வின்க்கும் நகரிலும் இரண்டு குளியல் குளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நீர் இல்லாத நிலையில் இக்குளங்கள் இருந்தாலும், எவ்வாறு நீர் உள்ளே விடப்பட்டும் என்றும், எவ்வாறு நீர் வெளியே செல்லும், என்பதையும் நன்கு காணமுடிகின்றது. குளிர் நீருக்கு ஒரு குளமும் வெந்நீருக்கு ஒரு குளமும் என இரண்டு குளங்கள் இங்குள்ளன.
இவை மட்டுமன்றி இந்த பண்டைய ரோமானிய நகரில் வீரவிளையாட்டுக்கான மைதானம், இசைப்பள்ளி, பயிற்சிக்கூடங்கள் பூங்காக்கள் போன்றவையும் இருக்கின்றன. இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகள் பழமையான ஒரு நகரை நேரில் கண்டு அனுபவிக்கும் வாய்ப்பினை அக்வின்க்கும் அருங்காட்சியகமும் இந்த நகரின் வளாகமும் நமக்கு அளிக்கின்றன.

No comments:

Post a Comment