Monday, September 12, 2016

72. ஹெர்மான் ஹெஸ்ஸ அருங்காட்சியகம், கால்வ், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி

ஹெர்மான் ஹெஸ்ஸ 1962ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றபோது அவருக்கு வயது 82. ஜெர்மானிய இலக்கியவாதி என்ற ஒரு எல்லைக்குள் மட்டுமே அவரது இலக்கிய ஆளுமை என்றில்லாது உலகப்புகழ்பெற்ற, உலகத்தரம் வாய்ந்த ஒரு எழுத்தாளர் என்ற புகழைப் பெற்ற அவரை அன்றைய “டி சைட்” (Die Zeit) நாளேடு இனி இந்த எழுத்தாளர் காலத்தால் மறக்கப்படுவார் என எழுதியது. ஆனால் இந்தக் கூற்று பொய்யானது என்பதைக் காலம் நிரூபித்து விட்டது. ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் எழுத்துக்கள் இதுவரை அறுபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இன்றும் அவரது எழுத்துக்களால் அவர் நினைக்கப்படுபவராக இருக்கின்றார்.



தான் ஒரு இலக்கியவாதி.. இன்னும் சொல்லப்போனால் ஒரு கவிஞன் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்தியாவில் அவரது தந்தையார் ஒரு லூதரன் மதபோதகராகப்பணியாற்றியதாலும் அவரது தாயார் ஒரு லூதரன் மத போதகரின் மகள் என்பதாலும் பெற்றோரின் எண்ணம் தன் மகனும் அதே பணியைத் தான் மேற்கொள்ளப்போகின்றான் என்பதாக இருந்தது. ஆனால் தனது எண்ணம் முழுமையும் இலக்கியத்திலே தோய்ந்திருப்பதை அவர் உணர்ந்து தன் வாழ்க்கைப் பாதையை தன் விருப்பப்படியே அமைத்துக்கொண்டு, அழியாப் புகழை இன்று பெற்றிருக்கின்றார்.



ஹெர்மான் ஹெஸ்ஸ ஜெர்மனியின் பாடர்னுர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் கால்வ் நகரில் 1877ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி பிறந்தார். இந்த கால்வ் ஒரு அழகிய சிற்றூர். எனது இல்லம் இருக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து ஏறக்குறைய 27 கிமீ தூரம் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ஊர் இது.

மதபோதனையாளர்கள் குடும்பத்தில் பிறந்த ஹெர்மான் ஹெஸ்ஸவிற்குப் ப்ராட்டஸ்டண்ட் சமய நம்பிக்கைகளை இளமைக் காலம் முதல் பெற்றோர் மற்றும் அவர் வளர்ந்த சூழல் அவருக்கு இயல்பாக ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அதில் மனம் நிறைவடையாமல் தனது சுயத்தைத் தேடுவதிலே அவர் கவனமும் ஆர்வமும் இருந்தது. ஒருபள்ளியை விட்டு மற்றொன்று என திருப்தியுறா நிலையிலேயே தன் கல்வியைத் தொடர்ந்து பின்னர் தன் 15ம் அகவையில் கல்வியை விட்டு விட்டு ஒரு கடிகாரம் செய்யும் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்குக் கடிகாரம் பழுது பார்த்தலோடு புத்தக விற்பனை செய்வதும் தொழிலாக அமைந்தது.

சமயத்திலிருந்து விடுதலை என்பதாகவும், தனி மனித சுதந்திர எண்ணங்களின் செயல்பாடு எவ்வகையில் அமைத்துக் கொள்வது என்றும் அவரது சிந்தனை இருந்தது. வாழ்க்கையைப் பற்றிய பல கேள்விகள் அவரது தேடலில் இருந்தன. தனது சுய அனுபவங்களையே தனது இலக்கியப்படைப்புகளில் புகுத்தி இலக்கியங்களைப் படைத்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ.



அவரது நாவலான Peter Camenzind அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து வெற்றியை அளித்தது. இது அவருக்கு இலக்கியத்தின் வழியே அவரது வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை ஈட்டும் வழியை அமைத்துக் கொடுத்தது. ஒரு புகைப்படக்கலைஞரான மரியா பெர்னோலியை திருமணம் செய்து கொண்டு ஜெர்மனியின் தெற்குப் பகுதியான கான்ஸ்டன்ஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவரது மண வாழ்க்கை இனிமையாகத் தொடரவில்லை. இருவரும் திருமண பந்தத்திலிருந்து பிரிந்தனர். பின்னர் பயணங்களில் தன் வாழ்க்கையைச் செலவிட ஆரம்பித்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ. புதிய ஊர்களும் மக்களும் வாழ்க்கை நெறிமுறைகளும் சமய அனுபவங்களும் அவர் தேடுதலுக்கு விருந்தாக அமைந்தன. இலங்கைக்குச் சென்று பின்னர் இந்தோனீசியா சென்று சேர்ந்தார். ஆசிய நாடுகளின் வாழ்க்கை முறை அவருக்குப் புதிய அனுபவங்களைத் தர, வாழ்க்கையில் புதிய கோணங்களை அவர் உணர வாய்ப்பாக இது அமைந்தது. இந்தப் பயணங்கள் தொடர்ந்தன. பயணங்கள் தந்த அனுபவத்தின் சாராம்சமாக சித்தார்த்தா என்ற காப்பியத்தை இவர் வடித்தார்.

திருமண முறிவுக்குப் பின்னர் பல இடங்களில் பயணித்து பின்னர் சுவிச்சர்லாந்திற்குக் குடிபெயர்ந்தார், அங்குதான் அவரது பல இலக்கிய ஆக்கங்கள் படைக்கப்பட்டன. 1924ம் ஆண்டில் சுவிச்சர்லாந்தின் குடியுரிமை பெற்று ரூத் வாகனர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் மூன்று ஆண்டுகள் தான் நிலைத்தது. பின்னர் வரலாற்றுத்துறை நிபுணரான நினோன் டோல்பின் என்பவரைத் திருமணம் செய்து தன் புது வாழ்க்கையை மீண்டும் 1931ம் ஆண்டில் தொடங்கினார். இவர்கள் உறவு அவரது வாழ்நாளின் இறுதி வரை நீடித்தது.




இரண்டாம் உலகப்போர் ஐரோப்பா முழுமையையும் பாதிக்கச் செய்த ஒரு நிகழ்வு. ஹெர்மான் ஹெஸ்ஸ, நாசி அரசின் மீதான தனது எதிர்ப்புகளை வெளிப்படையாகக் காட்டியதோடு ஜெர்மானிய அகதிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டமான 1946ஆம் ஆண்டில்தான் இவரது இறுதி படைப்பான “The Glass Bead Game” நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்தப்பரிசு அவரது மனித உரிமைக் கருத்துகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் உரக்கச்சொல்லும் அவரது இலக்கியப்படைப்புக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்து அவரைப் பெருமைப்படுத்தியது. ஹெர்மான் ஹெஸ்ஸேவின் நூல்கள் ஜெர்மனியில் மிகப்பிரபலம் அடைந்தன. ஆனால் பின்னர் அவரது நூல்களுக்கான புகழ் சிறிது சிறிதாக குறையத் தொடங்கி அவரது மறைவு நேரத்தில் அவர் இலக்கிய உலகால் மறக்கப்படுவார் என சிலரால் பேசப்படும் அளவிற்கு அவரது நூல்கள் மேல் விமர்சனம் எழுந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் பொய்யாக்கப்பட்டதை காலம் நிரூபித்தது.

அவரது நூல்கள் ஜெர்மனி மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. இவரது சித்தார்த்தா என்ற நாவல் தமிழில் திரிலோக சீத்தாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் வாசகர்களின் மனத்தையும் கொள்ளைக் கொண்டது. ஞானத்தேடலினை மையமாக வைத்து அவர் புனைந்த இந்த நாவல் பலரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காவியமாகத் திகழ்கின்றது.


ஹெர்மான் ஹெஸ்ஸே அவர்களின் பிறந்த இல்லம் ஒரு அருங்காட்சியகமாக கால்வ் நகரில் அமைக்கபப்டுள்ளது. நதி பாயும் ஓர் அழகிய சிற்றூர் இது. இங்கே நகரின் மையப்பகுதியில் ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் வெண்கல சிலை வருவோரை வரவேற்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தின் முகவரி
Hermann-Hesse-Museum
Marktpl. 30, 75365 Calw,Germany
00 497051 7522

No comments:

Post a Comment