Monday, May 2, 2016

62. கெல்ட்டன் அருங்காட்சியகம், ஹோஹ்டோர்ஃப், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி


ஏறக்குறைய இன்றைக்கு 2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியின் பாடன் ஊர்ட்டென்பெர்க் எனும் மானிலத்தில் உள்ள ஹோஹ்டோர்ஃப், எனும் பகுதியில் இறந்த தங்களின் மன்னனுக்காக கெல்ட் மக்கள் குன்று ஒன்றை உருவாக்கி அதில் நினைவாலயம் ஒன்றை உருவாக்கினார்கள். நாளடையில் அப்பகுதியில் பல்வேறு பூகோள நில மாற்றங்களினாலும் விவசாயம் தொடர்பான நடவடிக்கைகளினாலும்  அந்தக் குன்று சற்றே தாழ்நிலமாக வடிவம் பெற்றது. 1968ம் ஆண்டில் ஒரு தன்னார்வத் தொண்டூழிய தொல்லியல் ஆய்வாளர் சில வித்தியாசமான கற்களை அப்பகுதியில் கண்டெடுக்கவே, அப்பகுதியைத் தொல்லியல் ஆய்விற்கு உட்படுத்த  முயற்சிகள் எடுக்க, அங்கு ஆய்வுகள் தொடங்கின. உயர்தரமான அகழ்வாய்வு முறைகளைப் பயன்படுத்தி இப்பகுதியிலும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட முயற்சிக்குப் பலன் கிடைத்தது.




2500 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போன தம் மன்னனைப் புதைத்து வைத்து அவன் சென்றிருக்கும் மறு உலகத்தில் அவனுக்குத்தேவை எனத் தாம் கருதிய பொருட்களையும் கூடவே வைத்து மிக அழகிய அறை ஒன்ற அந்தக் குன்றிற்குள் அம்மக்கள் உருவாக்கியிருக்கின்றனர். அகழ்வாராய்ச்சியின் போது இறந்த மன்னனுக்காக அம்மக்கள் கட்டிய அறை, அந்த அறையில் அம்மன்னனை அவர்கள் உறங்க வைத்திருந்த தங்கக்கட்டில், அவன் உடலின் மேல் அவர்கள் அணிவித்திருந்த தங்கத்தினாலான அணிகணலன்களான கால் வளையங்கள், கை வளையங்கள் நெற்றிப்பகுதி அலங்காரம் என்பனவற்றோடு அவன் மேற்குலகில் பயணம் செய்வான் என்ற நம்பிக்கையில் அவனுக்காக உயர்தரமான  ஒரு தேரும் அவன் நீர் அருந்தும் வகையில் பெரிய தங்கத்தினாலான ஒரு கூஜாவையும் தயாரித்து அந்த அறையில் அம்மக்கள் வைத்திருந்தனர் என்பது இந்த அகழ்வாயில் கண்டுபிடிக்கப்பட்டது.

டோனாவ் நதிக்கறையில் கண்டெடுக்கப்பட்ட ஏனைய சில இறந்தோருக்கான ஈமச்சடங்கு நினைவாலயங்களை ஒத்த வடிவிலேயே இந்த கெல்ட் நினைவாலயக் குன்றும் அதில் கிடைத்த ஈமச்சடங்குச் சின்னங்களும் அமைந்திருக்கின்றன, இந்த ஆய்வு ஜெர்மனியில் எந்தெந்த பகுதிகளில் கெல்ட் இன மக்கள் விரிந்து பரந்து வாழ்ந்தனர் என்பதை அடையாளம் காண உதவும் வகையில் இருக்கின்றது என்பது மிக முக்கிய அம்சமாக அமைகின்றது.


மன்னன் புதைக்கபப்ட்ட பகுதியில் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நிகழ்த்திய அகழ்வாய்வுகளில் அதே பகுதியில் கெல்ட் இன மக்கள் வாழ்ந்ததற்கானத் தடயங்களாக அமையும் பல பொருட்களை அகழ்வாய்வுக் குழுவினர் கண்டெடுத்திருக்கின்றனர். அதில்  கெல்ட் சமூகத்தினர் தமது அன்றாட வாழ்க்கை உபயோகத்திற்காகப் பயன்படுத்திய பொருட்கள், இரும்புப் பட்டறை, மண்பாண்டங்கள், குதிரை வண்டிகள், சமையல் அடுப்புக்கள், சமையல் பாத்திரங்கள், அலங்காரப் பொருட்கள். தொழிற்கருவிகள், போருக்கான கருவிகள் என பலதரப்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. மனித  எலும்புக்கூடுகளும்  இதில் அடங்கும்.




இந்தப் பொருட்களை எல்லாம் காட்சி வைக்கும் பொருட்டு ஜெர்மனியின் பாடர்ன் ஊர்ட்டெம்பெர்க் மானிலத்தில் உள்ள ஹோஹ்டோர்ஃப் பகுதியில் ஒரு பிரத்தியேக அருங்காட்சியகத்தை உருவாக்கி, அது  1991ம் ஆண்டு மே மாதம் 25ம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இந்த அருங்காட்சியகம் கி.மு540 வாக்கில் வாழ்ந்து இறந்த அம்மன்னனின் ஈமச்சடங்கு அறை, அவனது முழு உடலின் எலும்புக்கூடு ஆகியவற்றோடு  அங்கே கண்டெடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் காட்சிக்கு வைத்திருக்கும் ஒர் இடமாகத் திகழ்கின்றது.

அருங்காட்சியகத்தின் உள்ளே பட விவரனைகள் உள்ளன. ஆங்கிலம், டோய்ச் ஆகிய இரு மொழிகளிலும் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது. முதல்  தளத்தில் கெல்ட் சமூகத்து மக்கள் பற்றிய வரலாற்றுத் தகவல்களோடு விரிவான அகழ்வாய்வுப் பணி தொடர்பான செய்திகள் வழங்கப்பட்டுள்ளன. மன்னனின் எலும்புக்கூடும் முதல் தளத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.




கீழ்தளத்தில் ஒரு தனிப்பகுதியில் மன்னனின் அறை, அவனது தங்கக் கட்டில், அவனது தேர், அவனது அணிகலண்கள், தண்ணீர் கூஜா ஆகியன மிகச்சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதனைக் கடந்து சென்றால் ஒரு தனி அறை வருகின்றது. அங்கே இந்த அருங்காட்சியகம் பற்றியும் இங்கு படிப்படியாக நிகழ்ந்த  தொல்லியல் ஆய்வுகள் பற்றிய விளக்கமும் ஆவணப்படமாக காட்டப்படுகின்றது.  பார்வையாளர்கள் இங்கு வந்து அமர்ந்து முழு தகவல்களையும் திரைக்காட்சியாகப் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

இப்பகுதியில் நிகழ்ந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய சிலை ஒன்றும் இதே அருங்காட்சியகத்தில் உள்ளது. அது ஒரு போர் வீரனின் சிற்பம். இது மிகத் தனித்துவம் வாய்ந்த கெல்ட் இன போர் வீரர்கள், அதிலும் குறிப்பாக ஆல்ப்ஸ் பகுதியை பிரதினிதிக்கும் வகையில் அமைந்த ஒரு மிகப் பெரிய ஆள் உயர சிற்பம்.



இந்த அருங்காட்சியகத்திற்கு வருபவர்கள் கெல்ட் மக்களைப் பற்றி அறிந்து கொள்ள பல தகவல்கள் உள்ளன. புத்தகங்களும் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

அருங்காட்சியகத்தின் வெளிப்புறத்தில் கெல்ட் மக்களின் பண்டைய வாழ்க்கை முறையை சித்தரிக்கும் மாதிரி குடியிறுப்புக்களை உருவாக்கியுள்ளனர். இது கெல்ட் மக்களின் பண்டைய இல்ல அமைப்பு,  பட்டறை அமைப்பு, விவசாய அமைப்பு ஆகியவற்றைப் பார்வையாளர்களுக்கு விளக்குவதாகவும் அமைகின்றது.




நான் வசிக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து 27கிமூ தூரத்தில் தான் இந்த அருங்காட்சியகம் அமைந்திருக்கின்றது என்றாலும் இந்த ஆண்டு தான் இதற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. கெல்ட் இன மக்களைப் பற்றி ஒரு நூலில் வாசித்த போது இந்த நகர் பற்றி  தற்செயலாக அறிய வர மேலதிகத் தகவலை இணையத்தில் தேடிய போது இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது.  இங்கே நேரில் சென்று இங்குள்ள அரும்பொருட்களை அதிலும் குறிப்பாக இறந்த மன்னனின் ஈமச்சடங்கு அறை, தேர், அவனது தங்கக் கட்டில், அணிகலன்கள்   என பார்த்தபோது ஆச்சரியத்தில்  மூழ்கினேன்.

அருங்காட்சியகத்தின் முகவரி
Keltenmuseum Hochdorf/Enz
Keltenstraße 2, 71735 Eberdingen.

இப்படித்தான் பக்கத்திலே  இருந்தாலும் கூட பல முக்கிய இடங்களை நாம் காணத்தவறுவது என்பது பலருக்கும் நிகழ்ந்திருக்கும். ஆக நமது சுற்றுப்புறத்தில் இருக்கின்ற முக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை தேடி அவற்றைச் சென்று பார்த்து வருவது நமது வரலாற்று அறிவை மேலும் பெறுக்கிக் கொள்ள உதவும்.

சரி. அடுத்த பதிவில் ஐரோப்பாவில் உள்ள மேலும் ஒரு அருங்காட்சியகத்தை  அறிமுகம் செய்கின்றேன். எந்த ஊரில் உள்ள எந்த அருங்காட்சியகமாக இருக்கும் என்று யோசித்து வையுங்கள்!

No comments:

Post a Comment