Monday, October 21, 2013

11. ஊட்ஸி அருங்காட்சியகம், போல்ஸானோ - 3, இத்தாலி.

முனைவர்.சுபாஷிணி 

அண்மையில் வெளிவந்த பி.பி.சி செய்தி ஒன்று குறைந்தது 19 பேர் ஊட்ஸியின் பரம்பரையில் வந்தவர்கள் என்று இத்தாலியின் திரோல் பகுதியில் உள்ளவர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.bbc.co.uk/news/world-europe-24477038 தற்கால DNA சோதனைகளின் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் இவ்வகையில் ஆய்வு செய்து ஒரு நபரின் பரம்பரையை இனங்காணும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது. இந்த ஆய்வுகளினால் 5300 ஆண்டு பழமையான ஊட்ஸிக்கும் தற்சமயம் உறவினர்கள் இருப்பது நமக்குத் தெரிய வருவதும் ஒரு சுவாரசியமான விஷயம் தானே. இண்டஹ் ஆய்வுகள் மேலும் தொடர்வதால் இன்னும் பலர் கூட அடையாளம் காணப்படலாம்.


ஊட்ஸியை ஆராயும் ஒரு ஆய்வாளர்.
நன்றி:http://www.voanews.com



ஊட்ஸி எப்படி இறந்திருப்பார்?

ஆய்வாளர்களின் கணக்குப்படி இவர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சமயத்தில் இவரை யாரோ தாக்கியிருக்கின்றனர். தாக்குதலால் உண்டான காயம் உடலில் தோல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் எய்திய அம்பினால் தான் இவர் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது. அந்த அம்பு முதுகுப் பகுதியின் வழியாகச் சென்று இருதயத்தைத் தாக்கி அம்பில் இருந்த விஷமும் உடலின் ரத்தத்தில் கலந்து இந்த இறப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதே மருத்துவக் கண்டுபிடிப்பு.

ஊட்ஸியின் உடலில் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகள் அவர் உடலுடன் கண்டெடுக்கப்பட்ட சாதனங்கள், எச்சங்கள் அனைத்தும் அவரது வாழ்க்கை நிலையை விளக்குவதற்கு ஆய்வாளர்களுக்கு பெரிதும் உதவுவனவாக அமைந்திருக்கின்றன. ஊட்ஸி தனது கையில் வைத்திருந்த கோடாறியும் அம்புகளும் ஏனைய சாதனங்களும் அவர் ஒரு வீரராக இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு இட்டுச் செல்கின்றன. அவர் கொண்டிருந்த ஆடை அமைப்பு, ஆயுதங்கள், உடலில் இருந்த தானிய வகைகள் இவையனைத்தும் இவர் ஒரு ஷமான் – shaman (குறி சொல்பவர் ) ஆக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன. இக்கருத்துக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமைவது இவர் உடலில் இருக்கும் சில குறிகள்.

ஊட்ஸியின் உடலில் பச்சை குத்தப்பட்டதற்கான அறிகுறிகளை இவரது உடலை ஆராய்ந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். கால் பகுதியில் புள்ளிகள் பல குத்தப்பட்டிருப்பதையும் இவை ஏதும் நோயினால் ஏற்பட்டதல்ல என்பது பச்சைக் குத்தப்பட்ட குறிகள் என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இத்தாலியின் இப்பகுதியில் வாழ்ந்த பண்டைய மக்களின் நாகரிகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளுதல் என்பது குறி சொல்பவர்கள் பழக்கத்தில் இருந்து வரும் ஒரு ஐதீகமாக கருதப்படுகிறது. பச்சை குத்துதல் என்பது இந்த ஐரோப்பிய மனிதர் சார்ந்திருந்த சமூகத்திலும் இன்றைக்கு 5300 ஆண்டுகளுக்கு முற்பட்டே இருந்து வந்தது என்பதை அறியும் போது இதே போன்ற பச்சைக் குத்திக் கொள்ளுதல் நம் இந்திய பண்பாட்டிலும் வழக்கில் இருந்து வருவதும் இவ்விதமான பண்பாட்டு ஒற்றுமைகளும் ஆச்சரியம் கொடுக்கின்றன.

ஊட்ஸியின் உடல் மிகப் பாதுகாப்பாக இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஊட்ஸி மம்மி இருக்கும் பகுதிக்கு பின் பகுதியில் பனிப்பகுதி போல அதிகமான குளிர் தரும் வகையில் குளிர்சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. ஊட்ஸி ஒரு கண்ணாடி அறைக்குள் வைக்கப்பட்டிருக்கிறார். ஆகவே நேராகப் பார்க்க முடியாது. ஒரு கண்ணாடி வழியாகத்தான் காண முடியும். மம்மியின் உடல் எந்த வகையான பாக்டீரியாவினாலும் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் இந்த பாதுகாப்பு அமைந்துள்ளது.


ஊட்ஸி வைக்கப்பட்டிருக்கும் இக்கட்டிடத்தின் முதல் மாடிப்பகுதியின் மாடல் இது. (மே 2013)


ஊட்ஸியின் உடலை புதைப்பதா எரிப்பதா அல்லது இப்படி காட்சிக்கு வைப்பதா என்ற கேள்விகளும் ஆரம்ப நிலையில் எழாமல் இல்லை. ஆனால் இவர் உடல் ஆய்வுலகத்திற்கு அளித்த பல்வேறு தகவல்கள் இவர் உடலின் அமைப்பு, பனியிலே உறைந்து மட்டுமே மம்மியாக்கப்பட்ட ஒரு உடல் என்ற வகையில் மிகத்தனித்துவம் வாய்ந்த மம்மியாக ஊட்ஸி ஆய்வுலகத்தின் கண்களுக்குத் தென்படுவதால் பொதுமக்களும் ஊட்ஸியை காண வேண்டும்; அதற்கு ஒரு அருங்காட்சியகம் வேண்டும் என்று முடிவாகி இப்போது நிரந்தரமாக இங்கே ஊட்ஸி காட்சிக்கு இருக்கின்றார்.


இப்போது இப்படி இருக்கும் ஊட்ஸி..


இப்படித்தான் இருந்திருப்பார் என அண்மைய கண்டுபிடிப்புக்களை வைத்து மாடல் செய்திருக்கின்றனர்.


ஊட்ஸி அருங்காட்சியகத்திற்கு நானும் என் கணவரும் சென்ற போது வசந்த கால தொடக்கம். ஆனால் குளிர் 15 டிகிரி, மழைத்தூரலும் வேறு சேர்ந்து கொண்டது. அருங்காட்சியகத்தினுள்ளே குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களை அனுமதிப்பதால் நாங்கள் ஏறக்குறைய 1 மணி நேரம் வரிசையில் காத்திருந்து டிக்கெட் பெற்றுக் கொண்டு உள்ளே சென்று பார்த்தோம். அந்தக் குளிரில் குடை பிடித்துக் கொண்டு மழையில் நின்று கொண்டிருந்த அசௌகரியங்களெல்லாம் ஊட்ஸியை நேரில் பார்த்து அவர் பற்றிய ஆய்வு விஷயங்களை அறிந்து கொண்ட போது மறைந்து விட்டன.

ஊட்ஸியைப் பற்றி விரிவான விவரங்கள் தரும் நூல் Otzi: The Iceman. இந்த நூல் அருங்காட்சியகத்திலேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த நூலை இத்தாலி, டோய்ச், ஆங்கிலம் ப்ரென்ச் ஆகிய மொழிகளில் மொழி பெயர்த்து அருங்காட்சியகத்தின் மேல் மாடியில் ஒரு வாசிக்கும் பகுதி அமைத்து அங்கு வைத்திருக்கின்றனர். படங்களுடன் கூடிய அனைத்து வயதினரும் வாசித்து மகிழக் கூடிய நூல் இது. ஊட்ஸியைப் பற்றி மேலும் அதிக விவரங்கள் அறிந்து கொள்ள விரும்புவோர் அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ பக்கமான http://www.iceman.it/ சென்று மேலும் பல படங்களும் விவரங்களும் வாசித்துப் பயனடையலாம்.

இத்தாலியின் திரோல் மாகாணத்திற்குப் பயணம் செல்பவர்கள் மறக்காமல் சென்று பார்த்து வர வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது என்பதில் சந்தேகமில்லை!


No comments:

Post a Comment