Wednesday, November 23, 2016

78. மகாத்மா காந்தி அருங்காட்சியகம்- நினைவு இல்லம், (ஃபீனிக்ஸ்) டர்பன், தென் ஆப்பிரிக்கா

http://www.vallamai.com/?p=73434

முனைவர்.சுபாஷிணி

மகாத்மா காந்தி என பெருமையுடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்கள் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி 1869ஆம் ஆண்டில் இந்தியாவின் போர்பந்தர் என்ற பகுதியில் பிறந்தார். இளம் பிராயத்தில் உள்ளூரில் கல்வி கற்று திருமணமும் முடித்து பின்னர் 1888ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் லண்டன் நகருக்குச் சென்று அங்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றார். அதன் பின்னர் தென்ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு இந்திய கம்பெனிக்குச் சட்டத்துறை உதவிகள் செய்யும் பணிக்காக நியமிக்கப்பட்டு 1893ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா வந்தடைந்தார். 1914ஆம் ஆண்டுவரை, அதாவது 20 ஆண்டுகள் தன் குடும்பத்துடன் மகாத்மா காந்தியவர்கள் தென்னாப்பிரிக்காவின் டர்பன் புறநகர் பகுதியான ஃபீனிக்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்தார். அவர் வாழ்ந்த இல்லம் சீரமைக்கப்பட்டு ஒரு அருங்காட்சியகமாகவும் நினைவாலயமாகவும் இருக்கின்றது. அருகிலேயே மகாத்மா காந்தியவர்கள் தொடங்கிய அச்சகமும் இன்னமும் அதன் சிறப்பு குறையாது அமைந்திருக்கின்றது.



டர்பன் நகரிலிருந்து வடக்கு நோக்கிய பயணமாக N2 சாலையில் 177 எக்ஸிட் எடுத்து Kwamashu H’way (M25) Inanda R102 சாலையில் வந்து இடது பக்கம் தொடர்ந்து பயணிக்கும் போது சாலையின் இருபக்கமும் மகாத்மா காந்தி நினைவு இல்லம் பற்றிய விளம்பர அட்டைகள் விளக்குக் கம்பங்களில் இணைத்திருப்பதைக் காணலாம். வழிகாட்டிப் பலகையைப் பார்த்தே உள்ளே நுழைந்தால் அங்கே சுலபமாக இந்த இடத்தை நாம் அடைந்து விடலாம். ஃபீனிக்ஸ் மக்கள் குடியிறுப்புப் பகுதி என இப்பகுதி அழைக்கப்படுகின்றது.

​2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பத்து நாட்கள் பயணமாக டர்பனுக்குச் சென்றிருந்தேன். இங்கு செல்வதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காந்தியின் சத்தியசோதனை நூலை நான் வாசித்திருப்பதால் அவர் ஆப்பிரிக்காவில் சில காலங்கள் வாழ்ந்தார் என்பது நினைவில் இருந்தது. இந்தப் பயணம் அமைந்தபோது கண்டிப்பாகச் சென்று பார்த்து வரவேண்டிய ஒரு இடம் இது என என் பயணக் குறிப்புப் பட்டியலில் இணைத்துக் கொண்டேன்.



காந்தி நினைவு இல்லம் காணச் செல்கின்றோம். இந்திய வம்சாவளியினர் நிறைந்த ஒரு இடமாக இது இருக்கும் என்ற எண்ணம் மனதில் இருந்தது. ஆனால் அந்த எண்ணத்தைப் பொய்ப்பிக்கும் வகையில் சுற்றிலும் எளிமையான, ஆப்பிரிக்க இனமக்களின் கிராமமாகக் காட்சியளித்தது ஃபீனிக்ஸ். நான் சென்றிருந்த வேளையில் ஆப்பிரிக்க சூலு இன மக்கள் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து கொண்டும் குழந்தைகள் விளையாடிக் கொண்டும் என இருந்தனர்.



உள்ளே செல்லும் போது முதலில் நம்மை வரவேற்பது மகாத்மா காந்தி ஆரம்பித்த அச்சகத்தின் கட்டிடம். இது ஒரு சர்வதேச பத்திரிக்கை அச்சகம் என்ற குறிப்புடன் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் இங்குதான் காந்தி தனது Indian Opinion என்ற பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தினார். பின்னர் இந்தப் பத்திரிக்கை Opinion எனப் பெயர் மாற்றம் கண்டது. 1903 முதல் இந்தப் பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் 1961ஆம் ஆண்டு இப்பத்திரிக்கை வெளியீடு நின்று போனது.

இங்கு காந்தி வாழ்ந்த இல்லத்திற்கு சர்வோதயா என்ற பெயர் அமைந்திருக்கின்றது. இந்த இல்லம் இருக்கும் இடத்தில் முதலில் காந்திக்கும் அவர் குடும்பத்திற்கும் அமைக்கப்பட்ட இல்லமானது 1985ஆம் ஆண்டில் இப்பகுதியில் நிகழ்ந்த இனாண்டா கலவரத்தில் தீயில் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் அதே இடத்தில் அதே வகையில் புதிய இல்லம் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் தரைப்பகுதிகள் தீயில் சேதமடையாததால் வீட்டின் மேல் பகுதியை மட்டும் புதுப்பித்து நினைவில்லமாக எழுப்பியிருக்கின்றனர். இந்த இல்லத்தின் உள்ளே மிக எளிமையான வகையில் காந்தியை நினைவூட்டும் பல வரலாற்று நிகழ்வுகளின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.



​வீட்டின் முன் புறத்தில் சிறிய பூங்காவனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவனத்தின் ஒரு பகுதியில் மிக அழகான சிறிய குடில் ஒன்று அமைக்கப்பட்டு அதில் உள்ளே காந்தியின் சிலை ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் ஒரு சமூக மையம் போன்ற ஒரு கட்டிடம் உள்ளது. இங்கே காந்தியின் பெரிய உருவப் படங்கள் குறிப்புகளுடன் உள்ளன.

​மீண்டும் முன் பகுதிக்கு வந்தால் அச்சகத்தை வந்தடைவோம். அச்சகத்தின் உள்ளே உள்ள அறையில் காந்தி வாழ்ந்த காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் தொகுதிகள் அமைந்திருக்கின்றன. இவை வரலாற்றை நினைவூட்டும் ஆவணங்கள். இங்கே விரும்புவோர் காந்தி தொடர்பான நினைவுச் சின்னங்களை வாங்கிச் செல்லலாம். இங்கே வருவோருக்கு இலவசமாக இந்த நினைவு இல்லம் பற்றிய ஒரு சிறு குறிப்பு அட்டையை வழங்குகின்றனர்.



இங்கு, இந்த அச்சகத்தில் தான் காந்தி தனது முதல் நூலான Indian Home Rule நூலை எழுதி வெளியிட்டார். இந்த நூலில் அவர் இந்தியாவிற்கான தனது அரசியல் சிந்தனைகளையும் பல மதங்களுக்கிடையிலான மத நல்லிணக்கத்தின் தேவை பற்றியும் எழுதியுள்ளார். அண்ணல் காந்தி மதத்தீவிரவாதக் கொள்கை கொண்டோரால் கொல்லப்பட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது சிலைக்கு மரியாதை செய்கின்றோம். ஆனால் நாம் அவரது கொள்கைகளான அகிம்சையைப் போற்றுவதும் இல்லை, அவரது கொள்கையான மத நல்லிணக்கத்தை மதிப்பதும் இல்லை என்ற சூழலே பெருகி வருகின்றது.

மகாத்மா காந்தியடிகளின் வாழ்வில் தென் ஆப்பிரிக்க வாசம் என்பது மிக முக்கியமானது. இங்கிருந்த காலத்தில் அவர் நேரில் சந்தித்த ஆப்பிரிக்க மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறையும் தென் இந்தியாவிலிருந்து சென்றிருந்த இந்திய கரும்புத் தோட்டக் கூலித் தொழிலாளருக்கு எதிரான ஒடுக்குமுறையும் அவரை விடுதலை பற்றி சிந்திக்க வைத்தன. இந்த சிந்தனைக்கு வித்திட்டவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் தமிழகத்திலிருந்து ஆப்பிரிக்காவிற்குக் கூலியாகக் குடியேறிய பெற்றோருக்குப் பிறந்த தில்லையாடி வள்ளியம்மை என்ற போராளிப் பெண். தம் மக்களுக்கு எதிராக ஆங்கிலேய அரசு மேற்கொண்ட கடும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்தார். மகாத்மா காந்தியடிகள் ஏற்பாடு செய்து நடத்திய போராட்டத்தில் ஈடுபட்ட அவரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அங்கு மோசமான நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்ட சில நாளிலேயே இவர் இறந்தார். இவரது மறைவு காந்தியடிகள் மனதில் விடுதலை உணர்வினை ஆழமாகப் பதிய வைத்தது.

தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் வாழ்ந்த காலத்தில் ஜோன் ரஸ்கின் எழுதிய Unto This Last என்ற நூலின் தாக்கத்தால் டர்பனின் புறநகர்பகுதியான ஃபீனிக்ஸில் ஒரு சமூக நலக்குடியேற்றப்பகுதியை 1904ம் ஆண்டில் இவர் வடிவமைத்தார். இப்பகுதியில் ஒரு அச்சகம், ஒரு மருத்துவமணை, பள்ளிக்கூடம், வீடுகள் என அனைத்தும் இந்த குடியேற்றப்பகுதியிலேயே இருப்பது போல அமைத்தார். கூலிகளாக இருக்கும் மக்களும் எல்லா நலன்களையும் பெற வேண்டும் என்பது அவரது மைய நோக்கமாக இருந்தது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்தக் குடியிறுப்பு பகுதியை அவர் வடிவமைத்து செயல்படுத்தியும் காட்டினார். இன்றும் தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைக்கு எதிரான கொடுமைகளை எதிர்க்கும் குறியீடாக மகாத்மா காந்தியடிகளின் இந்த சர்வோதய நினைவில்லம் திகழ்கின்றது.

Monday, November 14, 2016

77. ஹெச்.சி.ஆண்டர்சன் அருங்காட்சியகம், ஓடன்சீ, டென்மார்க்

http://www.vallamai.com/?p=73252

முனைவர்.சுபாஷிணி

பிளாட்டோவின் தி ரிப்பப்ளிக் நூலில், சாக்ரடிஸ் அடிமண்டிசுடன் நிகழ்த்தும் கருத்துரையாடலில் புராணக்கதைகள் பற்றிக் கூறும் போது ஒரு கருத்தை முன்வைப்பார். அதாவது புராணக்கதைகள் தரம் மிகுந்தவையாக அறிவுக்குப் பொருந்துவதாக அமைய வேண்டும். கற்பனைகள் அதில் நிறைந்திருந்தாலும் அழகியல் அதில் இருக்க வேண்டும். கீழான சிந்தனைகளோ, குழந்தைகளின் சிந்தனையைக்கெடுக்கும் கதைகளோ தவிர்க்கப்படவேண்டும். ஆக்கப்பூர்வமான நல்ல சிந்தனைகளே குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உரமாக அமையும்.

கற்பனைகள் இல்லாத மனிதர்களைப்பார்ப்பது கடினம். மனித மனம் ஏதாகினும் ஒன்றினை கற்பனை செய்துப்பார்த்து அந்த கற்பனை தரும் சுகத்தில் லயிக்கும் தன்மை கொண்டது. எத்தகைய சிந்தனைகளை மனம் உள்வாங்க பழக்கப்பட்டுள்ளதோ, அத்தகைய சிந்தனைகளே கற்பனைகளுக்கும் அடித்தளமாக அமைகின்றன. அத்தகைய கற்பனைகள் நாளுக்கு நாள் மாறி வளர்ந்து புது வடிவம் பெறலாம். அல்லது கற்பனைகள் மறைந்தும் போகலாம். கற்பனைகளில் வாழும் நிலையை இன்று விர்ச்சுவல் ரியாலிட்டி எனும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு பொருந்தியும் பார்க்கலாம். விச்சுவல் ரியாலிட்டி தரும் வாய்ப்பினைக்கொண்டு புது அவதாரங்களை எடுத்துக் கொண்டு அந்த அவதாரங்களாக மனிதர்கள் கற்பனை உலகத்தில் சில மணிப்பொழுதுகளைக் கழிக்கலாம். உதாரணமாக, வானில் பறப்பது போன்ற அனுபவம், நிலவில் நடப்பது போன்ற அனுபவம், வானூர்தியைச் செலுத்துவது போன்ற அனுபவம், நீர்மூழ்கிக்கப்பலில் பயணித்தில், கடலின் ஆழ்கடலில் நீந்திச் சென்று ஆழ்கடல் உயிரினங்களைக் கண்டு ரசித்தல் என பலவகைப்படும் அனுபவங்களை விர்ச்சுவல் ரியாலிட்டி எனப்படும் கணினி சார்ந்த தொழில்நுட்பம் நமக்கு வழங்குகின்றது. இந்தக் கருவிகள் இல்லாமலும் மனமெனும் குதிரையில் ஏறி அமர்ந்தால் இந்தப் பேரண்டத்தையும் வலம் வரும் அனுபவத்தை நாம் பெறலாம். மனமிருந்தால்.




கற்பனையில் உதிக்கும் கதைகளை எழுதி வைத்து அவற்றைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்தோர் பலர். நம் வழக்கில் இருக்கும் நிலாவில் வாழும் பாட்டி வடைசுட்டுத்தர அதனைக்கவ்விச் சென்ற காகத்தின் கதையை யார் உருவாக்கினரோ.. இன்னமும் தமிழ்ச்சூழலில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளும் இந்தக் கதையைக்கேட்டே வளர்கின்றனர். மேற்கத்திய உலகில் சிறுவர் கதைகளுக்குப் புகழ்பெற்றவர் என்றால் ஹெச்.சி.அண்டர்சன் அவர்களைத்தான் குறிப்பிடவேண்டும். அவர் பிறந்த சிறு குடிசை இருந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள அவரது அருங்காட்சியகம் பற்றியதுதான் இன்றைய கட்டுரை.



ஹெச்.சி.அண்டர்சன் அவர்கள் 1805ஆம் ஆண்டு பிறந்தவர். தம் பெற்றோர்களுக்கு ஒரே குழந்தை இவர். நல்ல பொருளாதார நிலையில் இருந்து பின்னர் நொடித்துப்போன தந்தைக்கும் தாயாருக்கும் மகவாகப்பிறந்தவர். இளம் வயதிலேயே செருப்புத்தைக்கும் தொழிலுக்குத் தள்ளப்பட்ட தாயும் பின்னர் எளிய வேலைகள் செய்து பொருளீட்டிய தந்தைக்கும் பிறந்தவர் இவர். தந்தையாருக்கு தாம் பள்ளிக்கூடம் சென்று படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் மிக ஆழமாக இருந்தது. ஏதாகினும் சாதித்தே ஆகவேண்டும் என இருந்தவர் அவர். ஆனால் அவரால் எவ்வகையிலும் உயர்நிலைக்கு வரமுடியாதுப்போக பின்னர் காய்ச்சல் ஏற்பட்டு ஹெச்.சி.அண்டர்சன் இளம் சிறுவனாக இருந்தபோதே இறந்து விடுகின்றார்.

கற்பனைத்திறன் வாய்க்கப்பெற்றவர் ஹெச்.சி.அண்டர்சன். அவர் தமது இளம் வயதிலேயே தமது சூழலில் தாம் சந்திக்கும் மூதாட்டிகளிடம் தமது கற்பனைக்கதைகளைச் சொல்வது என்றும், கதாபாத்திரங்களை வடிவமைத்து அவற்றை வரைந்து உருவாக்குவது என்றும் கதாபாத்திரங்களை பொம்மைகளாக வடிவமைத்து உருவம் கொடுத்து அவற்றிற்கு ஆடைகள் தைத்து அணிவித்து கதையை நாடகமாக நடத்துவது எனத்தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டார். அவரது பொருளாதார ஏழ்மை நிலை அவரது கற்பனைக்கு வறுமையைத் தந்துவிடவில்லை.



இளம் வயதிலேயே மனித உடற்கூறு பற்றி அறியாத நிலையிலேயே மனித உடலின் உறுப்புகளைப்பற்றிய ஈர்ப்பும் ஆர்வமும் இவருக்கு இருந்தது. ஏதும் புரியாத நிலையிலும் மனித உடல்கூற்றை விள்க்கும் ஒரு வரைபடத்தை ஒரு சுவரில் வரைந்து மனித உடலில் நுரையீரல், இதயம் என உறுப்புகளை வரைந்து தமது சூழலில் இருந்த மூதாட்டிகளிடம் காட்ட, இது அவர்கள் மத்தியில் ஹெச்.சி.அண்டர்சனுக்கு நன்மதிப்பை வழங்கியது. வரைந்ததோடு நின்றுவிடாமல் தனது படத்தை விளக்கி அந்தச் சிறுவயதிலேயே சொற்பொழிவும் ஆற்றியிருக்கின்றார். இதனைக்கேட்டு மகிழ்ந்த மூதாட்டிகள் இவருக்குப் பல கற்பனைக் கதைகளைச் சொல்ல ஆயிரத்து ஒரு இரவு கதைகள் போல் முடிவில்லாத கற்பனை உலகம் இவர் கண் முன்னே இளம் வயதிலேயே திறக்க ஆரம்பித்தது.

எதனை நோக்கினும் அதில் தனது கற்பனையை ஓடவிடுவார். அது புது உலகைப்படைக்கும். கதாப்பாத்திரங்கள் அப்புது உலகில் வலம் வருவார்கள். இவர் கண்களை மூடிக்கொண்டு கற்பனையிலேயே நீண்ட நேரம் இருப்பது வழக்கமாகியது இதனைப்பார்க்கும் ஏனையோர் இவருக்குக் கண்களில் ஏதேனும் கோளாறோ என நினைத்து கவலையுற்றனர். இவருக்குக் காணும் சக்தி அதிகரித்ததோடு மனக்கண்ணில் காணும் திறனும் அதிகரித்துக் கொண்டே இருந்தது.



இவரது கதைகளில் உலக மக்கள் அறிந்த சிறுவர் கதைகளில் மிகப்பிரபலமானவை என்றால் “The Little Mermaid”, “The Nightingale”, “The Snow Queen”, “The Ugly Duckling”, “Thumbelina”, போன்றவற்றைக்குறிப்பிடலாம்.

ஷேக்ஸ்பியரின் கதைகளைக் கேட்டு பின்னர் அக்கதைகளை தம் மனக்கண்ணில் தொடரச் செய்து கற்பனை செய்வார்.அதில் ஹாம்லட்டின் ஆவியைக்கண்டு கதையில் தன்னையும் ஒரு கதாப்பாத்திரமாக அமைத்துக் கொண்டு கற்பனைக்கதையை தொடர்ந்து பெரிதாக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வேளையில் தான் தனது முதல் படைப்பையும் இவர் உருவாக்கினார். இவரது முதல் படைப்பு சோக முடிவைக் கொண்டது. நாடகம் உருவானதும் அவர் வசித்த தெருவிலிருந்த அனைவருக்கும் அதனை வாசித்துக் காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கின்றார் ஹெச் .சி.அண்டர்சன் .

இவரது நூல்கள் உலகின் 125 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ் மொழியிலும் இவரது கதைகள் வெளிவந்துள்ளன. டென்மார்க் வாழ் தமிழரான திரு.தர்மகுலசிங்கம் “அனசன் கதைகள்” என்ற பெயரில் தமிழில் இந்த நூலை மொழிபெயர்த்துள்ளார்.

ஹெச்.சி.அண்டர்சன் பற்றி குறிப்பிடுவதென்றால், அவர் வாழ்க்கையின் இரண்டு முக்கிய அம்சங்களாக அமைந்தவை எழுத்தும் அவர் செய்த பயணங்களும் தான். தன் கற்பனைகளையெல்லாம் எழுதி வைத்தார். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் ஊர் ஊராக நாடு நாடாகச் சுற்றுப்பயணம் செய்தார். பரந்த உலக அறிவு அவரது கற்பனைக் களத்திற்கு உரமாக அமைந்தது.

தனது வாழ்க்கையில் .ஆரம்பம் முதலே வறுமையான சூழலில் இருந்தாலும், பல அசௌகரியங்களைச் சந்திக்க நேர்ந்தாலும் கூட, அவையனைத்தையும் பொருட்டாக எண்ணாமல், வருந்தித் தளர்ந்து வீழாமல், யாரையும் குறைகூறாமல், தொடர்ச்சியாகத் தனது கதைகளை உருவாக்குவதிலும், கதாப்பாத்திரங்களை வடிவமைப்பதிலும் அவரது ஆர்வமும் காலமும் சென்றன.

1875ம் ஆண்டு உடல் நலக்குறைவினால் ஹெச்.சி.அண்டர்சன் இறந்தார். இவரது சமாதி டென்மார்க் தலைநகரான கோப்பன்ஹாகனில் உள்ள அசிச்டெண்ட் கல்லறைப்பகுதியில் அமைந்திருக்கின்றது. ஹெச்.சி.அண்டர்சனின் சிலைகள் உலக நாடுகளில் வைக்கப்பட்டுள்ளன. அவரது பெயரில் டென்மார்க்கும் கசகிஸ்தானும் அஞ்சல் தலைகளை வெளியிட்டு அவரைச் சிறப்பித்தன.



ஹெச்.சி.அண்டர்சன் வாழ்ந்த இல்லம் இன்று அருங்காட்சியகமாக அமைந்திருக்கின்றது. இங்கே ஹெச்.சி.அண்டர்சன் அவர்கள் தாமே தயாரித்து உருவாக்கிய 111 காகித உருவங்கள், அவர் கைப்பட உருவாக்கிய ஓவியங்கள். அவரது சேகரித்த பழம் நூல்கள் ஆவணங்கள், அவரது பயணக்குறிப்புகள் என வளாகம் நிறைந்த பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தக்கட்டிடத்தின் முன்புற வாசலில் அழகிய பூந்தோட்டமும் சிறிய குளமும் அலங்கரிக்கின்றன. மிகுந்த எழில் கலையம்சம் கொண்ட வகையில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

டென்மார்க் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகம் சென்று வரலாம். இந்த அருங்காட்சியகத்தின் முகவரி
Hans Christian Andersen Museum
Bangs Boder 29
5000 Odense C

இந்த அருங்காட்சியகம் பற்றிய மேலதிகத் தகவல் பெற:
museum@odense.dk  வலைப்பக்கத்திலோ அல்லது tel. +45 6551 4601 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

சிறுவர்களுக்குப் பல கதைகளை எழுதிய ஹெச்.சி.அண்டர்சன், தனது வாழ்க்கைக்குறிப்பினையும் எழுதியிருக்கின்றார். அதற்கு அவர் சூட்டிய பெயர், தமிழில் ” என் வாழ்க்கை – ஓர் அழகான கதை” என்பதாகும். தன் வாழ்க்கையை ரசித்தவர் அவர். அவரது கதைகள் வழி நம் வாழ்க்கையையும் மகிழ்ச்சிப்படுத்தியவர் அவர் என்பதில் மிகையில்லை.

Friday, November 11, 2016

76. எரிமலை ஆய்வுக்கூடம்-அருங்காட்சியகம், லா பல்மா தீவு, கனெரி தீவுக்கூட்டம்

http://www.vallamai.com/?p=73167

முனைவர்.சுபாஷிணி

இந்த பூமி பல அதிசயங்களைத் தன்னுள்ளே கொண்டுள்ளது. இயற்கை நம் கண் முன்னே காட்டும் பல கோடி அதிசயங்களைப் பார்க்கும் மனமிருப்போரால் அவற்றைப் பார்த்து இயற்கை அழகில் இலயிக்க முடிகின்றது. ஏனையோருக்கு அவை பொருளற்றதாகப் போய்விடுகின்றது. இந்த பூமிப்பந்தின் பூகோள இயற்கையில் ஒரு முக்கிய அங்கமாக இருப்பவை எரிமலைகள். உயிருள்ள, அதாவது இன்னமும் பூமிக்கு வெகு அடியில் கனன்று கொண்டு தீப்பிழம்புகளுடன் உள்ள எரிமலைகள் இன்னமும் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய செய்திகளை அவ்வப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் நாம் பார்த்திருக்கலாம். மிகப்பல எரிமலைகளோ உயிரில்லாதவை. அதாவது, இத்தகைய எரிமலைகளிலிருந்து வெடிப்புக்கள் நிகழாது என்பதால் இவை அபாயகரமற்றவை என அறியப்படுபவை. இத்தகைய உயிரற்ற எரிமலைகள் பல தீவுகளாக நம் கண் முன்னே காட்சியளிக்கின்றன. அத்தகைய தீவுகளில் ஒன்று தான் லா பல்மா தீவு.


லா பல்மா தீவு என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஒரு தீவு. கனெரி தீவுகள் கூட்டத்தில் அங்கம் வகிக்கும் ஒரு தீவு இது. மொரொக்கோ நாட்டுக்குக் கீழே, அதாவது பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்குக் கீழும் ஆப்பிரிக்க கண்டத்தின் வடபகுதியிலும் அமைந்திருப்பது இந்தக் கனெரி தீவுக்கூட்டம். இந்தத் தீவுக்கூட்டத்தில் எட்டு பெரிய தீவுகளும், மேலும் பலப்பல சிறு தீவுகளும் நிறைந்திருக்கின்றன. இந்தக் கனெரித்தீவுக்கூட்டம் தற்சமயம் ஸ்பெயின் நாட்டிற்குச் சொந்தமானதாக உள்ளது.

லா பல்மா தீவைப்பற்றிச் சொல்வதென்றால், இது கனெரித்தீவுக்கூட்டத்தில் ஐந்தாவது பெரிய தீவு. ஆயினும் ஒரு நாள் வாகனத்தில் தீவு முழுவதையும் சுற்றி வந்து விடலாம். இந்தத் தீவின் தலைநகரம் சந்தாகுரூஸ் டி லா பல்மா நகரம். இது ஒரு சிறு நகரம்.

சுற்றுலா பயணிகள் விரும்பிச்செல்லும் சுவர்க்கபுரிகளில் ஒன்று இந்த லா பல்மா தீவு. வருடம் முழுவதும் சுற்றுப்பயணிகளின் கூட்டம் அலைமோதும் ஒரு தீவு. இந்தத்தீவு பூகோளவியலாளர்களின் ஆய்வுகளின் படி மூன்று அல்லது நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வெடித்த எரிமலையிலிருந்து உருபெற்ற ஒரு தீவு ஆகும். அரை மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தபுரியண்ட எரிமலை வெடித்துச் சரிந்து பெரும் பள்ளத்தினை ஏற்படுத்தியது. இப்பகுதியை கல்டேரா டி தபுரியண்ட என அழைக்கின்றனர். ஸ்பேனிஷ் நாட்டின் ஆளுமைக்குள் லா பல்மா வந்த பின்னர் ஏழு எரிமலை வெடிப்புக்கள் நடந்துள்ளன. அவையாவன:
1470-1492 மொந்தானா குவேமேடா ( Montaña Quemada)
1585 தாயுவா – எல்பாசோ (Tajuya near El Paso)
1646 சான் மார்ட்டின் எரிமலை (Volcán San Martin)
1677 சான் அந்தோனியோ எரிமலை ( Volcán San Antonio)
1712 எல் சார்க்கோ எரிமலை ( El Charco)
1949 நம்ப்ரோக் எரிமலை, ஹோயோ நெக்ரோ எரிமலை (Volcán Nambroque at the Duraznero, Hoyo Negro and Llano del Banco vents)
1971 தெனகூயா எரிமலை (Volcán Teneguía)



இதில் ஆக இறுதியாக வெடித்து பின்னர் மடிந்த தெனகூயா மற்றும் 1677இல் வெடித்து பின் மடிந்த சான் ஆந்தோனியோ எரிமலையின் ஃபுவான்கலியாந்தாவில் உள்ள ஆய்வுக்கூடமும் அருங்காட்சியகமும் உள்ள பகுதிக்கு நான் 2012ஆம் ஆண்டில் சென்றிருந்தேன்.

ஒரு நீண்ட நிலப்பரப்பு அது. சீதோஷ்ணம் ஏறக்குறைய 10டிகிரி செல்சியஸ் மலையின் உச்சிப்பகுதியில் . கீழே இறங்க இறங்க 15 டிகிரி செல்சியஸ் வரை சீதோஷ்ணம் கூடியவாறு இருந்தது. எரிமலைக்கு மேலே நிற்கும் போது மேகமூட்டம் நம்மைக் கடந்து செல்லும். அதற்குள்ளே ஊடுருவி நடந்து செல்வது புது அனுபவமாக நிச்சயமாக இருக்கும்.



எரிமலைகள் வெடித்துச் சிதறும் போது பூமியின் அடியிலிருந்து வெடித்துக் கிளம்பும் தீப்பிழம்புகள் பல நூறு வகையான தாதுப்பொருட்களை உள்ளடக்கியவை. மனிதர்கள் அதிகம் வாழாத தீவுகளில் எரிமலைகள் கக்கிய தீப்பிழம்புகள் இறுகி பாறைக்கற்களாக புதிய தோற்றம் பெற்று அதன் மேற்பரப்பில் இந்த சீதோஷ்ணத்திற்கு ஏற்ற தாவார வகைகள் முளைத்துக் கிளம்பியிருக்கின்றன.

இந்த எரிமலைப்பிரதேசத்தில் நடக்க நடக்கக் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் நடமாட்டம் குறைந்த, எந்தவித சத்தமோ, இடையூறோ இல்லாத தனிமையை உணரலாம். பூமியைக்கடந்து ஏதோ வேற்றுக் கிரகத்தில் உலாவிக் கொண்டு இருக்கின்றோமே என்ற எண்ணத்தை வரவழைக்கும் வித்தியாசமானதொரு அனுபவம் இது. எரிமலைப்பகுதியின் கீழ்ப்பகுதியில் நடந்து பின்னர் தெனகூயா எரிமலை வெடிப்பு பள்ளத்தாக்குப்பகுதிக்கு அதன் உச்சிப் பகுதியான ஃபுவான்கலியாந்தா வந்து சேர்ந்தால் அங்கே எரிமலை ஆய்வுக்கூடமும் அருங்காட்சியகமும் இருப்பதைக் காணலாம்.



லா பல்மா மட்டுமன்றி கனெரி தீவுகளின் எரிமலைகள் பற்றிய விளக்கம், எரிமலைகள் எவ்வாறு உருவாகின்றன என்ற தகவல்கள், உலகின் முக்கிய எரிமலை வெடிப்புச் சம்பவங்கள் பற்றிய விபரங்கள் என விரிவான நில அமைப்புப்பற்றிய ஆய்வுகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.

லா பல்மா தீவில் சுற்றுலாப் பயணிகள் எரிமலைகளில் நடந்து அதன் அனுபவத்தைப் பெறும் வகையில் தரமானத் தகவல்களை வழங்குகின்றனர். வழிகாட்டி கையேடுகளை வைத்துக்கொண்டே இந்த எரிமலையில் நடந்து திரிந்து நில அமைப்பு, தாவர வகைகள், எரிமலை தீப்பிழம்பு கற்பாறைகள் ஆகியனவற்றைக் கண்டறியலாம். பூகோள நில ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டோருக்கு இவ்வகை அனுபவங்கள் மிகப்பயனுள்ளதாக அமையும்.



சரி. நமது அடுத்த அருங்காட்சியகத் தேடலில் மற்றுமொரு அருங்காட்சியகம் அழைத்துச் செல்கின்றேன். என்னைத் தொடரலாமே!.

Monday, October 31, 2016

75. வதை அருங்காட்சியகம், ப்ராக், செக்

http://www.vallamai.com/?p=72970

முனைவர்.சுபாஷிணி

உலகமெங்கும் ஒரு அரசின் கருத்துக்கு எதிர் கருத்து ஒன்று எழும்போது, மாற்றுக் கருத்துகளை உரக்கப் பேசுவோர் ஏதாவது ஒரு வகையில் தண்டனைக்கு உட்படுத்தப்படுவது என்பது காலம் காலமாக நடந்திருக்கின்றது. உலகெங்கிலும் இவ்வகை நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன என்பது உண்மை. ஆனால் இத்தகைய வதைகள் எவ்வாறு நிகழ்த்தப்பட்டன? அவற்றை நிகழ்த்துவதற்கு உபயோகித்த வதைக்கும் கருவிகள் என்பன பற்றிய செய்திகளை ஆசிய நாடுகளில் பொதுவாகக் காணமுடிவதில்லை, தாய்லாந்து போன்ற ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர.

ஆனால் ஐரோப்பாவில் வதை முகாம்கள் பற்றியும், வதை செய்யும்போது பயன்படுத்திய கருவிகள், வதை செய்யப்பட்ட முறைகள் பற்றிய ஆவணங்கள் என்பன சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தனது தேசத்திலேயே தங்கள் மூதாதையர் நிகழ்த்திய கொடுமைகளை இன்று மனம் திறந்து பேசும் சிந்தனைப்போக்கு ஐரோப்பாவில் விரிவாக வந்துவிட்டமைக்கு இது ஒரு சான்று என்றே நினைக்கின்றேன். ஆசிய நாடுகளிலோ, தாமும் தம் மூதாதையரும் என்றுமே நன்மைகளை மட்டுமே செய்தவர்கள் என்றும், குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற சிந்தனையும், பொதுவாகவே எண்ண ஓட்டத்தில் நிறைந்திருக்கும் தன்மையைப் பார்க்கின்றோம். ஆக, தங்கள் மூதாதையர்களின் நிறைகளை மட்டுமே பேசத்துணியும் வரலாற்று ஆர்வலர்களாகவே ஆசிய நாடுகளின் மக்கள் சிந்தனைப்போக்கு இருக்கின்றது என்றே நினைக்கத்தோன்றுகிறது..

ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளின் சுவடுகளாவன பல்வேறு வகையில் ஆவணப்படுத்தப்படுதல் என்பது நடந்துள்ளது. பொதுமக்கள், அரசியல் எதிரிகள், விஞ்ஞானிகள், மாற்றுச் சிந்தனையும் மாற்றுக் கருத்துகளையும் பிரச்சாரம் செய்பவர்கள், தெய்வீக சக்தியைக் கொண்டுள்ளதாகச் சொல்லிக் கொள்பவர்கள் போன்றோர் அரச சக்திகளாலும் அரசு ஆதரவு பெற்றோராலும் கண்டுபிடிக்கப்பட்டு “சமுதாயச் சீரழிவைத்தடுத்தல்” என்று முத்திரைக்குத்தப்பட்டு அத்தகையோர் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வுகள் ஏராளம் நடந்திருக்கின்றன என்பதை இவ்வகை அருங்காட்சியகங்களில் நாம் காண்கின்ற ஆவணங்களின் வழி அறிய முடிகின்றது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம், பெல்ஜியம் நாட்டின் ப்ரூகஸ், ஜெர்மனியின் ரூடர்ஷைம் அம் ரைன், ரோத்தன்பர்க், இத்தாலியின் சான் கிமிக்னானோ போன்றவை அவ்வகையில் பிரசித்தி பெற்றவை. அந்த வரிசையில் இடம்பெறும் ஒன்றுதான் செக் நாட்டின் தலைநகரான ப்ராகில் இருக்கின்ற வதை அருங்காட்சியகம்.

ப்ராக் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கடைவீதி கட்டிடத்தின் வரிசையான கடைகளுக்கு இடையே இந்த வதை அருங்காட்சியகம் அமைந்துள்ளது. வதைப்பது என்றாலே அச்சமூட்டும் தன்மையை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வுதானே. ஆக முகப்பிலும் வரவேற்பு பகுதியிலும் நம்மை வரவேற்பனவாக வதை செய்யப் பயன்படுத்தும் சில கருவிகளை காட்சிக்கு வைத்துள்ளனர்.



வதைக்கருவிகள் ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு என மாறுபாட்டுடன் பயன்படுத்தினாலும் ஒட்டு மொத்தத்தில் ஒரு மனிதரைக் கொல்வதற்கு முன்னர் அவர் எவ்வளவு வதைகளை அனுபவிக்க முடியுமோ அந்த அளவிற்குக் கொடுமை செய்து கொல்வது என்பது வழக்கமாக இருந்திருக்கின்றது. ஒவ்வொரு வகை வதைக்கும் என பிரத்தியேகக் கருவிகளைத் தயாரித்து வதை செய்து கொலைகளை நிகழ்த்தியிருக்கின்றனர் என்பதையும் குறிப்புகளின் வழி அறியமுடிகின்றது.

உதாரணமாக மரத்தை வெட்ட தச்சர்கள் பயன்படுத்தும் ரம்பம் போன்ற ஒரு கருவியைக் கொண்டு மனிதனின் உடலை இரு வேறு பகுதிகளாக வெட்டுவதோ அல்லது சிறிது சிறிதாக மனிதரின் உடலின் பாகங்களை வெட்டி வதைத்துக் கொல்வது என்பது வழக்கில் இருந்திருக்கின்றது.



இரும்பு ஆணிகள் பொருத்திய நாற்காலி என்பது ஒரு வகை வதைக்கருவிதான். ஒரு ஆணி நம் உடலில் பட்டாலே எத்தகைய உடல் வேதனை ஏற்படும் என்பதை நாம் அறிவோம். ஆனால் முழுவதும் ஆணிகள் பொருத்தப்பட்ட ஒரு நாற்காலியில் தண்டனைப்பெறுபவரை உட்கார வைத்து கயிற்றினால் கட்டி சிறிது சிறிதாக இறுக்கி வதைத்துக் கொல்வது என்பதை பண்டைய ஐரோப்பாவில் நிகழ்த்தியிருக்கின்றனர். இப்படி வதைக்கும் போது இந்தத் தண்டனை மணிக்கணக்கில் நீண்ட நேரம் நிகழ்த்தப்படுமாம். உடலில் இரத்தம் வெளியேறி மனிதர்கள் இறந்து போவது ஒருவகை என்றால் ஒரு சிலரை அச்சமூட்டும் வகையில் மட்டுமே இந்த இரும்பு ஆணி நாற்காலியை பயன்படுத்தியிருக்கின்றனர் என்பதையும் அறிய முடிகின்றது.



இப்படி ஒவ்வொரு கருவிக்கும் அதனை எவ்வாறு பயன்படுத்தினார்கள். எப்படி தண்டனை கொடுத்தார்கள் என்பதை அறியும் போது மனம் அச்சத்தால் உறைந்து போவதை தடுக்க முடிவதில்லை. ஒரு மனிதர் தன் சக மனிதரை எவ்வாறு வதைக்க மனம் வருகின்றது என்ற கேள்வியும் எழுகின்றது.

பொதுவாகத் தண்டனை வழங்குவது என்பது ஒருபுறமிருக்க, போர்க்காலங்களில் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்படுவோர் எதிரி நாட்டு படையினரால் வதைக்கப்படுவது என்பது எல்லா நாடுகளின் வரலாற்றிலும் காணக்கூடிய ஒன்றே. கற்காலத்தில் மட்டும்தான் இந்த நிலை என்பதல்ல. இன்றும் கூட இந்த நிலை தொடர்கின்றது.



ப்ராக்கில் உள்ள இந்த வதை அருங்காட்சியகம் தொடங்குவது கீழ்த் தளத்தில். பாதையைக் குறுகலாக அமைத்து ஆங்காங்கே சில மாதிரி வடிவங்களைச் செய்து வைத்திருக்கின்றார்கள். வதை செய்யப் பயன்படுத்தப்பட்ட கருவிகளும் காட்சிக்கு இருப்பதோடு அவற்றிற்கான விளக்கங்களும் செக், டோய்ச், ஆங்கிலம், பிரென்சு ஆகிய நான்கு மொழிகளில் வழங்கப்பட்டுள்ளன. ப்ராக் செல்பவர்கள் இந்த அருங்காட்சியகம் சென்று நேரில் பார்த்து பல தகவல்களை அறிந்து கொள்ளலாம். அருங்காட்சியகத்தின் முகவரி :
Křižovnické nám. 1, 111 00 Praha 1-Staré Město, Czech Republic


சரி, அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்தைப் பற்றிய தகவல்களைத் தருகின்றேன். தொடர்ந்து வாருங்கள்!

Friday, October 7, 2016

74. ஏதென்ஸ் அகாடமி, ஏதென்ஸ், க்ரீஸ்



http://www.vallamai.com/?p=72556


முனைவர்.சுபாஷிணி

ஏதென்ஸ் அகாடமி (The Academy of Athens) பண்டைய கிரேக்கத்தில் கி.மு..387ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு தத்துவ மையம். தத்துவ மேதைகளில் உலகப்பிரசித்தி பெற்ற ப்ளேட்டோ என்ற தத்துவ மேதை உருவாக்கிய ஒரு தத்துவக்கூடம் இது. அக்காடெமோஸ் என்ற பண்டைய கிரேக்கத்தின் தலைவன் ஒருவனின் நினைவாக அவரது நினைவாலயத்துக்கு அருகாமையிலேயே கிரேக்கத்தின் புகழ் மிக்க நகரான ஏதன்ஸில் இந்த அமைப்பை உருவாக்கினார் ப்ளேட்டோ.



ஏறக்குறைய ஒன்பது நூற்றாண்டுகள் தத்துவக்கூடமாகவும் கல்வி மையமாகவும் செயல்பட்ட இந்த அகாடெமி, கி.பி.529ஆம் ஆண்டில் முடக்கப்பட்டது. தத்துவங்கள் போதிப்பதற்குத் தடை செய்யப்பட வேண்டும் என வெளியிடப்பட்ட ஒரு அரச சட்டத்தினால் இந்தப் புகழ்மிக்க அறிவுக்கருவூலம் கி.பி.6ம் நூற்றாண்டில் முடக்கப்பட்டது. ஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதாவது மீண்டும் தோன்றிய மறுமலர்ச்சிக்காலத்தில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் தொடங்கின. கிரேக்கத்தில் மட்டுமல்லாது ஐரோப்பாவின் ஏனைய சில நாடுகளிலும் இந்த ஏதன்ஸ் அகாடமி தன்னை விரிவாக்கம் செய்து செயல்பட ஆரம்பித்தது. கிரேக்கத்தைத்தவிர்த்து ஏனைய நாடுகளில் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இயங்கி வந்தாலும் கூட, மீண்டும் 1926ஆம் ஆண்டில் தான் ஏதென்ஸ் நகரில் கிரேக்கத்தில் இதன் செயல்பாடுகள் தொடங்கப்பட்டன. அது முதல் இந்த அறிவுக்கருவூலம் எந்தத் தடைகளும் இன்றி தொடர்ச்சியாக பல்வேறு துறைசார்ந்த ஆய்வுகளை நிகழ்த்தும் ஆய்வுக்கூடமாகத் திகழ்ந்து வருகின்றது.

இந்த அமைப்பின் மிக முக்கிய செயல்பாடுகளாக அமைபவை ஆய்வுகள் தாம். அறிவியல், மானுடவியல், நுண்கலைகள் போன்ற துறைகளில் இங்கே ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வுகளை நிகழ்த்தி வருகின்றனர்.



இந்த அமைப்பின் குறிப்பிடத்தக்க சாதனைகளாக சில நடவடிக்கைகளைச் செய்து நிறைவேற்றியுள்ளனர். பண்டைய கிரேக்கத்தின் வரலாற்றுக் கலைக்களஞ்சியத்தை உருவாக்கி அதனை வெளியீடு செய்தது இந்த அமைப்பு. அதன் தொடர்ச்சியாக பைசண்டைன் , லத்தீன் ஆகிய மொழியில் பண்டைய வரலாற்றுத்தகவல்களை சேகரித்து தொகுப்பாக வெளியிட்டது. மேலும், கிரேக்க தத்துவம், கிரேக்க சட்டதிட்டங்களின் வரலாறு, கணிதம் மற்றும் வானவியல் தகவல்களின் தொகுப்பு, எனக் குறிப்பிடத்தக்க இன்னும் பல சாதனைகளை வெளியீடுகளாக ஆய்வுலகத்திற்கு இந்த ஏதன்ஸ் அகாடமி வழங்கியிருக்கின்றது.



ஏதென்ஸ் நகரின் பிரமாண்டமான சாலையில் ஏதென்ஸ் நூலகம், ஏதென்ஸ் பல்கலைக்கழகம் ஆகியனவற்றிற்கு அடுத்ததாக இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டைச் சார்ந்த தியோபில் ஹான்சன் (1813-1891) என்னும் ஒரு கட்டிடக் கட்டுமானக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட ஒரு கட்டிடம் இது. சைமன் சினாஸ் (1810-1876) என்னும் ஒரு செல்வந்தர் இக்கட்டிடத்தைக் கட்டுவதற்கான செலவுகளைத் தாமே ஏற்றுக்கொள்ள இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

இந்தக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 1859ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி நிகழ்ந்தது. அப்போதைய கிரேக்க அரசின் மன்னர் ஓட்டொ, அரசியார் அமாலியா ஆகியோர் முன்னிலையில் இந்தக்கட்டிடத்தின் தொடக்கவிழா நிகழ்ந்தது. நீண்ட காலப்பணிகளுக்குப் பின்னர் 1887ஆம் ஆண்டு இதனைக் கட்டி முடித்த ஆர்க்கிடெக்ட் எர்ன்ஸ் சிலர், இதனை முழுமையாக்கி அன்றைய பிரதம மந்திரி சார்லியோஸ் ட்ரிகோப்பிஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். இன்றைய அளவிலும் உலகிலேயே மிக அழகிய நியோக்லேசிக்கல் வகை கட்டிடக் கலையில் அழகில் முதலிடத்தில் குறிப்பிடப்படும் பெருமையைப் பெற்றது இந்தக் கட்டிடம்.

இக்கட்டிடத்தின் மேலே நீண்ட அழகிய சிற்பத்தொகுதி ஒன்று செதுக்கப்பட்டுள்ளது. இது பெண் தெய்வம் அத்தேனாவின் பிறப்பை உணர்த்தும் ஒரு சிற்பமாகும். முகப்புப்பகுதியின் இரு பக்கங்களிலும் நீண்டு பருத்து உயர்ந்த தூண்களில் ஒரு பக்கம் பெண் தெய்வம் அத்தேனாவும் மறுபக்கம் ஆண் தெய்வம் அப்போலோவும் செதுக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சிற்பங்களும் பண்டைய கிரேக்கத்தின் தத்துவச் சிந்தனைகள் மீண்டும் எழுச்சி பெற்று எழுந்தமையும் அவை ப்ளேட்டொ,சாக்ரடீஸ் ஆகிய இருவரின் வழித்துணையோடு செயல்படுவதையும் குறியீடாகப் புலப்படுத்தும் வகையில் இக்கட்டிடம் வடிவமக்கப்பட்டுள்ளது.

கட்டிடத்தின் உள்சுவர்களில் பெரிய அளவிலான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. எட்டு பகுதிகளில் வர்ணக்கலவைகளால் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் சுவர்களை அலங்கரிக்கின்றன. இவை கிரேக்க ஓவியக்கலைஞரான கிறிஸ்டியான் கிரிப்பேன்கெர்ட் என்பவராலும் கார்ல் ரூல் என்பவரின் ஒரு மாணவராலும் உருவாக்கப்பட்டவை. இந்த எட்டு ஓவியங்களும் புராணக்கதைகளின் வெளிப்பாடுகளாக அமைக்கப்பட்டுள்ளன.



விரிவான வளாகம் இது. பல துறை ஆய்வுகள் இங்குத் தொடர்ந்து நிகழ்வதால் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

ஏதென்ஸ் அகாடமி வார நாட்களில் திங்கள் தொடங்கி வெள்ளி வரை காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏதென்ஸ் நகர் செல்பவர்கள் அருங்காட்சியகமாகவே திகழும் இந்த கட்டிடத்தைச் சென்று பார்த்து வருவதைக் கட்டாயமாகத் தங்கள் பட்டியலில் வைத்துக்கொள்ளத்தான் வேண்டும்!

Monday, September 19, 2016

73. பாப்பிரஸ் அருங்காட்சியகம், வியன்னா, ஆஸ்திரியா

முனைவர்.சுபாஷிணி

பண்டைய எழுத்து ஆவணங்களைப்பற்றி ஆராய முற்படும்போது கல்வெட்டு ஆவணங்களைப் போலவே நமக்கு பேப்பிரசில் கீறப்பட்ட ஆவணங்களும் கிடைக்கின்றன. மிகப்பழமையான பேப்பிரஸ் ஆவணங்கள் எகிப்தின் செங்கடல் பகுதியைச் சுற்றி செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்திருக்கின்றன. இன்றைக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பேப்பிரஸ் ஆவணங்கள் கி.மு.2560- கி.மு2550 எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குறிப்பிடத்தக்க பேப்பிரஸ் ஆவணங்கள் உலக அதிசயங்களில் ஒன்றான கீசே பிரமிட் கட்டப்பட்ட இறுதி ஆண்டுகளின் நிகழ்வுகளை பதிவனவாக அமைந்துள்ளன. உலகின் ஏனைய பாகங்களை விட எகிப்தில் தான் பேப்பிரஸ் ஆவணங்கள் நமக்குக் கிடைக்கின்றன. பேப்பிரஸ் தாட்கள் நைல் நதிக்கரையோரத்தில் வளர்கின்ற பேப்பிரஸ் செடிகளைத்தக்க முறையில் பதப்படுத்தி தயார் செய்து அதிலிருந்து தாட்களாக உருவாக்கப்படுகின்றன.



உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் பேப்பிரஸ் ஆவணங்கள் அரும்பொருட்களில் ஒன்றாக இடம்பெறுவதை நம்மில் பலர் பார்த்திருக்கலாம். பல அரும்பொருட்களுடன் ஒன்றாக என்றில்லாமல், பேப்பிரஸ் ஆவணங்களுக்கு மட்டுமன்றி பிரத்தியேகமாக ஒரு அருங்காட்சியகம் ஆஸ்திரிய நாட்டின் வியன்னா நகரில் இருக்கின்றது. ஆஸ்திரிய தேசிய நூலகம் இருக்கும் அதே பிரமாண்டமான கட்டிடத்தின் மறுபகுதியில் இந்த பேப்பிரஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

வியன்னாவில் உள்ள இந்த பேப்பிரஸ் அருங்காட்சியகத்தில் இருப்பவை அனைத்துமே எகிப்தின் கலாச்சார பண்பாட்டு வரலாற்று நிகழ்வுகளின் பதிவுகள். பல நூறு ஆண்டுகளில் எழுதப்பட்ட ஆவணங்கள் முழுமையான அல்லது சற்று சிதைந்த அல்லது பெரும்பாலும் சிதைந்த வகையில் காணப்படும் ஆவணங்கள் இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள ஆவணங்களில் உள்ள செய்திகள் பெரும்பாலும் இறப்பு சடங்குகளை விவரிப்பதாகவோ, மருந்து மூலிகைகள் பற்றியோ, மேஜிக் விசித்திரமான நிகழ்வுகள் என்ற வகையிலோ, இலக்கியங்களாகவோ, உணவுப்பழக்கம் பற்றியதாகவோ, நைல் நதி பயணம் பற்றியதாகவோ என்ற வகையில் அமைந்திருக்கின்றன.



இங்கு ஆவணப்பகுதியில் ஏராளமான பேப்பிரஸ் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு அவை பாதுகாக்கப்படுகின்றன. இந்த அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்பில் 180.000 பேப்பிரஸ் ஆவணங்கள் உள்ளன என்பது வியப்பாக உள்ளது அல்லவா? இந்த அருங்காட்சியகம் மூன்று தளங்களில் அமைந்துள்ளது. அதில் ஒரு தளத்தில் மட்டுமே 200 பேப்பிரஸ் ஆவணங்கள் மட்டுமே பொது மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஏனையவை ஆய்வாளர்களுக்குப் பிரத்தியேக ஆய்வுகளுக்கு எனத்தகுந்த அனுமதி பெற்ற பின்னர் மட்டுமே வழங்கும் வகையில் பாதுகாக்கப்படுகின்றன. உலகின் மிகப்பெரிய பேப்பிரஸ் சேகரிப்பு உள்ள அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று என்பது இதன் சிறப்பை நமக்குப் புலப்படுத்தும். இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பினை பெருமைப்படுத்தும் வகையில் யுனெஸ்கோ நிறுவனம் 2001ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்திற்கு “Memory of the World” என்று அறிவித்து சிறப்புச் செய்தது.



இந்த அருங்காட்சியகத்தின் வலைப்பக்கத்தில் நிரந்தர கண்காட்சி பற்றியும் சிறப்புக் கண்காட்சி பற்றியும் பல தகவல்களைப் பெறலாம். இதன் முகவரி
http://www.onb.ac.at/ev/papyrus_museum.htm. அருங்காட்சியகத்திற்கு நேரில் செல்ல விரும்புபவர்கள் வியன்னாவின் மத்திய சாலையில் தேசிய நூலகத்தை தேடிச் சென்றால் அதே பிரமாண்ட மண்டபத்தின் வலது புறத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்திருப்பதைக் காணலாம். இதன் முகவரி:
Papyrus Museum
Heldenplatz, New Hofburg
1010 Wien
Tel.: (+43 1) 534 10-420

இங்குள்ள பேப்பிரஸ் ஆவணங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்ட செய்திகளைப் பதிவனவாக அமைந்திருக்கின்றன. உதாரணமாக ஒரு பெப்பிரஸ் ஆவணம் பார்லி, இறைச்சி, கோதுமை எண்ணெய் ஆகியவை பல்வேறு காலகட்டங்களில் கொடுக்கப்பட்டமையைக் குறிப்பதாக உள்ளது. இதில் பார்லி நைல் நதியில் ஏற்றிச் செல்லப்பட்டமையால் கூடுதல் வரி கட்டவேண்டியதைப் பற்றி குறிப்பிடுகின்றது. இந்த ஆவணம் கி.பி.4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.



இங்குள்ள மற்றுமொரு ஆவணம் எகிப்திற்கும் இந்தியாவிற்கும் ரோமானிய காலத்தில் இருந்த வர்த்தகத்தொடர்பை விளக்குவதாகவும் அமைந்துள்ளது. விலையுயர்ந்த பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டமையை இந்த ஆவணம் குறிப்பிடுகின்றது. இதில் ஒரு வியாபாரி கட்டவேண்டிய வரி பற்றிய செய்தியும் அவர் செங்கடல் பகுதியிலிருந்து இந்தியாவிற்குக் கப்பல் வழி பொருட்கள் ஏற்றி அனுப்பிய செய்தியையும் பதிகின்றது.


எகிப்து தொடர்பான பல்வேறு தகவல்களை வருவோருக்கு வழங்கும் ஆய்வுக்கூடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது. நான் பார்த்து வியந்த அருங்காட்சியகங்களின் பட்டியலில் இந்த அருங்காட்சியம் தவறாமல் இடம் பெறும் ஒன்றே.

சரி. அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா? தொடர்ந்து வாருங்கள்.

Monday, September 12, 2016

72. ஹெர்மான் ஹெஸ்ஸ அருங்காட்சியகம், கால்வ், ஜெர்மனி

முனைவர்.சுபாஷிணி

ஹெர்மான் ஹெஸ்ஸ 1962ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு மரணமுற்றபோது அவருக்கு வயது 82. ஜெர்மானிய இலக்கியவாதி என்ற ஒரு எல்லைக்குள் மட்டுமே அவரது இலக்கிய ஆளுமை என்றில்லாது உலகப்புகழ்பெற்ற, உலகத்தரம் வாய்ந்த ஒரு எழுத்தாளர் என்ற புகழைப் பெற்ற அவரை அன்றைய “டி சைட்” (Die Zeit) நாளேடு இனி இந்த எழுத்தாளர் காலத்தால் மறக்கப்படுவார் என எழுதியது. ஆனால் இந்தக் கூற்று பொய்யானது என்பதைக் காலம் நிரூபித்து விட்டது. ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் எழுத்துக்கள் இதுவரை அறுபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இன்றும் அவரது எழுத்துக்களால் அவர் நினைக்கப்படுபவராக இருக்கின்றார்.



தான் ஒரு இலக்கியவாதி.. இன்னும் சொல்லப்போனால் ஒரு கவிஞன் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்தியாவில் அவரது தந்தையார் ஒரு லூதரன் மதபோதகராகப்பணியாற்றியதாலும் அவரது தாயார் ஒரு லூதரன் மத போதகரின் மகள் என்பதாலும் பெற்றோரின் எண்ணம் தன் மகனும் அதே பணியைத் தான் மேற்கொள்ளப்போகின்றான் என்பதாக இருந்தது. ஆனால் தனது எண்ணம் முழுமையும் இலக்கியத்திலே தோய்ந்திருப்பதை அவர் உணர்ந்து தன் வாழ்க்கைப் பாதையை தன் விருப்பப்படியே அமைத்துக்கொண்டு, அழியாப் புகழை இன்று பெற்றிருக்கின்றார்.



ஹெர்மான் ஹெஸ்ஸ ஜெர்மனியின் பாடர்னுர்ட்டெம்பெர்க் மாநிலத்தின் கால்வ் நகரில் 1877ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி பிறந்தார். இந்த கால்வ் ஒரு அழகிய சிற்றூர். எனது இல்லம் இருக்கின்ற லியோன்பெர்க் நகரிலிருந்து ஏறக்குறைய 27 கிமீ தூரம் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு ஊர் இது.

மதபோதனையாளர்கள் குடும்பத்தில் பிறந்த ஹெர்மான் ஹெஸ்ஸவிற்குப் ப்ராட்டஸ்டண்ட் சமய நம்பிக்கைகளை இளமைக் காலம் முதல் பெற்றோர் மற்றும் அவர் வளர்ந்த சூழல் அவருக்கு இயல்பாக ஏற்படுத்திக் கொடுத்தது. ஆனால் அதில் மனம் நிறைவடையாமல் தனது சுயத்தைத் தேடுவதிலே அவர் கவனமும் ஆர்வமும் இருந்தது. ஒருபள்ளியை விட்டு மற்றொன்று என திருப்தியுறா நிலையிலேயே தன் கல்வியைத் தொடர்ந்து பின்னர் தன் 15ம் அகவையில் கல்வியை விட்டு விட்டு ஒரு கடிகாரம் செய்யும் பட்டறையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கு அவருக்குக் கடிகாரம் பழுது பார்த்தலோடு புத்தக விற்பனை செய்வதும் தொழிலாக அமைந்தது.

சமயத்திலிருந்து விடுதலை என்பதாகவும், தனி மனித சுதந்திர எண்ணங்களின் செயல்பாடு எவ்வகையில் அமைத்துக் கொள்வது என்றும் அவரது சிந்தனை இருந்தது. வாழ்க்கையைப் பற்றிய பல கேள்விகள் அவரது தேடலில் இருந்தன. தனது சுய அனுபவங்களையே தனது இலக்கியப்படைப்புகளில் புகுத்தி இலக்கியங்களைப் படைத்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ.



அவரது நாவலான Peter Camenzind அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து வெற்றியை அளித்தது. இது அவருக்கு இலக்கியத்தின் வழியே அவரது வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தை ஈட்டும் வழியை அமைத்துக் கொடுத்தது. ஒரு புகைப்படக்கலைஞரான மரியா பெர்னோலியை திருமணம் செய்து கொண்டு ஜெர்மனியின் தெற்குப் பகுதியான கான்ஸ்டன்ஸ் பகுதிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவரது மண வாழ்க்கை இனிமையாகத் தொடரவில்லை. இருவரும் திருமண பந்தத்திலிருந்து பிரிந்தனர். பின்னர் பயணங்களில் தன் வாழ்க்கையைச் செலவிட ஆரம்பித்தார் ஹெர்மான் ஹெஸ்ஸ. புதிய ஊர்களும் மக்களும் வாழ்க்கை நெறிமுறைகளும் சமய அனுபவங்களும் அவர் தேடுதலுக்கு விருந்தாக அமைந்தன. இலங்கைக்குச் சென்று பின்னர் இந்தோனீசியா சென்று சேர்ந்தார். ஆசிய நாடுகளின் வாழ்க்கை முறை அவருக்குப் புதிய அனுபவங்களைத் தர, வாழ்க்கையில் புதிய கோணங்களை அவர் உணர வாய்ப்பாக இது அமைந்தது. இந்தப் பயணங்கள் தொடர்ந்தன. பயணங்கள் தந்த அனுபவத்தின் சாராம்சமாக சித்தார்த்தா என்ற காப்பியத்தை இவர் வடித்தார்.

திருமண முறிவுக்குப் பின்னர் பல இடங்களில் பயணித்து பின்னர் சுவிச்சர்லாந்திற்குக் குடிபெயர்ந்தார், அங்குதான் அவரது பல இலக்கிய ஆக்கங்கள் படைக்கப்பட்டன. 1924ம் ஆண்டில் சுவிச்சர்லாந்தின் குடியுரிமை பெற்று ரூத் வாகனர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அந்தத் திருமணம் மூன்று ஆண்டுகள் தான் நிலைத்தது. பின்னர் வரலாற்றுத்துறை நிபுணரான நினோன் டோல்பின் என்பவரைத் திருமணம் செய்து தன் புது வாழ்க்கையை மீண்டும் 1931ம் ஆண்டில் தொடங்கினார். இவர்கள் உறவு அவரது வாழ்நாளின் இறுதி வரை நீடித்தது.




இரண்டாம் உலகப்போர் ஐரோப்பா முழுமையையும் பாதிக்கச் செய்த ஒரு நிகழ்வு. ஹெர்மான் ஹெஸ்ஸ, நாசி அரசின் மீதான தனது எதிர்ப்புகளை வெளிப்படையாகக் காட்டியதோடு ஜெர்மானிய அகதிகளுக்கு தன்னால் இயன்ற உதவிகளையும் செய்து வந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டமான 1946ஆம் ஆண்டில்தான் இவரது இறுதி படைப்பான “The Glass Bead Game” நூலுக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்தப்பரிசு அவரது மனித உரிமைக் கருத்துகளை வெளிப்படையாகவும் தைரியமாகவும் உரக்கச்சொல்லும் அவரது இலக்கியப்படைப்புக்காக வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்து அவரைப் பெருமைப்படுத்தியது. ஹெர்மான் ஹெஸ்ஸேவின் நூல்கள் ஜெர்மனியில் மிகப்பிரபலம் அடைந்தன. ஆனால் பின்னர் அவரது நூல்களுக்கான புகழ் சிறிது சிறிதாக குறையத் தொடங்கி அவரது மறைவு நேரத்தில் அவர் இலக்கிய உலகால் மறக்கப்படுவார் என சிலரால் பேசப்படும் அளவிற்கு அவரது நூல்கள் மேல் விமர்சனம் எழுந்தன. ஆனால் அந்த விமர்சனங்கள் பொய்யாக்கப்பட்டதை காலம் நிரூபித்தது.

அவரது நூல்கள் ஜெர்மனி மட்டுமல்லாது உலக நாடுகள் பலவற்றில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. இவரது சித்தார்த்தா என்ற நாவல் தமிழில் திரிலோக சீத்தாராம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ் வாசகர்களின் மனத்தையும் கொள்ளைக் கொண்டது. ஞானத்தேடலினை மையமாக வைத்து அவர் புனைந்த இந்த நாவல் பலரது உள்ளத்தைக் கொள்ளை கொண்ட காவியமாகத் திகழ்கின்றது.


ஹெர்மான் ஹெஸ்ஸே அவர்களின் பிறந்த இல்லம் ஒரு அருங்காட்சியகமாக கால்வ் நகரில் அமைக்கபப்டுள்ளது. நதி பாயும் ஓர் அழகிய சிற்றூர் இது. இங்கே நகரின் மையப்பகுதியில் ஹெர்மான் ஹெஸ்ஸ அவர்களின் வெண்கல சிலை வருவோரை வரவேற்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

அருங்காட்சியகத்தின் முகவரி
Hermann-Hesse-Museum
Marktpl. 30, 75365 Calw,Germany
00 497051 7522